Saturday, March 08, 2008

பாதை எங்கே?


அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது.

அவளுக்கு அவள் மேலேயே பச்சாத்தாபம் ஏற்பட்டது. கண்ணுக்குத் தெரியாத விலங்கொன்று தன்னை இறுக்குவதை உணர்ந்தாள். கண்ணுக்குத் தெரியும் விலங்கென்றாலும் உடைந்தெறிந்து விட்டு ஓடிவிடலாம். எங்கே உடைப்பது, எங்கே ஓடுவது, என்று தெரியாத பயமும் குழப்பமும் அவளுள்.

ஜேர்மனிக்கு வந்து மூன்று மாதங்களாகியும் இந்த வீட்டை விட்டு அவள் எங்கும் செல்லவில்லை. அவள் சென்றிருப்பாள். மரியதாஸ்தான் அவளை எங்குமே அழைத்துச் செல்லவில்லை.

குசினி யன்னலினூடே வெளியிலே தெரிந்த எல்லா மனிதர்களுமே சந்தோசமாகத் திரிவது போலவும், தான் மட்டும் துன்ப வெள்ளத்துள் அமிழ்ந்து போனது போலவும் அவளுக்கு இருந்தது.

இப்படியெல்லாhம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் தான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த, ஊரான தெல்லிப்பளையை விட்டு இங்கு ஜேர்மனி வரை வந்திருக்கவே மாட்டாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்று மணம் பேசி வந்த போது அவளை விட அவள் அப்பா அரிநாயகம்தான் பெரிதும் சந்தோசப் பட்டார். ஆமி, ஷெல் என்ற பயங்கர நிலையிலிருந்து மகளுக்காவது ஒரு விடுதலையும், அதே நேரம் ஒரு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறதென்ற நம்பிக்கையும், சந்தோசமும் அவரை உசார் படுத்த காலங்காலமாய் அவர்களுக்கு என்றிருந்த அந்த நிலத்தையும், அந்தக் குடிலையும் விற்று அவளை வெளிநாட்டுக்கு அனுப்பவும் துணிந்தார்.

“வேண்டாம் அப்பா, எங்கடை வீடு ஒரு குடில் எண்டாலும் அம்மா வளைய வந்த குடில். இதை வித்துத்தான் எனக்கு ஒரு வாழ்க்கை அமையோணும் எண்டால், எனக்கு அப்பிடியொரு வாழ்க்கை வேண்டாம் அப்பா" கலங்கித் தடுத்தாள் அவள்.

ஒரு கணம் நோய்வாய்ப் பட்டு இறந்து போய் விட்ட மனைவியையும், அவளின்றித் தனித்த வாழ்வையும் நினைத்துக் கலங்கிய அரியநாயகம் “இஞ்சை பார் பிள்ளை. அம்மாவும் இல்லாமல் உன்னையும், தம்பியையும் இந்த நாட்டிலை வைச்சு வளர்க்கிறதுக்கு நான் படுற பாடு கொஞ்சமில்லை. எப்ப ஆமி வருவானோ, எப்ப ஷெல் வந்து விழுமோ, எப்ப புக்காரா குண்டு பொழியுமோ, எண்டு எந்த நேரமும் என்ரை நெஞ்சு பதைச்ச படியேதான் கிடக்குது. வந்த வரனை வேண்டாமெண்டு சொல்லாமல் நீ போயிடு பிள்ளை. உனக்கொரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டுது எண்டால், நீ பிறகு உன்ரை தம்பியையும் அங்கை கூப்பிட்டு வாழ வைக்க மாட்டியே? உங்கள் இரண்டு பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்திலை விட்டிட்டன் எண்டால், நான் பிறகு அம்மா போன இடத்துக்கே நிம்மதியாப் போய்ச் சேர்ந்திடுவன்" என்றார்.

அப்பா அரியநாயகத்தின் யதார்த்தமான பேச்சு அவளை மேற்கொண்டு எதுவும் பேச முடியாமற் தடுத்து விட்டது. மௌனம் சம்மதமாக, வாழ்ந்த குடிலும் விற்கப் பட்டு திருமணம் நிட்சயமானது. மனம், குணம்… என்று எதுவுமே தெரியாமல், வெறுமனே புகைப்படத்தைப் பார்த்து விட்டு ஜேர்மனியில் வாழும் மரியதாசுக்கு மனைவியாக அவள் தயாரானாள்.

விசாவுக்காகத் தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு வந்தவள் மீண்டும் தெல்லிப்பளை போவதில் உள்ள சிரமத்தை நினைத்து கொழும்பிலேயே தங்கி விட்டாள். கொழும்பில் இருந்த அந்த ஏழு மாதங்களும் மரியதாஸ் அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதும், இவள் கடிதங்கள் போடுவதும் என்று ஒரு இனிமையான தொடர்பு அவர்களைக் காதலர்கள் ஆக்கியது. எட்டாம் மாதம் ஸ்பொன்சர் எல்லாம் சரி வந்து மரியதாசின் சொற்படி அவள் தன் சொந்தச் செலவிலேயே ரிக்கற் எடுத்து விமானம் ஏறினாள்.

அப்பா, தம்பி இருவரையும் பிரிந்த சோகம் அவளை வாட்டினாலும், காதல் சிறகை விரித்தபடிதான் வானில் பறந்து ஜேர்மனி வந்து சேர்ந்தாள்.

ஃபிராங்போர்ட் விமான நிலையத்தில் அவளுக்காக நண்பர்களுடன் காத்திருந்த மரியதாஸ் அவளையும், அவள் மரியதாஸையும் இனம் கண்ட போது புகைப்படத்தில் பார்த்த மரியதாசுக்;கும், நேரே பார்க்கும் மரியதாசுக்கும் இடையே நிறம், அழகு, வயசுத் தோற்றம் எல்லாவற்றிலுமே சற்று வித்தியாசம் இருந்ததால் சட்டென்று மனசுக்குள் ஏமாந்து மீண்டும் சமாளித்துக் காரில் ஏறினாள்.

வழியில் காருக்குள்ளேயே மரியதாஸ் “என்ன நீங்கள் ஃபோட்டோவிலை பார்க்க வடிவா இருந்தீங்கள். இப்ப பார்த்தால் காகக்குஞ்சு மாதிரி இருக்கிறீங்கள்?" என்று நக்கலும், சிரிப்புமாய் அவளைக் கேட்டான். அவளுக்குத் தன் மனசை யாரோ சாட்டையால் அடிப்பது போன்ற வலி ஏற்பட்டது. ஆனாலும் ´சும்மா பகிடிக்குத்தான் சொல்கிறான்´ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அசடு வழியச் சிரித்து, கலங்கிய கண்களை மறைத்து மௌனமாகி விட்டாள்.

அவள் மனசு போலவே அடுப்பிலும் கறி கொதித்துக் கொண்டிருந்தது. அரைத்த சின்னச் சீரகப் பொடியைக் கறிக்குள் போட்டுக் கறியை இறக்கியவள் ஓடிப்போய் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். ஊரில் இருந்ததை விட முகம் வாடிக் கறுத்துப் போயிருந்தது.

இவ்வளவு நாளும் அவள் தன் வாழ்க்கை பற்றி எதுவுமே தன் அப்பா அரியநாயகத்துக்கோ, தம்பிக்கோ எழுதவில்லை.

தன் கண் முன்னாலேயே மரியதாஸ் ஒரு இத்தாலி நண்பியுடன் சல்லாபிப்பதை எப்படி அவள் எழுதுவாள். வாய்க்குவாய் “நீங்கள் வடிவில்லை. நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ" என்று அவன் சொல்வதை எப்படி எழுதுவாள். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு ஜடமாக வாழ்ந்தாள்.

ஆனால் அந்த ஜடத்தனத்தைக் கூடச் சீண்டிப் பார்ப்பது போன்ற விடயம் நேற்று நடந்தது. இருட்டு வெளிச்சத்தை விழுங்கி விட்டது போன்று, தொலைதூரத்தில் அவளுக்குத் தெரிந்த சின்னஞ் சிறு நம்பிக்கை நட்சத்திரத்தையும் விழுங்கி விட்டது அந்த விமானச்சீட்டு.

அதை, வேலையால் வரும் போது மரியதாஸ்தான் கொண்டு வந்தான்.

“நீங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போயிடுங்கோ. வடிவா இருக்கிறியள் எண்டு நினைச்சுத்தான் கூப்பிட்டனான். நீங்களென்ன காகக்குஞ்சு மாதிரி இருக்கிறிங்கள். இன்னும் மூண்டு நாளைக்குத்தான் உங்களுக்கு விசா இருக்கு. அதுதான் ரிக்கற் எடுத்திட்டன்." விமானச்சீட்டுடன் வந்த மரியதாஸ் இப்படித்தான் அவளை வார்த்தைகளால் தேளாகக் கொட்டினான்.

துணுக்குற்றவள் “உங்களோடை மூண்டு மாசங்கள் வாழ்ந்திட்டன். இனி நான் அங்கை போய் என்ன செய்யிறது? நான் இங்கை சந்தோசமா வாழுறன் எண்டு நினைச்சுத்தான், அப்பா அங்கை சந்தோசமா வாழுறார். நான் இப்பத் திரும்பிப் போனால் அவர் செத்திடுவார். என்னை அனுப்பின காசுக்குத் தம்பியை அனுப்பியிருந்தாலும் உழைச்சுக் குடுத்திருப்பான்." சொல்லிக் கதறினாள்.

“நீங்கள், இப்ப போங்கோ. நான் உங்களைத் திரும்பக் கூப்பிடுறன்." என்றான். பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரிந்தது.

“நீங்கள், இப்ப என்னைச் சட்டப்படி கலியாணம் செய்தால், எனக்கு இங்கை தொடர்ந்து இருக்க விசா கிடைக்குந்தானே! நான் திரும்பிப் போக மாட்டன். நீங்கள் என்னைக் கலியாணம் செய்யாட்டி நான் தற்கொலை செய்திடுவன்." என்றாள்.

“இஞ்சை பார், நான் இங்கை மரியாதையா வாழுறன். இங்கை செத்து என்ரை மானத்தை வாங்கிப் போடாதை. சாகிறதெண்டால் அங்கை ஊரிலை போய்ச் சா." இரக்கமின்றிக் கத்தினான்.

மரியதாஸ் ஜேர்மனிக்கு வந்து பதினாறு வருடங்கள். வேறு நகரத்திலிருந்து ஏதோ திருகுதாளம் செய்து விட்டு, இப்போ இந்த நகரத்துக்கும் வந்திருந்து இங்கும் வேலை செய்கிற இடங்களில் கள்ள வேலைகள் செய்து, பிடிபட்டு தமிழரின் மானத்தையே கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கிறான்.
இவனுக்கு, என்ன மரியாதை இங்கிருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது. ஆனாலும் தன்னை ஏமாற்றித் திருப்பி அனுப்பப் போகிறான் என்பது மட்டும் தெரிந்தது.

இப்ப நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்றும் அவளுக்குத் தெரியும். அப்பா எப்படி உடைந்து போவார் என்ற நினைப்பே அவளை உடைத்தது. ஊரார் முகத்தில் எப்படி முழிப்பேன் என்ற நினைப்பு அவளைக் கலங்கடித்தது.

எங்காவது ஓடி விடலாமா, என்று யோசித்தாள். எங்கு ஓடுவது? ஸ்பொன்சரில் வந்ததால், அகதி விண்ணப்பமும் கோர முடியாத நிலை. தெரியாத நாடு. தெரியாத வீதி. ஆங்கிலம் தெரியாது. டொச்சில் ஒரு வார்த்தை தெரியாது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.

´இவன் திட்டமிட்டுத்தான் என் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறானா? வேணும் என்றுதான் யாரையும் என் கண்களில் காட்டாது இந்த வீட்டுக்குள் சிறை வைத்தானா?´ குழப்பமும் சந்தேகமும் நிறைந்த கேள்விகள் அவளுள் எழுந்தன.

தமிழர்கள் கூட அதிகம் இல்லாத இந்த நகரில் யாரிடம் போவது? என்ன கேட்பது? யோசித்து யோசித்தே மூளை குழம்பி விடும் போலிருந்தது. நேரத்தைப் பார்த்தாள். மரியதாஸ் வேலையால் வர இன்னும் சிலமணி நேரங்கள்தான் இருந்தன. அதற்கிடையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

உடைகளை மாற்றிக் கொண்டு எங்கே போவது, என்று கூடத் தெரியாமல் வெளியில் இறங்கினாள். அந்தப் பாதை எங்கே வளைகிறது, என்பதும் அவளுக்குச் சரியாகத் தெரியாது. ஆனாலும் மரியதாஸின் கேவலமான செயல்களுக்கு ஒரு நிரந்தர முடிவினைக் காணும் நோக்கோடு நிதானமாக நடக்கத் தொடங்கினாள்.

சந்திரவதனா
10.2.2000
மனஓசை - 53-57

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite