Sunday, July 23, 2006

செல்வாவுடன்

பத்து மணிக்கு செல்வா வருவாள் என்பதால் சற்று அவசரமாய் இருந்தேன். அவளின் எலக்ரோனிக் கை செய்வதற்கு இன்று அளவெடுப்பதாக ஏற்பாடு.

நேற்று அண்ணன் பிரபாகரன் அவர்களிடம் போனபோது யேர்மனிய செயற்கை உறுப்புத் தயாரிக்கும் தொழில்நுட்பவியலாளர் ஹொல்கர் தாமும் எம்முடன் வந்திருந்தார்.

அண்ணையுடன் கதைக்கும் போது  தகரமல்லாத Fiberglass இல் செயற்கைக் கால்களைச் செய்வதிலுள்ள நன்மைகளையும், செயற்பாடுகளையும் பற்றி விளக்கினேன்.

அப்போதுதான் 1990 இல் பலாலித் தாக்குதலின் போது இரு கைகளையும் இழந்து விட்ட செல்வாவின் கதை வந்தது. BBCயின் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய செல்வாவை சந்திக்க வேண்டுமென்றதொரு ஆர்வம் என்னுள் இருப்பதை அண்ணனுக்குத் தெரியப் படுத்தினேன். நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போனது பற்றி ஆதங்கப் பட்டேன்.

"அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா" என்று அண்ணை சொன்னார். அவவின் அந்த நிலை பற்றிப் பேசும் போது அவவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி  ஹொல்கரிடம் கேட்டோம்.

கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா சில பொழுதுகளின் பின் அழைத்து வரப் பட்டாள். என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாய் இருந்தது.

அவளை பரிசோதித்த ஹொல்கர் "இயலாது கஷ்டம் நிறைய செலவாகும்" என்று சொல்லி விட்டார். அண்ணை "செலவைப் பற்றிப் பிரச்சனையில்லை. அதை நான் தருகிறேன்" என்றார். அதன் விளைவாகத்தான் அவள் இன்று வருகிறாள். 

இன்று அளவெடுத்து அதைப்  Plaster of Paris இல் செய்து யேர்மன் கொண்டு சென்று அவளுக்கு அளவான கை செய்வதாகத் திட்டம்.  இரு கைகளும் அடியோடு இல்லாத நிலையில் கையைப் பொருத்துவதற்கு பிடிமானமாக ஒன்றுமில்லாத நிலையில் கையைச் செய்து முடிப்பதென்பது எவ்வளவு கடினமானது என்று அடிக்கடி ஹொல்கர் சொன்னார்.

ஆனாலும் ஒரு துணிந்த முயற்சி. அண்ணன் கேட்டு விட்டார் என்பதற்காக மட்டுமல்லாமல் 13 வருடங்களாக கை இல்லாமல் இருக்கும் ஒரு 25 வயதுப் பெண்ணுக்கு கை கொடுத்து உதவ வேண்டுமென்ற ஆர்வமும் எமக்குள்.

அதற்காக சனிக்கிழமை வன்னியிலிருந்து புறப்படுவதை திங்கள் வரைக்கும் தள்ளிப் போட்டோம்.

பத்து மணிக்குச் சற்று முன்னரே (1.6.2002) அவள் வந்தாள். போராளி இன்சுடர் துணைக்கு வந்தாள். அவர்களை ஏற்றி வந்தது ரேகாதான்.

இந்த அமளிக்குள்தான் எனக்கு டுபாய் புட்டவித்துக் காட்ட அண்ணன் புகழோவியனையும் நிமலனையும் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. பிட்டை இரவு அவிப்பதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.

அன்றைய பகற் பொழுது எனக்கு செல்வாவுடனே கழிந்தது. மாலை 4 மணியளவில் அரசியல் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான குசினிக்கு சாருவுடன் சென்றேன். செல்வாவும், இன்சுடரும் கூட வந்தார்கள்.

அங்கே நிமலனும் புகழோவியனும் எனக்காக எல்லாவற்றையும் வெட்டி வைத்து விட்டுக் காத்திருந்தார்கள். அடுப்பு கதகத வென்று எரிந்து கொண்டிருந்தது.

புகழோவியன் அடுப்போடு நின்றார்.  நிமலன் எனக்கு விளக்கத் தொடங்கினார்.

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளில்  இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும், தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். `எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்` சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்" என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்" என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதிகளில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது" என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார். 

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். "ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். "மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா" என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ"  என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாக, சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்து அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும், செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

"சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள்" என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

"சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை" என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தன. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு" என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்" என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்... என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி" என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்" என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த ´டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது?` என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும்  அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி  அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும், அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும், செயற்பாடுகளும் இருக்கின்றன. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.

அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும், அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா
ஜெர்மனி


30.5.2002 அன்று வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்த அந்த இனிய பொழுதுகளில் சில...

பிரசுரம்:
17-23 ஒக்டோபர் 2002 ஈழமுரசு
24-30 ஒக்டோபர் 2002 ஈழமுரசு

Monday, July 17, 2006

எனக்குப் பிடித்த ஆறு(6)


1) அன்பு

2) காதல்

3) நட்பு

4) சுதந்திரம்

5) இசை

6) அழகு



ஆறு விளையாட்டுக்கு என்னை அழைத்த
மலைநாடானுக்கும் குமரனுக்கும் நன்றி.

Sunday, July 16, 2006

இணையத்தளங்களால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டதா?


ஐபிசி தமிழில் செவ்வாய்க்கிழமை இரவு இலக்கிய மாலை நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இம்முறை வாசிக்கும் பழக்கத்தை எப்படி அதிகரிக்கச் செய்யலாம் என்ற கருத்துப்படவே விடயங்களைக் கலந்துரையாடினார்கள்

நூலகவியலாளர் செல்வராஜா, வெளியான புத்தகங்கள் பற்றியும், வாசிப்பின் அவசியத்தைப் பற்றியும் அழகாகச் சொன்னார். தொலைபேசி அழைப்பில் வந்தவர்கள், இன்னும் பலவிதமான கருத்துக்களைச் சொன்னார்கள்.

பிறந்தநாளுக்கோ அன்றி வேறு விசேடங்ககளுக்கோ பரிசளிக்கும் போது, புத்தகங்களைப் பரிசுப் பொருட்களாகக் கொடுங்கள் என்று கௌரி.மகேஸ்வரன் சொன்னார். உண்மையிலேயே அது வரவேற்கப் படக் கூடிய நல்ல கருத்து. நூல்களைப் பரிசாக, அன்பளிப்பாகக் கொடுப்பதும், பெறுவதும் ஒரு இனிய விடயம்தான். ஆனாலும் நூல்களை அன்பளிப்பாகத் கொடுத்து விட்டால் மட்டும் வாசிக்கும் தன்மை அதிகரித்து விடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இன்னுமொருவர் கருத்துக்களைத் தரும் போது, இணையத் தளங்கள் அதிகமானதால் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது எனக் குற்றம் சாட்டியிருந்தார். அந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜெனோ, நூலகவியலாளர் செல்வராஜாவோ ஏனோ அந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இணையத்தளங்களில் உள்ள விடயங்களை வாசிக்காமல் எப்படிக் கிரகித்துக் கொள்வது, என்பது எனக்குப் புரியவில்லை. இணையத்தளங்களின் வரவு வாசிக்கும் தன்மையைக் கூட்டியிருக்கின்றது என்றே என்னால் சொல்ல முடிகிறது.

எனது கருத்து சரியா தவறா என்பதை அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

சந்திரவதனா
15.7.2006

Thursday, July 13, 2006

வாசிப்பதை வைத்து எடை போடலாமா?


ஒருவன் எதை வாசிக்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடலாமா?
கவிதாவின் பதிவு என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

வாசிப்பதை வைத்து ஒருவரின் தரத்தை உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ அன்றி நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முத்திரை குத்தி விட முடியாது. ஆனால் வாசிப்பதை வைத்து ஒருவரின் குண இயல்புகளை, ஆர்வங்களை, தொழில்ரீதியான நாட்டங்களை, தொழிலை... என்று ஓரளவுக்கேனும் கணித்துக் கொள்ளலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

உதாரணமாக எனது வீட்டுப் பிரஜைகளையே எடுத்துக் கொண்டால், எனது வீட்டில் எனது கணவர், குழந்தைகள், நான் ஐவருமே வாசிப்புப் பிரியர்கள். ஆனால் எல்லோருமே குறிப்பிட்ட ஒரே விடயங்களை மட்டுந்தான் வாசிக்கின்றோம் என்றில்லை. தமிழ், ஆங்கிலம், ஜேர்மன்.. என்று மும்மொழிகளிலும் தினமலர், வாரமலர், மாதமலர், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள்... என்று பல விதமானவை எமது வீட்டில் குவிந்து இருந்தாலும் எல்லோரும் எல்லாவற்றையும் வாசித்து விடுவதில்லை. எல்லோராலும் எல்லாத் துறைகளையும் வாசித்து விடவும் முடியாது.

அரசியல் சம்பந்தமான விடயங்களுக்கு முதலிடம் கொடுத்து வாசிக்கும் எனது கணவர் அம்புலிமாமாக் கதைகளையும் வாசிப்பார். சின்னவயதிலேயே வெறும் கற்பனைக் கதைகள் என்ற ரீதியில் எனது ரசனைக்குள் அவ்வளவாக இடம் பிடிக்காத அம்புலிமாமாக் கதைகளை, எனது கணவர் வாசிக்கும் பொழுதுகளில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. சிரிப்பாகக் கூட இருந்தது. ஒரு காலத்தில் "இது என்ன சின்னப் பிள்ளைகள் போல..." என நினைத்துக் கொண்டதுமுண்டு. ஆனால் இன்று அப்படி நினைக்கத் தோன்றவில்லை. கற்பனைக் கதைகளையும் ரசிக்க முடிந்த அவரால் ஒரு ஓவியனாக, ஒரு கார்ட்டுனிஸ்ராகப் பரிணமிக்க முடிகிறது. அரசியலோ அன்றிக் குடும்பமோ எதுவாயினும் ஒரு பிரச்சனையை அதன் போக்கில் சிந்தித்து, அதை ஓவியமாக்கும் இந்தக் கற்பனை எனது சிந்தனைக்குள் எட்டாத ஒன்று. சமூகப் பிரச்சனைகளை நாடகமாக்கும் போது எழுத்திற்குள் இயல்பாகவே நகைச்சுவையைக் கலந்து விடுவதும் எனக்குக் கடினமானதே.

அதனால்தான் நினைக்கிறேன், அரசியலிலும், விவரணப்படங்களிலும், ஆவணப்படங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும், அம்புலிமாமாக் கதைகளையும், தொலைக்காட்சியில் பூனைக்கு டிமிக்கி விடும் மிக்கி மவுசையும் ரசிக்கும் ஒருவரின் சிந்தனைகளும், கற்பனைகளும் வேறு விதமானவை என்று.

இந்தளவு ரசனை உள்ள இவருக்கு தற்போதைய கவிதைப் புத்தகங்களைத் திறந்து பார்க்கவே பிடிப்பதில்லை. "இன்றைய கவிதைகளை ரசிக்க முடியவில்லை" என்பார். காசி ஆனந்தனின் கவிதைகள் போலவோ அன்றி வாலியின் கவிதைகள் போலவோ எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சலிக்கும் தன்மை அவரிடம்.

அடுத்து எனது பிள்ளைகளைப் பார்த்தால் வீட்டில் இத்தனை புத்தகங்கள் இருக்கும் போதும், தினமும், வாரமும்.. என்று புதிது புதிதாகப் பத்திரிகைகள் எம்மை வந்தடையும் போதும் Focus, Spigel, PC / Internet, Wirtschaft & Politik... என்று தேடி வாங்கி வாசிக்கும் எனது மூத்தவனின் ஆர்வத்தில் அரசியலும், உலகளாவிய சரித்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.. சினிமாச் செய்திகளையும் விரும்பி வாசிக்கும் அவனுக்கு சிறுகதைகளை வாசிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதை விட அவனது வேலை சம்பந்தமான பொருளாதாரம், ஒரு வங்கியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிதலினாலான ஆர்வத்தினூடான கவனங்கள், கணினி பற்றிய நுட்பங்கள்.. என்ற தேடலில், அப்படியான தகவல்கள் தாங்கிய புத்தகங்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம். இத்தனைக்கும் மத்தியில் குழந்தையை வளர்ப்பது எப்படி? என்ற புத்தகத்தையும் அவன் கையில் கண்டிருக்கிறேன்.

எனது மகளை எடுத்துக் கொண்டால் அவளிடம் அரசியல் ஆர்வம் குறைவு. அவளது புத்தக அலுமாரியில் அவளது வேலை தொடர்பான பிஸ்னஸ் சம்பந்தமான புத்தகங்கள் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான, குழந்தை வளர்ப்புப் பற்றிய புத்தகங்களும் ஆங்காங்கு இடம் பிடித்திருக்கின்றன. "என்னதான் உலகம் வளர்ந்து விட்டாலும், பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று சொன்னாலும் பெண்ணானவளுக்கு பிரச்சனை என்ற ஒன்று வரும் போது, அது ஒரு ஆணின் பிரச்சனை போல அல்லாது வேறு கோணத்தில் இருந்துதான் பார்க்கப் படுகிறது" என்று சொல்லும் அவளது வாசிப்பில் ஹரிபோர்ட்டரும், Gone with the wind டும்.. என்று இடம் பிடித்திருக்கின்றன. இவற்றிடையே மீண்டும் "மீண்டுமாய் என்னை வெட்டி வெட்டித் தைத்தார்கள்" என்று சொன்ன Waris Dirie யின் Desert Flower ம் இருக்கின்றன.

எனது சின்னவனைப் பார்த்தால் அவன் என்னைப் போல அனேகமான எல்லாவற்றையும் வாசிக்கும் ஒருவன். வழியிலோ, தெருவிலோ ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலும் வாசித்து விடும் இயல்பு. எத்தனைதான் களைத்து விழுந்து வீடு வந்து சேர்ந்தாலும் அது எத்தனை மணியாயினும் அவனுக்கு வாசிப்பதற்கு ஒரு புத்தகம் வேண்டும். அது கதையோ, அரசியலோ, விவரணமோ எதுவாயினும் பரவாயில்லை. ஆனாலும் அவன் ஒரு பத்திரிகையாளனாக இருப்பதால் அந்தத் துறையில் தன்னை இன்னும் இன்னும் முன்னேற்ற வேண்டும் என்று ஆர்வம் அவனுள் இருப்பதால் அவனோடும் Focus, Spigel, PC/Internet, Wirtschaft & Politik, Chip... என்பவற்றுடன் ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு செய்தி மற்றவர்களைக் கவர எப்படி எழுத வேண்டும்? ஒரு பத்திரிகையின் எந்தப் பகுதி ஒரு வாசகனை முதலில் ஈர்க்கிறது? எந்தளவில் ஒரு கட்டுரை இருந்தால் அது வாசகனை வாசிக்கத் தூண்டும்.. என்பதான விடயங்களைத் தாங்கிய புத்தகங்களும் இடம் பிடிக்கின்றன.

இத்தனையையும் வைத்து இவர்களில் யார் உயர்ந்தவர் என்றோ யார் தாழ்ந்தவர் என்றோ தரம் பிரிக்க முடியாது. நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கவும் முடியாது. ஆனால் இவர்களின் தொழில்களை, ஆர்வங்களை.. ஓரளவுக்கேனும் எடை போட முடிகிறது.

ஒருவர் வாசிப்பதை வைத்து அவரது ஆர்வங்களை, ரசனைகளை, தொழில் ரீதியான தேவைகளை எடை போடலாம் என்றே எனக்குச் சொல்லத் தோன்றகிறது. இது எனது எண்ணம் மட்டுமே.

13.7.2006

Monday, July 10, 2006

Archive Browser


எமது வலைப்பூவில், நாமே பதிந்த ஒரு விடயத்தை எப்போதாவது தேவை கருதித் தேடியிருக்கிறோம். அதைக் கண்டு பிடிப்பதில் சிரமமும் கண்டிருக்கிறோம். இப்போது அந்தளவு சிரமம் இல்லாமல் எமது பதிவை நாமே சுலபமாகத் தேடி எடுக்க வழி காட்டியிருக்கிறார் வெங்கட்ரமணி.

நீங்களும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
http://www.anniyalogam.com/tamilblog/2006/07/archive-browser-showcase-do-not-miss.html

Sunday, July 09, 2006

கனவுகள்


கனவுகள் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பேன்.மறக்க முடியாத கனவுகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாத்தியமில்லாத விடயங்களைக் கொண்ட கனவுகளுமே என்னை அப்படிச் சிந்திக்க வைத்திருக்கின்றன
சில கனவுகள் கண்டு ஓரிரு நாட்களில் அதனோடு சம்பந்தமான சம்பவங்களும் நடந்துள்ளன.


இந்த நிலையில் இன்று உமா கதிரின் பதிவில் கண்ட கனவு பற்றிய சில தகவல்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

கனவுகளுக்கு ஜாதக ரீதியாக பலன்கள் உண்டோ, இல்லையோ, விஞ்ஞான ரீதியாக பலன்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருநாள் இரவில் ஆறு கனவுகள் வருகிகின்றன. ஒவ்வொரு கனவும் குறைந்தது 10 நிமிடங்கள் நீடிக்கின்றன!. என்கிறார் தூக்கத்தை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள செம்டெக் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் ஹார்ட்மென்.

நமது தூக்க ஓய்வின் போது தசைகள் தூண்டி விடப் படுகின்றன. அதனால், மூளை லட்சக்கணக்கான நரம்பியல் தொடர்களை தூண்டி விடுகிறது. அவை பிம்பங்களாக தெரிகின்றன. நரம்பியல் சமிக்ஞைகளின் மூலம், தான்தோன்றித் தனமாகத் தோன்றும் பல்வேறு பிம்பங்களை நமது மூளை இணைத்து ஒரு கனவாக உருவாக்குகிறது.

விஞ்ஞான பூர்வமாக இப்படி 1973ல் கனவை பற்றிக் கூறினார்கள், ஆலன் ஹாப்ஸன் மற்றும் ராபர்ட் மெக்கார்லே எனும் விஞ்ஞானிகள்.

ஒரு பிரச்சினையில் சரியான தீர்வுக்கு வரமுடியவில்லையா? கவலையை விடுங்கள். அந்தப் பிரச்சினையைப் பற்றியே சிந்தித்தபடி தூங்கி விடுங்கள். அந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம் என்கிறார் அமெரிக்காவின் அறிஞர் கார்பீல்டு. தினமும் ஏதேனும் பயங்கரமான கனவுகள் தோன்றினால் அவை உங்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த முயல்கின்றன என தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் கார்பீல்டு.

பிரபல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், துப்பறியும் நிபுணர்களுக்கு, சில விஷயங்களில் அவர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்ட போதெல்லாம் அவர்கள் கண்ட கனவுகள் மூலமே நல்ல தீர்வு கிடைத்தது என்கிறது வரலாறு.

டாக்டர் ஜக்கைல் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ராபர்ட் லூயிஸ்ஸ்டீவன்சனுக்கு அவர் கணட கனவு கனவுதான் உதவியது.

தையல் இயந்திரம் கண்டு பிடிக்கும் போது, பல தவறுகள் செய்த படி இருந்தார் எல்லீஸ் ஹோவோ என்பவர். இறுதியில் அவர் கண்ட கனவின் மூலமே அந்த தவறுக்குச் சரியான தீர்வு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இரவில் நீங்கள் கண்ட கனவினை துல்லியமாக நினைவில் வைத்திருந்து திரும்ப நினைத்துப் பார்க்க முடியுமானால், அது உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேற பல நல்ல உத்திகளைத் தெளிவு படுத்தும் என்கிறார் டாக்டர் கோல்டர் ரூல்.

Saturday, July 08, 2006

வானலையில் நூல் வெளியீடு


ஐபிசி தமிழ் வானொலியில் ஒரு புதிய நிகழ்ச்சி அறிமுகமாகி உள்ளது.

ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். விபரங்கள் கிடைத்துவிடும். அந்தப் புதிய நிகழ்ச்சியின் புதுமைகள் தெரிந்து விடும். இலக்கிய மாலை, அதுதான் அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். செவ்வாய் தோறும் ஐரோப்பிய நேரம் இரவு பத்துமணிக்கு இந் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. ஈழத்துக் கலைஞர்கள் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை வழங்கும் எஸ்.கே. ராஜென் அவர்களால் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

நூல் வெளியிடுவதற்கான நாளைக் குறித்து, மண்டபம் எடுத்து, ஆய்வாளர்களை அழைத்து, முக்கியமாகப் பார்வையாளர்களை வருந்தி அழைத்து, பேச்சாளர்களின் மனம் நோகாமல் நடந்தொழுகி, "வருவீங்கள்தானே?" என்று ஒன்றுக்குப் பத்துத் தடவையாக தொலைபேசியில் அலுக்காமல் சிறப்பு விருந்தினர் வருவதை நிச்சயப் படுத்தி, வருபவர்களுக்கு விருந்து படைத்து.... இப்படி ஒருவர் தனது படைப்பை அறிமுகம் செய்வதற்குள் களைத்துப் போய் விடுகிறார். இதனால் தனது மற்றைய படைப்பைப் பற்றி சிந்திக்கவே மறந்து போகிறார். இவ்வகையான பின்னடைவுகளுக்கு படைப்பாளிகள் தள்ளப் படாமல் இருக்கும் விதமாக, சிரமமில்லாத முறையில் தளம் அமைத்திருக்கிறது ஐபிசி தமிழ். எங்களது தொகுப்புக்களை ஐபிசி தமிழிடம் கொடுத்து விட்டு அமைதியாக அடுத்த படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து விடலாம். எல்லாவற்றையும் இலக்கிய மாலை பார்த்துக் கொள்ளும்.

நூல்களின் ஆய்வுகளை வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் ஊடாகச் செய்து வானலைகளில் தவழ விட்டு விடுகிறார்கள். அதுவும் ஒரு மேடையில் நடப்பது போன்று நேரடியாகவே கதைத்து, கருத்துக்களைப் பரிமாறி சிறப்பாகத் தருகிறார்கள்.

இனி வெயிலில் அலைந்து மழையில் நனைந்து, பனியில் குளிர்ந்து புத்தக வெளியீடுகளுக்குப் பல கிலோ மீற்றர்கள் ஓடத் தேவையில்லை. அறையில் இருந்து கொண்டே நூல் விமர்சனத்தைக் கேட்கலாம். படைப்பாளியோடு வானலையில் உறவாடலாம். ஏதாவது மேலதிகத் தகவல்கள் தேவையென்றால் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களைக் கேட்கலாம்.

படைப்பாளிகள், ஒவ்வொரு நாடாகா அலைந்து திரிந்து தங்கள் நூல் வெளியீடுகளை நடாத்த வேண்டிய சிரமங்களில்லை. புத்தகங்களை அச்சிட்டு விட்டு சரியான முறையில் மக்களை அணுக முடியாமல், வீட்டுக்குள்ளேயே புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு சோர்ந்து போயிருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.

மேலும் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். இலக்கியமாலையில் விமர்சனம் செய்வதால் வானலையில் இலவசமாக ஒரு பெரிய விளம்பரமும் அந்த நூலுக்குக் கிடைத்து விடுகிறது.

இலக்கியம், இலக்கணம் என்று வரும்போது அது பலரிடம் போய்ச் சேருமா என்ற கேள்வி எழுந்தாலும், கண்டிப்பாக இந்தத் துறையில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரே விமர்சகர்கள் வரும்போதும், வருபவர்கள் தங்களது மேதாவித் தனங்களைக் காட்டும் போதும், நிகழ்ச்சி மெதுவாக சோம்பலைத் தரத் தொடங்கிவிடும். ஆகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் இந்த விடயங்களையும் கவனத்தில் கொண்டு இலக்கியமாலையை நடாத்துவாராயின், படைப்பாளிகளும் பயன் அடைவார்கள். நிகழ்ச்சியும் சிறப்புறும்.

இலக்கிய மாலை ஒரு நல்ல நோக்கோடு ஆரம்பமான நிகழ்ச்சி. அது நன்றாக நடைபெற வாழ்த்துவதோடு, ஐபிசி தமிழ் வானொலிக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் அவர்களுக்கும் படைப்பாளி என்ற நிலையில் இருந்து எனது நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
7.7.2006

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite