
நாங்கள் அழகு மாணிக்கங்கள் அல்ல,
அத்திவாரக் கற்கள்
அழகான ஈழம் அமைவதற்காக
வெளியில் தெரியாமல் புதைந்து போனவர்கள.;
எங்கள் சிலரின்
முகங்களையும் முகவரிகளையும்
சுவரொட்டிகளில் தேடாதீர்கள்
நாங்கள்
உங்கள் பாதங்கள்
உரிமையுடன் நடப்பதற்காக
எங்கள் உடல்களைப்
பஸ்பமாக்கிக் கொண்டவர்கள்.
மண்ணின் விடிவுக்காக
மாற்றானின் அருகிற் சென்று
கூற்றுவனை வலிந்தழைத்து
குசலம் விசாரிப்பவர்கள்
மின்னல்க் கீற்று வெடி முழக்கத்துடன்
கண்ணில் படாமல் கரைந்து போன
எங்கள் கல்லறைகள்
வெளியில் தெரிவதில்லை.
அநேகமான சமயங்களில் நாங்கள்
அஞ்சலிக்கு வைக்கப் படாத
அநாமதேய வித்துடல்கள்.
- தீட்சண்யன் -