

நிமலராஜனே!
செய்தி தந்த நின் மரணம்
இன்றெமக்குச் செய்தியானதோ!
உண்மைக்கு அங்கு
இதுதான் விதியோ
நேர்மைக்கு உந்தன்
உயிர்தான் பலியோ!
வரையறையற்ற
வஞ்சகச் செயல்களால்
தமிழர்களை வதைக்கின்ற
நிலையற்ற மனம் கொண்ட
பச்சோந்திகளின்
முறையற்ற செயலால்
தொடர்கின்ற சதியால்
உனக்கிந்தக் கதியோ!
நீ
சிதை பட்டுப் போன செய்தியில்
ஒரு கணம் நாம்
பதை பதைத்தோம்
மனம் துடித்தோம்
நேர்மையை மையாக்கி
எழுதுகோலை துணிவாய் தூக்கி
புலத்துக்கெல்லாம்
நியத்தை வடித்தவனே
நீ இன்று
எமக்கு எழுத்தானாயோ!
ஓங்கி ஒலித்த உன் குரல்
ஓய்ந்து போனதோ!
நியம் பேசியதால்
நீ இன்று
நினைவாகிப் போனாயோ!
19.10.2000