எனக்குப் பிடித்த இராகங்களை பகிர்ந்து கொள்வதற்கு முன் ஒரு சிறிய அறிமுகம்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களை நான் மிகவும் விரும்பிக் கேட்பதுண்டு. இதில் மிகவும் என்கின்ற சொல் மிகவும் முக்கியமானது.
சிறு வயதில் இலங்கையில் வானொலியில் பாட்டுக்குப் பாட்டு மற்றும் இசை நிகழ்சிகள், தொலைகாட்சியில் ஒளியும் ஒளியும் அல்லது பொன்மாலைப் பொழுது போன்ற நிகழ்சிகள் மூலம் தமிழ் திரையிசை என் குடும்பத்தில் நுழைந்தது. அன்று தொடங்கியது தமிழ் திரைப்படப் பாடல்களுக்கும் எனக்கும் இடையான ஒரு அளவு கடந்த, ஆக்ரோஷமான, அன்பான, சில வேளைகளில் ஆவேசமான ஒரு பயணம்.
இங்கே எனது தந்தையை நான் குறிப்பிடவேண்டும்.
என் இசைப் பிரயாணத்தில் என் தந்தைக்கும் பெரும் பங்கு உண்டு. அவர் முறையாகச் சங்கீதம் படிக்கவில்லை என்றாலும் அவருக்கு இசையில் அபார கேள்வி ஞானம் உண்டு. மேற்கத்திய இசை முறைகளை நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிரபல இசை மேதைகளின் Symphonies . operas என்று ஒரு தனி collection கூட வைத்திருந்தார். ஒரு பாடலைக் கேட்டால் அது எந்த இராகத்தில் அமைந்தது, அதே இராகத்தில் உள்ள வேறு பாடல்கள் என்னென்னவென்று பட்டியலிட்டுக் கூறும் வல்லமை அவரிடம் இருந்தது. என்னை இசை படிக்க வைத்ததற்கும், இசை என்னும் ஒரு இன்னொரு உறவினை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்ததிற்கும் நான் எனது தந்தையிடம் மிகவும் நன்றியும், கடமைப்பாடுள்ளவனாயும் உள்ளேன்.
காலத்தை 20 வருடங்களுக்குப் பின்னால் தள்ளி வைக்கிறேன்.
1990 இலங்கையை விட்டு எமது குடும்பம் நியூசிலாந்திற்குப் புலம் பெயர்ந்த போது, அந்தப் புதுமையான் சூழலில், யாருமே தெரியாத அந்நியனாக இருந்தபோது, ஒரு வித மகிழ்ச்சியைத் தந்தது இந்தத் தமிழ்த்திரையிசைப் பாடல்கள் தான். அப்போது நாங்கள் எமது மாமாவின் (அம்மாவின் அண்ணா) வீட்டில் இருந்தோம். அவருக்கு ஜெர்மனியில் இருந்து இன்னனொரு மாமா (அம்மாவின் தம்பி) ஒலி நாடாக்கள் அனுப்புவார். எல்லாப் பாடல்களும் பழையதாகவே இருக்கும். (இங்கே எனது ஏமாற்றத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.)
அப்போது எனக்குப் பழைய பாடல்களில் அவ்வளவு நாட்டம் இருக்கவில்லை, இருந்தாலும் சில இடைக்காலத்துப் பாடல்களும் அந்தத் தொகுப்பில் வரும். அந்த ஒரு சில இடைக்காலத்துப் பாடல்கள் எனக்கு இளையராஜா என்னும் ஒரு இசைஞானியை அறிமுகம் செய்து வைத்தது.
வைதேகி காத்திருந்தாள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், பயணங்கள் முடிவதில்லை என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்)
1992
இதே ஜெர்மன் மாமா ஒரு பொழுது நியூசிலாந்து வந்த போது ஒரு வால்க்மன் (walkman) வாங்கித் தந்தார். பல வருடங்களுக்குப் பின்னால் (1999ல்) ஒரு மினி டிஷ்கும் (Mini disc player) வாங்கித் தந்தார். இந்தக் கருவிகளினால் எனது பால்ய, மற்றும் இளமைக்காலத்துப் பாடல்களை என்னால் தொகுத்து வைக்க முடிந்தது.
புத்தம் புதுப் பாடல்களைக் கேட்பதற்கு நான் வேட்டையாடிய சாகசங்களை வேறு ஒரு பதிவில் தனியாக எழுதவேண்டும்.
காலப்போக்கில் ஒலிநாடா இசைத்தட்டாக மாறியது, வெளி நாடுகளிலும் தமிழ் வானொலி ஒலிக்க ஆரம்பித்தது. இணையத்தளத்தில் பாடல்கள் தரவிறக்கம் செய்யும் வசதியும் வந்து விட்டது. எனது நியூசிலாந்து மாமாவுக்கு நானே பாடல்களைத் தெரிவுசெய்து, தொகுப்புகள் அனுப்பிய காலமும் இதில் அடக்கம்.
2010
இதோ எனக்கு பிடித்த இராகங்கள் என்று எனது முதல் பதிவைத் தொடங்குகிறேன்.
இதில் இன்று நான் தேர்வு செய்திருக்கும் இராகம் - வசந்தா
இதமான, சுகமான, அமைதியான ஒரு இராகம். ஆனாலும் இந்த இராகத்தைக் கேட்கும் போது, அதில் ஒரு ஏக்கமும், தவிப்பும், ஒரு வித சோகமும் கலந்திருக்கும். இங்கே மீண்டும் ´நான் முறையாக கர்நாடக சங்கீதம் படிக்கவில்லை` என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கீழேயுள்ள இந்தத் தொகுப்பில் உள்ள பாடல்களைக் கேட்டால், ஏதோ ஒரு நாதம் அதனை எல்லாம் ஒன்றாக இழுப்பது போல் தெரியும். அதன் ஒற்றுமை இவை எல்லாம் வசந்தா ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்.
தேசுலாவுதே ... மங்கையே மணாளனின் பாக்கியம்
இத்திரைப்படத்தை நான் முழுமையாகப் பார்த்ததில்லை,பொறுமை கொஞ்சம் இங்கே குறைவுதான். பாடல் பல இராகங்களுக்குள் புகுந்து விளையாடிச் சங்கமிக்கும். இப் பாடலின் தொடக்கம் வசந்தா இராகத்தில் அமைந்தது.
மின்சார பூவே... படையப்பா
வசந்தா இசைப்புயலைச் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இப் பாடல் சாட்சி. படையப்பா திரைப்படத்தின் பாடல்களில் இந்த ஒரு பாடலைத் தான் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன். பாடலின் இறுதியில் நித்யாஸ்ரீ, மகாதேவன் மற்றும் ஸ்ரீநிவாஸ் அமர்களப்படுத்தியிருப்பார்கள். மின்சாரம் பாய்ச்சும் அந்தப் பாடல் இதோ.
மான் கண்டேன்... ராஜரிசி
வசந்தா ராகத்தில் உருவான இளையராஜாவின் ஒரு அற்புதமான் பாடல். படம் அவ்வளவு ஞாபகம் இல்லை. யேசுதாசுடன் பாடுவது வாணி ஜெயராம் என்று
நினைக்கிறேன். கணீர் என்ற குரல்.
அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை
இந்தப் பாடல் வசந்தா இராகத்தில் அமைந்தது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இப்போது கேட்கும் போது வசந்தா இராகத்திற்கு உண்டான அறிகுறிகள் கேட்கின்றன. குறிப்பாக ஆண் குரலில் வரும் ஆலாபனையில் இலகுவாகக் கேட்கமுடியும். இந்தப் பாடல் வெளியான போது வைரமுத்துவின் வரிகள் சர்ச்சைக்க்குள்ளாகின என்று ஒரு வலைபதிவில் படித்த ஞாபகம். அது எப்படி கண் தெரியாத ஒருவன் ஒவ்வொரு மணித் துளிகளிலும் தனது காதலியின் முகத்தைப் பார்க்க முடியும் என்று பலர் இப்பாடலை விமர்சித்தார்கள். கொஞ்சம் பொழியட்டும் அந்த அந்தி மழை.
வந்தனம்... வாழ்வே மாயம்
வசந்தா இராகத்தில் ஒரு வந்தனம். இடையில் பாடல் வேறு இராகத்திற்கு மாறி, பின்பு வசந்தா இராகத்திற்கு வந்து சேரும்.
அகிலன் கருணாகரன்
நியூசிலாந்து
(தொடரும்)
நியூசிலாந்து