Sunday, August 17, 2008

Tamil Rehab Org NZ on TV1 - 7th August 2008


Maniparathy talking for TRO on a Newzealand tv news.

Quelle - http://nz.youtube.com/watch?v=YIF3cam15B0

Friday, August 08, 2008

நிழற்குடை


2002 இல் நாம் வன்னிக்குச் சென்ற போது கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்திருந்த வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனத்தில்தான் தங்கினோம்.

வெண்புறா நிறுவனத்துக்கு அப்போது பொறுப்பாக இருந்தவர் வீரன். வெண்புறாவில் பணி புரிந்த, சிகிச்சை பெற்ற, தங்கியிருந்த அனைத்து உறவுகளையும் போலவே வீரனும் எங்களுடன் அன்போடு பழகினார். அந்த நிறுவனத்தில் இருந்த பல பேரையும் போல வீரனுக்கும் ஒரு கால் செயற்கைக்காலாகவே இருந்தது. ஆனாலும் செயற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

அந்த சமயத்தில்தான் வற்றாப்பளைப் பொங்கல். வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் அங்கு போவதாகத் தீர்மானித்தார்கள். ஒரு வான் பிடித்து எல்லோருமாகப் புறப்பட்டோம். கரடு முரடான ஏ9 பாதையில் ஆரம்பித்த அந்தப் பயணம் ஒரு இனிமையான பயணம். அந்தப் பயண அனுபவத்தைத் தனியாக எழுதலாம்.

முல்லைக் கடற்கரையில் (வைகாசி 2002)

போகும் போது முல்லைக் கடற்கரைக்குச் சென்று அங்கிருந்து வீரனின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியையும், குழந்தையையும் பார்த்து விட்டுப் போவதாகத்தான் தீர்மானித்திருந்தோம். அது வீரனின் விருப்பமும் கூட. முல்லைக் கடற்கரையில் சில மணி நேரங்களைக் கழித்து விட்டு வீரனின் வீட்டுக்குச் சென்ற போது அங்கு வீரனின் மனைவி எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். அவரது இரு சகோதரர்கள் மாவீரர்கள்.

வற்றாப்பளை அம்மன் கோவிலில் ஹொல்கர், வீரனின் மனைவி, வீரன்

மதியஉணவு மரக்கறிகளுடன், பப்படமும் சேர்ந்து சுவைத்தது. வீரனின் மனைவி, குழந்தைகளுடனான பொழுதுகள் இனித்தன. வெண்புறா உறவுகள் எல்லோரும் ஆள் மாறி ஆள் மாறி வீரனின் குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரிந்தார்கள். கதை, சிரிப்பு,... என்று சில மணி நேங்களைக் கழித்து விட்டு மாலையில் வற்றாப்பளைக்குப் புறப்பட்டோம்.

ஹொல்கருடன் வீரனின் குழந்தை

வீரனின் மனைவி எப்போதுமே புன்னகை மாறாத முகத்துடன் இனிமையாகக் கதைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்.

ஜேர்மனிக்குத் திரும்பிய பின்னும் வீரனின் அந்த வீடும், பப்படம் மொருமொருக்க வீரனின் மனைவி மகிழ்வோடு பரிமாறிய அந்த விருந்தும், புன்னகை தவழ்ந்த முகத்தோடு எம்மோடு உறவாடிய வீரனின் மனைவியும் அவ்வப்போது என் நினைவுகளில் மிதந்து கொண்டே இருந்தார்கள்.

சில வருடங்கள் கழித்து வீரன் ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அறிவித்தல் வந்து, எம்மைக் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொல்லி எமது வீட்டுக்கும் வந்தார்.

மனைவி, குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது 2004இல் ´கடலே எழுந்து வீழ்ந்த போது சுனாமி அலையோடு போய் விட்டார்கள்´ என்றார் வேதனையோடு.

மனைவியின் நினைவாக நிழற்குடை ஒன்றைக் கட்டியுள்ளதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் நிழற்குடைகளைக் காணும் போது பல நூறு நினைவுகளின் மத்தியில் வீரனின் மனைவியின் புன்னகையும், அந்தக் குழந்தையும முகம் காட்ட மறப்பதில்லை.

சந்திரவதனா
8.8.2008

சதீசு குமாரின் படம் தந்த நினைவு

Tuesday, August 05, 2008

பூத்த கொடி பூக்களின்றி...

தமிழ்பிரவாகம் நடாத்திய இலக்கியப் போட்டியில்(2008) இரண்டாவது பரிசைப் பெற்றது

ஹட்டன் நாஷனல் வங்கியிலிருந்து பணத்துடன் வெளியே வந்த கனகர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வலது பக்கமாகத் திரும்பி ரவுணை நோக்கி சைக்கிளை மிதித்தார். ரவுணுக்குள் நுழைய முடியாது போல இராணுவத்தினர் ரவுணை மொய்த்திருந்தனர்.

கனகருக்கு இன்று கொஞ்சம் களைப்பாக இருந்தது. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டார். வீட்டுக்குச் சற்றுத் தள்ளியுள்ள கடைகளிலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருப்பார். ஓய்வூதியப் பணத்தை எடுக்க வங்கி வரை வர வேண்டியிருந்தது. அதுதான் இவ்வளவு தூரம் வந்தவர். ´அப்பிடியே ரவுணுக்குள்ளும் எட்டிப் பார்த்து விட்டுப் போவம்´ என்று நினைத்தார்.

வெளிநாட்டில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். யாராவது வங்கிக்குப் பணம் அனுப்பியிருப்பார்கள் என்ற நப்பாசையில் சிவபாலனைக் கேட்டார் "ஏதும் காசு கீசு வந்திருக்கோ..?" என்று. கணினியைத் தட்டிப் பார்த்த சிவபாலன் "இல்லை" என்ற போது மனசுக்குள் தோன்றிய ஏமாற்றத்தை முகத்தில் தெரிய விடாமல் மறைத்து விட்டு வந்தாலும் கனகரின் மனசு இன்னும் ஏமாற்றத்தில் துவண்டிருந்தது.

நினைவுகளைச் சிதற விட்டதில் ரவுணை நெருங்கும் போதுதான் செக்கிங் நடப்பதை உணர்ந்து கொண்டார். சைக்கிளால் இறங்கி வரிசையில் நின்றார். உச்சிவெயில் மண்டையில் சுள்ளிட்டது. வரிசை நத்தையாக நகர்ந்தது.

அவர் முறை வந்த போது அவரது ஒரு மாதப்பாஸை வேண்டிப் பார்த்த இராணுவம் அவரைப் போகச் சொன்னது. ´அப்பாடா´ என்று மனசு ஆசுவாசப்பட சைக்கிளை உருட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவனை நோக்கி நடந்தார். பத்து ரூபாவைக் கொடுத்து அவன் வெட்டிக் கொடுத்த இனிப்பான தண்ணென்ற இளநீரைக் குடித்த போது வெயிலின் அகோரம் தணிந்தது போல இருந்தது. அந்த உஷாருடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ரவுணை விட்டு வெளியேற முனைந்தவர் மீண்டும் ரவுணை விட்டு வெளியேறும் வரிசையில் கட்டாயமாக நிறுத்தப் பட்டார். சந்தேகத்தின் பெயரில் சிலர் கொடிய வெயிலில் மறித்து நிற்பாட்டி வைக்கப் பட்டிருந்தனர். பரிதாபமாக விழிக்கும் அவர்களைப் பரிதாபமாகப் பார்த்த படியே மீண்டும் நத்தை ஊர்வலத்தில் நகர்ந்து பாஸ் காட்டி வெளியேறி வீட்டை நோக்கிச் சைக்கிளை மிதித்தார்.

ரவுணுக்குள் மனிதங்கள் கொளுத்தும் வெயிலில் தடுத்து நிறுத்திச் சோதனை செய்யப் படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாமல் ஸ்ரேசன் றோட் சைக்கிள்கள், ஓட்டோக்கள், மனிதர்கள்... என நிரம்பி வழமையான அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. இராணுவம், ஷெல், செக்கிங் இவையெல்லாம் வவுனியா மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகி விட்டன.

அதி வேகமாக, முரட்டுத்தனமாக வந்த ஓட்டோ (முச்சக்கரவண்டி) ஒன்றில் மோதி விடாமல் கனகர் அவசரமாக ஒதுங்கிக் கொண்டார். துப்பாக்கியும், ஷெல்லும் இல்லாமலே ஓட்டோச் சில்லுக்குள் சிதைந்து போகும் அவலங்களும் இங்கு நிகழும். நாற்பது ரூபாவுக்காக பேயோட்டம் ஓடும் ஓட்டோ சாரதி நாய் போல நாதியற்று நடுத்தெருவில் கவுண்டு போன ஓட்டோவின் கீழ் சிதைந்து கிடப்பதும் இங்கு நிகழும். ´ஏன்தான் இப்பிடி நாயாய், பேயாய் ஓடுதுகளோ! ஒரு நிதானம் வேண்டாம். சாவதற்கு இத்தனை அவசரமோ!´ கனகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டார்.

ஹட்டன் நாஷனல் வங்கிக்கு முன்னால் இருந்த பெரிய மரத்தின் கீழ் அழகிய செருப்புக்களைப் பரப்பி ஒருவன் விற்றுக் கொண்டிருக்க ஒரு சில பெண்கள் செருப்புக்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து விலைபேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

வவுனியா கனகருக்கொன்றும் புதிதில்லை. ஏற்கெனவே இருதடவைகள் அவர் வவுனியா அரச அலுவலகத்தில் வேலை பார்த்தவர்தான். ஆனால் அப்போதைய வவுனியாவுக்கும் இப்போதைய வவுனியாவுக்கும் நிறையவே வித்தியாசம். அந்த நாட்களை நினைத்தாலே அவரை ஏக்கம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் பிள்ளைகளையும், மனைவி செல்லத்தையும் அழைத்துக் கொண்டு வந்து அவருக்குக் கொடுக்கப் பட்ட குவார்ட்டர்ஸ்சில் அவர்களுடன் விடுமுறையைக் கழித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. இந்த வீதியில் பிள்ளைகளின் கையைப் பிடித்துக் கொண்டு... எத்தனை ஆனந்தமான நாட்கள் அவை.

அவரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்தாலும், மனம் அலைந்து அலைந்து தொலைந்து போன இனிமையான நாட்களைத் தொட்டுத் தொட்டு சிலிர்ப்பதுவும், ஏங்குவதுமாய் இருந்தது. ஆதிசக்தி விநாயகர் கோயிலடிக்கு வந்ததும்தான் நியத்துக்கு மீண்டார். சைக்கிளால் இறங்கி, சில நிமிடங்கள் தன்னை மறந்து, பக்தியில் நனைந்து பிள்ளையாரைப் பிரார்த்தித்தவர் மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்கினார். அப்போதுதான் தனக்கு தலைசுற்றுவதை உணர்ந்தார். அவருக்குக் கண்களை மறைப்பது போலிருந்தது.

'ஆதிசக்தி விநாயகரே...!'

அவ்வளவு அவசரமாக விநாயகரை அழைத்தும் விதி முந்திக் கொண்டதில் கீழே வீழ்ந்து விட்டார். தொடையில் சைக்கிள் கான்டில் பலமாகக் குத்தியதில் வலித்தது. அதைவிட வீதியில் இப்படி வீழ்ந்ததில் அவருக்கு சங்கடமாகவும், வெட்கமாகவும் இருந்தது.
'ரோட்டிலை எத்தினை கண்கள் என்னைப் பாக்குதுகள். நினைத்தவாறே எழும்ப முயன்றவரை வேதாரணியம் ஐயா ஓடி வந்து 'கனகண்ணை, எழும்புங்கோ' என்று தூக்கிய போது அவர் கூசிப் போனார். 'எனக்கென்ன வயசாகிட்டுதே? 63வயதுதானே! மனசுக்குள் ஆதங்கப் பட்டார்.

மூன்று மாதங்கள் ஓடியும் இந்த சம்பவத்தை மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைத்து நினைத்து கனகர் உடம்போடு சேர்த்து மனசையும் குறுக்கிக் குறுக்கிக் கொண்டு கட்டிலிலேயே படுத்துக் கிடந்தார்.

அது போதாதென்று ´இவள் செல்லம் ஊரிலை என்னமாய் வாழ்ந்தவள். பருத்தித்துறையிலை மாளிகை மாதிரியான அந்தப் பெரிய வீட்டிலை பிள்ளையளும், பேரப்பிள்ளையளும் புடைசூழ ஒரு சந்தோச சாம்ராஜ்ஜியத்தையே கட்டியாண்டவள் இண்டைக்கு இந்தக் குச்சியறைக்குள்ளை குடித்தனம் நடத்துறாளே! அங்கை அவளின்ரை குசினி மட்டுமே இந்தக் குச்சியறையைப் போல நாலுமடங்கு பெரிசாயிருக்குமே. பிள்ளையளாவது பக்கத்திலை இருக்குதுகளே! எட்டுப் பிள்ளையளைப் பெத்தவள். ஒன்று கூடப் பக்கத்திலை இல்லாமல் நாட்டுக்காய் மடிந்தும், நாடு நாடாய் சிதறியும்....! நானெண்டாலும் அவளுக்கு ஆறுதலாய் இருக்கிறனே! கக்கூசுக்குப் போகக்கூட கைத்தடியாய் அவளைத் தேடுகிற கையாலாகதவானாகப் போயிட்டனே!´ என்று மனைவி செல்லத்தை நினைத்துக் கரைவதும், தனது கையாலாகாத் தனத்தை நினைத்துப் புலம்புவதுமாயே இருந்தார்.

மூன்று மாதங்களின் முன் வவுனியாவின் ஸ்டேசன் ரோட்டில், ஆதிசக்தி விநாயகர் கோவிலின் முன் வீழ்ந்த போது கனகர் வெட்கத்தில் மட்டுந்தான் கூசிப் போனார். ஓட்டோவில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் செல்லம்தான் நன்றாகப் பதறிப் போனாள். உடனேயே மருத்துவமனைக்குக் கொண்டோடினாள். எல்லாம் சோதித்துப் பார்த்த மருத்துவர் "விரைவில் குணமாகி விடும்" என்று சொல்லி மருந்தும் கொடுத்து விட்டார்.

´மருந்தெடுக்க குணப்பட்டு விடுவேன்` என்ற முழுமையான நம்பிக்கையுடன்தான் கனகரும் இருந்தார். ஆனால் அவர் நம்பிக்கை தோற்றுப் போகும் படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படுக்கையிலே போய் விட்டார். பிறகுதான் புதிதாய் வந்த மருத்துவர் ஒருவர் அவரது இதயத்தில் கோளாறு இருப்பதைக் கண்டு பிடித்தார். தாமதாமன கண்டுபிடிப்பாலும், சரியான வைத்தியம் இன்மையாலும் அவரின் உடலின் சில பாகங்கள் செயலற்றுப் போனது அதிர்ச்சியான உண்மையானது. மருத்துவர் "இனிச் செய்ய எதுவுமில்லை" என்று கையை விரித்தது மேலும் அதிர்ச்சியானது. நோயின் வேதனையைக் குறைக்க குளிகைகளும், ஊசிகளுமே கை கொடுத்தன.

மருத்துவமனை வரை போய்வரக் கூட இயலாத அளவுக்கு நோயின் தீவிரம் அவரை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின் கனகருக்கு இந்தக் கட்டிலே தஞ்சமாகி விட்டது. மருத்துவர் தினமும் வந்து பார்த்து, ஊசி போட்டுச் சென்றார். நோயின் வேதனையும், எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் கனகரின் தன்மான மனசை நன்றாகவே பாதித்திருந்தன. செல்லத்தின் அன்புதான் அவரை அவ்வப்போது ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது.

செல்லம் தன்னந்தனியாக பிள்ளைகளின் உதவிகள் கூட இல்லாமல் தன்னைப் பராமரிப்பதையும், நோயின் வேதனை தாங்காது "செல்..ல...ம்..." என்று அலறும் போதெல்லாம் ஓடிவந்து அருகிருந்து ஆதரவுடன் கவனிப்பதையும் பார்த்து ´பாவப்பட்டவள், கரைச்சல் குடுக்கக் கூடாதெண்டுதான் நினைக்கிறனான். ஆனாலும் முடியேல்லையே. வலி கொல்லுதே!´ என்று மனதுக்குள் மிகவும் வேதனைப் படுவார்.

மீண்டும் "செல்...ல...ம்..! எனக்கு ஏலாதாம். இஞ்சை ஓடி வாரும். அந்தக் குளிசையளை எடுத்துத் தாரும்" இயன்றளவு தன் குரலை உயர்த்திக் கூப்பிடுவார். செல்லமும் தான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அவைகளை அப்படி அப்படியே போட்டு விட்டு ஓடிவந்து 'என்னப்பா, வலியா இருக்குதே, நோகுதே..?' என்று கேட்ட படி ஒவ்வொரு போத்தலாய் திறந்து குளிசைகளை எடுத்து கை நிறையக் கொடுத்து தண்ணீரையும் கொடுப்பாள்.

'எவ்வளவு பொறுமை இவளுக்கு' என்று நினைத்தபடி அவைகளை அவர் சோறு போல முழுங்குவார்.

வழமையில் குளிகைகள் உள்ளே போனதும் வலியை மறந்து தூங்கிப் போகும் அவர் இப்போதெல்லாம் நோய் வலிமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கி இருந்ததால் கோழித்தூக்கம் தூங்கி, வலியில் விழிக்கத் தொடங்கியிருந்தார்.

முதல்நாள் இரவு ஊசி போட வந்த மருத்துவர், செல்லத்தை அறைக்கு வெளியில் கூட்டிக் கொண்டு போய் "இனி அவருக்கு மருந்தில்லை. விரும்பினதைக் குடுங்கோ. பிள்ளையள் ஆராவது வெளிநாட்டிலை இருந்து வந்து பார்த்திட்டுப் போறதெண்டால் பார்க்கட்டும். எந்த நேரத்திலையும் அவர் இதயம் துடிக்க மறந்து போகலாம்." என்று குசுகுசுத்துச் சொன்னது கனகருக்கும் கேட்டது.

செல்லம் அதைப் பற்றி ஒன்றுமே கனகரிடம் சொல்லாமல் தனக்குள்ளே அழுது அழுது முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டு திரிந்ததைப் பார்த்து அவர் தனக்குள்ளே அழுது கொண்டிருந்தார். அவருக்கும் வாழ்க்கை ஆசை அற்றுப் போயிருந்தது. நோயின் வேதனையிலிருந்து விடுதலைதான் அவருக்குத் தேவைப்பட்டது. ஆனாலும் ´பிள்ளைகளை ஒருக்காலாவது பார்க்கோணும்´ என்ற ஆசை அவருக்குள் தோன்றி அவரை வதைத்தது.

'என்ரை பிள்ளையள் என்னை வந்து பார்க்குங்களே?' கனகரின் நினைவுகள் ஆசையில் வெந்தன. நொந்தன. பிள்ளைகளின் நினைவில் ஏங்கின.

´நான் செத்துப் போயிட்டனெண்டால் அதுகள் எப்பிடி வேதனைப் படுங்கள். புலம்புங்கள்.´ தனக்குள்ள வேதனையை விட பிள்ளைகளின் வேதனைகளை நினைத்துக் கண் கலங்கினார்.

"செல்லம்.., ஜேர்மனிக்கு ஒருக்கால் ரெலிபோன் எடுத்து பிள்ளையளுக்குச் சொல்லுமன். நான் சாகிறேக்கிடையிலை வரச்சொல்லி... மூத்தவளுக்கு சிற்றிசெனாம். அவளாவது வரமாட்டாளே!" நாட்டு நிலைமைகள் தெரிந்தாலும் கனகரின் மனம் பேதலித்தது.

"அவள் வந்தாளெண்டால் அவளையாவது ஆசை தீரப் பார்த்திட்டுச் செத்திடுவன்" வாய் முணுமுணுத்தது.

மனசு நிறையப் பிள்ளைகளின் பாசம் பொங்கி வழிந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்த அந்த நேரத்திலேயே அவரது நெஞ்சுக்குள்ளும் மீண்டும் வலி தொடங்கியது.

´ஆறு மணியாகுது. வழக்கத்திலையெண்டால் அஞ்சு மணிக்கு கிளினிக் முடிச்சிட்டுப் போற பொழுதே டொக்டர் வந்து ஊசி போட்டிட்டுப் போடுவார். இண்டைக்கென்ன இன்னும் காணேல்லை. ஏதும் அவசரத்திலை வராமல் போடுவாரோ?´ ஒரு யோசனை கனகரைப் பயப்படுத்த "செல்லம்... செல்லம், டொக்டர் வராமல் போனாலும் போடுவார். எனக்கிண்டைக்கு தாங்கேலாமல் நோகுது. ஒருக்கால் ரெலிபோனிலை கூப்பிட்டு, கட்டாயம் வரச் சொல்லிச் சொல்லும்." என்றார்.

செல்லம் ரெலிக்கொமினிக்கேசன் பூட்டப் போகின்றது என்ற அவசரத்தில் குருமன் காட்டுச்சந்தி ரெலிக்கொமினிக்கேசனை நோக்கி விரைந்தாள். சந்தியில் நிற்கும் இராணுவக் கூட்டத்தைக் கண்டதும் 'பாழ் பட்டுப் போவாங்கள். எப்பிடியெல்லாம் எங்களை வதைக்கிறாங்கள்.' என்று மனசுக்குள் திட்டினாள்.

வரசக்திப் பிள்ளையார் கோவிலைக் கடக்கையில் 'என்ரை மனுசனை நீதான் காப்பாத்து.' என்று மானசீகமாக ஒரு வேண்டுகோளை பிள்ளையாரிடம் விடுத்தாள்.

ரெலிக்கொமினிக்கேசனுக்குள் நுழைந்து மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து கனகரின் நிலையை விவரித்தாள். "இன்னும் ஒரு பேசன்ட் தான் அம்மா இருக்கிறார். அவரையும் பார்த்திட்டு அரைமணித்தியாலத்திலை வந்திடுவன். தைரியமா நீங்கள் வீட்டை போங்கோ" மருத்துவர் வாக்குறுதி கொடுத்தார்.

நிம்மதியோடு வீட்டுக்கு ஓடி வந்தாள் செல்லம். கனகர் வேதனையில் உழன்று கொண்டிருந்தார். செல்லம் எதுவும் செய்ய மனசில்லாமல் அவர் அருகிலேயே இருந்து அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள்.

அரைமணி ஒரு மணியாகியும் மருத்துவர் வரவில்லை. கனகர் வேதனையின் உச்சத்தில் பிள்ளைகளின் பெயர்களோடு, டொக்டர், செல்லம்... என்றெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தார்.

வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. அடுத்தநாள் மாவீரர்நாள் என்பதால் `விடுதலைப்புலிகள் தமக்கு ஏதும் செய்து விடுவார்களோ!என்று கிலி கொண்ட இராணுவத்தினர் ரவுண் வீதிகளில் கண்ட எல்லா அப்பாவித் தமிழர்களையும் தடுத்து நிறுத்தி வீதிகளில் இருத்திக் கொண்டிருந்தார்கள்.

கடமை முடித்து வந்த அந்த மருத்துவரையும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி, ரவுணுக்குள் இருத்தி வைத்திருப்பது தெரியாமல் பதைபதைக்கும் நெஞ்சுடன் செல்லம் கேற்றுக்கும், கட்டிலுக்குமாய் ஓடிக் கொண்டிருந்தாள்.

கனகரின் அரற்றல் அவர் மூச்சோடு மெதுமெதுவாக முடங்கத் தொடங்கியது. அவர் திணறிக் கொண்டிருந்தார்

சந்திரவதனா
ஜோமனி

Saturday, August 02, 2008

அழைப்புமணி

நடுநிசியில் விழிப்பு வந்ததற்கான காரணம் சட்டென்று புரியவில்லை. நெஞ்சு படபடத்தது. உடல் பயத்தில் வெலவெலத்தது. யாராவது அழைப்பு மணியை அழுத்தியிருப்பார்களோ?

பிரமையா, கனவா புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

சிந்தனைகளின் மீது அறைவது போல மீண்டும் அழைப்பு மணி. இப்போது அது கனவோ, பிரமையோ அல்ல என்பது உறுதியாயிற்று. தூக்கம் முற்றாகக் கலைந்து நெஞ்சு இன்னும் அதிகமாகப் படபடத்தது. அசையவே பயமாக இருந்தது.

என்னவன் என் அருகில்தான் படுத்திருந்தான். ஆனால் அவனும் அசைவற்றுக் கிடப்பது போலவே உணர்ந்தேன். தலையைத் திருப்பாமலே 'சத்தம் கேட்டதா?' என்றேன். 'ம்..' என்ற அவன் பதிலிலும் குழப்பம்.

வெறும் அழைப்பு மணிக்கு இத்தனை குழப்பம் ஏன்? என்ற கேள்வி உங்கள் ஒவ்வொருவரிடமும் எழலாம். அது அர்த்தஜாமம் என்பதையும் விட, நாம் ஜேர்மனிக்குப் புலம் பெயர்ந்து ஓரிரு வருடங்கள்தான் ஓடியிருந்தன. ஓடியிருந்தன என்று சொல்வதை விட நகர்ந்திருந்தன என்று சொல்வதே சாலப் பொருந்தும்.

அந்த ஓரிரு வருடங்களிலும் நாம் சில மாதங்களை அகதிமுகாம்களில் கழித்து விட்டு, அந்த வீட்டுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது. ஜேர்மனியோடு ஒட்டவும் முடியாமல், விட்டிட்டு போர் சூழ்ந்த எமது நாட்டுக்கு ஓடவும் முடியாமல் அந்தரித்துக் கொண்டிருந்த 1987ம் ஆண்டுக் காலப்பகுதியின் ஒரு மாதம் அது.

அப்போதெல்லாம் குளிர் மூக்கு நுனியில் கொடுவாளாய் குந்தியிருக்கும். நாக்கு உறைப்புக்கும், புளிப்புக்குமாய் அந்தரிக்கும். கனவுகளிலும், நினைவுகளிலும் அம்மாவும், அப்பாவும், சகோதரர்களும் நடமாடிக் கொண்டேயிருப்பார்கள். ஊர் வீடும், வீதிகளும் மூளையின் ஏதோ ஒரு பகுதியில் வளைந்து, நெளிந்து கொண்டிருக்கும். இரவுகளின் விழிப்புகளில் தவிர்க்க முடியாததாய் துயர் படிந்து இருக்கும். ஜேர்மனியின் எங்காவது ஒரு பகுதியில் யாரோ ஒரு வெளிநாட்டவரின் வீடு நாசிகளால் எரிக்கப் பட்டு விட்டது என்ற செய்தியோ அன்றி ஒரு வெளிநாட்டவர் நாசிகளால் நையப்புடைக்கப் பட்டு விட்டார் என்ற செய்தியோ இடையிடையே வந்து கிலி கொள்ள வைக்கும். பாதி இரவில் விழித்திருந்து ஊரில் வாழும் உறவுகளுக்காய் அழுவது அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.

ஆனால் அன்றைய அர்த்தஜாம அழைப்புமணி சற்று வித்தியாசமானது. எமது அட்டவணைக்குள் அடங்காதது. கனவா, பிரமையா எனச் சிந்திக்க வைத்த அழைப்பு மணி நிமிடங்கள் கரையக் கரைய அடிக்கடி அழைத்து சிந்தனைகளையே மழுங்கடித்தது.

அந்த வாரத்தில் ஜேர்மனியின் மன்கைம் நகரை ஒட்டிய ஒரு கிராமத்தில் அகதிகள் அதிகமாக வாழும் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில் இலங்கைத் தமிழர் வாழும் பகுதிக்குள் நெருப்புக் குண்டு எறியப் பட்டு கணவன், மனைவி, மூன்று குழந்தைகள் என ஐவர் கொல்லப் பட்ட செய்தி எம்மையெல்லாம் கலக்கியிருந்தது.

நாம் வாழும் நகரம் மன்கைம் போன்று நாசிகள் வாழும் இடமல்ல. பழமைகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அமைதியான அழகான நகரம். மாடிக்கு இரு குடும்பமாக ஆறு குடும்பங்கள் வாழும் மூன்று மாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் எங்கள் குடியிருப்பு. ஐந்து அறைகள் கொண்ட விசாலமான வீடு. ஊர் வீடுகள் போல விசாலமாக இல்லாவிட்டாலும் அகதியாகத் தஞ்சம் கோரிய எங்களுக்கு வசதியாக அமைந்த வீடே அது. ஐந்து ஜேர்மனியக் குடும்பங்களுக்கு நடுவில் நாம் ஒரு வெளிநாட்டவர். எமது நகரில் ஒன்றும் ஆகிவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும் உயிர் காக்க ஓடி வந்து இன்னொரு நாட்டில் எரிந்து கருகி உயிரைக் கொடுத்தது எமது இலங்கைத் தமிழர் என்ற செய்தியில் நாமும் தடுமாறிப் போய்த்தான் இருந்தோம்.

இந்த நிலையில் நடுநிசியில் அழைப்புமணி கேட்டதும் ஓடிப்போய் கதவைத் திறக்கும் தைரியம் எனக்குத் துப்பரவாக இல்லை. எனது கணவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது பார்ப்போம் என இருவரும் அசையாது படுத்திருந்தோம்.

இப்போது எமது கதவில் பலமாக உதையும் அல்லது இடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் அழைப்பு மணி கீழே வீட்டுக்கு வெளியில் இருந்து அழுத்துவதால் வருகிறதா அல்லது எங்கள் இரண்டாவது மாடிக்கே வந்து அழுத்தப் படுகிறதா என்பது தெரியாதிருந்தது. இப்போது திடமாகத் தெரிந்தது. ஒருவரோ அன்றிப் பலரோ இரண்டாவது மாடியில் உள்ள எமது வீட்டு வாசலில் நின்று கதவை இடிக்கிறார்கள் என்பது.

எனது கற்பனைகள் இப்போது விரியத் தொடங்கி தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. கத்திகள், கோடரிகளுடன் வந்திருப்பார்களோ? கதவை இடித்துத் திறந்து வந்து எம்மை வெட்டுவார்களோ? கொட்டன்களால் அடிப்பார்களோ? நடுங்காத குறை. வீட்டுக்குள் பிள்ளகைள் மூவரினதும் நித்திரை மூச்சுக்களும், சுவர்க்கடிகாரத்தின் டிக், டிக் ஓசையும் தெளிவாகக் கேட்டன. என்ன செய்வதென்று தெரியாத அந்தப் பதட்டமான நிலையில் "பொலிசுக்குப் போன் பண்ணுவோம்" என நான்தான் எனது கணவருக்கு ஐடியா கொடுத்தேன்.

இப்போது கதவின் மீது இடைவிடாது இடி விழுந்து கொண்டே இருந்தது. யாரோ உதைவது போன்ற சத்தமே அது. எனது கணவர் ´கதவைத் திறக்கலாம்´ என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலத் தெரிந்தது. நான் தடுத்து விட்டேன். எல்லாம் சைகைகளாலேயே. எமது கதை வெளியில் நிற்பவர்களின் காதுகளில் வீழ்ந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தேன்.

வாசற்கதவுக்குப் பக்கத்தில் கொறிடோரில்தான் தொலைபேசி இருக்கிறது. இப்போது போல கைகளில் கொண்டு திரியக் கூடிய தொலைபேசியோ அல்லது மொபைல் தொலைபேசியோ அப்போது ஜேர்மனியின் சாதாரண வீடுகளில் இருக்கவில்லை. சுழற்றி அடிக்கும் தொலைபேசி மட்டுமே இருந்தது. வாசற்கதவிலிருந்து கொறிடோரின் இடது பக்கம் வரவேற்பறை. அதைத் தொடர்ந்து மகளின் அறை.. வலது பக்கம் சமையலறை. தொடர்ந்து மூத்தவனதும், சின்னவனதும் அறைகள். கடைசிதான் எமது படுக்கையறை. வெளியில் நிற்பவர்கள் கதவை உடைத்தால் முதலில் எமது பிள்ளைகளின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற எண்ணம் என் மூளையில் உறைத்துக் கொண்டிருந்தது. அதனால் நானும், கணவருமாக மெதுமெதுவாகத் தொலைபேசியை நோக்கி நடந்தோம். கதவின் மீதான உதை நெஞ்சின் மீது விழுவது போன்ற உணர்வு. பயத்தில் கால்கள் பின்னின.

ஒருவாறு தொலைபேசியைச் சுழற்றி பொலிசுக்கு விடயத்தை சொல்லத் தொடங்கிய போது நாக்குழறியது. ஜேர்மனிக்கு வந்து சில வருடங்கள்தான் என்பதால் எனது மொழிஅறிவும் அந்தமாதிரித்தான் இருந்தது. ஒருவாறு தட்டித் தடவிச் சொல்லி முடிப்பதற்குள் பல தடவைகள் கதவு இடிக்கப் பட்டு விட்டது. சத்தம் பொலிசுக்கும் தொலைபேசி வழியே கேட்டதால் „எக்காரணம் கொண்டும் கதவைத் திறக்க வேண்டாம். நாங்கள் உடனே வருகிறோம்' என்று சொல்லி தொலைபேசியை வைத்தார்கள்.

அவர்கள் வந்து சேர்வதற்கு எடுத்த அந்த சில நிமிட நேரங்களுக்குள் எங்கள் வீட்டுக்கதவு உடைக்கப் பட்டு விட்டது. ஒரு மல்லன் போன்ற தோற்றம் கொண்ட ஜேர்மனியன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தான். எனக்கு சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கின.

வந்தவன் "ஏன் நீ இங்கே வந்தாய்? இது எனது இடம்..." என்று சொல்லிக் கோபமாகத் திட்டியபடி நேரே என் கணவரை நோக்கி விரைந்து கையை ஓங்கினான். எனது கணவர் சற்றுத் தாமதித்திருந்தாலும் அவனது உரத்த பெரிய கைகள் என் கணவரைப் பலமாகத் தாக்கியிருக்கும். அந்தக் கணத்தில் நான் என் உறைவு நிலையிலிருந்து விழித்து அலறி விட்டேன். அவன் வெளிநாட்டவரை வெறுக்கும் நாசிதான் என்பது எனக்குள் உறுதியாயிற்று.

எனது கணவருக்கு அத்தனை பலம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. சடாரென்று அவனது இரு கைகளையும் பின் பக்கமாக மடக்கிப் பிடித்து ஏதோ ஒருவித பூட்டுப் போட்டார். அவனை அசையவிடாது அப்படியே நிலத்தில் வீழ்த்தி, அமத்திப் பிடித்தார். ஊரிலே சான்டோ மாஸ்டரிடம் அவர் மல்யுத்தம் பழிகியிருந்ததும், எனது தம்பிமாருடன் விளையாட்டுக்கு பூட்டுப் போட்டுக் கழட்டச் சொல்வதும் அப்போதுதான் என் ஞாபகத்தில் வந்தது. எனக்கு இன்னும் நெஞ்சின் படபடப்பு அடங்கிவில்லையாயினும் ஒருவித நிம்மதி பிறந்தது. பொலிஸ் வரும் வரை தாக்குப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது.

என் கணவரை விட உயரத்திலும் சரி, பருமனிலும் சரி பெரியவனாகத் தோற்றமளித்த அவன் அந்தப் பூட்டிலிருந்து விடுபட முடியாத நிலையில் கத்திக் கொண்டிருந்தான். எங்களைப் பலமாகத் திட்டிக் கொண்டிருந்தான். 'ஏன், இங்கே வந்தீர்கள்?' என்று அடிக்கடி கேட்டான். இந்த அமளியில் எனது மகளும் சின்னவனும் தூக்கம் கலைந்து எழுந்து வந்து விட்டார்கள். எனது அலறல்தான் அவர்களை எழுப்பியிருக்க வேண்டும்.

மூத்தவன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே. நான் அவனது அறைக்குச் சென்று அவனைத் தட்டி எழுப்பி "வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிகிறதா? எழும்பி வா" என்றேன். எழும்பி வந்தவன் நிலைமையைப் புரிந்தவனாய் ஓடிச் சென்று தும்புத்தடியை எடுத்து வந்து, விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல, அந்த ஜேர்மனியனின் பின்புயத்தில் இரு அடி கொடுத்து "ஏன் எங்கடை வீட்டை வந்தனி?" எனறு உரத்துக் கேட்டான்.

இதற்குள் பொலிஸ்காரர்கள் இருவர் வந்து விட எனது கணவர் தான் போட்ட பூட்டைத் தளர்த்தி அவனை விடுவித்தார். ஒரு பொலிஸ் அவனிடம் ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு அவனை வெளியில் அழைத்துச் செல்ல மற்றைய பொலிஸ் எம்மிடம் நடந்தவைகளைக் கேட்டு எழுதி கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு வெளியில் சென்றான்.

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இரு பொலிசுமாக வந்து அசௌகரியங்களுக்கு வருந்துவதாகச் சொல்லி, "நாளை காலையில் ஆட்களை அனுப்புகிறோம். வந்து கதவைத் திருத்தித் தருவார்கள்" என்றும் சொல்லிச் சென்றார்கள்.

எல்லாம் ஓய்ந்தது போல இருந்தாலும் எம்மால் உள்ளார ஓய முடியவில்லை. கதவு உடைந்திருப்பதால் வீட்டைப் பூட்ட முடியாதிருந்தது. யாராவது மீண்டும் வீட்டுக்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சின்னவனும், மகளும் தமது படுக்கைகளில் படுக்க மறுத்து எமது படுக்கையறைக்குள் புகுந்து விட்டார்கள். எவரும் சட்டென்று கதவைத் திறந்து வீட்டுக்குள் வந்து விட முடியாத படி வீட்டில் உள்ள கதிரைகள், மேசை என்று எல்லாவற்றையும் கதவோடு அண்டி வைத்தாலும் என்னாலும், கணவராலும் கூட அதற்கு மேல் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

விடியுது விடிய முன்னமே எமது வீட்டு வாசலில் இரு தச்சர்கள் வந்து நின்றார்கள். கதவை அழகாகத் திருத்தி விட்டு எம்மிடம் கையெழுத்து மட்டும் வாங்கிச் சென்றார்கள். அதற்கான கட்டணத்தை உடைத்தவனே கட்ட வேண்டும் என்றார்கள்.

இரவின் தாக்கம் எமது அடுத்தநாள் காலையையும் அசாதாரணமாக்கியிருந்தது. ´தொடர்ந்து ஜேர்மனியில் வாழ முடியுமா´ என்ற குழப்பம் நிறைந்த கேள்வி எங்களுக்குள். அன்று சனிக்கிழமை என்பதால் பிள்ளைகளும் வீட்டில்தான் நின்றார்கள்.

ஒரு பதினொரு மணியளவில் எமது வீட்டின் அழைப்பு மணி. நான்தான் ஓடிப்போய் சாத்தியிருந்த கதவைத் திறந்தேன். அவனேதான். இரவு எங்களைக் குழப்பிய அதே ஜேர்மனியன் வாசலில் நின்றான். நான் அதிர்ந்து போய் அலறுவதற்கிடையில்.. "பயப்படாதே. நான் மன்னிப்புக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்" என்றான். நான் கொஞ்சம் அமைதியாகினேன்.

"இரவு தந்த அசௌகரியத்துக்கு மன்னித்துக் கொள். நான் நேற்று ஒரு பார்ட்டியில் நிறையக் குடித்திருந்தேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. அப்போதுதான் வெளியிலிருந்து வந்தேன். மாறித்தான் உனது வீட்டைத் தட்டினேன். உனக்கு மேலே மூன்றாவது மாடியில்தான் நான் எனது குடும்பத்துடன் வசிக்கிறேன். குடிபோதையில் மூன்றாவது மாடிக்குப் பதிலாக இரண்டாவது மாடியில் உள்ள உனது வீட்டுக்குள் நுழைந்து விட்டேன். மன்னித்துக் கொள்" என்றான்.

சந்திரவதனா
ஜேர்மனி
12.6.2008

பிரசுரம் - July யுகமாயினி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite