Tuesday, December 02, 2014

நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 2.12.2014

நிறைய வாசித்திருக்கிறேன் என்றுதான் எப்போதும் எனக்குள் ஒரு நினைப்பு. வாசிக்காதவைதான் நிறைய என்பது சில கட்டுரைகளை வாசிக்கும் போதும், சில சம்பவங்களைச் சந்திக்கும் போதும்தான் தெரிகிறது.

*  நான் எஸ். பொ வை இப்போதுதான் வாசிக்கிறேன். என் தங்கை எஸ். பொ என்றால் உயிரையே விடுவது போலக் கதைப்பாள். அப்படி என்ன அவரில் என்று யோசித்து விட்டு இருந்து விடுவேன். அவரது படைப்புகளில் நான் வாசித்தது என்றால் மிகமிகச் சொற்பமே! இப்போதுதான் தேடுகிறேன். கொஞ்சம் கொஞ்சம் வாசிக்கிறேன்.

1) நேற்று படுக்கையில் இருந்த படியே முகப்புத்தகத்தைத் திறந்த போது அருண்மொழிவர்மனின் இந்தக் கட்டுரை ´எஸ்பொ வாழ்ந்த வரலாற்றில் வாழ்ந்த நனவிடை` வாசிக்கக் கிடைத்தது. படுக்கையில் எனது கைத்தொலைபேசியில் வாசிப்பது என்பது சற்று அசௌகரியமானதுதான். சிறிய எழுத்துக்கள். ஆனாலும் வாசித்தேன்.

இப்போது சில நாட்களாக இப்படியான ஒவ்வொருவரின் கட்டுரைகளையும் தேடித்தேடியே எஸ்.போ என்ற ஒரு எழுத்தாளனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் அவரது படைப்புகள் இணையவெளியில் குறைவாகவே உள்ளன.

 எஸ். பொ நூலகத்தில்

* சின்ன வயதில் தி. ஜானகிராமனின் பல கதைகளை வாசித்திருக்கிறேன். தொடராக வரும் போதே கூட வாசித்திருக்கிறேன். ஆனாலும் அப்போது சில விடயங்களிலான விளக்கங்கள் குறைவாகவே இருந்தன. இரவி அருணாச்சலம் என நினைக்கிறேன். முகப்புத்தகத்தினூடு தி. ஜானகிராமனை நினைவு படுத்தியிருந்தார். தேடியதில் வாசிக்கக் கிடைத்தவை.

2)  குழந்தைக்கு ஜுரம் (22.11.2014) வாசித்தேன்.
3)  சிறுகதை எழுதுவது எப்படி? – தி.ஜானகிராமன்  - 1969 இல் மகரம் என்பவர் தொகுத்தது.

கூடவே தி. ஜானகிராமன் பற்றிய, அவர் படைப்புகள் பற்றிய சிலவற்றையும் வாசித்தேன். அவைகளே ஒவ்வொரு கதைகள் போல மிகச்சுவாரஸ்யமாக அமைந்துள்ளன. மேலும் மேலும் வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றன. அவற்றில் உடன் என் நினைவுக்கு வருபவை

4) காலச்சுவட்டில் சுகுமாரன்  எழுதிய மோகமுள் - (தி. ஜானகிராமன்) மோகமுள் பற்றிய பதிவு - மோகப் பெருமயக்கு

* அம்மா வந்தாள் பற்றி குறிப்பிடத்தக்க பல பதிவுகள். அக்கதையை ஒரே ஒருவர் மட்டும் திட்டி நாகரிகமற்ற முறையில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். அது யாரென்பது ஞாபகத்தில் இல்லை. மற்றும் படி எல்லோருமே அதை மிகவும் ரசித்து, வாசித்து எழுதியிருந்தார்கள். அவைகளில் நான் வாசித்த சில

5) தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ வெங்கட் சாமிநாதன் எழுதியிருந்தார்.
6) அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்
7) அம்மா வந்தாள் (1) - சாருநிவேதிதா
8) தி.ஜானகிராமனின் – அம்மா வந்தாள்! நாவலின் மீள் விமர்சனம் - காலச்சுவடுக்காக சுகுமாரன் எழுதியிருந்தார்.

9) இவைகளோடு சிவமேனகை எழுதிய மூன்று தமிழ் சங்கங்களிலும் ஈழத்தவர்களின் பங்களிப்பு வாசித்தேன்.

10) நேற்று உஷா சுப்ரமணியனின் ஒரு சிறுகதை வாசிக்கக் கிடைத்தது. உஷா வலைப்பூக்கள் மூலம் ஏற்கெனவே அறிமுகமான ஒரு பெண் எழுத்தாளர். முன்னர் அவரோடு மின்னஞ்சல் தொடர்பும் இருந்தது. காலவோட்டத்தில் அத்தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும் நினைவுகளில் இருந்து விட்டுப் போய் விடவில்லை. இலக்கியச் சிந்தனை யின் 1995 ம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் புத்தகத்தில் உஷாவின் த்ரில் த்ரில் இருந்தது ஆச்சரியமான சந்தோசம். அக்கதை ஏற்கெனவே ஒக்டோபர் 1995 இல் ஆனந்தவிகடனில் பிரசுரமாகியுள்ளதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11) இவைகளோடு எஸ். பொ வின் ´சடங்கு` பற்றிய சில பதிவுகளும் வாசிக்கக் கிடைத்தன. நான் இதுவரை வாசிக்காதவற்றில் இந்த சடங்கு நாவலும் ஒன்று. சுவாரஸ்யம் குன்றாத கதையாக இருக்கும் என்ற நினைப்பில் இணையம் முழுக்க தேடினேன். கிடைக்கவேயில்லை. 

Monday, December 01, 2014

இணைபிரியாத இளஞ்சோடிகள்

அன்றொரு நாள் அவர்கள்
இணைபிரியாத இளஞ்சோடிகள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்

பின்பொரு நாள் அவர்கள்
பிரியப் போவதாக
பிரஸ்தாபித்தார்கள்

இன்றும் அவர்கள்
கை கோர்த்தும்
உதடு உரசியும்
இடை வளைத்தும்
இறுக அணைத்தும்
சுற்றியுள்ளவர்களை
பொறாமைப் படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்
வேவ்வேறு துணைகளுடன்...

சந்திரவதனா
1.12.2014

Thursday, November 20, 2014

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை பாதித்தவை 20.11.2014

சிலரின் புனைவுகளைக் கண்டு நான் வியப்பதுண்டு. வாசித்துப் பல நாட்களாகியும் அக்கதையையோ கதையின் மாந்தர்களையோ மறக்க முடிவதில்லை. சிலரது கதைகளை வருடங்கள் பலவாகியும் மனதிலிருந்து அகற்ற முடிவதில்லை.

சில வாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் என்னை ஏதோ ஒரு வகையில் பாதித்த சில இங்கே -

1) சயந்தன் எழுதிய சற்றே நீளமான ஒருசொட்டுக் கண்ணீர் சிறுகதை. காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது. இதை இரண்டு நாட்களாக (18-19.11.2014) வாசித்தேன்.

ஒரு ஈழவிடுதலைப் போராளியை மையப்படுத்திய கதை. போராட்ட காலத்தின் அனுபங்கள் சில விபரிக்கப் பட்டுள்ளன. கண்டிப்பாகப் பதிந்து வைக்க வேண்டிய தகவல்கள். போரின் பின்னான போராளியின் புலம்பெயர்வும், மனஉளைச்சல்களும் என்று ஒரு காத்திரமான கதை. ஈழத்துப் பேச்சுத்தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போது, பேசுவதை சிற்சில இடங்களில் எழுத்துத் தமிழுக்கு மாற்றியுள்ளமை கதையில் காணப்படும் ஒரு குறையாகவே கருதுகிறேன். (உதாரணமாக - "நீங்களும் இயக்கத்திலிருந்து வந்தவர்தானே. கேட்கிறேன் என்று குறை விளங்காதீர்கள். அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது.." இப்படித் தொடர்கிறது. இது சாதாரணமாக நாம் எழுதும் தமிழ்தான். ஆனால் கதையின் மற்றைய பகுதிகளில் சாதாரணமாக எழுதப்பட வேண்டியவையே பேச்சுத் தமிழில் எழுதப் பட்டுள்ளன. அது நன்றாகவும், இயல்பாகவும்தான் இருக்கிறது. ஆனால் அதனோடு இப்படியான வசனங்கள் ஒட்டாது நிற்கின்றன.) அதையும் சயந்தன் கவனத்தில் கொண்டிருந்தால் ஒரு அருமையான நெடுங்கதை.

2) கே.என்.சிவராமன் எழுதிய தேங்க்ஸ் (சிறுகதை) - தினகரன் தீபாவளி மலரில் பிரசுரமானது.  – நேற்றுத்தான் (19.11.2014) வாசித்தேன்.

அழகிய காதல்கதை

3)அ. முத்துலிங்கம் எழுதிய நான்தான் அடுத்த கணவன் - இதை சிலவாரங்களுக்கு முன் வாசித்தேன். காலச்சுவடில் பிரசுரமாகியிருக்கிறது.

அ. முத்துலிங்கத்தின் வழமையான எள்ளல் கலந்த எழுத்துக்களுடன் கூடிய சிறுகதை.

4) அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்'  - இதுபற்றி கிரிதரன் எழுதியிருந்ததால் தேடி எடுத்து வாசித்தேன். விகடன் தீபாவளி மலரில் பிரசுரமானது.


5) சாதனா எழுதிய அக்கா சிறுகதை. ஆக்காட்டி இதழில் வெளியாகியுள்ளது.

இந்த எழுத்து உத்தி எனக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் ஷோபாசக்தியின் எழுத்தின் சாயல். கொஞ்சம் பிறமொழிக்கதைகளின் சாயல். நல்ல கதை.

6) ஷோபாசக்தியின் எழுச்சி சிறுகதையையும் வாசித்தேன்.

மாறுபட்ட இவரின் எழுத்தின் உத்தி வாசிக்கத் தொடங்கி விட்டால் நிறுத்த முடிவதில்லை.

7) ஷோபாசக்தியின் தங்கரேகை சிறுகதை சிலவாரங்களுக்குள் நான் வாசித்தவற்றில் ஒன்று.

8)  கருணாகரமூர்த்தியின் வடிவான கண்ணுள்ள பெண் வாசித்தேன். இவரின் எழுத்துக்களில் இன்னொரு விதமான உத்தி. பொய்யோ, மெய்யோ என்று தெரியாமலும் மெய்தான் என்பது போன்றும் பிரமையை ஏற்படுத்தக் கூடிய கதைகள். எதுவாயினும் கதை சார்ந்த இடத்தின் பலதகவல்களையும் எமக்குத் தந்து விடுவார். இக்கதை இவரின் இடை கதை போல இனிப்பான கதை.

9) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)

10) தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய அனந்தசயனம் காலனி (சிறுகதை)

11) சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

12) இவைகளோடு இன்னொரு பேய்க்கதை வாசித்தேன். அருமையாக எழுதப் பட்டிருந்தது. அதை எந்தத் தளத்தில் வாசித்தேன். யார் எழுதியது என்பதெல்லாம் ஞாபகத்தில் இல்லை.

வாசிப்பது சுகமானது. வாசிப்பது தவம் போன்றது.

ஒரு வட்டத்துக்குள்ளேயே ...

நாங்கள் பல சமயங்களில் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறோம். வெளியில் எட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது எங்களைச் சுற்றி எத்தனை சந்தோசங்கள் உள்ளன என்று.

Tuesday, November 18, 2014

Crailsheimer Str - 17.11.2014

ஐந்து நிமிடங்களில் போகக் கூடிய எனது வேலைத்தளத்துக்கு நேற்று 50 நிமிடங்கள் தேவைப்பட்டன. 15 நிமிடங்கள் முதலே வெளிக்கிட்டிருந்தேன். எனது சிறுவீதியைக் கடந்து பெரிய வீதிக்குப் போன பொழுதுதான் நிலைமை சரியில்லை என்பது தெரிந்தது. அடுக்கடுக்காய் வாகனங்கள். 15 நிமிடங்கள் இருக்கின்றனதானே, போய் விடுவேன் என நினைத்தேன். இல்லை. ஆமை அதை விட வேகமாக நகரும் என்று தோன்றியது. எனது வேலை நேரத்தையும் தாண்டி பத்து நிமிடங்கள் போய் விட்டன.

எனது பொறுப்பாளருக்கு அறிவித்தாக வேண்டும். கைத்தோலைபேசியை ஒருவாறு வெளியில் எடுத்து விட்டுப் பார்த்தேன். என் பக்கத்தில் பொலிஸ்கார் ஒன்றும் என்னோடு சேர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தது.இருக்கிற ரென்சனுக்குள் இது வேறு. 

கைத்தொலைபேசியில் பேசப் போய் தண்டம் கட்ட வேண்டி வரலாம். என்ன செய்வது என்று யோசிக்கையில் இன்னும் ஐந்து நிமிடங்கள் ஓடிவிட்டன.
எப்படியும் அறிவித்தாக வேண்டும். என்ன செய்யலாமென யோசித்து.. கைத்தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வைத்து ஒரு குறுஞ்செய்தி எழுதினேன். எழுதும் போது பயமாக இருந்தது. பொலிஸ் காணலாம். நகரும் போது முன் காருடன் இடிபடலாம். பின் கார் வந்து இடிக்கலாம். இருந்தும் `traffic இல் நிற்கிறேன். விரைவில் வந்து விடுவேன்´ என்று எழுதி பொறுப்பாளருக்கும், சக வேலைத்தோழியருக்கும் ஒருவாறு அனுப்பினேன்.

அதன்பின் பாதி ரென்சன் குறைந்தது போன்ற உணர்வு.

என்ன நடந்திருக்கும். ஏனிந்த தாமதம் எதுவும் புரியவில்லை. அப்படியொரு நிலை முன்பு ஒரு போதும் அந்த வீதியில் வந்ததும் இல்லை. ஏதாவது பாரிய விபத்தாக இருக்குமோ று பலதையும் மனம் சிந்தித்தது. பொலிஸ் கார்கள் பின்னும், முன்னும், பக்க வாட்டிலும் என்று சேர்ந்து ஊர்ந்தன.

50 நிமிடங்கள் கழித்து வேலைத்தளத்தை அடைந்த போது, என் தவறு என்று எதுவும் இல்லையெனினும் மனதுள் ஒரு குற்றஉணர்வு. ஒரு பதட்டம். அவசரமாக உள் நுழைந்தேன்.

ஆச்சரியமாக இருந்தது. ஒருவருமே அங்கில்லை. என்ன, ஏது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒவ்வொருவராய் இன்னும் அரைமணிநேரம், ஒருமணி நேரம் என்று கழித்து வந்தார்கள்.
அதன் பின்தான் பொறுப்பாளர் வந்தார். அவரும் இடையில் எங்கோ மாட்டுப்பட்டிருந்தாராம்.

குறிப்பிட்ட ஒரு வீதி ஒரு பெரிய திருத்தத்துக்காக மூடப்பட்டு விட்டதாம். அதனால் மற்றைய வீதிகள் எல்லாமே நிரம்பி வழிகின்றனவாம். பொறுப்பாளர் சொன்ன போதுதான் அந்தத் திருத்தம் பற்றியும், பாதையடைப்பு பற்றியும் செய்தித்தாளில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் அது இத்தகைய பாதிப்பைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

இன்னும் இரண்டு கிழமைக்கு இதே பல்லவிதான்.

Monday, November 17, 2014

வாசிப்பது சுகமானது

தினமும் எவ்வளவோ வாசித்தாலும், முன்னர் போன்றதான வாசிப்பின் அளவு இன்றைய காலகட்டத்தில் குறைந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும்.

இன்றும் நேற்றுமாக வாசித்தேன் என்று மனதுக்குள் திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடிய சில படைப்புகளை வாசித்தேன்.

தோப்பில் முஹம்மது மீரான் எழுதிய
1) ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதை)
2) அனந்தசயனம் காலனி (சிறுகதை)

சிறீவத்சன் (என். சுப்பிரமணியன்) எழுதிய
1) வேறு நதியில் அந்த ஓடம் (இலக்கியச் சிந்தனை - 1995 ஆம் ஆண்டின் பன்னிரண்டு சிறந்த சிறுகதைகளின் தொகுப்பான ரத்தத்தின் வண்ணத்தில் இருந்து )

இவைகளோடு ஜா. மாதவராஜ் எழுதிய சே குவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து...) வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details
சே குவேரா அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய குறிப்புகளின் பின்னணியிலிருந்து.... - See more at: http://www.noolulagam.com/product/?pid=17965#details


வாசிப்பது சுகமானது!

சந்திரவதனா
17.11.2014

Tuesday, November 04, 2014

தொடுதல்

மென்மையான தொடுதல்களின்
உன்னதம் தெரியாதவர்கள் எம்மில் பலர்.
கணவன் மனைவியர் கூட
கட்டிலில் மட்டுமே தொட்டுக் கொள்பவர்களாய்..

சந்திரவதனா
4.11.2014

Monday, October 13, 2014

மழை

மழை பிடிக்கும் என்பதால்
குடை பிடிப்பதில்லை

சந்திரவதனா
11.10.2014

Wednesday, October 08, 2014

பிரியாவிடை

நேற்று
அவளைக் கட்டியணைத்து
கண்ணீர் வடித்து
Sekt  உடைத்து
துக்கம் கொண்டாடினார்கள் அவர்கள்!
23 வருடங்கள் ஒன்றாக வேலை செய்தவள்
போகிறாள் என்று

இன்றும் கொண்டாடினார்கள்
Red Wine உடைத்து!
அவள் போய் விட்ட சந்தோசத்தை!

சந்திரவதனா
8.10.2014

Wednesday, October 01, 2014

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

Thileepan & Me
இன்று எனது மகன் திலீபன் புதியபதவியில் அமர்கிறான். எத்தனையோ இடர் நடுவேயும் எனக்குள் சந்தோசஅலை முட்டி மோதிக்கொண்டே இருக்கிறது.

நாம் இங்கு ஜேர்மனியில் வந்திறங்கிய போது திலீபனுக்கு ஒன்பது வயதுகள்தான் நிரம்பியிருந்தன. அந்த வயதே அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. குழந்தையும் அல்ல. வாலிபனும் அல்ல. இடைப்பட்ட வயதில் இன்னொரு நாட்டோடு ஒன்ற முடியாது மிகவும் அவதிப்பட்டான். மனதால் நொந்தான். விரக்தி அவனோடு கூடவே தொடர்ந்தது. எமது நாட்டுக்குத் திரும்பி விட வேண்டுமென்பதே அவனது குறியாக இருந்தது.

மற்றைய எனது இரு குழந்தைகளும் வயதில் குறைந்தவர்களாக இருந்ததால் அவர்களிடம் இவ்வளவு தூரமான பாதிப்பு இருக்கவில்லை. அவர்கள் விளையாடிக் கொண்டு திரிந்தார்கள். அம்மாவும், அப்பாவும் அருகில் இருந்தால் போதும் என்ற மாதிரி வாழ்ந்தார்கள்.

ஆனால் திலீபன் ஊர் நினைவுகளை இறக்கி வைக்கவும் முடியாமல், ஜேர்மனிய வாழ்வோடு ஒட்டவும் முடியாமல் மனதுக்குள் மிகவும் போராடினான். வந்த உடனேயே 3ம் வகுப்பில் சேர்ந்ததால் மொழியோடும் போராடினான்.

இன்று அவன்தான் ஒரு பொறுப்பாளர் பதவியில் அமர்கிறான்.

Bausparkasse Schwäbisch Hall
இன்று அவன் கடமையாற்றும் Bausparkasse நான் வந்த காலத்தில் எனக்கு கனவுமாளிகை போலத்தான் தோற்றமளித்தது. அந்த வாசலை மிதிப்பதே சாத்தியப்படக் கூடிய ஒன்றாக எனக்கு அப்போது தெரியவில்லை. அங்கு யாருக்காவது வேலை கிடைப்பது என்பது சுலபமானதொன்றல்ல. எத்தனையோ விதமான, எத்தனையோ பேருக்கு முன்னிலையிலான பரீட்சைகளின் பின்னரே அதற்குள் நுழைய முடியும். நுழைந்தவர்களும் ஆறுமாதங்களுக்குள் சுலபமாக வெளியே அனுப்பப் பட்டு விடுவார்கள்.

அங்கு எனது மகனுக்கு வேலை கிடைத்த போதும் சரி, பின்னர் நான் அங்கு போய் அவனைச் சந்தித்த பொழுதுகளிலும் சரி எனக்குள் ஒருவித பிரமை ஏற்பட்டதுண்டு.

அந்த வங்கியைக் கடந்துதான் தினமும் வேலைக்குச் செல்வேன். இங்கு என் மகனும் வேலை செய்கிறான், அதுவும் ஒரு நல்லதொரு பதவியில்.. என்னும் நினைவில், ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் இனம் புரியாத பெருமையும், சந்தோசமும் ஊற்றெடுக்கும்.

ஆனால் அவனுக்கு அது போதவில்லை. அதை விட உயர வேண்டும் என்ற அவா. அதற்காக அவன் செலவுசெய்தது கிட்டத்தட்ட இரண்டு வருடப் பொழுதுகள். பரீட்சை, பரீட்சை, பரீட்சை.

ஒரு பொறுப்பாளனாவதற்கு அவர்கள் செய்த பரீட்சைகள் பல. அறிவு, ஆளுமை, பொறுமை, நிர்வாகத்திறன், சினேகத்தன்மை,.. என்று எத்தனையோ விதமான சோதனைகள். சில நாட்களில் ஒரு நாள் முழுவதும் பல பெரியவர்களின் நடுவே நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்க வேண்டும். சில நாட்களில் ஒவ்வொரு விதமான வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளின் போதும் எப்படி அவர்களைச் சமாளிப்பது என்பதை நடித்துக் காட்ட வேண்டும். இப்படி எத்தனையோ!

அவனது அயராத உழைப்பும் , முயற்சியும், தன்னம்பிக்கையும் இன்று அவனை இன்னும் சில படிகள் உயர்த்தியுள்ளன.

Bausparkasse யில் ஒரு பிரிவுக்கு இன்றிலிருந்து அவன் பொறுப்பாளன். பெரிதுவக்கிறது மனது.

சந்திரவதனா
1.10.2014

Thileepan at work place 


Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite