வந்து குவிந்திருக்கும் அன்பு வாழ்த்துகளுக்கெல்லாம் எப்போ லைக் போட்டு, எப்போ நன்றி சொல்லி...
உண்மையிலேயே ஒரு குழந்தையைப் போல மிக மகிழ்ந்தேன். இத்தனை நட்புகளா என்று மனங் குளிர்ந்தேன். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல நேரம்
வாய்க்கும் என்று நம்புகிறேன்.
அதுவரைக்கும் என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கெல்லாம் என் நெஞ்சார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 57வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன்.
ஆற்றாமையில் மனம் துடிக்கவில்லை. அழுது வடிக்கவில்லை. வருத்தம் என்றறிந்த போது கூட மனம் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்தத் துடிப்பான பெண்ணின் துடிப்படங்கி விட்டது என்ற செய்தியில் மனம் துயர் கொள்ளத் தவறவில்லை.
என் பதின்மங்களில் எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, மாடிவீட்டு மாப்பிள்ளை, ராமன் தேடிய சீதை... என்று பல படங்கள் மூலம் என்னைக் கவர்ந்த, நான் எனக்குள் பதிந்து வைத்திருந்த அம்முக்குட்டியை, இந்திய முதல் அமைச்சராக தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் பார்த்த போதிலெல்லாம் அந்த அம்முக்குட்டிதான் இந்த ஜெயலலிதா என்று என்மனம் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.
மரணம் இயல்பானது தான். இயற்கையானது தான். தவிர்க்க முடியாததுதான். ஆனாலும் அத்தனை சுலபமாக அதைக் கடந்து விட முடிவதில்லை.
ஒவ்வொரு மரணமும் மனதில் துயரை அப்பி விட்டு, தம்பாட்டில் சென்று கொண்டிருக்கின்றன.