
ஆனாலும் அந்த முகத்தைப் பார்த்த பின் ஒரு ´ஹலோ´வுடன் சாதாரணமாகத் தாண்டிவிட என்னால் முடியவில்லை.
“எப்பிடி இருக்கிறிங்கள்?”
“பரவாயில்லை அக்கா”
சொன்ன விதத்திலேயே ஏதோ ஒரு சோகத்தின் அழுத்தம்.
“வேலை செய்யிறிங்கள்தானே?”
“அந்தச் சீனா ரெஸ்ரோறன்ற் வேலையை விட்டிட்டனக்கா? ஆனால் உதிலை இருக்கிற ரெஸ்ரோறன்றிலை இப்ப வேலை செய்யிறன். சலாட் கழுவுற வேலைதான். 8யூரோ சம்பளம் தாறான். பரவாயில்லை. மக்டொனால்ஸ், சீனாக்கடை இரண்டிலையும் எண்டால் நாள் முழுக்க வேலை சேய்யோணும். இதெண்டால் 5மணித்தியாலம்தான். அதுதான் இது எனக்கு வசதியா இருக்கு. கொஞ்சநேரமெண்டாலும் வீட்டிலை பிள்ளையளோடை நிற்கலாம்.”
கடைசியாக என்னைச் சந்தித்த போது ஏதாவது வேலை எடுத்துத் தரும்படி கேட்டிருந்தாள். இப்ப அந்த வேலையும் இருக்கிறது. ஆனாலும் அவளிடத்தில் ஏதோ ஒரு சோர்வு.
“சரி, சந்தோசமாயிருங்கோ. நான் போகோணும்.”
“அக்கா, நான் இந்தியாவுக்குப் போப்போறன்.”
“ஊருலாவா?”
“இல்லை, இல்லை. இவன் சின்னவனையும், மகளையும் அங்கை கொண்டு போய் விடப்போறன். இங்கையிருந்து கெட்டுப் போடுவினம்.”
“எந்த மகளை?”
“இரண்டாவதை”.
அவளுக்குப் 12வயது என்பது எனக்குத் தெரியும்.
“என்ன? 12வயது மகளை அங்கை கொண்டு போய் விடப் போறிங்களே. இவருக்கும் 7 வயதுதானே. அம்மா இல்லாமல்...”
“ஓ.. கொஞ்சநாளைக்கு நிண்டு எல்லாம் பழக்கிப் போட்டு வரப்போறன். அங்கை என்ரை தங்கச்சி குடும்பமா இருக்கிறாள். அவளோடைதான் விடப்போறன்.”
“ஏன்?”
“இங்கையிருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். மூத்தவன் சிகரெட் எல்லாம் குடிக்கத் தொடங்கீட்டான். பெடியளோடை பார்ட்டி, டிஸ்கோ எண்டு போயிட்டு குடிச்சிட்டும் வாறான்.”
எனக்கு அவனையும் தெரியும் 19வயது மகன்.
"அதுக்காண்டி இந்தப் பிள்ளையளைத் தனியா யாரையும் நம்பி இந்தியாவிலை கொண்டு போய் விடப் போறிங்களே? அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே? அங்கையுள்ள பிள்ளையளும் இதுகளைப் பழகித்தானே வைச்சிருக்குதுகள்."
“இல்லையக்கா, இங்கை கூட.”
இன்னும் சொல்லிப் பார்த்தேன் அவள் ஏற்பதாய் இல்லை. நடுரோட்டில் அழுது விடுவாள் போலிருந்தது..
“என்ன இருந்தாலும் யோசிச்சுச் சேய்யுங்கோ. பொம்பிளைப்பிள்ளை. அதுவும் 12வயசு. அம்மா இல்லாமல் தனிய இன்னாரு இடத்திலை... அதோடை உங்கடை கணவரும் மற்ற இரண்டு பிள்ளையளும் இங்கை, நீங்கள் இந்த இரண்டு பேரோடையும் அங்கேயும் இங்கேயும் எண்டு...”
நான் என்ன சொன்னாலும் அவள் மாற மாட்டாள் போலத் தெரிந்தது. எனக்கு நேரமாகியது. நான் விடைபெற்றேன்.