தனிப்பட்ட
பத்மனாபஐயரை எனக்குத் தெரியாது. இலண்டனுக்குப் பல தடவைகள் சென்றிருந்தும் அவரைச் சந்திப்பதற்கான
வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை.
"வந்தனிங்கள்
சந்திச்சிருக்கலாமே, போன் பண்ணியிருக்கலாமே!" என ஓரிரு தடவைகள் வருந்தியிருக்கிறார்.
தமிழ்
புத்தகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாத நகரில் நான் இருக்கிறேன், எனத் தெரிந்த
பின் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது அஞ்சல் மூலமாகவும், தங்கை மூலமாகவும், மகள்
மூலமாகவும் எமக்கு (எனக்கும்/கணவருக்கும்) கணிசமான புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.
அவரோடு
பல தடவைகள் நூல்கள் சம்பந்தமாகவும், நூலகம் சம்பந்தமாகவும், இன்னும் அது சார்ந்த விடயங்கள் சம்பந்தமாகவும் தொலைபேசியிருக்கிறேன்.
மிகவும் சுவையாகப் பேசக் கூடியவர். அதாவது நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். அவரது ஒவ்வொரு
பதிலிலும் நகைச்சுவை கலந்திருக்கும். சிரிக்க வைத்துக் கொண்டே கதைப்பார். தொலைபேசியை
வைத்த பின்னும் அவரது பகிடிகளை அசைபோட்டுச் சிரித்துக் கொண்டிருப்பேன்.
எனது மனஓசை
நூலைக் கூட அவர் மூலமாகத்தான் வெளியிடுவதாக இருந்தேன். பதிப்புரை கூட எழுதித் தரச்
சம்மதித்திருந்தார். அந்த நூல் சம்பந்தமான கதைகளின் போதுதான் குறிப்பிட்ட சிலரது பெயர்களைச்
சொல்லி „அவர்களும் நூலை வாசித்துப்
பார்த்து, சிலதைத் தணிக்கை செய்வார்கள்“ என்றார்.
பத்மனாபஐயரின்
கதையில் அவர்கள் அதை வாசித்து, தணிக்கை செய்து... நூல் வெளி வர 2-3 வருடங்களோ இன்னும்
கூடவோ தேவைப்படலாம் என்று தெரிந்தது. அத்தோடு எனது படைப்புகளைத் தணிக்கையின் பெயரில்
வெட்டிக் கொத்த அவர்களையோ அன்றி வேறுயாரையுமோ அநுமதிக்கும் மனநிலையும் எனக்கு இருக்கவில்லை.
எனக்குத்
தெரிய பலரது புத்தகங்கள் பத்மனாபஐயர் குறிப்பிட்ட அந்த நபர்களின் மெய்ப்புப் பார்த்தல்களால்
வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு தொகுப்புகளில் எனக்குத் தெரிந்த ஓரிரு அருமையான சிறுகதைகள்
வெட்டிக் கொத்தி சிதைக்கப் பட்டு பிரசுரமாகியுமிருந்தன. ஓரிரு மாதங்கள் என்ன செய்யலாம்
என யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள்
கதைக்கும் போது „என்ரை புத்தகத்தை வேறையேதாவது
வழியிலை வெளியிடுறன். நீங்கள் தனியாள் இல்லை. உங்களுக்கு கனக்கச் ´சிண்`ணுகள் இருக்கினம். அவையள்
எல்லாரும் வாசிச்சு, ஓம் பட்டு, வெட்டிக் கொத்தி... அப்பிடி வேண்டாம். நானே செய்யிறன்“ என்றேன்.
„அப்பிடிச் சொல்லுறிங்களோ..?“ என்று விட்டுப் பலமாகச்
சிரித்தார்.
எனது மனஓசை
நூல் வெளிவந்த பின் „என்னிடம் தந்திருந்தால்
நான் இதை இன்னும் வடிவாச் செய்து வெளியிட்டிருப்பன்“ என்று சொல்லி வருந்தினார். சில தவறுகளைச்
சுட்டிக் காட்டினார்.
எனக்கும்
வருத்தமாகத்தான் இருந்தது. பத்மனாபஐயரின் பதிப்புரையுடன், தமிழியல் வெளியீடாக அது வந்திருந்தால்
நூலுக்கு ஒரு தனிமதிப்பு இருந்திருக்கும். மகிழ்வாகவும் இருந்திருக்கும்.
அதே நேரம்
நூல் வெளிவராமலேயும் இருந்திருக்கலாம்.
தொடர்ந்த
காலங்களில் எனது அண்ணனின் „தீட்சண்யம்“ நூலாவதற்கும், தெ.நித்தியகீர்த்தியின்
„தொப்புள் கொடி“ நூலாவதற்கும் சுவடி
பதிப்பகத்துடன் தொடர்பு கொண்டு தன்னாலான உதவிகளைச் செய்திருந்தார்.
இப்படி
அவர் எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு உதவியுள்ளார். எத்தனையோ பேரது புத்தகங்களை
வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவரது, அவர் பற்றிய புத்தகம் வெளிவரும் போது இப்படியொரு
பிரச்சனையைக் கொடுத்தது மட்டுமல்லாது, அவரது 75வது பிறந்தநாளை
ஒட்டிய பவளவிழாவை மனச் சந்தோசத்தோடு கொண்டாட விடாது அவரோடு ஒட்டியிருந்த அவரது நட்புகளே
அவரைச் சங்கடப் படுத்தியிருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.
சந்திரவதனா
31.08.2016