சயந்தன்
வலைப்பதிவு என்ற ஒன்று எனக்கு அறிமுகமாக முன்னரே இணையவழி எனக்குப் பழக்கமானவர். அவரின் உயிர்ப்பு சஞ்சிகைக்கு நானும் ஆக்கங்கள் எழுதி மின்னஞ்சல் வழியாக நான் அவருடன் கதைத்திருக்கிறேன். பின்னர் எழுநா என்ற இணையத்தளத்தை ஆரம்பித்த போது ஊரிலிருந்து ஒரு தளம் என்ற உணர்வுப் பெருக்கில், மனம் சந்தோசத்தில் பொங்க வாழ்த்தும் அனுப்பினேன்.
தொடர்ந்த காலங்களிலும், அவ்வப்போது இணையத் தொடர்பாடல்களுக்கு உரிய ஏதோ ஒரு வழியாக நாம் பேசியிருக்கிறோம்.
வசந்தன்
வலைப்பதிவின் பின்னரே எனக்கு அறிமுகமானார். அதுவும் இணைய வழிதான். அவர் மெல்பேர்ணில்தான் இருக்கிறார் என்று நான் அறிந்து வைத்திருந்தேன். ஆனாலும் மெல்பேர்ணுக்கு இரு தடவை போயும் நான் அவரைச் சந்திக்கவில்லை. முதல் தரம் 2006 ஜனவரியில் நானும் அவரும் ஒரே பொங்கல் விழாவில் இருந்திருக்கிறோம். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. அதே வருட இலக்கிய விழாவுக்கு நான் போயிருந்தேன். அவர் வரவில்லை. அந்த விழாவுக்கு வந்திருந்தால் கட்டாயம் ஒருவரையொருவர் இனம் கண்டு கதைத்திருப்போம்.
அந்த விழாவில் வலைப்பதியும் சந்திரலேகாவையும் இன்னும் பல அறியப்பட்ட எழுத்தாளர்களையும் சந்தித்து ஓரிரு வார்த்தைகளாவது பேசி மகிழ்ந்தேன்.
பின்னர் 2007 ஜனவரியில் பொங்கல் விழாவுக்கு வந்தாரோ இல்லையோ தெரியாது. நான் போயிருந்தேன். சிறிய மண்டபம். மேல் மாடியிலும் கீழ் மாடியிலுமாய் பார்வையாளர்கள். சந்திப்பதற்கான வாய்ப்புகள் வெகு குறைவாகவே இருந்தன.
குறிப்பிட்ட அந்த இலக்கிய விழாவுக்கு இம்முறை வசந்தன் போயிருந்தார். என்னால் போக முடியவில்லை.
இப்படியிருக்க நான்தான் சயந்தனும், வசந்தனும் என்ற சந்தேகம் யாருக்கோ வந்திருப்பதாக சின்னக்குட்டி எழுதியிருக்கிறார். அது சின்னக்குட்டிக்கே வந்த சந்தேகமாக இருந்தாலும் இப்போது தீர்ந்திருக்குமென நம்புகிறேன்.
இப்படியான சந்தேகங்கள் எனக்கும் நிறைய உண்டு. அவ்வப்போது சினேகிதியும், டிசேயும் ஒருவரோ என்ற சந்தேகம் வரும். அந்த அவுஸ்திரேலிய வலைப்பதிவாளர் சந்திப்பு பற்றிக் கூட எனக்கு சந்தேகம் வந்தது. ஆனாலும் மறந்து விட்டேன். (இப்போதுதான் அடப்பாவிகளா இப்படியுங் கூட எழுதுவார்களா என நினைத்துக் கொண்டேன்.) இப்படிப் பல.
ஆனாலும் ஆராய்ச்சிகள் எதுவும் இப்போது செய்வதில்லை. எனது வேலைகளை முடிப்பதற்கான நேரங்களையே துரத்திப் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது அநாவசிய தேடல்களில் என்னால் ஈடுபட முடிவதில்லை.
யாராவது எழுதட்டுமே. என்னால் ரசிக்கக் கூடிய எனக்கு உற்சாகம் தரக் கூடிய எதையாவது வாசிக்கும் போது எனக்குள் ஏற்படும் நிறைவும், திருப்தியும் எனக்குப் பெரியது. அது எனக்கு அவசியமானதும் கூட. சில பதிவுகள் கவலையையும், எரிச்சலையும் தரத் தவறுவதில்லை. ஆனாலும் இரவு படுக்கைக்குப் போகுமுன் டிசே போன்றோரின் பதிவுகளில் எதையாவது ஒன்றைப் படித்து விட்டுப் படுக்கும் போது மனதில் ஒருவித நிறைவு தோன்றும். தமிழ்நதியின் பதிவுகளில் பெரும்பாலும் சோகம் இழையோடி இருந்தாலும் அதைப் படித்து முடித்த பின்னரும் இனம் புரியாத ஒரு துயர உணர்வு என்னை ஆக்கிரமித்திருந்தாலும் அவரது படைப்புகளை வாசித்த பின்னும் ஏதோ ஒரு நிறைவான திருப்தி ஏற்படுவதை மறுக்க முடியாது. (இப்படியான தன்மைகள் நான் குறிப்பிடாத இன்னும் பல பதிவுகளில் இருக்கின்றன. எல்லாவற்றையும் இங்கு நான் குறிப்பிடவில்லை.) எதையும் வாசிக்க முடியாது படுக்கைக்குப் போகும் பொழுதுகள் என்னுள் ஒருவித குறையையும், திருப்தியின்மையையும் எனக்குள் ஏற்படுத்தத் தவறுவதில்லை.
நேரம் கிடைக்கும் போது பிடித்த வலைப்பதிவுகளை வாசிப்பதும், முடிந்தால் அந்தப் பதிவு என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்து, (அது நல்ல தாக்கமோ, வல்ல தாக்கமோ... எதுவானாலும்) எனது கருத்தை ஒரு வார்த்தையிலாவது எழுதி விடுவதுமே செய்ய முடிகிறது. அதிலும் பின்னர் கருத்தை எழுதுவோம் என நினைத்து வாசித்து விட்டு எதையும் எழுதாமலே விட்டவைதான் அதிகம்.
பொதுவாக நான் சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை. சினிமாச் செய்திகளையும் படிப்பதில்லை. ஆனால் புத்தக விமர்சனங்கள் யார் எழுதினாலும் முடிந்தவரை வாசிப்பேன். கடந்த வாரமோ அதற்கு முந்தைய வாரமோ டிசே ஒரு படவிமர்சனம் எழுதியிருந்தார். அதை டிசே எழுதினார் என்பதால் வாசித்தேன். பட விமர்சனம் என்றாலும், எழுதிய விதத்தின் சுவாரஸ்யம் ஏதோ ஒன்றை வாசித்தேன் என்ற திருப்தியை என்னுள் ஏற்படுத்தியது. அந்தச் சமயம் நியூசிலாந்திலிருந்து வந்திருந்த எனது மருமகனும் வீட்டில் நின்றான். அவன் நடிப்பு, நாடகம்… சினிமாத்துறை சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருக்கிறான். அதனால் அவனையும் அதை வாசிக்கச் சொன்னேன். அவன் கணினியின் முன் அமர்ந்திருந்து வீடு அதிரச் சிரித்துக் கொண்டிருந்தான். டிசேயின் ஒவ்வொரு வசனமும் அவனை அப்படிச் சிரிக்க வைத்தன. (அப்போதுதான் சொன்னான், தான் முதல்நாள் இரவு இருந்து சிவாஜி படத்தின் சில பகுதிகளை தரவிறக்கம் செய்து பார்த்தேன் என்று)
இதை ஏன் எழுத வந்தேன் என்றால் இந்தப் பதிவுக்குக் கண்டிப்பாகப் பின்னூட்டம் போட வேண்டும் என்று நினைத்தேன். இத்தனை சுவாரஸ்யமான பதிவாயிருந்தும் பின்னூட்டம் எழுத நினைத்தும் செயற்படுத்தப் படவில்லை.
எனது நேரங்களும், செயற்பாடுகளும் இப்படி இருக்கும் போது எனது பிள்ளைகளின் குரலில் நான் பதிவு செய்திருப்பேனோ என்ற ஐயம் நளாயினிக்கு. அதற்கு வில்லுப்பாட்டக்காரர் போல ஒரு ஆமோதிப்பு சின்னக்குட்டியிடம் இருந்து.
காலம் போகின்ற போக்கில் பிள்ளைகளோடே மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ்சிலும், தொலைபேசியிலுந்தான் கதைக்க முடியும் போல் இருக்கிறது. என் அருகில் அவர்கள் வருகின்ற மதிய உணவு நேரத்தின் போதும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி அவர்களுக்கு இருக்கும் நேரத்தை மிஞ்சிய எனது மறதிகள் ஒரு புறமும், நேரத்தின் வேகம் இன்னோரு புறமுமாய் என்னை ஆக்கிரமிக்க தேவையானதையே கேட்கவோ, கதைக்கவோ முடியாத நிலைதான் மிஞ்சுகிறது.
இந்த நிலையில் இப்படி வேற்றுப் பெயரில் குரல்ப்பதிவு செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படியான தேவைகளை விட அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய இன்னும் பயனான எத்தனையோ விடயங்கள் உள்ளன.
ம்… என்னைப் பற்றி மற்றையவர்கள் எழுதிய ஓரிரு வார்ததைகளில் நான் மிகவும் ரசித்தவகைளில் இதுவும் ஒன்று. சின்னக்குட்டி எழுதியது.
சந்திரவதனா முந்தி தனது பதிவுகளை பிளைட்இலை லக்கேஜ்ஜாய்
போடுறது என்றால் முழு கார்கோ பிளேனையே கயர் பிடிக்கோணும் இப்ப சினிமா பாட்டு பதிவு தானே கை பையிலே கொணர்ந்து இடலாம் என்று தூயாவிடம் சொல்ல .தானும் தன்னுடைய சமையலை சாப்பாடுகளை கூட கார்கோ பிளேன் இலை கயர் பிடித்து கொணர்ந்ததாக தூயாவும் சொல்லி
கொண்டிருந்தா.
சந்திரவதனா
29.6.2007