Thursday, May 15, 2008

என்று நாம் முன்னேறுவோம்?

- செல்வா -

நண்பர்களே,
உழைப்பவர்களுக்கே உலகம்!
தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?!

உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது.

http://ta.wikipedia.org/

தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?!
உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும்,

மற்ற பல்வேறு தரக் கட்டுப்பாடுகளிலும் தமிழ் இந்திய மொழிகளுள் முன் நிற்பது உண்மை).

கீழ்க்காணும் மொழி வரிசையைப் பாருங்கள்:
http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1.2C000.2B_articles

தமிழ் எங்கே உள்ளது?! ஏன்?!

43 மில்லியன் மக்கள் பேசும் போலிஷ் மொழி 4 ஆவது இடத்தில் (499 189 கட்டுரைகளுடன்).

23-25 மில்லியன் மக்கள் பேசும் 'டச்சு மொழி 7 ஆவது இடத்தில். (437 512 கட்டுரைகளுடன்).

அட, வேண்டாம் ஐயா, 4 அல்லது 5 மில்லியன் மக்கள் பேசும் மொழிகள் பலவும் மிக முன்னணியில் உள்ளன.

75 மில்லியம் மக்கள் பேசும் செம்மொழியாகிய தமிழ் மொழி ஏன் 68 ஆவது இடத்தில் உள்ளது? இது வெட்கப்பட வேண்டிய நிலை!

பெரிய புரட்சி மண்ணாங்கட்டி எதுவும் செய்ய வேண்டாம். ஒரு 4-5 வரிகள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது எழுதி பங்களிக்கக்
கூடாதா?

75 மில்லியன் மக்களில் ஒரு 100-200 பேர் கூடவா வந்து பங்களிக்கக் கூடாது?

தமிழ் விக்கிப்பீடியாவில் மே 3, 2008 அன்று வரை உருவாகியிருந்த மொத்தம் 13, 675 கட்டுரைகளில், ஏறத்தாழ 20 பேர் மட்டுமே பங்களித்து 11,150 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார்கள். இக்கட்டுரைகளில் உள்ள பிழைகளை நீக்கவும், மேலும் விரிவாக்கங்கள் செய்யவும், புதிய ஆக்கங்கள் செய்யவும், ஏன் தமிழர்கள் முன்வரவில்லை என்பது எனக்கு வியப்பாக உள்ளது. உண்மையில் இன்றளவில் சில ஆயிரம் தமிழர்களாவது ஊக்கமுடன் பங்களித்திருக்க வேண்டும்!

புதிய அறிவுக் கோயிலை கட்ட எல்லோரும் வந்து பங்களிக்க மீண்டும் வேண்டுகிறேன்! ஒரு 4-5 வரிகளாவது எழுதுங்கள்! ஒரு படம் தந்து உதவுங்கள்! ஒரு எழுத்துப் பிழையை நீக்கிப் பங்காற்றுங்கள்!

நாம் உலக மொழிகளின் வரிசையில், பேசுவோர் எண்ணிக்கையில், 15 முதல் 20 வரையிலான இடத்தில் உள்ளோம். கலைக் களஞ்சிய வரிசையில் நாம் முதல் 10 ஆக இருக்க வேண்டும் என்னும் உணர்வோடு, ஊக்கமுடன் வந்து உதவுங்கள் நண்பர்களே! நம் மொழிக்கு செய்யக்கூடிய உண்மையான ஒரு தொண்டு, பணி. இதனால் நாம் யாவருமே பயன்பெறுவோம்.

அன்புடன்
செல்வா
மே 13, 2008

தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்க:
http://ta.wikipedia.org/


தகவல் - சிறீதரன்
http://kanaga_sritharan.tripod.com/

Tuesday, May 13, 2008

வன்னியிலே கவி படித்த வானம்பாடி

தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்தில் நாவண்ணன்

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் இறுதி ஊர்வலத்துக்காக நாட்டுப்பற்றாளர் நாவண்ணன் அவர்கள் புலிகளின் குரல் வானொலியில் தானே தனது குரலில் வழங்கிய அஞ்சலிப்பாவின் ஒரு பகுதி



கவிஞர் தீட்சண்யன் 13.5.2000 இல் காலமானார்.

58க் கலவரத்துக்குள்தான் அவன் பிறந்தவனாம். தொட்டில் எல்லாம் வாங்கி வைத்து விட்டு அம்மாவைப் பிரசவத்துக்காக வடக்கே விட்டு வந்து பார்த்த பொழுதுதான் தொட்டில் எரிந்து கொண்டிருந்ததை அப்பா கண்டாராம்.

உடைமைகள் எல்லாம் கருகிப் போனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மட்டுமல்ல. கொழும்புத் தமிழர் பலருக்கும்தான்.

அவன் பிறந்த பலன்தான் எல்லாம் அழிந்து போய் விட்டது என்று சில வாய்கள் முணுமுணுத்தாலும் அவன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் முத்தானான். மூத்த பிள்ளை. மூத்த பேரப்பிள்ளை. மூத்த மருமகன். மூத்த பெறாமகன்... இப்படியே எல்லாவற்றிலும் அவன் மூத்தவனாய், முத்தானவனாய் மிளிர்ந்தான்.

எனக்கும்தான் அவன் மூத்தவன். அவன் இருந்த கருப்பைக்குள்தான் அவனுக்கு அடுத்து நானும் இருந்தேன். அவன் சுவைத்த அம்மாவின் மார்பகங்களைத்தான் நானும் சுவைத்தேன். அவன் கிடந்த மடிகளில்தான் நானும் தவழ்ந்தேன். அவன் சாய்ந்த தோள்களில்தான் நானும் தூங்கினேன். அவன் ஓடிய எனது வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நானும் கால் பதித்தேன்.

அவன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ராஜா. பிறேமராஜன் எனப் பெயரிட்டிருந்தாலும் ராஜன் என்றே அம்மா அவனை வாஞ்சையுடன் அழைப்பாள். அன்போடு அணைப்பாள். எல்லோருக்கும் அவன் ராஜன்தான். சிரிப்பும், துடிப்பும், அறிவும், குறும்பும், அழகும் அவன் கூடவே பிறந்தவை.

நேற்றுத் தோசை சுடும் போதும் வழமை போலவே அவன் பற்றிய சில நினைவுகள். இலுப்பெண்ணெய் காரன் எப்போது வருவான் என்று பார்த்திருந்து அம்மா அவனுக்காக இலுப்பெண்ணெய் வாங்குவாள். இலுப்பெண்ணெய் தோலில் ஏற்படும் பொருக்கு போன்ற தன்மையைப் போக்கி விடுமாம். இந்த விடயங்களிலெல்லாம் அம்மா கவனம். ஒவ்வொரு சின்ன விடயங்களையும் கவனிப்பது போலவே அண்ணனின் கால்களும், தோலும் வழவழப்பாக இருக்க வேண்டும், பொருக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் அவளுக்கு அதீத கவனம்.

இலுப்பெண்ணெய்யை சும்மா சாப்பிடவோ குடிக்கவோ முடியாதுதானே. கசக்கும். அதுவும் ஊர் இலுப்பெண்ணெய் நேரடியாகக் கையால் பிழிந்தெடுக்கப் பட்ட எண்ணெய். தடிப்பாயும், அதீத கசப்பாயும் இருக்கும். அதனால் அம்மா கையாளும் உத்தி தோசைக்கு இலுப்பெண்ணெய் ஊற்றி மொருமொருக்கச் சுடுவது. அப்படிச் சுட்டால் அண்ணனும் விரும்பிச் சாப்பிடுவான்.

அடுப்புக்குள் சுள்ளி முறித்து முறித்துப் போட்டு எரித்து, மொருமொருத்த தோசை சுடும் போது எங்கள் வீடு முழுக்க உழுந்துத் தோசையின் வாசம் கமகமக்கும்.

எண்ணெய் ஊற்றிச் சாப்பிடும் போது சுடச்சுடச் சாப்பிட்டால்தான் சமிக்கும் என்பதால் அம்மா ஒவ்வொருவராகக் கூப்பிட்டு சுட்டுச் சுட்டுப் போட்டுக் கொண்டிருப்பாள்.

முதல் உபயம் அண்ணனுக்குத்தான். முதல் இரண்டு தோசை சும்மா தோசை. அடுத்த ஒரு தோசை நல்லெண்ணெய்த் தோசை. அடுத்து இரண்டோ, மூன்றோ அவரவர் கொள்ளளவுக்கு ஏற்ப இலுப்பெண்ணெய்த் தோசை. கடைசியாக ஆசைக்கு ஒரு நெய்த்தோசை. அண்ணன் ஒரு பிடிபிடித்து விட்டு வருவான்.

இலுப்பெண்ணெய் தோசையை விட நெய்த்தோசைக்கு சுவை அதிகம். ஆனாலும் அம்மா இலுப்பெண்ணெய் தோசையைத்தான் அண்ணனை அதிகம் சாப்பிட வைப்பாள். அதுதான் உடலுக்கும், தோலுக்கும் நல்லது என்பாள்.

அண்ணனின் கால்களும், தோலும் எப்போதும் ஒரு பளபளப்புடன்தான் இருக்கும்.

அம்மா பார்த்துப் பார்த்து வளர்த்த அவனது அந்தக் கால்களில் ஒன்றைத்தான் எங்கள் நாட்டுப் போர் ஒரு நாள் பறித்து விட்டது. இன்னொரு நாள் அவனது உயிரையும் பறித்து விட்டது.

நானே ஏமாந்து போனேன். எனக்குள்ளே சிதைந்து போனேன். ஏன் ஏன்..? என்ற விடை கிடைக்காத கேள்வியோடு மாரடித்து மாரடித்துத் துடித்துப் போனேன். சமயங்களில் துவண்டு போயும் கிடந்தேன். எனக்கே அப்படியென்றால் அவனைப் பத்து மாதம் சுமந்து, தன் உதிரத்தையே பாலாக்கி அவனை மனிதனாக்கிய எனது அம்மா எப்படித் துடித்திருப்பாள்? இன்னும் அவள் மனம் என்ன பாடுபடும்?

அவள் மட்டுமா? இன்னும் எத்தனை அம்மாக்கள்!

சந்திரவதனா
13.5.2008

Sunday, May 11, 2008

மே மாத யுகமாயினி பார்த்து விட்டீர்களா?


மே மாத இதழ்

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாதம் ஒரு இதழாக, பல்சுவை அம்சங்களுடன் யுகமாயினி வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஈழத்துக்கலைஞர் எஸ்.பொ அவர்களை நிறுவக ஆசிரியராகவும், சித்தன் அவர்களைப் பொறுப்பாசிரியராகவும் கொண்ட இவ்விதழில் ஈழத்துக் கலைஞர்களும், இந்தியக் கலைஞர்களும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Friday, May 09, 2008

ஆவணப்படமாக "யாழ். நூலக எரிப்பு"

[வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 06:21 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

சிறிலங்கா ஆட்சியாளர்களால் 1981 ஆம் ஆண்டில் எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றி "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறுவட்டில் (DVD) தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் 50 நிமிடங்கள் ஓடக்கூடியது.

யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட 27 ஆவது ஆண்டு நாளான 31.05.08 அன்று உலகம் எங்கும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.

ஈழத் தமிழர்களின் பெரும் சொத்தாகவும், கல்விப்புலமையின் குறியீடாகவும் விளங்கிய யாழ். நூலகத்தின் வரலாறு, ஈழத்தமிழர்களின் அரசியல் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தது.



1933 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலத்தில் அந்த நூலகத்தின் வலிமிகுந்த வரலாறு இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதனை சோமீதரன் உருவாக்கியுள்ளார்.

சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.



தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

"நிகரி" தயாரிப்புக் குழுவினர் 2006 ஆம் ஆண்டில் இருந்து இதனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எண்பதுகளில் வாழ்ந்த, உணர்ந்த ஒரு தலைமுறையின் எரியும் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Quelle - Puthinam

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite