Wednesday, December 11, 2013

இன்றைய என் நினைவுகளில்...

அனேகமான பொழுதுகளில் காலையில் கண் விழிக்கும் போதே, அன்றைய நாளில் செய்ய வேண்டியவைகளின் பட்டியலும் நினைவுக்குள் வந்து விடும். அந்தப் பட்டியலின் நீள அகலங்களையும், கனத்தையும் பொறுத்தே இன்னும் சற்று அப்படியே படுத்திருக்கலாமா அல்லது எழுந்து விட வேண்டுமா என்று மூளை தீர்மானிக்கும். சில சமயங்களில் எந்த அவசரமும் இன்றி மனசு வலு றிலாக்சாக இருக்கும். திடீரென்றுதான் அன்று செய்ய வேண்டிய  ஏதாவது ஒரு முக்கிய வேலை நினைவில் வந்து அவசரப்படுத்தும்.

ஆனால் எந்த நிலையிலும், எந்த அவசரத்திலும் ஏதாவது ஒரு பாடலின் சில வரிகள் மனதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்பாடலைக் கண்டிப்பாகக் கேட்டே ஆக வேண்டும் போல மனசு அந்தரிக்கும். அவ்வரிகள் பாடலின் தொடக்க வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. இடைவரிகளாகக் கூட இருக்கலாம்.

முன்னர் என்றால் அப்பாடல்களை எல்லாம் நம்மால் கேட்க முடிவதில்லை. வீட்டில் இருக்கும் ஒலி, ஒளி நாடாக்களில் அவை இருந்தால்தான் மனதின் அந்த அவா நிவர்த்தியாகும். இப்போது என்றால் அப்படியில்லை. நினைத்தவுடன் நினைத்ததைக் கேட்கலாம்.

அப்படி என் நினைவுகளில் வந்து அவ்வப்போது என்னை அருட்டும் வரிகளைக் கொண்ட 

பாடல்களில் ஒன்று 
எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா
தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா...




இன்னொன்று
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
...

 


இன்னுமொன்று
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி

கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...




இப்படி எத்தனையோ பாடல்கள். ஏன் எதற்கு என்றே தெரியாமல் எனக்குள்ளே மாறி மாறி இசைத்துக் கொண்டே இருக்கின்றன.

நேற்றைய என் நினைவுகளில் வந்த பாடல் வரிகள்  
இதழோடு இதழ் சேரும் காரணமென்ன
அது இனிப்பென்று கவிதைகள் சொல்லுவதென்ன
சொல்லில் தோன்றுமோ மன்மதக் கலை அள்ளிப்பார்க்க வேண்டும்
உன் முல்லைப்பூவிதழ் மெல்ல என்னிடம் முத்தம் சிந்த வேண்டும்


 

இன்றைய என் நினைவுகளில்
அலையாய் மோதிக் கொண்டே இருக்கும் பாடல்
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தைக் குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்


மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்


சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினைக் காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்...

 

Sunday, September 29, 2013

உங்களுக்கான ஒரு தேர் விக்கிப்பீடியா

எழுதியவர்: நீச்சல்காரன்

திருக்குறள் பற்றிய குறிப்பு வரைக என்று பள்ளிகளில் கேட்கும் போது கை தானாக விக்கிப்பீடியாவைத் தேடிச் செல்லும். இயற்பியலில் கடினமான ஒரு தேற்றத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள வேண்டியபோது மூளை விக்கிப்பீடியா பக்கத்திற்கே செல்லும். விலையேறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் வரலாற்றைப் பார்க்க வேண்டும் என்றாலும் விக்கிப்பீடியாவே துணை. காவியத் தலைவர்கள் முதல் கட்சித் தலைவர்கள் வரை மற்றும் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் முதல் கோயம்புத்தூர் வால்பாறை வரை எல்லா விசயங்களையும் உள்ளடக்கிய கலைக் களஞ்சியமே விக்கிப்பீடியா ஆகும். இந்த அற்புத வசதியைத் தமிழுக்கும் விக்கிமீடியா நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அதில் தகவற்களஞ்சியமாக விக்கிப்பீடியாவும், சொற்களஞ்சியமாக விக்சனரியும், நூல் களஞ்சியமாக விக்கிநூல்களும் மேலும் பல களஞ்சியங்களும் இருந்து வருகிறன. எந்தவொரு கட்டுப்பாடின்றி யாரும் இதன் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதாலேயே இதனைக் கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று கூறிக்கொள்கிறோம். உலகமெல்லாம் கணினித் திரைகளுக்குத் தமிழ்க் காட்சி தந்த தமிழ் விக்கிப்பீடியா, தற்போது தனது பத்தாண்டுகால நிறைவை அடைந்துள்ளது. இதுவரை 55800 கட்டுரைகளைக் கடந்து, சுமார் 4600 தமிழ்ப் பங்களிப்பாளர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இது எப்படிச் சாத்தியமானகிறது? கப்பலோட்டிய தமிழனின் வரலாற்று ஆவணத்தை மா. போ. சிவஞானம் அவர்கள் தொகுத்து வ.உ.சிதரம்பரனார் பற்றிய அறிய தகவல்களை அடுத்தத் தலைமுறையினருக்குச் சேர்த்தார். பன்மொழி ஆய்வு செய்து தமிழின் வேர்ச்சொற்களையும் கலைச் சொற்களையும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்து இன்று பெருகிவரும் தொழிற்நுட்பச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் அன்றே தந்துதவினார். சிதறிக்கிடந்த தமிழ் நூல்களை எல்லாம் அன்று தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதையர் தொகுத்து அச்சில் ஏற்றி உலகச் செம்மொழிகளுக்கு நிகராகச் சங்க இலக்கியங்களை வைத்து வரலாறு எழுதச் செய்தார். இப்படிக் காலம்தோறும் தொகுத்துத் தொகுத்து பாதுகாக்கப்பட்டு வந்ததே நமது மொழிச் சொத்து. அந்தப் பரம்பரையின் கணினியுக வாரிசுகளான நம்மைப் போன்றவர்களால் தொகுக்கப்பட்டுச் செதுக்கப்படும் தேரே விக்கிப்பீடியா.

விக்கி தொழிற்நுட்பமும், இணையம் என்கிற வசதியும் இருந்தால் உலகில் உள்ள எல்லா அறிவுச் செல்வத்தையும் தமிழில் அனைவருக்கும் கிடைக்கச் செய்யலாம். மேலும் காலத்தால் அழியாத முறையில் பாதுகாக்கவும் முடியும். ஆனால் எப்படி செய்வது? ஒன்றாம் வகுப்பில் சுழியம் வாங்கிய நாங்களும், கல்லூரியில் பட்டம் வாங்கிய நீங்களும், படிப்பு முடித்த பக்கத்து வீட்டுக்காரரும், எட்டிப் பார்க்கும் எதிர் வீட்டுக்காரரும் என யாரும் செய்யலாம். விக்கிப்பிடியாவொரு கலைக்களஞ்சியம். எந்தவொரு பயனுள்ள விசயத்தைப் பற்றியும் இதில் கட்டுரை எழுதலாம். அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரையைத் திருத்தியும் மேம்படுத்தலாம். அதெல்லாம் விருப்பமில்லை என்றால் படமெடுக்கும் கருவிகளைக் கொண்டு முக்கிய இடங்கள், பொருட்கள் என படம் எடுத்தும் படக் களஞ்சியத்திற்கு உதவலாம். பதினொரு வயது முதல் எழுபத்தியேழு வயது கொண்டோரும் இதில் பங்களித்து வருகிறார்கள் என்கிற செய்தியே இதற்கான எந்த வயதுத் தடையுமில்லை என்று உரைக்கும். தனித்தனியாக இணையத்தில் தகவல் பதிந்து ஏற்றுவதைவிட ஒரே இடத்தில் எல்லாவிதத் தகவலையும் தொகுக்கும் பயனே தனிதான்.

கல்வி ஒரு வணிக சாதனமாக மாறிவரும் வேளையிலும், பெருமுதலாளிகளின் கைக்குள் மட்டும் அறிவுச் செல்வங்கள் முடங்கும் வேளையிலும் அடிப்படை உரிமையாகக் கல்வியை அனைவருக்கும் விலையில்லாமல் வழங்கும் ஒரு தேவையை விக்கிமீடியா பூர்த்திச் செய்கிறது. அதில் ஒன்று கட்டற்ற (கட்டுப்பாடுகள் இல்லாமல் இலவசமாகப் பயன்படுத்தும்) கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா என்ற சேவை. கல்விக்காக விலையுயர்ந்த புத்தகங்களைச் சார்ந்திருந்த காலத்தை இணையம் உடைத்தது உண்மைதான் ஆனால் கலைச்செல்வங்கள் எல்லாம் திறன்படுத்தப்பட்ட ஒழுங்கில் இணையத்தில் கிடைப்பதில்லை. அதனைச் சமன் செய்ய உதவும் சமவெளிப் பகுதியே விக்கிப்பீடியாவும் அதன் இதர திட்டங்களும் ஆகும். எப்படி உப்புச் சத்தியா கிரகத்தின் போது மக்கள் உணவு, நீர் உறைவிடம், போராட்டம் எனத் தங்களால் இயன்றதைக் கொடுத்து உதவினார்களோ அதுபோல விக்கிப்பீடியாவிலும் உங்களால் இயன்ற அறிவுச் செல்வங்களைக் கொடுத்து சமுதாயத்தின் ஞானவொளிக்கு மெருகூட்டுங்கள். கல்விக்கு விலைவைக்கும் சமுகத்திற்கு எதிராகக் கட்டற்ற களஞ்சியங்களை விளையுங்கள்.

விக்கிப்பீடியா ஒரு மக்களாட்சித் தத்துவத்தில் பயணிக்கக் கூடியது, அதாவது மக்களால் மக்களுக்கு வழங்கப்படுவது. அதனால் தனி மனிதனோ தனிக் குழுவோ அதனைச் சொந்தம் கொண்டாடுவதில்லை. அனைவரும் வகுத்த கொள்கையின் படி நீங்களும் ஆசிரியர், நீங்களும் வாசகர். அனைவருக்கும் புரியவேண்டும் என்கிற அடிப்படையில் உங்களால் சொல்லப்பட்ட சில எளிய விதிமுறைகள் உண்டு அதனைப் பின்பற்றிக் கட்டுரைகளோ, சொற்பொருளோ, நூலோ உருவாக்கி தமிழ் வளர்க்கலாம். எழுத்தாற்றலும், அறிவாற்றலும் இதில் பங்களிப்பதன் மூலம் வளப்படுத்தலாம்.

விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பான தமிழ் விக்கிப்பீடியா 2013 செப்டம்பருடன் தனது பத்தாண்டு பயணத்தை அடைகிறது. அதனைக் கொண்டாடும் பொருட்டும், மேலும் இச்சேவை பலரைச் சென்றடையவும் செப்டம்பர் 29ம் நாள் சென்னை, கிண்டி பொறியியற் கல்லூரியில் கூடல் ஒன்றை நிகழ்த்தவுள்ளது. தமிழ் விக்கிப்பீடியர்கள் உட்படப் பிற மொழி விக்கிப்பீடியர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூடவுள்ளனர். நீங்களும் கலந்து கொண்டு கொண்டாடுங்கள், விக்கிப்பீடியாவுடன் இணைந்து இச்சமூகம் பயன்பட வடம் பிடியுங்கள். உங்ககளுக்காக ஒரு தேர் காத்திருக்கிறது.

கூடல் பற்றி மேலும் அறிய:https://ta.wikipedia.org/s/36sk

Thursday, June 20, 2013

கேட்டலும் பார்த்தலும்

"பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!" என்றிருந்ததைப் பார்த்திருக்கக் கூடாதுதான். பார்த்தததன் விளைவு பல இரவுகள் தூக்கமின்றித் தவித்தேன். பகல்களிலும் அக் காட்சியை என் மனக்கண்ணில் இருந்து அகற்ற முடியாது பெரிதும் அவஸ்தைப் பட்டேன்.

அப்படியான பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். வாசித்திருக்கிறேன்.  ஆனால் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்ப்பது உளரீதியாக எத்துணை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன்.

இன்னும் கூட அடிக்கடி எனது கட்டுப்பாட்டையும் மீறி அக்காட்சி எனக்குள் தோன்றித் தோன்றி என்னைப் பாடாய் படுத்துகிறது. சமையலறையில் கத்தியைத் தொடும் ஒவ்வொரு பொழுதிலும் மனதுக்குள் ஒரு நடுக்கம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

Wednesday, June 19, 2013

சுட்டுவிரல்

ஞாயிற்றுக்கிழமை சமையலறையில் புதிய கத்தியொன்றை சுத்தம் செய்வதாக என் சுட்டுவிரலைத்தான் கீறிக் கொண்டேன். சட்டென கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட பெண்களின் நினைவில் மனம் வலித்தது. 

சற்று ஆழமான கீறு என்பதால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று. பலன் தலையைக் கூட சரியாக வாரிக்கட்ட முடியாதபடி தீப்பந்தம் போல விரலில் ஒரு பெரிய பந்தம். குளிப்பதே பெரும் பாடாயிருந்தது. சில சமயங்களில் சமநிலை கூடத் தட்டுப்படும் போல இருந்தது. கைகளை இழந்தவர்களும், கால்களை இழந்தவர்களும் என்னை அசௌகரியப் படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

அப்பாவைப் பற்றிய நினைவுகள்


அப்பாவைப் பற்றிய நினைவுகள் என் நினைவுகளிலிருந்து நீங்குவதில்லை. குறிப்பாக எனது ஒவ்வொரு முன்னேற்றத்தின் போதும் அப்பாவை நெஞ்சார நினைத்துக் கொள்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு விடயங்களையும் எவ்வளவு நாசூக்காகவும், தந்திரமாகவும் எனக்குப் போதித்து என்னை ஆளாக்கினார் என்பதை நினைந்து நினைந்து வியப்பேன். எனது கல்வி, கலை, ஒழுங்கு... போன்ற விடயங்களில் அதீதமான கண்டிப்போடும், கவனிப்போடும் அம்மா என்னை நேர்த்தியாக்கும் போது, விளையாட்டு விளையாட்டாகவே அப்பா என்னை நேர்த்தியாக்கினார். மடியில் வைத்துக் கதைகள் சொல்லி, கடற்கரையில் தானும் குழந்தையாகி என்னோடு ஓடிப்பிடித்து விளையாடி, சரித்திரக்கதைகளை நடித்துக் காட்டி..

அதே நேரத்தில் சில கஷ்டங்களின் போதும், தடுமாற்றங்களின் போதும் கூட அப்பாவை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. அப்பா சில விடயங்களில் கவனம் செலுத்துமாறு பலதடவைகள் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏனோ நான் அவ்விடயங்களில் கவனம் செலுத்தாது மிகவம் அசிரத்தையாக இருந்து விட்டேன். அதனால் ஏற்படும் பின்னடைவுகளின் போது அப்பாவின் சொல்லைக் கேட்டிருக்கலாமே என்று மனம் பேதலிக்கத் தவறுவதில்லை.
17.6.2013

Thursday, February 07, 2013

டோண்டு இராகவன்

கணினியைப் பார்க்கும் எண்ணமே முதலில் இருக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு உந்துதல். பார்த்து விட்டுப் படுப்போமே என்றது மனது.

சுவையான, சுவாரஸ்யமான தகவல்களுடன் மனது இணைய முன்னரே ஆரம்பகால வலையுலக நண்பர் டோண்டு இராகவனின் மரணச்செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

கால ஓட்டத்தில் அவருடனான எனது தொடர்பு அறவே அற்றுப் போய்விட்டாலும், தமிழ்வலையுலகின் ஆரம்பகாலங்களில் கருத்துக்கள், கட்டுரைகள், பின்னூட்டங்கள்.. என்று நிறைய விடயங்களைப் பரிமாறியதை மறந்து விட முடியாது. குறிப்பாக அவர் ஜெர்மன்மொழி பெயர்ப்பிலும் தேர்ச்சி பெற்றவராதலால் அது சம்பந்தமாகவும் பல கருத்துக்களைப் பரிமாறியுள்ளோம். எனது அனேகமான பதிவுகளுக்கு ஒற்றைவரியிலேனும் பின்னூட்டமிடுவார்.

ஆனாலும் எப்படியோ அவரை அடியோடு மறந்த விட்டேன். மரணச்செய்தியைப் பார்த்ததும், அதிர்ச்சியும், ஞாபகங்களும்...   

டோண்டு இராகவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite