Saturday, February 12, 2005

அமிழ்ந்த காதல்


மாரிக்கிணறு நிரம்பியிருந்தது. கிண்ணத்தால் எட்டி அள்ளிக் குளிக்கலாம் போலிருந்தது. குளிரை நினைத்தால்தான் பயமாக இருந்தது. பல்லைத் தீட்டி முகம் கழுவி தேநீர் ஒன்றைக் குடித்து விட்டுக் குளிக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சரியாக விடியவில்லை. அம்மா எனக்காக வேளைக்கே எழும்பி விட்டா. இருட்டில் ஆட்டில் பால் கறந்திருப்பா. குசினிக்குள் ஆட்டுப்பால் தேநீர் ஆற்றும் வாசம் கிணற்றடிக்கும் வந்தது.

நேற்று ரியூசனால் வரும் போது கோகிலாவிடம் இருந்த எனது கெமிஸ்றி நோட்ஸ் கொப்பியை வாங்கிக் கொண்டு வந்தேன். படிக்க வேண்டும். அதுதான் வேளைக்கே எழும்பி விட்டேன்.

கோகிலாவை நினைக்கத்தான் பாவமாக இருந்தது. அவளுக்கு எப்படியோ கோணந்தீவு ராசுவிடம் காதல் வந்து விட்டது. காதலுக்கு என்ன தெரியும். அது சாதிமத பேதம் பார்த்து வருவதில்லைத்தானே.

ராசுவின் அப்பா பனையேறிக் கள்ளுச் சீவுகிறவர். வாழ்வது கொட்டில் வீட்டில். தேவகியின் அப்பா வங்கியில் வேலை செய்கிறார். சாதித்தடிப்பு என்று இல்லாவிட்டாலும் சாதி பார்ப்பவர். வாழ்வது மாளிகை போன்று இல்லாவிட்டாலும் வசதியான பெரிய வீட்டில். உணர்வுகளை விட மானம், மரியாதைக்கு முக்கியம் கொடுக்கும் சுபாவம் கொண்டவர்.

அவரது காதுக்கு ஏற்கெனவே விடயம் எட்டியதில் வீட்டில் ஒரு பனிப்போரே நடந்து முடிந்து விட்டது. அவளை அடி, உதை என்று துவைத்து எடுத்து விட்டார். அவனை மறந்து விட வேண்டுமென்ற கண்டிப்பான நிபந்தனையுடன்தான் பாடசாலைக்குப் போவதற்கான அனுமதியும் கொடுத்திருந்தார். அடிக்கும் உதைக்கும் பயந்து காதல் போய் விடுமா..? அது இன்னும் பலமாகத் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான், நேற்று ரியூசனால் வீட்டுக்குத் திரும்பி வரும்போது யாருக்கும் தெரிய வராது என்ற அசட்டுத் துணிச்சலுடன் அவள் பிய்ந்து கிடந்த வேலிக்கு மேலால் எட்டி ராசுவிடம் கடிதத்தைக் கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து துளியும் எதிர் பாராத விதமாய் அவர் அந்த ஒழுங்கையால் சைக்கிளில் வந்தார்.

அவர் பார்த்த பார்வையும் கோகிலா ஏறு சைக்கிள்ளை என்று உறுக்கிய விதமும் எனக்கே நடுக்கத்தை ஏற்படுத்தியது. "இன்னும் எங்களுக்குள்ளை தொடர்பு இருக்குது எண்டு அப்பாவுக்குத் தெரிஞ்சால் அப்பா என்னைக் கொண்டு போடுவார்" என்று அவள் ஏற்கெனவே சொல்லியது என் ஞாபகத்தில் வந்தது. நான் மௌனமாய் வீட்டுக்கு விரைந்து விட்டேன்.

நேற்றுக் கட்டாயம் அவள் வீட்டில் பிரளயம் நடந்திருக்கும். இன்று பள்ளிக்கூடத்தில் தான் என்ன நடந்ததென்று சொல்லுவாள். ம்.. வருவாளோ..! சிலவேளை இனி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு விடவும் மாட்டினம்.

நினைவுகளோடு தண்ணீரை அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த போதுதான் செய்தி வந்தது "கோகிலா கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டாள்" என்று.

காலையில் அவளின் அம்மா நித்திரைப் பாயிலிருந்து எழும்பி கிணற்றடிக்கு வநத போது அவளின் உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததாம்.

பெற்றவர்களினதும் உடன் பிறப்புகளினதும் ஓலத்துக்கு மேலால், ஊரின் ஊகங்கள் பலவாறாக ஒலித்தன. "சாமிக்கு பூ வைக்கிறதுக்காண்டி காலைமை எழும்பி கிணத்துக்கட்டிலை ஏறியிருப்பாள். தவறி விழுந்திருப்பாள்..... என்ற அவளின் அம்மா அப்பாவின் பதிலை நம்பியும் நம்பாமலும்... ஊர் பலதையும் மென்று கொண்டிருந்தது. நான் மௌனம் காத்தேன்.

சந்திரவதனா
12.2.2005

வேண்டுகோள்


வலைப்பதிவுகளின் வளர்ச்சி பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். இதில் காசியின் தமிழ்மணத்தினூடான முயற்சிகள் வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பெரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்த வளாச்சிகளின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த ஒரு வசதி இல்லாது போய் விட்டது போல் தெரிகிறது. முன்னர் ஒரு சொல்லைக் கொடுத்து அது சம்பந்தமான ஆக்கங்களைத் தேடக் கூடிய வசதி இருந்தது. இப்போது அதைக் காணவில்லை. பல தடவைகள் Blogsஇல் ஏதாவதொன்றைத் தேட முனைந்து முடியாமல் கூகிளை நாடி நேரத்தைத் தொலைத்திருக்கிறேன். இந்த தேடும் வசதியும் தமிழ்மணத்தில் சேர்க்கப் பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். (ஏற்கெனவே இருந்து நான் அதைக் கண்டு பிடிக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள்.)

அத்தோடு துறைசார்ந்து வலைப்பதிவுகள் பட்டியலிடப் பட வேண்டும். அதை இன்று பாலாஜியும் குறிப்பிட்டிருந்தார். இதையும் வேறு யாரும் செய்வதையும் விட காசியே செய்து தமிழ்மணத்தில் இ.இதழ்கள் பக்கம் போல அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கவிதை

கவிதையின் வரைவிலக்கணம்தான் புரியவே மாட்டேனென்கிறது.
எதுகை மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்களைக் கவிதைகளில் எதிர் பார்க்கிறேன். எனக்கு அதெல்லாமுமாய் எழுதத் தெரியாவிட்டாலும் யாராவது இதையெல்லாம் சேர்த்து எழுதினால் மிகவும் ரசிப்பேன். ஆனால் எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூட சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.

இன்று படித்தவற்றில் இன்று படித்தவற்றில் இளவஞ்சியின் இக்கவிதை பிடித்தது.

நேற்றுப் படித்ததில் சனியனின் இக்கவிதை பிடித்தது

காதல் கசக்குமா...?


"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...

என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது
என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு.

நண்டுகள்


உதவி செய்யப் போய் உபத்திரவங்களை வாங்கிக் கொண்ட அனுபவம் குறிப்பாகப் புலம் பெயர்ந்த பலருக்கும் இருக்கும். புலம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் தாங்கள் அனுபவித்த தனிமைகளையும், பாஷைப் பிரச்சனைகளையும், உதவிகள் இல்லாத தன்மைகளையும் மனதில் கொண்டு... தொடர்ந்த காலங்களில்

புலம் பெயர்ந்து வந்தவர்களை தாமே போய்ச் சந்தித்து வில்லங்கமாக வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து...
பின்னர் பட்டிருககிறார்கள்.

உறவினர்களைத் தெரிந்தவர்களை என்று தாமே பொறுப்பேற்று அழைத்து அவர்களைச் சரியான முறையில் பதியும் வரை தங்கள் வீட்டில் தங்க இடம் கொடுத்து விட்டு......
பின்னர் முழித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ பதிவுக்கு ஒரு இடம் வேண்டுமென்ற யாராவது மன்றாடும் போது பாவம் பார்த்து வீட்டில் பதிந்து விட்டு.. இருக்க விட்டால் சிறிதளவு பணமும் கிடைக்கும் என்ற ஆசையில் வீட்டுக்குள் விட்டு விட்டு...
தாம் நடுத்தெருவில் நின்றிருக்கிறார்கள்.

இப்போது ஷ்ரேயாவும் மிகவும் பட்டிருக்கிறார்..

எத்தனை கிலோ?


18 வருடங்களுக்கு முன்,
என் கணவருடன் இங்கு, யேர்மனிய அகதி முகாமொன்றில் இருந்த சில நண்பர்கள் எங்களிடம் வந்திருந்தார்கள். மதிய உணவின் பின் எல்லோரும் தமது உடல்நிறையைப் பார்த்தார்கள். ஒருவருக்கு தன் நிறையில் திருப்தி இல்லை.

நிறைகாட்டியிலிருந்து கீழே இறங்கினார். ஒரு Bodybuilder போல மசில்ஸ் எல்லாம் தெரியும் படி Body எடுத்தார். அப்படியே நிறைகாட்டியில் ஏறினார்.
"அக்கா இப்பா பாருங்கோ நான் எத்தனை கிலோ என்று" என்றாரே.

ஆணென்ன பெண்ணென்ன



இது 1991 இல் வெளிவந்த தர்மதுரை படத்துக்காக
இளையராஜாவின் இசையமைப்பில் பாலசுப்ரமணியம் பாடிய
ஒரு பாடலின் சில வரிகள். பாடலை எழுதியவர் யாரெனத்
தெரியவில்லை.


ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம்தான்...

நீயும் பத்து மாதம்
நானும் பத்து மாதம்...

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு
உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ளே பேதமில்லை
பார்ப்பதிலே ஏன் பிரிவு...?

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite