Monday, October 13, 2014

மழை

மழை பிடிக்கும் என்பதால்
குடை பிடிப்பதில்லை

சந்திரவதனா
11.10.2014

Wednesday, October 08, 2014

பிரியாவிடை

நேற்று
அவளைக் கட்டியணைத்து
கண்ணீர் வடித்து
Sekt  உடைத்து
துக்கம் கொண்டாடினார்கள் அவர்கள்!
23 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள்
போகிறாள் என்று

இன்றும் கொண்டாடினார்கள்
Red Wine உடைத்து!
அவள் போய் விட்ட சந்தோசத்தை!

சந்திரவதனா
8.10.2014

Wednesday, October 01, 2014

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

Thileepan & Me
இன்று எனது மகன் திலீபன் புதியபதவியில் அமர்கிறான். எத்தனையோ இடர் நடுவேயும் எனக்குள் சந்தோசஅலை முட்டி மோதிக்கொண்டே இருக்கிறது.

நாம் இங்கு ஜேர்மனியில் வந்திறங்கிய போது திலீபனுக்கு ஒன்பது வயதுகள்தான் நிரம்பியிருந்தன. அந்த வயதே அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. குழந்தையும் அல்ல. வாலிபனும் அல்ல. இடைப்பட்ட வயதில் இன்னொரு நாட்டோடு ஒன்ற முடியாது மிகவும் அவதிப்பட்டான். மனதால் நொந்தான். விரக்தி அவனோடு கூடவே தொடர்ந்தது. எமது நாட்டுக்குத் திரும்பி விட வேண்டுமென்பதே அவனது குறியாக இருந்தது.

மற்றைய எனது இரு குழந்தைகளும் வயதில் குறைந்தவர்களாக இருந்ததால் அவர்களிடம் இவ்வளவு தூரமான பாதிப்பு இருக்கவில்லை. அவர்கள் விளையாடிக் கொண்டு திரிந்தார்கள். அம்மாவும், அப்பாவும் அருகில் இருந்தால் போதும் என்ற மாதிரி வாழ்ந்தார்கள்.

ஆனால் திலீபன் ஊர் நினைவுகளை இறக்கி வைக்கவும் முடியாமல், ஜேர்மனிய வாழ்வோடு ஒட்டவும் முடியாமல் மனதுக்குள் மிகவும் போராடினான். வந்த உடனேயே 3ம் வகுப்பில் சேர்ந்ததால் மொழியோடும் போராடினான்.

இன்று அவன்தான் ஒரு பொறுப்பாளர் பதவியில் அமர்கிறான்.

Bausparkasse Schwäbisch Hall
இன்று அவன் கடமையாற்றும் Bausparkasse நான் வந்த காலத்தில் எனக்கு கனவுமாளிகை போலத்தான் தோற்றமளித்தது. அந்த வாசலை மிதிப்பதே சாத்தியப்படக் கூடிய ஒன்றாக எனக்கு அப்போது தெரியவில்லை. அங்கு யாருக்காவது வேலை கிடைப்பது என்பது சுலபமானதொன்றல்ல. எத்தனையோ விதமான, எத்தனையோ பேருக்கு முன்னிலையிலான பரீட்சைகளின் பின்னரே அதற்குள் நுழைய முடியும். நுழைந்தவர்களும் ஆறுமாதங்களுக்குள் சுலபமாக வெளியே அனுப்பப் பட்டு விடுவார்கள்.

அங்கு எனது மகனுக்கு வேலை கிடைத்த போதும் சரி, பின்னர் நான் அங்கு போய் அவனைச் சந்தித்த பொழுதுகளிலும் சரி எனக்குள் ஒருவித பிரமை ஏற்பட்டதுண்டு.

அந்த வங்கியைக் கடந்துதான் தினமும் வேலைக்குச் செல்வேன். இங்கு என் மகனும் வேலை செய்கிறான், அதுவும் ஒரு நல்லதொரு பதவியில்.. என்னும் நினைவில், ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் இனம் புரியாத பெருமையும், சந்தோசமும் ஊற்றெடுக்கும்.

ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அதை விட உயர வேண்டும் என்ற அவா. அதற்காக அவன் செலவுசெய்தது கிட்டத்தட்ட இரண்டு வருடப் பொழுதுகள். பரீட்சை, பரீட்சை, பரீட்சை.

ஒரு பொறுப்பாளனாவதற்கு அவர்கள் செய்த பரீட்சைகள் பல. அறிவு, ஆளுமை, பொறுமை, நிர்வாகத்திறன், சினேகத்தன்மை,.. என்று எத்தனையோ விதமான சோதனைகள். சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் பல பெரியவர்களின் நடுவே நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டும். சில நாட்களில் ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளின் போதும் எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பதை நடித்துக் காட்ட வேண்டும். இப்படி எத்தனையோ!

அவனது அயராத உழைப்பும் , முயற்சியும், தன்னம்பிக்கையும் இன்று அவனை இன்னும் சில படிகள் உயர்த்தியுள்ளன.

Bausparkasse யில் ஒரு பிரிவுக்கு இன்றிலிருந்து அவன் பொறுப்பாளன். பெரிதுவக்கிறது மனது.

சந்திரவதனா
1.10.2014

Thileepan at work place 


Monday, September 22, 2014

ஓர் அசாதாரண நாள் (18.9.2014)

உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது வெயில் நன்கு எறித்தாலும், மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவியது. அருகில் உள்ள உணவகத்தின் முன் பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சாப்பிட்டு முடித்து ஐஸ்கிறீம் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்கும் வயிற்றைக் கிள்ளியது. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போக வேண்டும்.

மனசு அவசரப்பட்டது. கால்கள் விரைந்தன. பேரூந்துத்தரிப்பிடத்தைத் தாண்டும் போது முகஸ்துதிகளும், நட்பார்ந்த சிரிப்புகளும் மனதுக்கு இதமாக இருந்தன.

வழமை போலவே  இலங்கைத் தமிழன் ஒருவன் குப்பைவாளிக்குள் வெற்றுப் போத்தல்களைத் தேடிக் கொண்டிருந்தான். அவனை அந்தக் கோலத்தில் காணும் போதெல்லாம் மனசு கொஞ்சம் சங்கடப்படும். விற்றால் அவனுக்கு ஒரு போத்தலுக்கு 25சதங்கள் கிடைக்கும்.

அவனையும் தாண்டி வீதியை அண்மிக்கும் பொழுதுதான் அவ்விடம் சற்று அசாதாரண நிலையில் இருப்பதை உணர்ந்தேன். நான்கைந்து பெண்கள் சூழ்ந்து நிற்க ஒரு பெண் ஒரு ஆடவனை பட்டம் விடுவது போல ஒரு கையில் இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். அவனும் வலித்துக் கொண்டு ஓடுவதற்கு தயாரானவன் போல இழுத்துக் கொண்டு நின்றான். குளிர்காற்று அவனை ஒன்றுமே செய்யவில்லை. முகமெல்லாம் வேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தது. கலவரம் படர்ந்திருந்தது.

என்ன நடக்கிறது என்று அனுமானிப்பதற்கு எந்த அவகாசமும் எனக்குக் கிடைக்கவில்லை. திடீரென அந்தப் பெண்ணின் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடியவன் சட்டென்று நடுவீதியில் மல்லாக்காகப் படுத்தான். படுத்தான் என்பததையும் விட விழுந்தான் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அருகே கைக்குழந்தையுடன் நின்ற ஒரு இளம்பெண்ணைப் பார்த்து “என்ன நடக்கிறது இங்கே?“ என்றேன்.

“சாகப் போகிறானாம். வாழ இனி விருப்பமில்லையாம். பொலிசுக்கு அறிவித்து விட்டோம்...“ அவள் சொல்லி முடிக்கவில்லை. வேகமாக வந்த கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாத குறையாக கிறீச் சத்தங்களுடன் அவன் முன்னே வரிசையாகத் தரித்தன.

முதல் காரில் இருந்தவன் காரை விட்டு இறங்கி ஓடி வந்தான். அவனை அழுங்குப் பிடிபிடித்து இழுத்து வந்து ஒரு படியில் இருத்தி “என்ன பிரச்சனை?“ என்று கேட்டான். 30 - 35 வயதுகள் மட்டுமே மதிக்கத்தக்க அந்த ஆடவன் “நான் சாகப்போகிறேன். என்னைச் சாகவிடுங்கள்.. “ என்று உச்சாடனம் செய்து கொண்டே இருந்தான்.

இப்போது பிடித்திருப்பவனின் பிடியிலிருந்து அவன் மீண்டும் வீதிக்கு ஓட முடியாது என்பது திடம். எனக்கும் அவசரம். நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். இல்லை விரைந்தேன்.

பத்திரிகையில் அவன் பற்றிய செய்தி வரும் என நினைத்தேன். இன்று வரை இல்லை. அங்கு நின்றிருந்த பெண்கள் எவரும் எனக்கு முன் அறிமுகமானவர்கள் அல்லர். ´அவன் இப்போது எப்படி இருக்கிறான்?´ என்று யாரையும் கேட்க முடியவில்லை.

மனசுக்குள் அந்த ஆடவனின் முகம் உறுத்திக் கொண்டே இருந்ததால் எனது மகனைத் தொடர்பு கொண்டு “இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஏன் அது பற்றி எதுவுமே பத்திரிகையில் வரவில்லை? “ எனக் கேட்டேன்.

“தற்கொலை சம்பந்தமான விவரணங்கள் எதுவும் முடிந்தவரை எமது பத்திரிகையில் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எமது பத்திரிகையால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்பட்டு விடக் கூடாது“ என்றான்.

சந்திரவதனா
22.9.2014

Wednesday, September 10, 2014

வடை

வடையைப் பொரித்துத்தானே சாப்பிடுகிறோம்.
பிறகேன் வடையைச் சுடுவதாகச் சொல்கிறோம்.

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாள்......

Theerans Drawing


சில வாரங்களின் முன் என் பேரன் தீரன் வரைந்து தனது மேசையில் அடுக்கி வைத்திருந்தவற்றுள் நான் கண்டெடுத்தது. ஒன்று பாட்டாவாம் (எனது கணவர்) மற்றையது தானாம். அவன் வரைந்தவற்றில் அதிகமானவற்றில் பாட்டாவும், அவனும்தான் இருந்தார்கள். ஆண் குழந்தைகள் அப்பாவுக்கு அடுத்த படியாக, அப்பாவின் தந்தையைத்தான் தமது model ஆக எடுக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது அவனது செயற்பாடுகள்.

ரசனைகள் பலவிதம்

அன்று ஒரு குடும்பச் சந்திப்பு.
வழமையாக எனது கழுத்தோடு இருக்கும் சங்கலியுடனேயே அந்நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.சிரிப்பும், சந்தோசமும் கலகலக்க பழைய நினைவுகளுடனும், புதிய சங்கதிகளுடனும் அளவளாவிக் கொண்டிருந்தோம்.

என் உறவுகளில் ஒருத்திதான் எனது கழுத்தில் இருந்த சங்கிலியைப் பார்த்து “எங்கே வாங்கினனீங்கள்? மிகவும் அழகாக இருக்கிறது. உங்களுக்கு நல்ல பொருத்தமாகவும் இருக்கிறது“ என்றாள். பல தடவைகள் அந்தச் சங்கலியுடன் அவளைச் சந்தித்திருந்தேன். இன்று என்ன பிரத்தியேகமாகச் சொல்கிறாள் என்ற நினைவு மனதுள் எழுந்தாலும் வார்த்தைகளால் என்னைச் சந்தோசப் படுத்திய அவளுக்கு நன்றி கூறி விலகிய அடுத்த கண்த்தில் இன்னொரு உறவுப்பெண் எனது சங்கிலியை உற்றுப் பார்த்தாள். “ஏன் இப்பிடிப் போட்டிருக்கிறீங்கள்? இதுக்கு ஒரு நல்ல பென்ரன் வாங்கிப் போட்டிருந்தீங்களென்றால் வடிவாய் இருந்திருக்கும்“ என்றாள்.

சாந்தினி வேலாயுதம்பிள்ளை

நீங்கள் சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென உங்கள் முன் வந்து தன்னை உங்களுக்கு அறிமுகம் செய்து கொண்டால், உங்களுக்கு எப்படி இருக்கும்?

அப்படியொரு அதிசயமான சந்தோசம் எனக்குத் திடீரென்று கிடைத்துள்ளது.

என்னோடு மூன்றாம் வகுப்பு வரை படித்த எனது ஊரைச் சேர்ந்த சாந்தினியின் Shanthi Balasuriyar நட்பு, மனதுக்குள் தேடிக் கொண்டேயிருந்தால் என்றாவது ஒருநாள் கிடைப்பார்களோ, என்று எண்ணும் படியாக, எனக்குள் இனம் புரியாத ஒரு மகிழ்வையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரிசுப்பொருட்களை நான் மிகவும் நேசிக்கிறேன். யார் அன்போடு தந்தாலும் அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். இவ்வருடக் கோடைவிடுமுறையில், இங்கிலாந்து விஜயத்தின் போது என் பேத்தி சிந்து தந்த அன்பு கலந்த வரவேற்புப் பரிசு இது

Sinthu´s Drawing — in Slough, United Kingdom. 8.8.2014

Wednesday, July 23, 2014

100,000€ க்கள்

இன்று தற்செயலாக  எனது ஜேர்மனிய நண்பி லியானே யைச் சந்தித்தேன். கடந்த வருடம் எழுதிய அவள் பற்றிய ஒரு குறிப்பு இது.

லியானே மிகவும் மனமுடைந்து போயிருந்தாள். அவளது கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது.

அவன் முன்னரும் சில தடவைகள் வேறு வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதற்கான சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் வெறும் சந்தேகங்களுடனும், சண்டைகளுடனும் முடிந்து முடிந்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஆதாரபூர்வமான சில தடயங்கள்  சாட்சியங்களாக, அவள் தாங்கொணாத் துயரில் தவித்தாள்.

மூன்று குழந்தைகளின் தேவைகள், வேலைகள் போன்றவற்றிற்கு மத்தியில் மனஆறுதலுக்கு நண்பிகள் சிலருடன் பேசினாள். விடயங்களைச் சொன்னாள். அப்படியெதுவுமில்லை அவன் தன்னிடமே திரும்பி விடுவான் என்று அடிக்கடி நம்பினாள்.

ஆனால் அவனோ ஒரு நாள், அவள் சமைத்து வைத்த சாப்பாட்டைச் சாப்பிட்ட படியே 'உன் மீது எனக்கு நாட்டமில்லை. உனக்கு 45 வயதாகி விட்டது. இப்போது ஒரு 30வயதுப் பெண்ணை நான் காதலிக்கிறேன். அவளோடு போய் வாழப்போகிறேன்' என்றான்.

லியானே ஒரு கணம் ஆடிப் போய் விட்டாள். 25வருடகாலத் தாம்பத்தியம் ஒரு நொடியில் கலைந்து போகப்போவதை உணர்ந்தாள்.

ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் அவளை விட்டுப் போய் விட்டான்.

அவள் கலங்கினாள். அழுதாள். என்ன செய்வதென்று தெரியாது விட்டேற்றியாகத் திரிந்தாள். எல்லாம் சில வாரங்கள்தான்.

அதன் பின் „அவன் திரும்பி வருவான் என்று நம்புகிறாயா?“ என்று கேட்ட போது „வந்தாலும் அவனை ஏற்கவோ அவனுடன் சேர்ந்து  இனி வாழவோ தயாரில்லை“  என்று திடமாகச் சொன்னாள். தனக்கான, தனது மனதுக்குப் பொருத்தமான இன்னொரு துணையைத் தேட ஆரம்பித்தாள்.

விவாகரத்து, வீடுவிற்றல்... போன்ற சட்டப்படியான சில செயற்பாடுகளுக்கு மத்தியில் ஒரு சில மாதங்களிலேயே அவளுக்கு ஒரு புதிய நட்புக் கிடைத்தது. அவள் மெது மெதுவாகச் சந்தோசமானாள். துயரம் குடி கொண்டிருந்த அவள் முகம் மகிழ்வில் திளைக்கத் தொடங்கியது.

அந்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. லியானே அவளது கணவனுடன் வாழந்த காலங்களில் பணவிடயத்தில் கூட மிகுந்த கஸ்டப் பட்டாள். அவன் அவளை விட்டுப் போன சில மாதங்களுக்குள் அவள் பணக்காரியாகி விட்டாள். அவ்வப்போது லொத்தர் போடும் அவளுக்கு  அந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, 100,000€ க்கள் விழுந்தன.  

50வயதுக் கணவன் 30வயதுப் பெண்ணுடன் வாழ முடியாமல் மீண்டும் ஓடி வந்தான். லியானே அவனை ஏற்கவில்லை.

சந்திரவதனா
7.3.2013




Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite