Thursday, May 06, 2004

தமிழ்புலத்திற்கு அப்பால் ஒரு உலகம்

திசைகளில் ஆசி.கந்தராஜவின் உயரப் பறக்கும் காகங்கள் பற்றிய எனது பார்வை

Monday, May 03, 2004

சினிமாப் பாடல்கள் - 9


அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே


படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்
இசை - சிவா


தாய் தந்தையருக்கு இணையாக இந்த உலகில் வேறெதுவுமே இல்லை.
அந்தப் பாசதீபங்கள் இல்லையென்றால் நாமும் இல்லை. ஆனாலும் நாமெல்லோரும் தாய் தந்தையரின் அருகில் இருக்கும் போது அவர்களின் அன்பையும் அருமையையும் புரிந்து கொள்வதில்லை. அன்பைப் புரிந்தாலும் அவர்களின் தியாகங்களைப் புரிந்து கொள்வதில்லை.

வெயிலின் அகோரத்தில்தான் நிழலின் அருமையைப் புரிந்து கொள்கிறோம். அதே போலத்தான் தாய், தந்தையரைப் பிரிந்த ஒரு தனிமையான காலத்திலோ அல்லது அவர்களை இழந்த ஒரு கொடுமையான தனிமையிலோதான் அந்தப் பாசதீபங்களின் அன்பையும், ஆதரவையும், தியாகத்தையும் உணர்ந்து கொள்கிறோம். அந்த அன்பு நிறைந்த அணைப்புக்காக ஏங்குகிறோம்.

ஒரு தாயின் அன்புக்கு இணையாக ஒரு தந்தையால் ஈடு கொடுக்க முடியாதென்றாலும் எமது வாழ்க்கையில் வளர்ச்சியில் தந்தையின் பங்கும் அளப்பரியதே. தாயின் அன்பை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு தந்தையின் அன்பைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. தூணாக நின்று தாங்கிய அந்தத் தோள்கள் தந்த பலமான ஆதாரத்தைக் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொள்வதில்லையென்று சொல்வதை விட கவனத்தில் கொள்வதில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் கவனத்தில் கொள்ளும் போது அனேகமாகக் காலம் கடந்திருக்கும். திரையுலகம் கூட இந்த விடயத்தில் கொஞ்சம் பாரபட்சமாகவே இருந்திருக்கிறது. தாயின் அன்பை எமது மனசை உருக்கக் கூடிய வகையில் எத்தனையோ விதமாகப் பாடி வைத்த திரையுலகம் தந்தையின் அன்பை அவ்வளவாகப் பாடவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில் தேவர்பிலிம்ஸ்ஸின் முதற் படமான தாய்க்குப் பின் தாரம் படத்தில் தந்தை இறந்திருக்கும் போதான காட்சிக்காக TMS ஆல் பாடப் பெற்ற
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவனென்றால்
விந்தை உண்டோ


அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஒளவையின் பொன்மொழி வீணா
ஆண்டவன் போலே நீதியைப் புகன்றாள்
அநுபவமே இதுதானா

உண்ணாமல் உறங்காமல்
உயிரோடி மன்றாடி
என் வாழ்வின் இன்பமே
எதிர் பார்த்த தந்தை எங்கே?
என் தந்தை எங்கே?
கண்ணிமை போலே எனை வளர்த்தாரே
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே ----- பாழான சிதையில்
கனலானார் விதிதானோ...!

என்ற பாடல் தவிர்ந்த வேறு எந்தப் பாடலும் தந்தையின் அன்பு, பாசம், அவசியம் பற்றி அவ்வளவாகப் பேசவில்லை. வழமையாக எம.ஜி.ஆர் படங்களில் தாயை முன்னிறுத்தியே பாடல்கள் அமைந்திருக்கும். இப்படத்தில் சற்று வித்தியாசமாக தந்தையை முன்னிறுத்தி இப் பாடல் அமைந்துள்ளது. ஆனாலும் இப் பாடல் ஏனோ பெரியளவில் பேசப் படவில்லை. நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல குரல்வளம் இருந்தும் இந்தப் பாடல் பிரபல்யமாகாததால்தானோ என்னவோ பிற்காலத்தில் யாரும் தந்தையைப் பற்றிப் பாடாமலே விட்டு விட்டார்கள். அவ்வப்போ ஓரிரு பாடல்கள் திரைப்பங்களுக்காகப் பாடப் பட்டிருந்தாலும் அவைகள் கூட ஏதோ சாட்டுக்கு தந்தை என்ற சொல்லை பிரயோகித்தனவே தவிர தாயின் அன்பை வெளிப்படுத்திய பாடல்கள் போல் தந்தையின் அன்பை வெளிப்படுத்திய பாடல்களாக அமையவில்லை.

இது பலபேரின் மனதில் ஒரு குறையாகவே இருந்து கொண்டுதான் இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் திரையுலகம் எமக்குத் தந்த இப்பாடல் எம் எல்லோரையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

கடும் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.


தாயோடு தந்தையையும் சேர்த்து 1999 இல் வெளியான பூமகள் ஊர்வலம் திரைப்படத்துக்காகப் பாடப் பட்ட அருமையான இப் பாடலின் வரிகளில்
தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

என்ற வரிகள்தான் சற்று அதிருப்தியை வரவழைக்கின்றன. தாயின் அன்பு ஈடிணை இல்லாததுதான். அதனால் அன்புக்கு ஆதாரமாய் அவளைச் சொல்வது சாலப் பொருத்தமே. ஆனால் அறிவுக்கு ஆதாரமாய் தந்தையை மட்டும் சொல்வது பொருத்தமாக இல்லை. ஆண்களே பெரும்பாலும் பாடல் ஆசிரியர்களாய் இருப்தால் ஏற்படும் தவறு இது.

இருந்தாலும் உன்னி கிருஷ்ணனின் குரல் சிவாவின் இசையோடு இணைந்து பாடல் மிகவும் அற்புதமாக அமைந்து விட்டது.

சந்திரவதனா
யேர்மனி
28.4.2004

எனது ரசனைகளிலிருந்து.....



Schwaebisch Hall to Stuttgart - Germany - 24.4.2004

Tuesday, April 27, 2004

சிந்து




சிந்து வந்திருக்கிறாள்.
ஒரு கிழமைக்கு இங்கு எழுத முடியாது போகலாம்.

Saturday, April 24, 2004

களிக்கும் மனங்களே கசியுங்கள்



உப்பளக் காற்றிலே
உயிரைக் கலைய விட்ட
எங்கள் பிள்ளைகளின்
குருதி வெள்ளத்தில்
ஏற்றி வைத்த
வெற்றிக் கொடியை
பற்றி
பரவசப் பட்டு
மனம்
ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

நியம் தந்த களிப்பில்
அவசரமாய் வந்த
ஆனந்தக் கண்ணீர்
அது நியமானது!
பிறகேன் போலியாய்
பார்ட்டியும்..!
படாடோபமும்..!

போர்க்களத்திலே வீழ்ந்தும்
குருதி வெள்ளத்திலே சாய்ந்தும்
போனவர்களின் தியாகமும்
அவர்கள்
ஈன்றவர்கள் மனதை
பற்றி நிற்கும் சோகமும்
நாம் இங்கு
பாடி நிற்கவும்
பார்ட்டி வைக்கவுமா..?
இல்லை!
வாடி நிற்கும் எம்மவர்
வாழ வேண்டும்
கூடிழந்த எம்மவர்க்கு
கூரை வேண்டும்
ஓடி ஓடிக் களைத்தவர்க்கு
ஓய்வு வேண்டும்
போலியாய்
எதுவும் வேண்டாம்..!

களிக்கும் மனங்களே
கசியுங்கள்
வெற்றி கண்ட மண்
வற்றி நிற்கிறது
பற்றோடு கை கொடுங்கள்.

சந்திரவதனா- யேர்மனி- 29.4.2001

ஆனையிறவு

240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு
ஆனையிறவு கைப்பற்றப் பட்டது - 22.4.2000


எனது டயறியிலிருந்து

பல்கணி கதவையும் திறந்து விட்டு வந்து, சமைப்பதற்காகக் குசினி யன்னலையும் திறந்து விட்டதில் காற்று ஊ.... ஊ.... என்று வீட்டுக்குள்ளேயே அடித்து மேசையிலிருந்த பேப்பர்கள் சிறகடித்தன. வசந்தம் வர்ணங்களாய் பூத்திருக்க, குழந்தைகள் பலர் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் உப்பளக் காற்றைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை.

எங்கெல்லாமோ அலைந்து எதையெதையெல்லாமோ தொட்டு வந்த நினைவில் பள்ளிக்கூடமாக உப்பளம் வரை போனதோ, கரையொதுங்கியிருந்த உப்பை கை நிறைய அள்ளி நக்கிப் பார்த்ததோ வரவில்லை.

உலை வைத்து அரிசி போட்ட போதோ, கறி கொதித்து இறக்கிய போதோ மனம் அலைந்து கொண்டுதான் இருந்தது. பிரியமானவர்களைத் தொட்டு மகிழவோ, அக்கா என்று கதைத்து விட்டு அடுத்த நாள் சில்லாகிப் போன மாவீரர்களைத் தொட்டுக் கலங்கவோ அது தவறவில்லை. ஆனாலும் உப்பளத்தை மறந்திருந்தது. ஆனையிறவுக் காற்று அதன் நினைவில் வரவேயில்லை.

அப்போதுதான் காற்றோடு வந்தது
240 ஆண்டு கால அடிமைச்சின்னம் அழிக்கப் பட்டு ஆனையிறவு கைப்பற்றப் பட்ட செய்தி.

சந்திரவதனா
22.4.2000

Thursday, April 22, 2004

எம்மை விட்டுப் போயின


தோழியர் பகுதியில் சுரதா தனது இனிய நினைவுகளைக் கிளற தான் பரணைக் கிளறியதாக உஷா எழுதி என்னையும் கிளறியிருக்கிறார். உண்மையிலேயே கட்டிய கதைப்புத்தகங்களைப் பற்றிக் கதைக்கும் போது மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் புகுந்து கொள்ளும். நான் யேர்மனிக்கு வந்த போது தமிழில் வாசிப்பதற்கு எதுவுமே கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் எனது வீட்டில் குவிந்திருந்த புத்தகங்களையே நினைத்துக் கொள்வேன். சிலதையாவது கொண்டு வந்திருக்கலாமே என மனதுக்குள் ஆதங்கப் படுவேன். ஆனாலும் எல்லாம் வீட்டில் பத்திரமாக இருக்கிறதுதானே..! ஒரு காலத்தில் போய் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொள்வேன்.

ஆனால்...
1987 இலிருந்து 1989 வரை எனது தம்பியைத் தேடி வந்த இந்திய இராணுவத்தினர் வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு போகத் தொடங்கி விட்டனராம். தளபாடங்களை அவ்வப்போது வாகனங்களுடன் வந்து ஏற்றிச் சென்றார்களாம். கதைப்புத்தகங்களையும் புகைப் படங்களையும் கொண்டு போகவில்லையாம். தூக்கித் தூக்கி எறிந்தார்களாம். நினைத்தால் வயிறெரியும் எனக்கு.

குமுதம், கல்கி........ என்று எல்லாப் புத்தகக் கதைகளையும் கிளித்தெடுத்துச் சேர்த்து வட்டாரியால் ஓட்டை போட்டு தொசன் நூலை பெரிய ஊசியில் கோர்த்து புத்தகங்களாகக் கட்டிக் கட்டி வைப்பா அம்மா. பொன்னியின் செல்வன்.. போன்ற புத்தகங்களை பெரிய பெரிய புத்தகமாகவே வாங்கி வைத்திருப்பா. எனது கணவர் சுஜாதாவின் புத்தகங்களில் ஒன்றையும் தவற விடாமல் வாங்கி விடுவார். இப்படியே அப்பா ஒரு பாடு. அண்ணன் ஒரு பாடு என்று எத்தனை புத்தகங்கள். அத்தனையும் ஒன்று விடாமல் எம்மை விட்டுப் போய் விட்டன.

உஷா குறிப்பிட்ட உடல் பொருள் ஆனந்தியும் எங்கள் வீட்டில் இருந்தது.
அக்கதையை எத்தனை வயதில் வாசித்தேன் என்பது ஞாபகம் இல்லை.
ஆனால் கதையில் வரும் திலீபனின் உடலுக்குள் இன்னொருவரின் ஆவியோ உயிரோ ஏதோ ஒன்று செலுத்தப்பட்டு.......... ஒரு வித்தியாசமான கதை.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite