Monday, July 31, 2006

தாயகம் நோக்கி - 2


தாயகம் நோக்கி - 1

ஒரு சின்னக் குளியல் செய்து விட்டு, முடிந்தால் சுடச் சுட ஒரு தேநீர் அருந்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்போடுதான் வவுனியாவில் இருந்த வன்னிலொட்ஜ் இனுள் புகுந்து கொண்டோம்.

என்னவொரு ஏமாற்றம்..! வாழ்க்கையில் நான் சந்தித்த மிக மிக அருவருப்பான இடங்களில் ஒன்று அது. அறைக்குள் நுழைந்த பொழுதே அப்படியொரு நாற்றம். குளியலறைக்குள் நுழைந்தேன். வருடக்கணக்காகத் துப்பரவு செய்யப் படாதிருந்தது. போன வேகத்தில் வெளியில் வந்து விட்டேன். ஐந்து நிமிடங்கள் கூட அங்கு நிற்க முடியவில்லை. ஹொல்கெர் ஓடியோடி அந்த அசிங்கத்தைத் தனது கமராவுக்குள் திணித்துக் கொண்டிருந்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. என்றாவது ஒருநாள் யேர்மனியத் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்புச் செய்யப் படலாம்.

எனது பயணத்தின் மணிப் பொழுதுகளில் இது ஒரு மாசு படிந்த பொழுது. ஒரு நாளைக்கான கட்டணப் பணத்தைக் கட்டி விட்டு வெளியேறினோம்.

வெளிப் பார்வைக்குப் பிரமாண்டமாகத் தெரிந்த அந்த லொட்ஜ் தன்னோடு வைத்திருந்த அருவருப்பு இப்போது என்னோடு ஒட்டிக் கொண்டு வந்து விட்டது போலிருந்தது.

கையோடு கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiberglass) இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களையும், உபகரணங்களையும் விளக்குவைச்ச குளத்தினூடே கொண்டு செல்வதில் சிக்கல் இருக்கலாம் என்ற எண்ணம் எமக்கு இருந்ததால், அவைகளை வவுனியாவில் ஒரு கடையில் வைத்து விட்டுப் போய் றெட்குறோஸ் (Red Gross) மூலம் எடுத்துக் கொள்ளலாம் என நேற்றுக் கடைசி நேரத்தில் தீர்மானித்ததை இன்று செயற்படுத்து முகமாகக் குறிப்பிட்ட ஒரு கடையைத் தேடினோம்.

அதிகாலை நான்கு மணி என்பதால் அனேகமான எல்லாக் கடைகளும் பூட்டியே இருந்தன. ஒரு சில கடைகளுக்கு உள்ளிருந்து பாடல்கள் மட்டும் கேட்டன.

தூங்கி வழிந்த மாடுகளுக்கும், தூங்கியே கிடந்த மாடுகளுக்கும் மத்தியில் காத்திருந்தோம். பொறுமை கெட்டு வாகனத்திலிருந்து இறங்கி வீதியில் நடக்கையில் வீதியோரங்களிலும் கட்டிடத் திண்ணைகளிலும் மனிதர்களும் உறங்கியும் உறங்காமலும் இருப்பதைக் கண்டோம். ஓட்டோக்களும் நின்றன.

ஐந்து மணியாகிக் கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிள்களினதும் துவிச்சக்கர வண்டிகளினதும் வரவைத் தொடர்ந்து ஒரு சில கடைகள் திறக்கப் பட்டு சாம்பிராணிப் புகை வாசம் கமகமக்கத் தொடங்கியது. சுப்ரபாதம் மனசையும் காதையும் நிறைத்து புத்துணர்ச்சியைத் தந்தது. காத்திருப்புகளைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி குறிப்பிட்ட கடையைக் கண்டு பிடித்துப் பொருட்களை ஒப்படைத்து விட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டோம்.

வாகனம் விளக்குவைச்ச குளத்தை நோக்கி விரையத் தொடங்கியது. யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. எல்லோரிடமும் ஒரு அவசரம். நேரத்துக்குப் போய் வரிசையில் நிற்க வேண்டும். இடையிடையே "கெதியாப் போனால்தான் லைனில் நின்று பாதை கடக்கலாம்." என்று சிவா மாஸ்டரும் கணவரும் முணுமுணுப்பது கேட்டது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பின் லைனைக் கட் பண்ணி ஆட்களைத் திருப்பி விடுவார்களாம்.

எமக்குள் பதட்டம். பதினாறு வருடங்களின் பின், சரியான முறையில் சிங்கள இராணுவத்தை இனித்தான் சந்திக்கப் போகிறோம். பாதை திறக்கப்பட்ட பின் விளக்குவைச்ச குளத்தில் செக்கிங் எப்படி இருக்கும் என்பது பற்றியதான சரியான தகவல்களை யாருமே எமக்குத் தரவில்லை. சிவா மாஸ்டரும் பன்னிரண்டு வருடங்களின் பின் இப்போதான் கொழும்பிலிருந்து தமிழீழத்தை நோக்கிப் பயணிக்கிறாராம்.

எப்படியான வரவேற்பு எமக்காகக் காத்திருக்கிறது என்று தெரியாமலே விளக்கு வைச்சகுளத்தின் செக்கிங் பொயின்ற் இலிருந்து ஒரு மைல் நீளமளவில் நீண்டிருக்கும் மனிதர்களும், வாகனங்களும் நிரைப் படுத்தப் பட்ட வரிசையை வந்தடைந்தோம். எட்டு மணிக்கு முன்னமே இப்படியொரு நீள்வரிசை. செக்கிங் இன்னும் தொடங்கவில்லையாம். எட்டிப் பார்த்தோம். இறங்கி நடந்து பார்த்தோம்.

ஒவ்வொரு பத்து யார் தூரத்துக்கும் மூட்டைகளை அடுக்கி முள்ளுக்கம்பிச் சுருள்களை வைத்துத் தடைமுகாம்களை அமைத்திருந்தனர் சிங்கள இராணுவத்தினர். அடிக்கடி அதன் பின்னிருந்த சிறு குடில்களுக்கு உள்ளிருந்து எட்டியும் பார்த்தனர். நட்பாகச் சிரித்தனர். போர் என்று வரும் போது இவர்கள்தானா பேய்களாக மாறுகிறார்கள்..? நம்ப முடியாதிருந்தது. குளித்து விட்டு ஈரத் துவாலையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்த குட்டையாகத் தலையை வெட்டியிருந்த அவர்களில் சிலர் சிரித்த படி கை காட்டினார்கள். இவர்களும் மனிதர்கள்தான். ஆனாலும் பணத்தைக் காட்டிப் பகடைக் காய்களாக்கப் படுகிறார்கள். யதார்த்தம் புரிந்தது.

காத்திருப்புகளில் எம்மவர்கள் களைத்துப் போயிருந்தார்கள். சுள்ளி வைத்து எரிக்கும் மணத்தைக் காற்று அள்ளி வந்தது. ஆங்காங்கு களையிழந்த வீடுகளின் முன்றலில் சிலர் அடுப்பின் மேல் பானை வைத்து தண்ணீர் சுட வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். கொண்டு வந்த உணவுகளையும், அந்தத் தேநீரையும் சுவைத்துப் பலர் தமது பசியையும் களையையும் ஆற்றிக் கொண்டிருந்தார்கள். எமது வாகனத்தின் சிங்கள சாரதி ஓடியோடி ஒவ்வொரு தடைமுகாம்களுக்குள்ளும் புகுந்து சிரித்தபடி வெளியில் வந்தான்.

வரிசை நத்தையாக நகரத் தொடங்கியதும் நாங்களும் நகர்ந்தோம். எமது முறை வந்ததும் சிறீலங்கா அடையாள அட்டையைக் காட்டினோம். ஹொல்கரின் எம்ஓடீ(MOD) யைப் பார்த்து விட்டு, அதில் "இரு பிரதி தமக்கு வேணும்" என்றார்கள். "எமக்கு அதுபற்றித் தெரியாது. அதனால் நாம் ஒரு பிரதியும் எடுக்கவில்லை." என்றோம். ஒரு சிலர் எம்மைப் பாவமாகப் பார்த்தாலும் ஒரு சிங்களவன் "எம்ஓடீ யின் கொப்பி இல்லாமல் நாம் மேற்கொண்டு நகர முடியாது" என்று கடுமையாகச் சொல்லி விட்டான். அவன் முகத்தில் இனக்குரோதம், அதிகாரத்திமிர்... எல்லாமே அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

இனி நாங்கள் மீண்டும் வவுனியா வரை போய் கொப்பி(பிரதி) எடுத்து வந்து வரிசையில் நின்று... பயணம் தொடர்ந்த மாதிரித்தான். மனசுக்குள் சலிப்பும் கோபமும் வந்தன. சாரதி சிங்களத்தில் மீண்டும் அந்த அதிகாரியிடம் கேட்டுப் பார்த்தான். ம்கும்.. அதிகாரி சற்றும் இளகவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினோம். ஆனாலும் தடைமுகாம்களுக்குள் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் சாரதி ஆலோசனை கேட்ட போது அவர்களில் ஒருவன் எம்மை அவர்களது அலுவலகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பிரதி எடுத்துத் தந்து, எமது வாகனத்தில் ஏறி எம்மை மீண்டும் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனான். அவனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. கண்களால் சொன்னோம். சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.

ஒருவாறு பாஸ், எம்ஓடீ, ஐசி செக்கிங்குகள் முடிந்தால் இனி நாம் கொண்டு வந்த பொருட்களின் மீதான செக்கிங். அதற்கு வாகனத்தை அங்கிருந்த பரந்த காணிக்குள் இறக்க வேண்டி இருந்தது. மரநிழல்கள், வெயில்கள், இருக்கைகள் என்று பலதரப்பட்ட நிலைமைகள் அதற்குள். பொருட்களின் மீதான செக்கிங்கில் கடுமை இருக்கவில்லை. எமது உடமைகளில் சிலவற்றை அவர்கள் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஹொல்கெரின் கமராவைத்தான் கழற்றியும் பார்த்தார்கள். அத்தோடு முடியவில்லை. வாகனத்தையும் பதியவேண்டுமாம். அதனால் சாரதி அதற்குரிய இடத்துக்குச் சென்று விட நாம் காத்திருந்தோம்.

களைப்புக்கு நடுவிலும் அது ஒரு இனிமையான பொழுது. அங்கு காத்திருந்தவர்களில் பல உறவுகள் என்னை இனம் கண்டு வந்து பேசிச் சென்றார்கள். அவர்கள் உள்நாட்டிலேயே வாழ்ந்திருந்தாலும் 12, 15, 16.. வருடங்களின் பின் இப்போதான் வடக்கை நோக்கிச் செல்கிறார்களாம். அவர்களுடனான சந்திப்பு எதிர்பாராத சந்தோசம்.

வாகனமும் பதிந்து முடிய விளக்குவைச்சகுளத்தை விட்டுப் புறப்பட்டோம். "அப்பாடா" என்றதொரு உணர்வு மனத்துக்குள்.

நிம்மதியோடு தொடர்கையில் தமிழீழம் எங்களை வரவேற்றது. மனசு குதூகலித்தது. பெண் பொலிஸ்களும், எம் பெடியளும் என்று கண்டதில் மனசு துள்ளியது.

தமிழீழத்தில் ஆங்காங்கு ஓரிரு செக்கிங் பொயின்ற்ஸ் இருந்தாலும் மரையடிச்ச குளத்தில் எமக்கான செக்கிங். அங்கு பதிந்து வெளிநாட்டிலிருந்து வந்த காரணத்தால் 500 ருபா கட்டணம் செலுத்தி வன்னிக்குள் புகுவதற்கான பாஸைப் பெற்றுக் கொண்டோம். ஹொல்கெர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. சிங்கள சாரதியை உள் விடுவதில்தான் சில தயக்கங்கள். எம்மை அழைத்துப் போக வெண்புறாவிலிருந்து இரு உறவுகள் வந்திருந்தார்கள். ஆனாலும் எமது பொருட்களை அவர்களது வாகனத்தில் வைக்க முடியவில்லை. அதனால்
இன்றே திரும்பி விட வேண்டுமென்ற உத்தரவுடன் சிங்களசாரதியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

எமது பயணம் எமது மண்ணில் தொடர்ந்து... கிளிநொச்சியின் வெண்புறாசெயற்கை உறுப்பு பிராந்தியச் செயலகத்தை வந்தடைந்தது.

வைத்தியமே கேள்விக்குறியாகிப் போன நேரத்தில் செயற்கை அங்கங்களைப் பொருத்துவது, அதுவும் பணம் கொடுத்து, செயற்கை உறுப்புகளைப் பொருத்துவது என்பது சாதாரண மக்களுக்கு முடியாத காரியம். இந்த நிலையில் முற்று முழுதாக இலவசமாக தனது சேவையை தமிழ் மக்களுக்குத் தர 15.06.1994இல் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியில் தோற்றம் பெற்றதுதான் இந்த வெண்புறா நிறுவனம்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணம் குளப்பிட்டி வீதியிலிருந்து கிளிநொச்சி, கோணாவில், புதுக்குடியிருப்பு எனப் பறந்து வந்த வெண்புறா, தனது தலைமைச் செயலகம் இன்னும் புதுக்குடியிருப்பிலேயே இருந்தாலும் 15.6.02 இலிருந்து கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் வந்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறது.

தொழில் நுட்பவியலாளர், திட்ட இணைப்பாளர், நிர்வாக அலுவலகர், வரவேற்பாளர், தட்டச்சாளர், கணக்காளர், காசாளர், களஞ்சியக் காப்பாளர், காவலாளர், சமையலாளர், பராமரிப்பாளர், கள அலுவலகர், விழிப்புணர்வுப் பணியாளர்கள், மருத்துவர், கண்ணிவெடி அகற்றும் பிரிவினர்... என்று 32 பேர்கள் பணியாற்றும் வெண்புறாவின் உள்ளே வீசும் காற்றுக் கூட என்னை நேசக்கரம் நீட்டி வாவென வரவேற்றது.

எம்மை ஏற்றி வந்த வாகனச் சாரதிக்கு மிகுதிப் பணத்தையும் கொடுத்து அனுப்பி விட்டு, வெண்புறாவின் உறவுகளுடன் நான் கைகோர்த்துக் கொண்டேன். அது இறுக்கமான நேசமான அன்பான கைகோர்ப்பு.

கோர்த்த கைகளை இழுத்துப் பிரித்துக் கொண்டு மீண்டும் யேர்மனி திரும்பும் ஒரு நாள் வரும் என்பது பற்றிய பிரக்ஞைகள் எதுவுமின்றி நான் வெண்புறாவுக்குள் உலா வந்தேன்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite