Tuesday, September 22, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள் - 2

கல்லூரிச்சாலையின் பசுமை நினைவுகளோடு சம்பந்தம் உள்ள ஒரு பதிவு இது என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.

எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.

லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.

இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.

நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.

அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.

Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.

"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.

நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.

எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?

ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.

ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.

அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.

அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.

ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.

அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.

சந்திரவதனா
7.11.2005
http://www.manaosai.com/

Friday, September 18, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்

எனது வீடு, எனது ஊர்... எனது நாடு.. என்னும் போது தோன்றக்கூடிய பரவசநிலையைத் தரக்கூடியதே எனது பாடசாலை என்பதும். 32வருடங்களுக்கு முன் முடிந்து போய்விட்ட எனது பாடசாலை வாழ்க்கை பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. அவ்வப்போது ஒவ்வொன்றாக மனசுக்குள் மிதக்கும் அந்த நினைவுகள் வந்தி என்னை அழைத்த இந்த சில நாட்களுக்குள் இன்னும் அதிகமாகவே கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.

மற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.

அந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.

எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ,  அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.

சயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.

'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.

ஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.

முதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.

சின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட்டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..

அன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.

அவன்
பிளஸ் + பிளஸ் = பிளஸ்
மைனஸ் + மைனஸ் = மைனஸ்
மைனஸ் x மைனஸ் = பிளஸ்
“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.

பொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும்  நடந்து கொண்டா.

ஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன? பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ரீச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா? கொப்பியைத் தூக்கி எறிவாவா?` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.

என்னை Homework செய்தாயா? கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.

சந்திரவதனா
17.09.2009

Sunday, September 13, 2009

மடமையைக் கொளுத்துவோம்!

- சந்திரா ரவீந்திரன்

வீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.

"இது என்ன பேப்பேஸ்?"

"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ"
அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.

நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.

"எங்கை.... பயணம்?"
வழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்"
கூறி முடிக்கமுன்,

"கூட்டமோ? யாழ்ப்பாணத்திலையோ? அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி"
மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.

"ஏன் மாமி? யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப் போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ?"

"சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப் போறனி எண்டு நல்லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி! குமர்ப்பிள்ளை... தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசியமோ, எண்டுதான் கேக்க வந்தனான். பரவாயில்லை. கேட்டது என் தப்பு. நீ போயிட்டுவாம்மா"
மாமியின் கிண்டல் பேச்சு ஆற்றாமையை மேலும் வளர்த்தது.

"அது... ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி. ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா."
நான் நறுக்கென்று கூறினேன்.

"இலக்கியம். பெரிய இலக்கியம். எங்களுக்குத் தெரியாத இலக்கியம்!... காலம் கெட்டுப் போச்சடி"
மாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.

"சரியா...ன லூஸ் மாமி!" எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

சிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"பாரடி! அந்தக் குமரியளை! யாரோடை கதைக்கிறது, எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல்... வாசலுக்கை...! காலம் கெட்டுப் போச்சடி..."

நான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் பெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினாள்.

அவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என்னவோ செய்திருந்தது. அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அந்தப் பெண்களுக்குத்தான்! இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது" எண்டு சண்டைக்கு வருகிறார்களே! மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

நான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் அருகில் சென்று ஏதோ சொல்ல, "ஸ்டுப்பிட்... ராஸ்கல்" என்று திட்டிக் கொட்டி விட்டு அவள் நடந்தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"யாழ்ப்பாணத்துக்குப் போறேன் அங்கிள்"

'எதுக்கு?' என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றார்.

'அப்பப்பா!' பார்வைகளைப் பர்த்தால் திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போலிருந்தது.

´என்ன மனிதர்கள் இவர்கள்? இந்த வீதியாலை எத்தனை ஆண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக்கும் ஆளாக வேண்டுமோ? இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ?'

என் மனம் என்னுள் அல்லாடியது.

நான் பஸ் ஸ்ராண்டை அடைந்த பொழுது, யாழ்ப்பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,

"ஹலோ" என்றார். திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே,

"ஆ... ஹலோ" என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.

"எங்கை... வெளியீட்டு விழாவுக்கோ?" நான் கேட்டதும்,

"ஓமோம், நீங்களும அங்கைதானே?" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் ´ஆம்` என்று தலையாட்டினேன்.

"இன்விற்ரேசன் வந்ததோ... அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ?"

"இன்விற்ரேசன் காட் வந்தது" நான் கூறிவிட்டு "விழாவிலை நீங்களும் பேசுவீங்களா?" - அவருடைய அருமையான மேடைப்பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.

'ம்... பேசச் சொல்லிக் கேட்டால் பேசுவன்.'

'ஆயத்தப்படுத்தாமல்... எப்பிடி உங்களாலை சட்டென்று பேசமுடியுது?'

அவர் மெதுவாகச் சிரித்து விட்டு என்னைப் பார்த்தார்.

"நீங்கள்... ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறிங்கள். பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ்சிடுது இல்லையா?... அது மாதிரித்தான் இதுவும். ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்."

"எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பலருக்கு மத்தியில பேச வராமல் மறைஞ்சு போயிடும்" நான் ஏக்கத்துடன் கூறினேன்.

"சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னால பேசுகிற போது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம்! அந்தப் பயம் இருக்கக் கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணுமெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையிலை பேசி முடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பேசுகிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒரு பயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாராமாக்கக் கூடாது. அதைச் சிம்பிளாக நினைக்க வேணும்." அவர் ஒரு ஆசிரியர் போல் புத்திமதி கூறினார்.

எனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

"சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்."

"ஐயையோ, எவ்வளவு பெரிய ஆட்களுக்கு முன்னால.. நான்... நான்..." நான் தயங்க,

"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, இன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை! நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ." அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.

"சரி, இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்." கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீங்கள்?" நான் புரியாமல் கேட்டேன்.

"இல்லை, என்ரை மனுசி சொல்லுவாள் ´நீங்கள் ஒரு ரீச்சரா இல்லா விட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்!` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா?" அவர் கூறியதும் சிரிப்பு வந்தது.

நான் சிரித்து விட்டுத் திரும்பிய பொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. ´யார் அது?` உற்றுப் பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்பவோ ஒருநாள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.

´ஏன் இப்படி முறைக்கிறான்?´ எனக்குப் புரியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.

பஸ், யாழ்ப்பாணத்தை அடைந்த பதினைந்து நிமிடங்களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்டபத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம்பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சச்சைக்குரிய விடயங்கள் நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் போழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணீரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த்தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளி வீசினார். என் அவதானம், பிசகாமல் அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது! அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய போதும் என் வியப்பு மாறாமலே இருந்தது.

இறுதியாக, "விரும்பியவர்கள் பேசலாம்" என்று தலைவர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினார். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தினார். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கி விட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டியது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலிதாகச் சிரித்தார்.

விழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,

"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்தான் இருந்தது" அவர் புன்னகையுடன் கூறி விட்டுத் தனக்கு அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பஸ் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டு வாசலில் அண்ணா நின்றிருந்தார். அவர் முகம் அசாதரணமாக இருந்தது.

"இப்ப... என்ன நேரம்?"
அவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன்.

"ஆ... ஆறரை"
அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத்தில் நாக்குளறியது.

"விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது?"
குரலில் அதே கடுமை.

"ஐந்தே காலுக்கு"
நான் உள்ளே போக எத்தனித்தேன்.

"நில்லடி, போகும்போது தனியாத்தான் போனியா?"
குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.

"தனியாத்தான் போனனான்..."
புரியாமல் விழித்தேன்.

"பஸ்சுக்குள்ளை... பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தவன் ஆரடி?"

"அண்ணா, அவர்... அவர்... எழுத்தாளர் சதுரா. எதிர்பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்."

´பளார்` என்ற ஓசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலை தடுமாறினேன்! கன்னம் ´பக பக` வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதிலாக கோபம் பீறியது!

"செய்யிறதை நியாயத்தோடை செய்யுங்கோ"
நான் கத்தினேன்.

"எனக்கு... நீ நியாயம் சொல்லுறியா?"
மீண்டும் ´பளார்` என்ற ஓசையுடன் கன்னம் அதிர்ந்தது! இப்போ ஆற்றாமையில், வலியில் அழுகை வந்தது.

"எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி... அப்பிடி யென்ன கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண்டும் போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத்துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக்கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.

"மிக மிக எளியவன்" என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.

"என்னடி கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் வெடித்தார்.

"ம்... என்ன... கதைச்சோமோ? ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்" சட்டென்று ஆடிப்போன அவர் விழி பிதுங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.

"என்ன துணிச்சலடி உனக்கு...?"
அவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக் கொண்டேன்.

... "யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவிதமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை நாயாய் அடிக்கிறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை? உங்களுக்கு உங்கட தங்கச்சியைப் பற்றித் தெரியேல்லையே? என்னைப் பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே? என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே? இப்ப நான், பெண்ணாய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண்டும் வேதனைப்படுறன்"

நான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.

இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக் கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத் தடவி விட்டேன். மனம் இலேசாகிக் கொண்டு வந்தது.

§§§§§

மாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசையில் வைத்து விட்டு, "சுஜா, கதை நல்லாயிருக்கு, ஆனால் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கிறியே?" என்றார்.

"ஏன் மாமா? பெயர் நல்லாயில்லையா? அப்ப... வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு." நான் கூறியதும் அவர் சிரித்தார்.

"அது சரி, இப்ப எங்கேயோ போறாய் போல கிடக்குது" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.

"யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா... அதுதான்..." நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

"சுஜா, நீ இப்பிடி இலக்கியக் கூட்டம்... இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக்கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ... வயசுக்கு வந்த பிள்ளை! ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்." மாமா போய்விட்டார்.

நான் சிலையாக நின்றேன்.

சந்திரா ரவீந்திரன்
1986


ஈழநாடு - 1986

Friday, September 11, 2009

நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்


காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில்
'நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்'

காலம்: 07-11-2009
சனிக்கிழமை
பி.ப. 3.00 மணி.

இடம்:
Trinity Centre.
East Avenue,
Eastham.
London,
E12 6SG.
Eastham tube station இற்கு அருகாமை)

* சிறப்புரைகள்
* நூல் அறிமுக உரைகள்
* ஈழத்து நூல்களின் கண்காட்சி

-அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-பிரவேசம் இலவசம்.

தொடர்புகட்கு:
முல்லை அமுதன்
34.RED RIFFE ROAD
PLAISTOW
LONDON
E13 0JX
Tel: 0208 5867783
e.mail: mullaiamuthan_03@hotmail.co.uk

Wednesday, September 09, 2009

தொப்புள்கொடி (நாவல்)

மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite