முன்னரெல்லாம் "வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும்
அப்பன் செத்தால்தான் அப்பன் அருமை தெரியும்" என்று சிலர் சொல்வார்கள்.
நான் இருக்கும் போதே அப்பாவின் அருமையை உணர்ந்திருந்தேன். அப்பா என் மேல் நிறையவே பாசம் வைத்திருந்தார். 1.12.1997இல் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரோடான நினைவுகள் இன்னும் என்னோடு வாழ்கின்றன. அதனால்தானே என்னவோ அனேகமான எனது படைப்புக்களில் அப்பாவின் நினைவுகளும் இடம் பிடித்து விடுகின்றன.
அப்பாவின் நினைவுகளைச் சுமந்த சில கதைகள்
எதனால்...?
கல்லட்டியல்
சங்கிலித்துண்டங்கள்
பதியப்படாத பதிவுகள்
குண்டுமணிமாலை
அப்பா அம்மாவுடன் - 1956
இது சில வருடங்களுக்கு முன் எழுதப் பட்டது.
"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்
"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்
58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்
கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்
தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்
வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்
வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...
களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.
சந்திரவதனா
1.12.1999