Friday, June 29, 2007

கணிப்புகளும் சந்தேகங்களும்

எனக்கே சந்தேகம் இருந்தது, இந்த வசந்தனும், சயந்தனும் ஒரே நபர்கள்தானோ என்று.

சயந்தன்
வலைப்பதிவு என்ற ஒன்று எனக்கு அறிமுகமாக முன்னரே இணையவழி எனக்குப் பழக்கமானவர். அவரின் உயிர்ப்பு சஞ்சிகைக்கு நானும் ஆக்கங்கள் எழுதி மின்னஞ்சல் வழியாக நான் அவருடன் கதைத்திருக்கிறேன். பின்னர் எழுநா என்ற இணையத்தளத்தை ஆரம்பித்த போது ஊரிலிருந்து ஒரு தளம் என்ற உணர்வுப் பெருக்கில், மனம் சந்தோசத்தில் பொங்க வாழ்த்தும் அனுப்பினேன்.

தொடர்ந்த காலங்களிலும், அவ்வப்போது இணையத் தொடர்பாடல்களுக்கு உரிய ஏதோ ஒரு வழியாக நாம் பேசியிருக்கிறோம்.

வசந்தன்
வலைப்பதிவின் பின்னரே எனக்கு அறிமுகமானார். அதுவும் இணைய வழிதான். அவர் மெல்பேர்ணில்தான் இருக்கிறார் என்று நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனாலும் மெல்பேர்ணுக்கு இரு தடவை போயும் நான் அவரைச் சந்திக்கவில்லை. முதல் தரம் 2006 ஜனவரியில் நானும் அவரும் ஒரே பொங்கல் விழாவில் இருந்திருக்கிறோம். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. அதே வருட இலக்கிய விழாவுக்கு நான் போயிருந்தேன். அவர் வரவில்லை. அந்த விழாவுக்கு வந்திருந்தால் கட்டாயம் ஒருவரையொருவர் இனம் கண்டு கதைத்திருப்போம்.

அந்த விழாவில் வலைப்பதியும் சந்திரலேகாவையும் இன்னும் பல அறியப்பட்ட எழுத்தாளர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசி மகிழ்ந்தேன்.

பின்னர் 2007 ஜனவரியில் பொங்கல் விழாவுக்கு வந்தாரோ இல்லையோ தெரியாது. நான் போயிருந்தேன். சிறிய மண்டபம். மேல் மாடியிலும் கீழ் மாடியிலுமாய் பார்வையாளர்கள். சந்திப்பதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாகவே இருந்தன.

குறிப்பிட்ட அந்த இலக்கிய விழாவுக்கு இம்முறை வசந்தன் போயிருந்தார். என்னால் போக முடியவில்லை.

இப்படியிருக்க நான்தான் சயந்தனும், வசந்தனும் என்ற சந்தேகம் யாருக்கோ வந்திருப்பதாக சின்னக்குட்டி எழுதியிருக்கிறார். அது சின்னக்குட்டிக்கே வந்த சந்தேகமாக இருந்தாலும் இப்போது தீர்ந்திருக்குமென நம்புகிறேன்.

இப்படியான சந்தேகங்கள் எனக்கும் நிறைய உண்டு. அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். அந்த அவுஸ்திரேலிய வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றிக் கூட எனக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் மறந்து விட்டேன். (இப்போதுதான் அடப்பாவிகளா இப்படியுங் கூட எழுதுவார்களா என நினைத்துக் கொண்டேன்.) இப்படிப் பல.

ஆனாலும் ஆராய்ச்சிகள் எதுவும் இப்போது செய்வதில்லை. எனது வேலைகளை முடிப்பதற்கான நேரங்களையே துரத்திப் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது அநாவசிய தேடல்களில் என்னால் ஈடுபட முடிவதில்லை.

யாராவது எழுதட்டுமே. என்னால் ரசிக்கக் கூடிய எனக்கு உற்சாகம் தரக் கூடிய எதையாவது வாசிக்கும் போது எனக்குள் ஏற்படும் நிறைவும், திருப்தியும் எனக்குப் பெரியது. அது எனக்கு அவசியமானதும் கூட. சில பதிவுகள் கவலையையும், எரிச்சலையும் தரத் தவறுவதில்லை. ஆனாலும் இரவு படுக்கைக்குப் போகுமுன் டிசே போன்றோரின் பதிவுகளில் எதையாவது ஒன்றைப் படித்து விட்டுப் படுக்கும் போது மனதில் ஒருவித நிறைவு தோன்றும். தமிழ்நதியின் பதிவுகளில் பெரும்பாலும் சோகம் இழையோடி இருந்தாலும் அதைப் படித்து முடித்த பின்னரும் இனம் புரியாத ஒரு துயர உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்த பின்னும் ஏதோ ஒரு நிறைவான திருப்தி ஏற்படுவதை மறுக்க முடியாது. (இப்படியான தன்மைகள் நான் குறிப்பிடாத இன்னும் பல பதிவுகளில் இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு நான் குறிப்பிடவில்லை.) எதையும் வாசிக்க முடியாது படுக்கைக்குப் போகும் பொழுதுகள் என்னுள் ஒருவித குறையையும், திருப்தியின்மையையும் எனக்குள் ஏற்படுத்தத் தவறுவதில்லை.

நேரம் கிடைக்கும் போது பிடித்த வலைப்பதிவுகளை வாசிப்பதும், முடிந்தால் அந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து, (அது நல்ல தாக்கமோ, வல்ல தாக்கமோ... எதுவானாலும்) எனது கருத்தை ஒரு வார்த்தையிலாவது எழுதி விடுவதுமே செய்ய முடிகிறது. அதிலும் பின்னர் கருத்தை எழுதுவோம் என நினைத்து வாசித்து விட்டு எதையும் எழுதாமலே விட்டவைதான் அதிகம்.

பொதுவாக நான் சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை. சினிமாச் செய்திகளையும் படிப்பதில்லை. ஆனால் புத்தக விமர்சனங்கள் யார் எழுதினாலும் முடிந்தவரை வாசிப்பேன். கடந்த வாரமோ அதற்கு முந்தைய வாரமோ டிசே ஒரு படவிமர்சனம் எழுதியிருந்தார். அதை டிசே எழுதினார் என்பதால் வாசித்தேன். பட விமர்சனம் என்றாலும், எழுதிய விதத்தின் சுவாரஸ்யம் ஏதோ ஒன்றை வாசித்தேன் என்ற திருப்தியை என்னுள் ஏற்படுத்தியது. அந்தச் சமயம் நியூசிலாந்திலிருந்து வந்திருந்த எனது மருமகனும் வீட்டில் நின்றான். அவன் நடிப்பு, நாடகம்… சினிமாத்துறை சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவனையும் அதை வாசிக்கச் சொன்னேன். அவன் கணினியின் முன் அமர்ந்திருந்து வீடு அதிரச் சிரித்துக் கொண்டிருந்தான். டிசேயின் ஒவ்வொரு வசனமும் அவனை அப்படிச் சிரிக்க வைத்தன. (அப்போதுதான் சொன்னான், தான் முதல்நாள் இரவு இருந்து சிவாஜி படத்தின் சில பகுதிகளை தரவிறக்கம் செய்து பார்த்தேன் என்று)

இதை ஏன் எழுத வந்தேன் என்றால் இந்தப் பதிவுக்குக் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்தேன். இத்தனை சுவாரஸ்யமான பதிவாயிருந்தும் பின்னூட்டம் எழுத நினைத்தும் செயற்படுத்தப் படவில்லை.

எனது நேரங்களும், செயற்பாடுகளும் இப்படி இருக்கும் போது எனது பிள்ளைகளின் குரலில் நான் பதிவு செய்திருப்பேனோ என்ற ஐயம் நளாயினிக்கு. அதற்கு வில்லுப்பாட்டக்காரர் போல ஒரு ஆமோதிப்பு சின்னக்குட்டியிடம் இருந்து.

காலம் போகின்ற போக்கில் பிள்ளைகளோடே மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ்சிலும், தொலைபேசியிலுந்தான் கதைக்க முடியும் போல் இருக்கிறது. என் அருகில் அவர்கள் வருகின்ற மதிய உணவு நேரத்தின் போதும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி அவர்களுக்கு இருக்கும் நேரத்தை மிஞ்சிய எனது மறதிகள் ஒரு புறமும், நேரத்தின் வேகம் இன்னோரு புறமுமாய் என்னை ஆக்கிரமிக்க தேவையானதையே கேட்கவோ, கதைக்கவோ முடியாத நிலைதான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் இப்படி வேற்றுப் பெயரில் குரல்ப்பதிவு செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படியான தேவைகளை விட அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய இன்னும் பயனான எத்தனையோ விடயங்கள் உள்ளன.

ம்… என்னைப் பற்றி மற்றையவர்கள் எழுதிய ஓரிரு வார்ததைகளில் நான் மிகவும் ரசித்தவகைளில் இதுவும் ஒன்று. சின்னக்குட்டி எழுதியது.
சந்திரவதனா முந்தி தனது பதிவுகளை பிளைட்இலை லக்கேஜ்ஜாய்
போடுறது என்றால் முழு கார்கோ பிளேனையே கயர் பிடிக்கோணும் இப்ப சினிமா பாட்டு பதிவு தானே கை பையிலே கொணர்ந்து இடலாம் என்று தூயாவிடம் சொல்ல .தானும் தன்னுடைய சமையலை சாப்பாடுகளை கூட கார்கோ பிளேன் இலை கயர் பிடித்து கொணர்ந்ததாக தூயாவும் சொல்லி
கொண்டிருந்தா.

சந்திரவதனா
29.6.2007

Monday, June 25, 2007

பிரசுரமான கதை

அன்றைய பேப்பரைப் பார்த்த போது பற்றிமாவுக்கு ஆச்சரியமான சந்தோசம். அந்தக் கதை பிரசுரமாகியிருந்தது. அதை அவள்தான் எழுதியிருந்தாள். எழுதிய பின் தனது உற்ற நண்பியிடம் காட்டி, “நல்லாயிருக்கு" என்று சொன்ன போது வீரகேசரிக்கு அனுப்புவதாகத் தீர்மானித்தாள். அவளது கனவுகளில் அதுவும் ஒன்று. ´தனது கதை பிரசுரமாக வேண்டும்.´ அது சாதாரணமான ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடிய ஆசையில் எழுந்த கனவல்ல. இவளுக்கேயான பிரத்தியேகமான ஆசை.

அவள் அதை ஒரு கடிதமாகத்தான் எழுதினாள். ஆனாலும் கடிதமாகக் கொடுப்பதில் உள்ள அன்றைய 1975ம் ஆண்டுக்குரிய பயமும், தயக்கமுந்தான் அதைக் கதையாக எழுத வைத்தது. அதை அவன் வாசிப்பான் என்ற நம்பிக்கை.

அவள் வேற்று நகரில் இருந்து பருத்தித்துறைக்கு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்து படிக்கிறாள். இரவு ரியூசன் முடிந்து பேரூந்தில்தான் வீட்டுக்குப் போவாள். பேரூந்து ரவுண் வரைதான் செல்லும். அவள் வீடு வரையுள்ள மிகுதி தூரத்துக்கு பேரூந்து ஓட்டம் இல்லை. அதனால் அவள் ரவுணுக்குள் இருக்கும் புகாரி சேலைக் கடையடியில் காத்து நிற்க, அவளது மாமா வந்து கூட்டிச் செல்வார்.

பருவ வயது. தடைகளும், அந்த நேரங்களுக்கேயுரிய கட்டுப்பாடுகளும் மனதின் அலைவுகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விடுவதில்லைத்தானே. புகாரி கடை முதலாளி அழகானவன். கட்டுடல் கொண்ட இளைய ஆண். எமது சாதாரண தமிழர்களின் தோலை விட அவனது தோல் வெள்ளையானது. சற்று வித்தியாசமானவன். இவள் தனியாகத் தனது கடை முன்னே காத்திருக்கும் போது அவன்தான் வலிய வந்து கதை கொடுத்து... சில வாரங்களில் உள்ளே வந்து தங்கும் படி அழைத்து.. வீரகேசரி பேப்பர் கொடுத்து வாசிக்கச் சொல்லி... ஒரு நாள் காதலையும் வெளிப் படுத்தி விட்டான். இவளும் காதலித்தாள் என்பது அவளுக்கு மட்டுந்தான் தெரியும். அவனிடம் கூட இவள் தனது காதலைச் சொல்லவில்லை. அவன் முஸ்லீம். இவள் கிறிஸ்டியன். அது போக ஒரு பெண் தனது காதலை வெளிப்படையாக நண்பியிடம் சொல்லக் கூடப் பயப்படும் காலம்.

அவளது மாமாவுக்கு இந்த விவகாரம் தெரிந்தால் கதை கந்தலாகி விடும். படிப்பும் அவ்வளவுதான். தோலை உரித்து, அவளது அம்மா, அப்பாவிடமே அனுப்பி விடுவார்.

ஒவ்வொரு நாளும் புகாரி இவள் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். இவளோ எந்த முடிவும் சொல்லாமலே இருந்தாள். ஆனால் அவனைக் காண்பதிலும், அவனோடு ஒரு சில வார்த்தைகளேனும் பேசுவதிலும் மிகுந்த இன்பம் கண்டாள். இப்படியே சில மாதங்கள் ஓடி க.பொ.த உயர்தர வகுப்புப் பரீட்சை நெருங்கியது. இப்போது அவன் கண்டிப்போடு சொல்லி விட்டான் “முடிவைச் சொல்“ என்று.

அதுதான் அவள் காதல் தோய்த்து ஒரு கடிதத்தை அல்ல, கதையை எழுதினாள். அதை வீரகேசரிக்கு அனுப்பும் படி அவனிடமே கொடுத்தாள். கண்டிப்பாக அவன் அதை வாசிப்பான் என்ற நம்பிக்கையில்தான் தானே அதை அஞ்சல் செய்யாமல் அவனிடம் கொடுத்தாள்.

அடுத்த வாரமே கதை பிரசுரமாகியிருந்தது. அவளது காதலையும் விட, அது அவளது முதற்கதை. அவளின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. ஆனாலும் அவளால் களிப்புற முடியவில்லை. கதை எழுதியவரின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் அவள் பெயர் இருக்கவில்லை. அங்கு புகாரியின் பெயர் இருந்தது. வீரகேசரி அனுப்பி வைத்த 50ரூபாய் சன்மானமும் புகாரிக்குத்தான்.

அதற்குப் பிறகு அவள் புகாரி கடையில் மாமாவுக்காகக் காத்திருப்பதில்லை.

சந்திரவதனா
25.6.2007

Tuesday, June 19, 2007

மசுக்குட்டி

தீயை அணைப்பது தான் நமது தீயணைக்கும் படையினரின் பொதுவான வேலை. ஆனால் இங்கே ஜேர்மனியில் அவர்கள் தீயை வளர்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் நமக்கு அதிகம் பழக்கப் பட்ட மயிர்க்கொட்டிதான். என்றும் இல்லாதவாறு இங்கு மயிர்க்கொட்டிகள் பெரிய மரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் மயிர்க்கொட்டிகளை ஜேர்மனியர்கள் ஆச்சரியமாகப் பார்த்திருக்கிறார்கள். இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறி மயிர்க்கொட்டியைப் பார்த்தால் பதை பதைக்கிறார்கள்.

தெருவீதியில் இருந்த ஒரு மயிர்க்கொட்டியைப் பார்த்து இரக்கம் கொண்டு ஒரு பெண்மணி அதை எடுத்து வீதிக்கு அப்பால் விடப் போன பொழுது விபரீதம் புரிந்திருக்கிறது. மயிர்க்கொட்டி பட்ட இடமெல்லாம் தடித்து உடலில் எரிச்சலைக் கொடுக்க அந்தப் பெண்மணி பயந்து போய் அவசர உதவியை அழைக்கும் நிலைக்குப் போய் விட்டார்.

இப்பொழுது தீயணைக்கும் படையினர் உடலை முழுதாக மறைக்கும் மஞ்சள் உடை அணிந்து மயிர்க்கொட்டிகளைத் தீயைப் பாய்ச்சி அழித்து வருகின்றனர். ஜேர்மனியில் சாக்சன் அன்கல்ற், பயர்ன், பாடன்வூற்றம் பேர்க் ஆகிய மாநிலங்களில் மயிர்க்கொட்டிகள் அதிகம் காணப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். பாடன்வூற்றம் பேர்க் மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருக்கும் பாபிகியூ செய்யும் சில இடங்கள் மயிர்க்கொட்டிகளின் தொல்லையால் பாவனைக்குத் தடை செய்யப் பட்டிருக்கின்றன.

தீப்பிடிச்சு தீப்பிடிச்சு என்னை அழிடா என்று மரங்களில் ஒட்டியிருக்கும் மயிர்க்கொட்டிகள் பாடி ஆடாத குறை ஒன்றுதான் மிச்சம். 40 மில்லி மீற்றர் அளவுதான் என்றாலும் மயிர்க் கொட்டிகள் இங்கு இவர்களை பாடாயப் படுத்துகின்றன .

அந்த மயிர்க்கொட்டிகளை நாம் படுத்தும் பாட்டைப் பார்த்தால் சாவதற்கென்றே பிறப்பெடுத்து வருகின்றனவோ என்ற நெருடலான கேள்வி எழுகிறது.

ம்.. இப்ப, வெய்யில் சுள்ளென்று எறிக்கத் தொடங்க மசுக்குட்டி நூல் விட்டு இறங்கிற ஞாபகம் வந்து உடம்பெல்லாம் கடிக்கிறது போலை ஒரு உணர்வு.

Sunday, May 13, 2007

ஆற்றாமைப் பொழுதுகள்

ஒவ்வொரு பொழுதிலான கண்ணீர் துளிகளுக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். என்னைச் சுற்றி எத்தனையோ சந்தோசங்கள், துக்கங்கள், இணைவுகள், பிரிவுகள்... என்று வாழ்க்கையில் பலதைக் கடந்து வந்து சிலதில் சங்கமித்து நிற்கிறேன். வாழ்க்கையின் நியதிப்படி பிறக்கும் போதும், வளரும் போதும்.. என்று எனது ஆரம்ப வாழ்க்கையில் என்னோடு இணைந்து இருந்தவர்களிலிருந்து சற்று விலகி, எனக்கென்றொரு குடும்பம் அமைத்து எனது கணவர், எனது குழந்தைகள், எனது பேரப்பிள்ளைகள் என்ற ஒரு அன்பு வட்டத்துக்குள் நான் அடைபட்டு விட்டாலும், என்னைப் பெற்றவர்கள், என்னோடு கூடப் பிறந்தவர்கள்... என்ற அந்த ஆரம்ப உறவுகளிலிருந்து என்றைக்குமே மனதால் விலகி நிற்க முடியவில்லை.

அண்ணனும் அப்படித்தான். கூடப் பிறந்தவன். என்னோடு மிகவும் பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று அவனின் நினைவு நாள். இன்றைய பொழுதில் அதையே சொல்லிச் சொல்லியோ அல்லது எண்ணி எண்ணியோ கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் நிலை இல்லை. இருந்தாலும் இன்று கிடைத்து விட்ட ஒரு சிறிய தனிமைப் பொழுதில் கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லாமல் எங்கோ உறைந்து விட்ட சோகம் நிறைந்திருந்தது. சாவின் வலி ஒட்டியிருந்தது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும், விட்டுப் போகாமல் மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது. அதற்காக எனது எல்லா செயற்பாடுகளையும் விட்டு விட்டு இன்றைய பொழுதை நான் அழுத படியே கழிக்கவில்லை. எனது நித்திய வேலைகள் வழமை போலவே தொடர்கின்றன. காலம் சிலவற்றை ஆற்றித்தான் விடுகிறது. மரணித்த செய்தியை தாங்க முடியாது மனம் புரண்டு அழுத பொழுதுகள் மெதுமெதுவாக நகர்ந்து, பின்னர் வேகமாகவே ஏழு வருடங்களைத் தாண்டி விட்டன.

இன்று, இந்த உலகத்தின் எந்த அந்தந்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக, விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை ஒரு போதும் தூக்கி எறிந்து விட முடியாது. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்… என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஏழு வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன. இன்றும் அப்படித்தான் அவன் பற்றிய ஏதேதோ நினைவுகள் எனக்குள் விரிந்து, கண்ணீர் பொல பொலவென்று கொட்டி விட்டது.

அன்று போல் இன்று நான் சோகத்தின் விளிம்பில் நின்று இதை எழுதவில்லையாயினும், இன்றைய இந்தக் கண்ணீர் கனமானது. ஒரு மரணத்தின் ஆற்றாமைப் பொழுதுகளை மறக்க முடியாது தவிப்பது. அந்த ஆற்றாமைப் பொழுதுகளில் அண்ணனின் நினைவாக எழுதிய ஒரு பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன்.


முகவரி தேடும் மனவரிகள்



தீட்சண்யன்

இதயத்தின் ஓரத்தில் ஆறாத சோகம்
விழிகளின் ஈரத்தில் வடியாத ஏக்கம்
உறக்கத்தில் கூட உறங்காத நினைவு
இதையெல்லாம் தந்து நீ எங்கு சென்றாய்..?


அண்ணா..!
இப்போ நான் மிகவும் பலவீனமானவளாகி விட்டேன்.
அடிக்கடி அழுவதும், அர்த்தமின்றிக் கோபப் படுவதும்
நீண்ட இரவுகளிலும் சோர்ந்த பொழுதுகளிலும்
நீயில்லா நினைவுகளில் வீழ்ந்து போய்க் கிடப்பதுவும்
என் வாழ்க்கையாகி விட்டது.

எனக்குள்ளே ஒளிந்திருக்கும் அழுகை அருவியாகக் கொட்ட இன்ன இன்னதுதான் காரணமென்றில்லாமல், சிறு துரும்பு அசைவில் கூட துயர் என்னைத் தாக்க நிலை குலைந்து போகிறேன்.

இன்றைய இப்போதைய அணை உடைத்துப் பாயும் என் அழுகைக்குக் காரணம், உன் மகளின் பிறந்தநாள் புகைப்படம்.

உனக்கு நான் எழுதவென்று, எனக்குள் நான் எழுதி வைத்தவைகளை உனக்கு அனுப்ப முடியாத படி, உன் முகவரியைக் கூடத் தராது நீ எனை விட்டுப் போன ஒரு சோகமான பொழுதில்தான் அப் புகைப்படங்கள் என்னை வந்தடைந்தன.

கடித உறையில் கூட நீதான் உன் கைப்பட விலாசமெழுதியிருந்தாய். எப்படி என் நெஞ்சு படபடத்தது தெரியுமா..? உறை கசங்காமல் அவசரமாய்ப் பிரித்து, உள்ளிருந்த படங்களுக்குள் மனங் கலங்கியபடி உன் முகம் தேடினேன்.

ஒரு படத்தில் ஷெல்லிலே தொலைந்து போன உன் கால் பற்றி யாருமே காணாத படி எப்படியோ மறைத்து உன் பிள்ளைகளுக்கு நடுவில் அழகாக நீ அமர்ந்திருந்தாய். வாரி விடப்பட்ட நெளிந்த சுருண்ட உன் கேசமும், புன்முறுவல் பூத்த உன் முகமும் எப்போதும் போல் அழகாய்..! அதுதான் உன் இறுதிப் புகைப்படம் என நினைக்கிறேன்.

அந்தப் புகைப்படங்களைத்தான் மீண்டும் இன்றெடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்தேன். ஒரு படத்தில் உன் மகள் அழகாக பரதநாட்டிய முத்திரைகளுடன் அபிநயித்த படி....! புகைப்படத்தை உற்றுப் பார்க்கும் போதுதான் அதைக் கண்டேன். ஒரு ஓரமாக உன் பாதம் நீண்ட படி... பெருவிரல் இல்லாது..! ஓ... வென்று அழுது விட்டேன். உன் கால் படத்தில் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நீ ஓரமாய் உட்கார்ந்திருந்திருப்பாய். உன் மகளைப் படம் பிடித்தவனும் சரியாகப் பார்க்கவில்லை. நான் பார்த்து விட்டேன்.

இப்படித்தான் அடிக்கடி ஏதவாது காரணங்கள், துயரத்துக்கு நான் போட்டு வைத்திருக்கும் அணையை உடைக்க வரும். அழுகை வெள்ளமாய்ப் பாயும்.
அழுகை ஓய்ந்த சில பொழுதுகளில் மூக்கை உறிஞ்சிய படியோ, சமைத்து முடிந்த பொழுதுகளில் கழுவிய கைகளைத் துடைத்த படியோ, வேலையால் வந்ததும் உடைகளை மாற்றிய படியோ, படுக்கைக்குப் போன பின்னும் தூக்கம் வராத பொழுதுகளிலோ நான் உன் புகைப் படங்களை எடுத்துப் பார்ப்பேன். துக்கம் நெஞ்சை அடைக்கும். பக்கம் பக்கமாக நீ எனக்குப் பிரியமாக எழுதிய கடிதங்களை எடுத்து வாசித்துப் பார்ப்பேன். அழுகை வரும்.

இன்றும் மூக்கை உறிஞ்சிய படி உனது ஒரு கடிதத்தை எடுத்தேன். அழுகை ஓய்ந்திருந்தாலும் விம்மலும் பெருமூச்சும் இன்னும் ஓயாதிருந்தன. கன்னத்தில் எச்சமாய்க் கண்ணீர் அரை குறையாகக் காய்ந்தபடி இருந்தது.

நான் வாசிக்கத் தொடங்கினேன்.


157/1 OLR Lane
Hospital Road
Jaffna
Srilanka
29.6.1991


பிரிய தங்கைக்கு,
உனது தொகுதி தொகுதியான கடிதம் இன்று - இப்போ கிடைத்தது. ஆற்றாமையினாலும், விரக்தியினாலும் இறுகிப் போயிருந்த என்னுள் எரிமலை வெடித்தது போன்ற கொந்தளிப்பு உருவாகி கண்ணீராய்ச் சொரிகிறேன்.


என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவேசம் வரும் கட்டங்களில் இப்படியான அன்புப் பிரவாகங்கள் தாக்கி - என்னுள் இருக்குமெல்லாம் பீறிட்டு வெளியேறுவதால் ஒரு விதமான களைப்பும் ஓய்வும் ஏற்படுகிறது.

20.12.90 அன்று எனது பாடசாலை ஆசிரியர்களுக்குரிய சம்பளப் பணத்தை எடுப்பதற்காக கொழும்பு சென்றேன். அவ்வேளை எமது தம்பி பார்த்திபன் யேர்மனி பயணமாகத் தயாராக நின்றான். சந்தோசமாக அவனை பயணம் அனுப்பினேன். வவுனியாவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் கொழும்பில் 29ந் திகதி வரை நின்றேன். அங்கு நின்ற ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக எனது பிள்ளைகளுக்குத் தேவையான சில கல்வி உபகரணங்கள் உடைகள் போன்றவற்றை வாங்கினேன்.

29.12.90 அன்று வவுனியா வந்தும், சீனி, சவர்க்காரம் போன்றவற்றிற்கு ஊரில் தட்டுப்பாடு என்பதால், 30.12.90 வரை தங்கி நின்று அப்பொருட்களை வாங்கினேன். இதற்கிடையில் எத்தனையோ இராணுவத் தடைகளில் பார்த்திபன் பயணிக்கும் போது தந்து விட்ட மின்சார உபகரணங்களைப் பறிகொடுத்தேன்.

காலையில் ஒரு சூட்கேசுடனும், மூன்று பைகளுடனும் சைக்கிளில் கடைசித் தடையையும் தாண்டினேன். மிதிவெடி நிறைந்த வயல்களினூடு, தொடை வரை சேறு புரள சைக்கிளை முக்கி முக்கித் தள்ளினேன். இனியென்ன..! என்ற பூரிப்பில் முந்தி முந்தி வந்தேன். பூந்தோட்ட கிரவல் பாதையில் ஏறும் போது 100 யாருக்கப்பால், எனது வலது புறமாக ஒரு பவல் Armoured car ம் இரண்டு Trucks ம் வருவதைக் கண்டேன். சனங்கள் இடது புறமாக ஓடினர். நானும் சைக்கிளில் ஏறி ஓடினேன்.

Firing தொடங்கி விட்டது. பல சைக்கிள்கள் விழுந்தன. பெரிய காயங்களில்லை. நானும் சைக்கிளை ஒரு மரத்துடன் சாத்தி விட்டு, பெரிய மரமொன்றின் பின்னால் படுத்தேன். தொடர்ந்து Firing. எனக்குப் பக்கத்தால் எல் 222....222 என்று குண்டுகள் பாய்ந்தன. ஓய்ந்தன. பின் பாய்ந்தன. பின்னர் Armoured car இலிருந்து Canonshell முழங்கியது. பாரிய பயங்கரச் சத்தம். என்னருகில் ஒருவன் நின்றான். Canon தொடங்க, பாய்ந்து கிடங்கில் வீழ்ந்து ஓடி விட்டான். என்னால் அசைய முடியவில்லை. பயம். எதுவும் நடக்காதென்ற நம்பிக்கை. படுத்திருந்தேன்.

மிகப் பாரிய ஓசையில் Canon குண்டுகள் பட்டுக் கொப்புகள் முறிந்தன. திடீரென மின்வெட்டும் அதிர்ச்சி. தலை நிமிர்த்தி என் உடலைப் பார்த்தேன்.
(மல்லாக்காகப் படுத்திருந்தேன்.) என் முழங்கால் இருந்த இடத்தில் கொழுப்பும், இரத்தமும், சதையுமாக ஒரு பள்ளம். வெள்ளையாக எலும்புகள். காலை அசைத்தேன். இரண்டு எலும்புகள் உரசி "ஐயோ... அம்மா..!" என்று என்னால் முடிந்தளவு பலமாகக் கத்தினேன். கண்ணீர் வந்தது. பதிலாக படபடவென குண்டுச் சத்தம் வந்தது.

எனது மற்றைய கால் பெருவிரல் போனதோ, கை முறிந்ததோ அந்தக் கணத்தில் எனக்குத் தெரியாது. நான் இப்படியே இருந்தால் செத்து விடுவேன் எனத் தெரிந்தேன். குருதி அருவியாகப் புல்லில் ஓடிக் கொண்டிருந்தது. நான் மயக்கமாவதை உணர்ந்தேன்.

கூடாது. இது ஆபத்து. என என்னறிவு உணர்த்தியது. திரும்பிப் பார்த்தேன். சைக்கிள் நிற்கிறது. எனது சக்தியெல்லாவற்றையும் கூட்டி "அண்ணை என்னைத் தூக்குங்கோ...! " என்று கத்தினேன். மீண்டும் புலன்கள் குறைகிறது. யாரோ ஒருவர்(நாட்டாண்மை) வந்து என்னைப் பார்த்தார். "ஐ..யே..யே" என்றார். "பொறுங்கோ வாறன்" என்றார்.

எங்கோ எப்படியோ போய் நால்வர் வந்தனர். என்னைத் தூக்கினார்கள். தொடர்ந்து A.K.47 Firing. "அண்ணை என்ரை சாமான்களும் சைக்கிளும்." என்றேன். "ஆளே முடியப் போகுது. சைக்கிளாம்." என்றார்கள்.

கால் புல்லில் தேய, குருதி ஆறாய் ஓட தூக்கி வந்து சாக்கில் கிடத்தி (இயக்கம் அல்ல) Tractor இல் ஏற்றினார்கள். ரக்ரர் பெட்டி முழுக்க இரத்தம். பெடியளின் சென்றிக்கு வர சனம் குவிந்தது புதினம் பார்க்க, எனக்குத் தெரிந்த பெடியள் யாரும் இல்லை.

ரக்றர் ஓட்டி மேற்கொண்டு பயணிக்க மறுத்தான். மினிவான்கள் ஏராளம் நின்றன. யாவரும் மறுத்தனர். என்னைக் கிட்டிய மருத்துவமனையான கிளிநொச்சிக்குக் கொண்டு போகக் கூட மறுத்தனர். நான் செத்து விடுவேன், என்று நம்பினர். யாரோ.... எனது மனைவியின் தூரத்து உறவினர் என்னுடன் வர ஒப்புக் கொண்டார். எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரியுமாம்.

"எனது சைக்கிளையும், சூட்கேசையும் எடுத்து வையுங்கோ." என ஒரு அன்பரிடம் சொன்னேன். பத்திரிகை நிருபர்கள் முகவரி கேட்டனர். சொன்னேன். செஞ்சிலுவைச் சங்க வாகனம் வந்தது. உதவும் படி ஆங்கிலத்தில் கேட்டேன்.

அவன் எனது இடுப்புப் பட்டியை உருவி, ஒரு தடி முறித்து முறுக்கிக் கட்டினான்.(இரத்தம் போகாதிருக்க). ஒரு கோப்பை தேநீர் தந்தான். தான் அநுராதபுரம் போவதாயும் என்னை யாழ்ப்பாணம் போகும் படியும் சொன்னான். நல்லவன்.

இறுதியில் மினிவான்காரன் ஒருவன் கிளிநொச்சி போக 5000ரூபா கேட்டான். ஒப்புக் கொண்டேன். வழி வழியே வாகனத்தின் படிகளினூடு குருதி வடிந்ததாம். நான் ஏதேதோ கதைத்தேனாம். மயங்கினேனாம். அது பெரிய கதை. பின் கிளிநொச்சி மருத்துவமனையில் டெக்ஸ்ற்றோஸ் ஏற்றினார்கள். இன்னும் பத்து நிமிடம் தாமதமானால் இறந்திருப்பேன் என்றார்களாம். (இறந்திருக்கலாமென இப்போதெல்லாம் நினைக்கிறேன்.)

மீண்டும் அங்கிருந்து பூநகரி ஜெற்றிக்கு வர செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்புலன்சுக்கு டீசலுக்குப் பணம் கேட்டார்கள். 3200ரூபா கொடுத்தேன். பின்னர் ஜெற்றியிலிருந்து யாழ்ப்பாணம் வர 1300ரூபா கேட்டார்கள். கொடுத்தேன்.

நடுநிசியில் யாழ் மருத்துவமனையில் வைத்தியர்கள் சொன்னார்கள் "நீர் எண்ட படியால் வந்திருக்கிறீர். உமக்கு மனோதிடம் கூட" என்று. (என் மனோ திடத்திற்காக வருந்துகிறேன்.)

ஆறுமாத காலமாக ஒரு கால் இல்லாமல், ஒரு கை இயங்காத நிலையில் இருக்கிறேன். போன சனிக்கிழமை எக்ஸ்றே எடுத்தேன். கை எலும்பு பொருந்தவில்லை. அதை மீள வெட்ட வைத்தியர்கள் விரும்பவில்லை. முன்னைய மருத்துவ வசதிகள் இப்போ இங்கில்லை. கால் போட்டாலாவது ஏதாவது செய்யலாம். ஜெயப்பூர் கொம்பனியில் கால் இல்லை. கூட்டுப் படைத் தலைமையகம் கால் கொண்டு வர மறுக்கிறது.

எனது வீட்டுக் கேற்றைத் தாண்ட முடியாத நிலையில் பார்த்த முகங்களையே திரும்பத் திரும்பப் பார்த்த படி, யாரோ சொன்ன தகவல்களைக் கேட்ட படி முடங்கியிருந்த எனக்கு இப்போ ஆறுதல் தரும் ஒரு விடயம் பொட்டம்மான் அவர்களிடம் கடமையாற்றுவது ஒன்றுதான். அவர்களில் ஒருவர் காலையில் வந்து என்னை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்று மாலையில் எனது கடமை முடிந்ததும் என்னை வீட்டில் கொணர்ந்து விடுவார். அங்கு கடமையாற்றும் பொழுதுகளில் நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்.

இது ஒரு துன்பியல் கடிதமாக அமையக் கூடாது என்பதற்காகப் பலவற்றைத் தவிர்த்துள்ளேன். என்னால் தாளமுடியவில்லையம்மா. எப்படியிருந்த நான் எப்படிக் கூட்டுப் பறவையாய்ப் போனேன். நீ வருந்தாதே.

உன் பிரிய
அண்ணன்.


இப்போது நான் அழவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. கடிதத்தை மூடி வைத்த பின்னும் படம் போல நினைவுகள். நீயும் நானும் எமது ஆத்தியடி வீட்டில், விறாந்தை நுனியில் குந்தியிருந்து, பிச்சிப் பூப்பாத்திக்குள் காகிதக் கப்பல் விட்டதிலிருந்து, எத்தனையோ நினைவுகள். எப்படி வாழ்ந்தோம் எமது பருத்தித்துறை மண்ணில். ஏன் இன்று இப்படியானோம்?

பத்து வருடங்களாக ஒற்றைக் காலுடன் துயர்களைச் சுமந்த நீ...
உனது ஒவ்வொரு நிலை பற்றியும் எனக்கு எழுதிக் கொண்டிருந்த நீ...
இப்போது மட்டுமேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

போவதற்கு சில நிமிடங்கள் முன்பு கூட "டொக்டர் என்னைக் கெதியாச் சுகப் படுத்தி விடுங்கோ. நான் புலிகளின் குரல் வானொலிக்குக் கவிதை எழுதோணும்" என்று சொன்னாயாமே! "தங்கைச்சி யேர்மனியிலையிருந்து ரெலிபோன் பண்ணினவளோ..?" என்று கேட்டு, டொக்டர் ஓமென்றதும் கண்களில் ஏதோ மின்னத் திருப்திப் பட்டாயாமே..! பிறகேன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றாய்..?

முகவரியைக் கூடத் தராது சென்று விட்டாயே..! உனக்கு எழுத என்று நான் எனக்குள் எழுதி வைத்தவைகளை எங்கே அனுப்ப..?

13.5.2000 அன்று (தனது 42வது வயதிலேயே) காலமாகி விட்ட
எனது அண்ணன் கவிஞர் தீட்சண்யனின் - நினைவாக....


சந்திரவதனா
யேர்மனி
9.7.2000

Friday, May 04, 2007

மேடைப்பயம்

உங்களுக்கு முதல் முதல்தான் மேடைப்பயம் வந்தது. எனக்கு இடையிலே வந்தது.(பத்து வயதில்)
அதன் பின் நான் மேடையேறுவதே இல்லை. (அதாவது பேசுவதற்கு ஏறுவதில்லை. நடனங்கள் செய்திருக்கிறேன். அது பிரச்சனையில்லை. கதைப்பதுதான் முடியாது.) எத்தனையோ வருடங்களின் பின் ஜேர்மனியில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட ஒரு விவாத அரங்கில் கலந்து கொண்டேன். மாட்டேன் மாட்டேன் என்று நின்ற போது எனது கணவர்தான் எழுத முடிந்த உன்னால் ஏன் கதைக்க முடியாது என்று சொல்லிக் கலந்து கொள்ள வைத்தார். எதிர் பார்த்ததை விடத் துணிவாகக் கதைத்தேன்தான்.

ஆனால் மீண்டும் அவுஸ்திரேலியாவில் ஒரு விமர்சன அரங்கில் அழகாக எல்லாம் எழுதி வைத்து விட்டு மேடையில் அவசரமாக எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொட்டி விட்டு ஓடி வந்து இருந்து விட்டேன்.

Thursday, May 03, 2007

காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன்.

நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப்பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன பந்தம?

குளிரிலே இதமான போர்வையாய், வியர்க்கையில் குளிர் தென்றலாய்,
மழையிலே ஒரு குடையாய், வெயிலிலே நிழல் தரு மரமாய், தனிமையில் கூடவே துணையாய், கால்களில் தழுவுகின்ற கடல் அலையாய்..... அவன் நினைவுகள் எப்போதும் என்னோடுதான்.

ஓ... இது தான் காதலா! இது காதலெனும் பந்தத்தில் வந்த சொந்தமா?
எனக்கும் தெரியவில்லை.

வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் எனபதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பது இல்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அப்படித்தான் இவனும் என்னுள் குடி புகுந்து, என் மனமுகட்டில் அமர்ந்திருக்கிறான்.

இன்றைய பொழுதில் அவன்தான் எல்லாமுமாய் எனக்கு இருக்கிறான். எந்தக் கணத்திலும் அவனை என்னால் மறக்க முடிவதில்லை. அவன் பக்கத்தில் இல்லை என்று சொல்ல முடியாத படி அவன் நினைவுகள் என்னுள்ளே விருட்சமாய் வியாபித்து, பூக்களாய் பூத்துக் குலுங்கி, அழகாய், கனி தரும் இனிமையாய் பிரவாகித்து இருக்கின்றன. எனது அசைவுகள் கூட அவனை மையப் படுத்தியே தொடர்கின்றன. எதைச் செய்தாலும் எங்கோ இருக்கும் அவன் என் பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பது போன்ற உணர்வுகள் கூடி, எப்படியோ எனது வேலைகள் எல்லாமே அவனுக்காகவே செய்யப் படுவன போல ஆகி விடுகின்றன.

இவையெல்லாம், இந்த உணர்வுகள் எல்லாம் எந்தக் கணத்தில் ஆரம்பித்தன என்று தெரியவில்லை. எதேச்சையாகத்தான் நடந்தது என்று சொல்லி விடவும் முடியவில்லை. எப்படி என்றும் தெரியவில்லை. ஆனால் அவன் இல்லாமல் நான் முழுமையாக இல்லை என்பதை மட்டும் ஒவ்வொரு பொழுதிலும் உணர்கிறேன். இது காதல்தானே!

காதல் பொய். அப்படி என்று ஒன்றுமே இல்லை. அது வெறும் பருவக் கோளாறு மட்டுமே என்று பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் காதல் இனிமையானது என்பதை உணர்ந்துதான் வைத்திருந்தேன். இப்போதுதான் அதன் முழுமையையும் உணர்கிறேன்.

அவன் எப்போதும் என் நினைவுகளில் சுழன்று கொண்டே இருக்கிறான். ஆனாலும் அவனை எப்போதும் ´மிஸ்´ பண்ணிக் கொண்டே இருக்கிறேன். அவனைத் தவிர்த்து வேறெதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை.

காதல் கொண்ட அனைவரும் பிதற்றும் வார்த்தைகள்தானே இவை என்று சொல்கிறீர்களா? அப்படித்தான் சொல்வீர்கள் நீங்களும் காதலில் விழும் வரை.
அதென்ன காதலில் விழுவது, அது என்ன குளமா, கிணறா என்று கேட்கிறீர்களா? அப்படித்தான் முன்னர் நானும் யோசித்திருக்கிறேன்.

எத்தனையோ தடவைகள் என்னருகில் எத்தனையோ பேர் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால் இப்பொழுது யாராவது என்னருகில் கட்டியணைத்தாலோ அல்லது கொஞ்சிக் குலாவினாலோ நான் தடுமாறிப் போகிறேன்.

காதல் என்பது உடல்களை விடுத்து உள்ளங்கள் மட்டும் ஸ்பரிசிக்கும் ஒரு இனிய பிணைப்பு என்றுதான் இதுவரை கருதியிருந்தேன். இப்போது அவன் முன் என் கருத்துக்கள் கொஞ்சம் தள்ளாடுகின்றன. அன்பை தழுவி உணர்ந்து கொள்வது போல், இறுக அணைத்து பகிர்ந்து கொள்வது போலக் காதலையும் ஆலிங்கனத்தால் உணர்ந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்ளலாம்… என்பதெல்லாம் அவனோடான நேசத்தின் பின்தான் எனக்குப் புரிந்தது. ஒரு பார்வையால், ஒரு சிரிப்பால்… என்று காதலை உணர்த்தலாந்தான். அதே போல ஒரு தொடுகையால், ஒரு அன்பான அணைப்பாலும் கூட காதலை உணர்த்தலாம்.

அவன் நினைவுகள் என்னை எத்தனை தூரம் பரவசப் படுத்துகிறதோ, அதேயளவுக்கு என்னை வளைக்கும் அவன் கரங்கள் என் வரை நீளாதோ என்று ஏங்கவும் வைக்கிறது. என் காதோரம் படர்ந்து என்னைச் சிலிர்க்க வைக்கின்ற அவன் மூச்சுக் காற்றை இந்தக் காற்றுத் தன்னோடு கூட்டி வராதோ என்று மனம் சபலம் கொள்கிறது. ஏகாந்தப் பொழுதுகளிலெல்லாம் மனம் அவனோடு கைகோர்த்து நடக்கிறது. அருவியின் ஓசை அவன் சிரிப்பையும், தென்றலின் தழுவல் அவன் அணைப்பையும், இயற்கையின் தோற்றம் அவன் அழகையும் என்னுள் கவிதைகளாய்த் தெளிக்கின்றன. உதிக்கின்ற கவிதைகளில் எல்லாம் அவன் பிம்பந்தான் உயிர் கொள்கிறது.

முகம் பார்க்காமலே எழுத்தால், குரலால்... என்று ஏதேதோ காரணங்களால் நெஞ்சைத் தொட்டவர்கள் பலர். எத்தனையோ நூறு மின்னஞ்சல்களின் மத்தியில், முகமே தெரியாத ஒருவனின் ஓரிரு வரிகளே இதயச் சுவர்களை வேர்க்க வைக்கிறது. முழுமதியாய் சிரிக்க வைக்கிறது. காற்றுச் சுமந்து வரும் ஒரு குரல் நெஞ்சச் சுவர்களில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அந்த எழுத்துக்களுக்கு அல்லது அந்தக் குரலுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று தெரிவதில்லை. அப்படித்தான் இவனிடமும் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னை ஆக்கிரமித்தானா அல்லது நான் அவனுள் என்னைத் தொலைத்தேனா தெரியவில்லை. எதையும் பிரித்தறியவும் முடியவில்லை.

அவனை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக் கூட்டுக்குள் ஏதோ உருள்வது போன்ற உணர்வு. அந்தரம். தவிப்பு. நினைக்கும் போதெல்லாம் என்றால்.. மறந்தும் போகிறேன் என்றல்லவா அர்த்தம் கொள்ளும். அப்படி அவனை மறப்பதும் இல்லை. எத்தனையோ முக்கியமான விடயங்கள் எல்லாம் மறந்து போகும். அவனை மட்டும் எந்தப் பொழுதிலும் மறக்க முடிவதில்லை. அவன் நினைவுகளே ஆதார சுருதியாய், என்னை ஆகர்ஷிக்கும் பொழுதுகளாய்… அவனில்லாமல் நானில்லை என்ற நிலையில்… படுக்கும் போது கூட அவன் நினைவுகளைத்தான் போர்த்திக் கொண்டு படுக்கிறேன். இது காதல்தானே.

மௌனம் கூட அழகு என்று சொல்வார்கள். நான் கூட பலருக்கும் எனது மௌனத்தையே பதிலாக்கி இருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் மௌனத்தை என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. விழி பேசும் போது மொழி தேவையில்லைத்தான். பார்க்கவே முடியாத தூரத்தில் மௌனம் எப்படி அழகாக இருக்கும்? அவன் மௌனமாய் இருக்கும் பொழுதிலெல்லாம், பிரபஞ்சம் பிரமாண்டமாய் பரந்து விரிந்திருப்பது போலவும், நான் மட்டும் அங்கு தனியாக இருப்பது போலவும் உணர்கிறேன். எங்கே அவன், எந்த அலையிலும் நம் சொந்தம் கலையாது என்று சொன்னவன் இப்போ எங்கே போய் விட்டான், என்று கலங்குகிறேன். மனம் கலைந்து, உடல் களைத்து, சலித்து விம்முகிறேன். சிறு துரும்பின் அசைவில் கூட அவன் மௌனம் என்னில் கண்ணீராய் சிதறி விடக் காத்திருக்கிறது.

மீண்டும் மீண்டுமாய் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து பார்க்கிறேன். எத்தனையோ வந்திருந்தாலும் அவனது வரவில்லை என்னும் போது மனசு வெறுமையாகி விடுகிறது. அந்த ஒரு சிறிய தாமதமே, ஏன்? எப்படி மறந்தான்? ஒரு மின்னஞ்சல் எழுதக் கூட முடியாமல் என்னை மறந்து விட்டானா? என்ற கேள்விகளை எனனுள் மிகுந்த ஆதங்கத்தோடு அடுக்கத் தொடங்கி விடுகிறது. அந்தப் பொழுதுகளில் எல்லாம் நான் சோகத்தில் துவண்டு போகிறேன். இதயம் இருண்டு போவது போல உணர்கிறேன். கணப் பொழுதுகளும் யுகங்களாய் நீள்கின்றன.

தொலைபேசி அழைப்புக்கள் ஒவ்வொன்றுமே அவன்தான் என்ற நினைப்பில் மின்சாரத் தாக்குதலாய் என்னை அதிர வைக்கின்றன. பின் அவனில்லை என்றானதும் காற்றுப் போன பலூனாய் எல்லா அதிர்வுகளும் கலைந்து போகின்றன. எதையும் செய்ய முடியாமல், உடல் வலுவிழந்தது போலச் சோர்கிறது. மனம் சாப்பிட மறுக்கிறது. அடிக்கடி கண்கள் பனித்துப் பனித்து விழியோரங்களில் வழிகின்றன. குழறி அழுது விடலாம் போலிருக்கிறது. மை கொண்டு எழுதியவை என் மனசு போலக் கண்ணீரில் கரைகின்றன. ஏன் ஏன் இப்படியானது, ஏன் என்னை இப்படிப் பைத்தியமாய் ஆக்கினான், என்று என்னையே கேட்கிறேன். காதல் ஒரு போர் போன்றது என்பதை அப்போதுதான் உணர்கிறேன்.

ஆனாலும் அடுத்து வரப் போகும் அவனது ஒரு அழைப்பிலோ, சின்ன மின்னஞ்சலிலோ நான் சிறகடிப்பேன். இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமானவளாக ஆனந்தச் சிறகுகளை விரித்த படி உயர உயரப் பறந்து கொண்டே இருப்பேன். என் வானம் எனக்கு மட்டும் சொந்தமாக இருக்கும். மீண்டும் ஏதோ ஒரு வார்த்தையாலோ அல்லது வார்த்தைகளே இல்லாத மௌனத்தாலோ அவன் என்னை நோகடிக்கும் வரை பறந்து கொண்டே இருப்பேன். அவன் என்னை நினைக்கவில்லையோ என்ற நினைவுகளுடன் மோதி, மூக்குடைந்து, என் சிறகுகள் கிழிந்து கீழே தொப்பென வீழும் வரை பறந்து கொண்டே இருப்பேன்.

வீழ்ந்த பின்னும் மின்னஞ்சல் தேடி, தொலைபேசி அழைப்புக்காய் ஓடி… அவன் நினைவுகளில் வாடிக் காத்திருப்பேன்.

அவ்வப்போது என் கண்கள் பனித்து விழியோரம் உருள்கின்ற கண்ணீர் துளிகளிலும், ஏகாந்தப் பொழுதுகளில் இதழோரம் துளிர்க்கின்ற புன்னகைகளிலும் அவன் நினைவுகள்தான் ஒட்டியிருக்கின்றன என்று சொன்னால் அவன் நம்புவானோ, இல்லையோ, இதுதான் காதல் என்பதை நான் நம்புகிறேன்.

இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட இந்தக் காதல் என்பது மிக மிக இனிமையானது. இன்பமானது, அதை நான் முழுவதுமாக உணர்கிறேன். இதே காதல்தான் சமயத்தில் காதல் ஒரு போர் போன்றது என்ற உணர்வையும் எனக்குத் தருகிறது.

சந்திரவதனா
2.5.2007

Wednesday, May 02, 2007

காதல் ஒரு போர் போன்றது

எனது ரெம்பிளேற் சரியாக வேலை செய்யாது இருந்ததனால் எனது இப்பதிவை மீள்பதிவு செய்துள்ளேன். பதிவை வாசிக்க இந்த முகவரியில்
காதல் ஒரு போர் போன்றது

Friday, April 27, 2007

நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி...

வெற்றி கேட்டுக் கொண்டதின் பேரில்


இந்த விளையாட்டுப் பாடல்கள் யாருக்காவது தெரியுமா?

1 காற்றடிக்குது மழை அடிக்குது..

2 நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி..

3 அருப்புத் தட்டி இருப்புத் தட்டி...

முழுப் பாடலும் தேவைப் படுகிறது

மகரந்தங்களினால் ஒவ்வாமையா...?

இந்த மாதங்களில் மகரந்தங்களினால் பலரும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.

தூசிகளில் வாழும் staubmilbe யினால் ஏற்படும் ஒவ்வாமைகளை விட பூக்களினால் கூட ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. ஜேர்மனியில் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கள் கைக்குட்டையுடன் திரிகிறார்கள். இவர்கள் குளிரினால் பாதிக்கப் பட்டவர்கள் அல்ல. மிகமிகச் சிறிய அதாவது 0.001மில்லிமீற்றரிலிருந்து 0.003மில்லிமீற்றர் அளவுள்ள பூந்தாதுக்களினால் பாதிக்கப் பட்டவர்கள்.

ஜேர்மனியில் அனேகமாக மாசி கடைசியிலிருந்து புரட்டாதி கடைசி வரை பூந்தாதுக்கள் பறக்கின்றன. இந்தப் பூந்தாதுக்கள் காற்றினால் ஏறக்குறைய 300கிலோமீற்றர் தூரம் வரை எடுத்துச் செல்லப் படுகின்றன.

இவை அழையா விருந்தாளியாக மூக்கினுள் நுழையும் போது, பாதுகாப்புச் ஷெல்கள் இவைகளுக்கு எதிராக antibody யைத் தயாரிக்கின்றன. இதன் பாதிப்பு ஒரு பாரதூரமான தொற்றுநோயைப் போல கடினமாக இருக்கும். இதனால் வாயும் மூக்கும் புண்ணாகிச் சளி உண்டாகும்.

Pollenallergie எனக் குறிப்பிடப்படும் இந்த ஒவ்வாமை உள்ளவர்கள் உடனடியாகத் தம்மைக் கவனித்துக் கொள்ளாமல் விட்டால் மார்புச்சளியினாலும் அதனால் ஏற்படும் அஸ்மா இழுப்பு நோயினாலும் பாதிக்கப் படும் அபாயம் ஏற்படும். ஏனெனில் இந்த ஒவ்வாமை மூக்கிலிருந்து சுவாசக் குழாயின் உட்புறச் சவ்விற்கு நகரத் தொடங்கி விடும்.

இதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்தப் பூந்தாதுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

தை மாதத்தில் இருந்தே உங்களுக்கு இந்த ஒவ்வாமை ஏற்பட்டால்
உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Graeserpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

சித்திரையிலிருந்து ஆவணி வரையுள்ள காலப் பகுதியில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கு உள்ள ஒவ்வாமை Wildkraeuterpollen ஒவ்வாமை என அழைக்கப் படும்.

கால நிலைக்கும் வெப்ப தட்ப நிலைக்கும் ஏற்ப இந்த மாத எல்லைகள் ஒன்றிலிருந்து இரண்டு கிழமைகள் முன்னுக்குப் பின் மாறுபடலாம்.

மாசியும் பங்குனியும் Erle, Hasel என்பன பூக்கும் காலங்கள். இதே காலத்தில்தான் Weide, Pappel, Ulme, Esche என்பனவும் பூக்கத் தொடங்குகின்றன.

தெற்கு ஜேர்மனியில் பங்குனி கடைசியில் Birken பூக்கும். Birken, Karle, Hasel இம் மூன்றினதும் பூந்தாதுக்கள் மிகவும் கடுமையான ஒவ்வாமையைத் தரக் கூடியவை.

உங்களுக்கு எந்தெந்த மாதங்களில் ஒவ்வாமைச் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை அவதானித்து, மேற்குறிப்பிட்டவைகளையும் கவனத்தில் கொண்டு எந்தப் பூவின் மகரந்தம் உங்களுக்கு ஒவ்வாமையைத் தருகிறது என்பதைக் கண்டு கொள்ளலாம். அல்லது மருத்துவரிடம் ஒவ்வாமைக்கான பிரத்தியேகப் பரிசோதனையைச் செய்தும் அறிந்து கொள்ளலாம்.

இப்படியான பூந்தாதுக்களினால் ஏற்படும் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் - தும்மல், மூக்கினுள் அரிப்பு, எரிச்சல், - சளி - தொண்டையில் அரிப்பு, எரிச்சல் - கண்ணில் கடி, எரிச்சல், - போன்றவை.

இவ்விதமான ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வழிகள்.
பகல் பொழுதுகளில் வீட்டுக்குள் வரும் காற்றைக் குறைத்து இரவில் மட்டும் ஜன்னலைத் திறந்து வீட்டுக்குள்ளே காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்.

வீட்டினுள்ளே உள்ள காற்று ஈரலிப்புத்தன்மை உள்ளதாக இருக்கும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். (இதற்கு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி படுக்கையறையினுள் வைக்கலாம்)

வெயில் நேரத்தில் புற்கள், செடிகள் நிறைந்த பகுதிகளிலோ, வயல் வெளிகளிலோ உலாப் போவதையும், சைக்கிள் ஓடுவதையும் தவிர்த்து மழை பெய்து ஓய்ந்த பின் உலாப் போங்கள்.(மழை நேரத்தில் மிகக் குறைந்த மகரந்தத்துகள்களே காற்றோடு உலாப்போகும்.)

மோட்டார் வாகனங்களில் செல்லும் போது கண்ணாடிகளை மூடி விடுங்கள். ஒரு காற்று வடிகட்டியை வாகனத்துள் பொருத்தி வையுங்கள்.

இரவில் தெளிவான சுத்தமான நீரில் தலையைக் கழுவுங்கள்.

வெளியில் போகும் போது அணிந்த உடைகளை படுக்கையறையில் நின்று களையவோ, படுக்கையறையில் கொழுவவோ வேண்டாம். (ஏனெனில் உடைகளில் இருக்கும் மகரந்தத் துகள்கள் படுக்கையறையில் வீழ்ந்திருந்து இரவு முழுவதும் உங்களைப் படுக்க விடாது தொந்தரவு செய்யும்.)

வீட்டில் உள்ள தூசிகளை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.

படுக்கையறையில் நிலவிரிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மெத்தைகளும், தலையணைகளும் மிருகங்களின் உரோமங்களினாலோ, பறவைகளின் இறகுகளினாலோ செய்யப் படாதவைகளாக பார்த்து வாங்கிப் பாவியுங்கள்.

இந்த ஒவ்வாமைப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விடயம்
சில மருந்துகள் இவ் ஒவ்வாமையினால் வேறு விதமான பாரிய பக்க விளைவுகளைக் கொடுக்கும் அபாயம் இருப்பதால், உங்கள் உங்கள் நாடுகளில் உங்களது மருத்துவக் காப்புறுதி நிறுவனங்களால் விநியோகிக்கப் படும் ஒவ்வாமைக்குரிய பிரத்தியேக அட்டையைப் பெற்று, அதை நிரப்பி எப்போதும் உங்களோடு வைத்திருங்கள்.

பிற்குறிப்பு - தகவல்கள் ஆரோக்கியம் மருத்துவம் சம்பந்தமான ஜேர்மனியப் பத்திரிகை ஒன்றிலிருந்து எடுக்கப் பட்டதால் மரங்களினதும், பூக்களினதும் பெயர்களை ஜேர்மன் மொழியிலேயே தந்துள்ளேன்.

சந்திரவதனா
வைகாசி - 1997

Monday, April 02, 2007

WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்

பயம்
நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத் தக்கதாகவே நடந்திருக்கிறீர்களா? நான் நடக்கிறேன். ´லிப்ற்´ பக்கத்தில் இருக்க நான் மாடிப்படிகளில் ஏறியே போகிறேன். காரணம் பயம். பூட்டப்பட்ட அந்த சிறிய இடம் கொண்ட ´லிப்ற்´ க்குள் சில விநாடிகள் கூட நிற்கப் பயம்.

முன்னர் அப்படியில்லை. சிறுவயதில், கொழும்பில் முதன்முதலாக அப்பாவுடன் ´லிப்ற்´ றில் போன போது என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எப்படி இது சாத்தியம் என்ற வியப்பு. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஓடிச் சென்று " அம்மா, இன்று றூம் நடந்நது" என்றேன். அதன் பின்னான பொழுதுகளிலும் ´லிப்ற்´ என்னைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இப்போது... எப்போது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. மெதுமெதுவாக ஆரம்பித்த பயம், இப்போது பூதாகரமாக என்னை ஆட் கொண்டுள்ளது.

சில வாரங்களின் முன் 14வது மாடிக்கு நடந்தேன். அது ஒரு நாள்தான் என்பதால் பரவாயில்லை. சில மாதங்களின் முன் காலில் ஒரு வலி காரணமாக மருத்துவமனையில் பிரத்தியேக சிகிச்சை பெற வேண்டியிருந்தது. மருத்துவமனைக்குரிய பேரூந்து நிலையத்தில் இருந்து 9வது மாடிக்குப் போனாலே, எனது சிகிச்சைக்குரிய இடத்தை அடையலாம். கிழமையில் இரு நாட்கள் படி 4 வாரங்கள் செல்ல வேண்டியிருந்தது. 5வது மாடிவரை ஓடி ஓடி ஏறுவேன். 6வது மாடியில் மெதுவாக மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தடுமாறும். ஆனாலும் ஏறுவேன். 9வது மாடிக்குப் போய்ச் சேரும் போது களைத்திருப்பேன். ´லிப்ற்´ றின் உள்ளே போவோரும், வெளியே வருவோரும் என்னை விநோதமாகப் பார்த்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.

தினமும் மூன்று நான்கு மாடிகளை ஏறியே கடக்கிறேன். வேலையிடத்தில் எனது நண்பிகள் எல்லோரும் என்னைப் பார்த்துப் பகிடி பண்ணுவார்கள். எனது கணவரோடு கூட எங்கே சென்றாலும் அவர் ´லிப்ற்றில்´ நுழைய நான் படிகளில் விரைவேன். ஆனால் 5வது மாடிவரை ´லிப்ற்´ றையும் விட வேகமாக ஓடி ஏறி விடுவேன். அதன் பின்தான் என்னில் சோர்வு ஏற்படத் தொடங்கும்.

WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை எனது இந்தத் தன்மை கூட WEIRD ஆக இருக்குமோ?

ஏகாந்தம்
பலரோடோ அன்றில் சிலரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது, சில நிமிடங்கள்தான் முழுமையாக நான் அங்கு இருப்பேன். பின்னர் நான் மட்டும் அங்கு இருக்க, எனது நினைவுகளும், சிந்தனைகளும் வேறெங்காவது பறந்து விடும். நடந்தவை, நடக்கப் போவதான கற்பனை... ஏதோ ஒன்றுடன் நான் லயித்து விடுவேன். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதே என் காதிலோ, சிந்தனையிலோ விழாது. இதனால், என்னைச் சுற்றி உள்ளவர்களின் "என்ன உலகம் சுற்றப் போய் விட்டாயா? கனவு காண்கிறாயா? எந்த உலகத்தில் நிற்கிறாய்? ....? " என்பது போன்றதான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது அசடு வழிவது உண்டு.

இது தொலைக்காட்சி பார்க்கும் போதும் வானொலி கேட்கும் போதும் கூட நடக்கும். கண்கள் தொலைக்காட்சியில் இருக்கும். கவனம் வேறெங்கோ நிலைத்திருக்கும்.


மறதி
செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக் கூட மறந்து விடுவது. மறக்கக் கூடாது என்று நினைவாகத் துண்டுப் பேப்பரில் எழுதி, கண்ணுக்குத் தெரியக் கூடிய இடத்தில் குத்தி வைத்து விட்டு துண்டை கவனத்தில் எடுத்துப் பார்க்கவே மறந்து விடுவது.

இஸ்திரிப்பெட்டியின் பிளக்கைக் களற்றினேனா, மின்சார அடுப்பை அணைத்தேனா, வீட்டுக்கதவைப் பூட்டினேனா, கார்லைற்றை நிற்பாட்டினேனா... என்றெல்லாம் அநாவசியமாகக் குழம்புவது. ஆனால் அவையெல்லாம் எந்த சிந்தனைக்கும் இடமின்றி தன்பாட்டிலே நடந்திருக்கும்.

ஞாபகசக்தி
இத்தனை மறதிகள் மத்தியில் பழசுகள் எதுவுமே மறக்காமல் இருப்பது. சின்னவயது சம்பவங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டுமாய் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அதையும் விட ண்கள். எனது நண்பர்கள், உறவினர்கள் சக வேலையாட்கள்.. என்று எல்லோரது தெலைபேசி எண்களுமே, அது எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லாமே எனக்கு மனப்பாடம். (இத்தனைக்கும் நான் யாருக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுவது இல்லை) பிறந்தநாட்களும் அப்படியே. தெரிந்தவர்களின் கார் இலக்கங்கள் கூட மறப்பதில்லை.

யாராவது முன்னர் எப்போதாவது எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாலும், எனது தொலைபேசியில் அந்த இலக்கம் விழும் பட்சத்தில் அவர் சில வருடங்கள் கழித்து அழைப்பை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தை வைத்தே இன்னார்தான் என்று கண்டு பிடித்து விடுவேன்.

பிடிக்காதது
துப்பரவாகப் பிடிக்காத விடயம் தொலைபேசுவதும், தொலைபேசியில் அலட்டுவதும். தொலைபேசி சிணுங்கினால் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே தொலைபேசியை எடுப்பேன். கதைக்கும் போது அலட்டினால் முன்னர் என்றால் பேனாவால் பக்கத்தில் உள்ள பேப்பர் எல்லாம் கிறுக்கித் தள்ளி விடுவேன். இப்போதென்றால் அவர்களுக்கு ம்... கொட்டிக் கொண்டு, கணினியின் முன் போயிருந்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இனியில்லை என்ற அவசிய தேவைகள் இன்றி அம்மா, எனது குழந்தைகள், மிஞ்சினால் எனது சகோதரர்கள் தவிர்ந்த வேறு யாருக்கும் தொலைபேசி எடுக்க மாட்டேன். இதனால் பலரது, அதாவது மிக நெருக்கமான உறவுகளின் அதிருப்திக்குக் கூட ஆளாகியிருக்கிறேன்.

தொந்தரவு
எந்த நேரமும் பாட்டுக் கேட்க வேண்டும். எந்த சீரியஸான வேலையில் இருந்தாலும் பரவாயில்லை. பாட்டு வேண்டும். ரேடியோ ஒலிக்கா விட்டால் என்னில் ஏதோ ஒன்று குறைந்து விட்டது போல உணர்வேன். சோர்வாகி விடுவேன். சின்னவயதில் படிக்கும் போது கூடப் பாட்டுப் போட்டு விட்டுத்தான் படிப்பேன். இப்போதும் படுக்கும் போதும் பாட்டு வேண்டும். இது ஆரம்பத்தில் எனது கணவரைத் தொந்தரவு செய்வதாகவே இருந்திருக்கிறது. "இதென்ன தேத்தண்ணிக் கடையே? இராப்பகலா..." என்ற அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். இப்போது என்னோடு சேர்ந்து அவரும் பழகி விட்டார்.

தவிர்க்க முடியாத இன்னும் சில
#கவலையோ, சந்தோசமோ எதுவாயினும் டயறி போல எழுதித் தள்ளி விடுவது.
#எங்கு போனாலும் புத்தகங்கள் வாங்குவது.
#ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி விடுவது.
#எதைக் கொடுத்தாலும் புத்தகங்களை இரவல் கொடுக்க மனம் சம்மதிக்காதது.
#உடுப்பு அலுமாரியில் ஒரு உடுப்பின் மடிப்பு சற்றுக் கலைந்திருந்தாலும், மீண்டும் மீண்டுமாய் அதை எடுத்து மடித்து வைப்பது.
#தொலைக்காட்சியின் முன் 15 நிமிடங்களுக்கு மேல் விழித்திருக்க முடியாமல் நித்திரையாகி விடுவது.
#யாருடையதாவது வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு, அவர்களின் வரவேற்பறையில் மணிக்கணக்கில் இருந்து கதைப்பதை எந்த வகையிலும் ரசிக்க முடியாமல் நித்திரை தூங்கி விடுவது.

கவலையானது
தனிமையிலோ அன்றிப் பலர் நடுவிலோ எப்போதும் மனதுக்குள் ஏதாவது நல்ல கதைகள், கவிதைகள் என்று புனைந்த படியே இருந்து விட்டு, வீட்டுக்கு வந்த பின் அதை எழுத நினைக்கும் போது எழுத முடியாமல் அந்தப் புனைவுகள் கலைந்து போய் விடுவது.

அந்தந்த நேர உணர்வுகளின் எழுச்சியில், மனதின் ஆழத்திலிருந்து எழும் விடயங்களை அழகாக எழுதத் தொடங்கி, சில பக்கங்களை நிரப்பி விட்டு, அவைகளை முடிக்க முடியாமலே விட்டு விடுவது.

ரசனை
தெளிந்த நீரோடை, நீலவானம், பனிப்போர்வை, வண்ணப்பூக்கள்.. அழகிய குழந்தைகள்... எதைக் கண்டாலும் அவைகளின் அழகில் மனம் சொக்கி அப்படியே லயித்து நடுரோட்டில் கூட நின்று விடுவது.

செல்லி என்னை அழைத்ததால் WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் விளங்காமலே இதை எழுதினேன். மிக அதிகமாகவே எழுதி விட்டேன் போலிருக்கிறது. செல்லி ஏன் அழைத்தேன் என்று தலையிலே கை வைக்காது விட்டால் சரி.

சந்திரவதனா
ஜேர்மனி
2.4.2007

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite