Tuesday, August 25, 2009

அமானுஸ்யங்கள்

விழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் கொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.

அதன் பலன் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நான் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். நித்திரையை விட கனவுகள்தான் அந்த மூன்று மணித்தியாலங்களிலும் என்னை ஆட்கொண்டிருந்தன. இன்றைய அந்த அதிகாலைக் கனவுகளை விட அர்த்தராத்தியிரியில் கண்ட கனவு ஒன்று என்னை இன்னும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்தது. நன்கு நினைவு படுத்திப் பார்த்தேன்.

அது எனது அண்ணன்தான். கனவிலே அவன் என்னை இறுகக் கட்டியணைத்தான். அதுவும் மூன்று தடவைகள் போல ஞாபகம். இறந்து போனவர்கள் பேயாக அலைவார்கள் என்று பயந்த காலங்கள் ஓடி ஏதாவது ஒரு வடிவிலாவது என்னிடம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் நிறைந்த காலங்களோடேயே வாழ்க்கை நகர்ந்தும், ஓடியும் கொண்டிருக்கிறது. 2000இல் மரணித்து விட்ட எனது அண்ணன் என் நினைவுகளில் எப்போதுமே இருப்பது போலில்லாமல் கனவுகளில் அவ்வப்போது மட்டும்தான் வருவான். அனேகமான கனவுகளில் மௌனமாக இருந்து விட்டுப் போய் விடுவான். எப்போதாவது கனவில் பேசியிருப்பானா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. எமது ஊர் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அன்றி ஊரின் ஏதாவது ஒரு தெருவிலோ அவனோடு நானும் இருப்பது போலவும், நடப்பது போலவும் பல கனவுகள் பல முறை வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கனவு இதுதான் முதல் முறை. அதுவும் என்னை மிகுந்த வாஞ்சையோடு கட்டியணைத்தான். எனக்குள் இன்னும் ஆனந்தமாகவே இருந்தது.

யாரிடமாவது இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. விட்டு விட்டேன். நினைவில் அந்தக் கனவு இனித்துக் கொண்டே இருந்தது. கூடவே நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

மாலையில் எனது வேலைத்தோழி தொலைபேசியில் அழைத்தாள். எனது உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தான் ஒரு கனவு சம்பந்தமான புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்றாள். உடனேயே நான் எனது கனவு பற்றிச் சொன்னேன். 'பொறு பொறு. உனது கனவின் அர்த்தத்தை நான் சொல்கிறேன்' என்றவள் புத்கத்தின் சில பக்கங்களைப் புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில் நிலைத்து, 'உனது சகோதரனைக் கனவில் கண்டிருக்கிறாய். மிகவும் நல்ல சைகை அது...' என்றாள். இன்னும் தொடர்ந்து சொன்னாள்.

எந்த மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிந்து விடும் என் மனதும் சில சமயங்களில் ஏதேதோ நம்பிக்கைகளில் சலனப் படத் தொடங்கியது என் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் பின்தான். இன்னும் கூட எதையும் நம்புவதில்லை என்றாலும் சில சைகைகளை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. அவ்வப்போது சில உணர்த்தல்கள் என்னையறியாமலே எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கவும் முடிவதில்லை.
என்ன.. அப்படி நல்லது நடந்து விடப் போகிறது..? தமிழீழம் கிடைத்து விடப் போகிறதோ..!

ஓரிரு நாட்கள் நகர்ந்தன. அந்தக் கனவு மட்டும் மறக்காமல் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. நினைவுகள் மனதுக்குள் விரிந்து விரிந்து நான் எனது கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன். ஜேர்மனி எனக்கு மறந்து போயிருந்தது. நான் எனது அண்ணனுடனும் மற்றைய உறவுகளுடனும் ஆத்தியடி வீட்டில்;, பருத்தித்துறையின் காற்றில் மிதந்து வரும் அதற்கேயுரிய வாசனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். இடையிலே தேநீர் தேவைப்பட்டது போலும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து பாலை எடுக்கும் போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ தடுக்கி, கைகள் மேற்தட்டுடன் மோதி பாற்பெட்டி நிலத்தில் வீழ்ந்தது. நினைவுச் சிறகுகள் பட்டென்று அறுபட நான் சட்டென்று நியத்துக்கு வந்தேன். சமையலறை நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் அளவுள்ள பால் ஓடிக்கொண்டிருந்தது. மனசுக்குள் சுருக்கென்றது.

பயமாக இருந்தது. நெஞ்சுக்குள் குளிர்வது போல இருந்தது. மீண்டும் மனதுக்கு எட்டாத ஏதோ ஒரு உணர்த்தல். இப்படித்தான், இதே மாதிரித்தான் அன்றும் ஒரு நாள் நடந்தது. அது 1997 இல் பழைய வீட்டில் நடந்தது. அன்றும் சமையலறைக்குள் பால் ஆறாய் ஓடியது. பின்னர் ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. எண்ணிப் பதினைந்து நாட்களுக்குள் அப்பாவின் மரணம்.

சே... என்ன... நானா இப்படி... எனக்குள் கேள்வி எழுந்தது. அப்படியொன்றும் நடக்காது. ´காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல...` மனதைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

சமையலறையைச் சுத்தம் செய்து முடித்த பின் தேநீருக்கான ஆர்வம் இருக்கவில்லை. அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணனின் மகன் பரதன் அந்த வெள்ளிக்கிழமை வன்னிக்குள் நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டான் என்று.

சந்திரவதனா
25.8.2009

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite