Thursday, March 17, 2005

நேற்று (16.3.2005)


நேற்றைய நாராயணனின் கெட்டவார்த்தைகளின் அரசியல் என்னைப் பல விடயங்களை அசை போட வைத்தது.

எனக்குத் தெரிந்த வரையில் எனது சின்ன வயதில் என்னைச் சுற்றியுள்ள ஆண்களில் சிலர்தான் தூஷணம் பேசினார்கள். பெண்கள் பேசி நான் பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. ஒரு நாள் பாடாசாலைக்குச் செல்லும் போது சந்தி வேல்முருகர் வீட்டு வேலைக்காரன் தபாற்கந்தோர் மகேந்திரம் வீட்டு வேலைக்காரனைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிப் பேசினான். அது நான் என்றைக்குமே கேட்காத சொல். அன்று பாடசாலை முடிந்த பின்னும் நான் அந்தச் சொல்லை மறக்கவில்லை. வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் அந்தச் சொல்லைச் சொல்லி அது என்ன என்று கேட்டேன். அம்மா உடனேயே "சீ.. ஆரது சொன்னது. அது தூஷணம். அதை இனிச் சொல்லாதே." என்றா. நான் நினைக்கிறேன். அதுதான் நான் முதன்முதலாக என் வாயில் உச்சரித்த தூஷண வார்த்தையாக இருக்கும். அது கூட அது என்ன என்றே தெரியாமல் நான் உச்சரித்தது. மற்றும் படி இளைஞர்கள் கூட்டமாக நின்று பேசும் போதும், வயது வந்தவர்கள் குடித்து விட்டுத் தள்ளாடிக் கொண்டு போகும் போதும் சர்வசாதாரணமாக தூஷண வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியான சொற்கள் என் காதுகளில் வீழ்ந்தாலும் அவைகள் பேசக் கூடாத சொற்கள் என்பது என் ஆழ்மனதில் பதிந்திருந்ததாலோ என்னவோ நான் அதைப் பேசியதே இல்லை. எங்கள் வீட்டுக்குள் எனது ஆண் சகோதரர்கள் கூடப் பேசியதில்லை. ஒரு வேளை அவர்கள் தங்கள் நண்பர்களோடு வெளியில் பேசியிருக்கலாம்.

வெளிநாட்டுக்கு வந்த பின்னர் பல தமிழ் ஆண்கள் ஒன்று கூடும் போது, நடுத்தெருவிலும், வீடுகளுக்குள் யாரும் இல்லையென்ற தைரியத்திலும் சத்தமெடுத்து தூஷண வார்த்தைகளைக் கொட்டுவதைப் பார்த்து என்ன மனிதர்கள் இவர்கள்..! என அருவருத்திருக்கிறேன். உண்மையில் இப்படியெல்லாம் பேசுவதால் என்ன இன்பம் இவர்களுக்குக் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. சிலருக்கு யாரையாவது திட்டுவது என்றால் உடனே வாயில் வருவது இப்படியான வார்த்தைகள்தான்.

ஆனால் இந்த வார்த்தைகளில் பலதும் பெண்களின் அங்கங்களைக் குறிப்பதாகவோ அல்லது பெண்களைத் தாக்குவதாகவோ அமைந்தது என்பதை தற்போது சிலகாலங்களின் முன்னர்தான் உணர்ந்து கொண்டேன். அதன்பின் இப்படி யாராவது பேசும்போது எனக்கு கோபம்தான் வரும். நறுக்கென்று அவர்களை ஏதாவது கேட்டு விடுவேன்.

யேர்மனியில் ஆண்கள் பெண்கள் என்று பாகுபாடின்றி தூஷணம் பேசுவார்கள். எனது மகன் கூட யேர்மனிக்கு வந்த முதல் வருடம் பாடசாலையிலிருந்து வந்து ஒரு வார்த்தை சொன்னான். அதன் அர்த்தம் அவனுக்கோ, எனக்கோ தெரியாது. எனது கணவர்தான் அது "சொல்லத் தேவையில்லாத சொல்" என்பதை அவனுக்கு விளக்கினார். அன்று நான் எனது பிள்ளைகளுக்கு "கனி இருக்க காய்கள் தேவையில்லை..." என்பதை நாசூக்காக விளங்கப் படுத்தினேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் எங்கள் வீட்டுக்குள் இப்படியான எந்த வார்த்தையையும் பாவித்ததில்லை. வெளியில் நண்பர்களுடன் பாவிப்பார்கள் என்றே நம்புகிறேன்.

வேலையிடத்தில் எனது சகதோழிகள் தாராளமாக இப்படியான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள். மறந்தும் நான் அவைகளில் ஒரு வார்த்தையையும் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் சொல்லும் போது அர்த்தங்களை மட்டும் கேட்டு வைப்பேன்.

நேற்று வேலையிலிருந்து திரும்பி பேரூந்து நிலையத்துக்கு வந்த போது ஒரு அவலம் கலந்த அலறல். பார்த்தேன். ஒரு வயதான ஆண் நிலத்தில் தவண்டு கொண்டிருந்தார். `பெனர்´ என்று குறிப்பிட்டு அழைக்கப்படும் கூரையில்லாமல் தெருவோரங்களில் வாழும் கும்பல்களில் அங்கம் வகிக்கும் ஒருவர் அவர். நன்றாகக் குடித்து விட்டு.. வீழ்ந்திருக்கிறார். இன்னொரு பெண் இவர்களோடு வாழ்ந்தாலும் வீடும் உள்ளவர். அந்தப் பெண் அவரைத் தூக்கி நிறுத்தி.. ஒருவாறு உதவிக் கொண்டிருந்தார். சற்றுத்தள்ளி இன்னொருவர் பச்சை பச்சையாக வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தார். நிறைவெறி.

பேருந்துக்காகக் காத்து நின்ற அனைவரும் ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற சுவாரஸ்யத்தோடு அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். அப்போதுதான் ஒரு சிறுமி (தன்யா) வந்தாள். 12 அல்லது 13 வயதிருக்கலாம். நிறைவெறியில் வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தவரிடம் "வாயை மூடு.. என்று தொடங்கி.." மிகச்சாதாரணமாக சரளமாக தூஷணவார்த்தைகளை அள்ளிக் கொட்டினாள். ஒருதரம் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள். குசுகுசுப்பாக தன்யாவைத் திட்டினார்கள். ஆணொருவன் காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு தூஷண வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் பிளந்து பார்த்தவர்கள் எல்லோருமே பெண் பேசிய போது சலசலத்தார்கள். எனது சகதோழியரும்தான்.

தன்யா அந்த இன்னொரு பெண்ணின் மகள் என்பது பலருக்கும் தெரியாது. எனக்குத் தெரியும். நான் தினமும் கண்டு கொண்டிருக்க அந்த பேரூந்து நிலையத்தின் முன்னுள்ள உள்ள Barஇலேயே வளர்ந்தவள். அவள் தனது வீட்டிலிருந்த நேரத்தை விட இந்த Barஇல் இருந்த நேரம்தான் அதிகமாக இருக்கும். அவளது தந்தையும் தாயும் இந்தப் பெனர் கும்பலில் இருப்பவர்கள். அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்து விட்டாள். அவள் சிறுகுழந்தையாக இருக்கும் போதிருந்தே அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு வேதனை எழும்.

இப்படியான சூழலில் வாழும் ஒரு குழந்தையின் வாழ்வு எப்படித் தொடரும் என்பது என்னுள் எப்போதுமே கேள்விக் குறியாக இருக்கிறது. தன்யா இப்போது பாடசாலைக்குச் செல்கிறாள். முடிந்ததும் அப்படியே அந்த Barக்கு வந்து விடுகிறாள். அந்த சிகரெட் புகைக்குள்ளும் குடிபோதைக்குள் உழல்பவர்களுக்கு மத்தியிலும் வளர்கிறாள். சாமம் 12மணிக்கோ அன்றி 1மணிக்கோ அவளது தாய் வீடு திரும்பும் போதுதான் இவளும் திரும்புவாள்.

நேற்றைய நாராயணனின் கெட்டவார்த்தைகளின் அரசியல் என்னைப் பல விடயங்களை அசை போட வைத்தது. இந்த நிலையில் தன்யாவையும் கண்டது மனதை இன்னும் பாதித்தது.

இரவு படுக்கையிலும் தன்யாவே மனதுள் முகம் காட்டிக் கொண்டிருந்தாள்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite