Friday, July 21, 2017

ஊர்ச்சனம் என்ன சொல்லும்

அவள் முடிவு அவளதாக இல்லாமல் அவர்களானதாக இருந்ததில் அவளுக்கு வலி அதிகமானதாகவே இருந்தது. பெண்விடுதலைக்காய் மேடையில் பேசும் அவளது அம்மாவும் அவள் விடயத்தில் ஊர்ச்சனம் என்ன சொல்லும் என்றுதான் பார்த்தாள். அவள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படப் போகிறாள் என்பதைப் பற்றி அக்கறைப் படவேயில்லை. ஊரெல்லாம் சொல்லிச் செய்த கல்யாணம் அவர்கள் பார்த்துச் சிரிக்கும் படியாக ஆகி விடக் கூடாதே எனபதில்தான் மிகுந்த கவனமாக இருந்தாள்.

சந்திரவதனா
21.07.2017

உரையாடல்

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு உரையாடலில் கலந்து கொண்டேன். நான் பேசவேயில்லை. கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தனை சுவாரஷ்யமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைத்தொழில் சம்பந்தமான விடயங்களையும், நாங்கள் மறந்து போய்விட்டவைகளையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

அதிலே ஒருவர் விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவியில் வரும் சலவைமுறை பற்றியும் குறிப்பிட்டு, பாராட்டினார்.

சில இடையூறுகளினால் தொடராமல் விடப்பட்ட பலவற்றில் வெள்ளாவியும் ஒன்றாய் நின்று விட்டது. சின்னச்சின்னதாக அவ்வப்போது எதையாவது வாசித்தாலும் பெரிய வாசிப்புகளில் சிலமாதங்களாகவே ஈடுபட முடியாதிருந்தது. இப்போது மீண்டும் வெள்ளாவியுடன் ஐக்கியமாகிறேன்.

சந்திரவதனா
20.07.2017

கவிதையும் வாழ்வும்

மழை அழகாய் இருந்தது. சுடும் வெயிலும் கூட அழகாய்தான் இருந்தது. மலர்களும் அழகழகாய் இருந்தன. விழும் இலைகளும் கூட அழகாய்தான் இருந்தன.

கவிதைகள் அழகாய் இருந்தன. வாழ்க்கை மட்டும் கவிதை போல அழகாய் இருக்கவில்லை.

அவள் எழுதிய

நான்
யார் யாருடன் பேசலாம்
யார் யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவனேதான் தீர்மானிக்கிறான்

தான்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறேன் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனைகளைச் சற்றும் தளர்த்தாமல்...


என்ற கவிதை அழகென்றும், அருமை என்றும் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்களும், விருப்பக் குறிகளும்.

நிலத்தில் சிதறியிருந்த சோற்றுப் பருக்கைகளையும், சுவரில் ஒட்டியிருந்த மீன்குழம்பின் கறைகளையும் - சமைப்பதற்கு எடுத்த நேரத்தையும் விட, அதிகம் நேரம் எடுத்து துடைத்த அவளது மனதின் வலி பற்றி கவிதை படித்த யாருக்கும் தெரிந்திருக்காது.

எல்லாம் அந்தத் தொலைபேசி அழைப்பால் வந்தது. பார்த்துப் பார்த்து அவனும் இவன் சாப்பிடும் நேரந்தான் அழைக்க வேண்டுமா? அழைத்தவன் அவளது தம்பி வீட்டில் இல்லை என்று அவள் சொன்னதும் பேசாமல் அழைப்பைத் துண்டித்திருக்கலாம்.

„சுகமா இருக்கிறீங்களோ அக்கா?“ என்று சும்மா கேட்டு வைத்தான். „ஓம்“ என்று சொல்லி விட்டு இவளும் இணைப்பைத் துண்டித்திருக்கலாம். சனி எங்கெல்லாம் குந்தியிருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் அவளுக்குத் தெரிவதில்லை. „நீங்களும் சுகமா இருக்கிறீங்கள்தானே..?“ அவள் கேட்டு முடித்தாளோ, இல்லையோ அவளுக்கே இன்னும் தெரியவில்லை. `ணொங்´ என்ற சத்தமும், தொடர்ந்து படாரென்று உடையும் சத்தமும். நெஞ்சு ஒரு தரம் திடுக்கிட்டது. திரும்பினாள்.

நிலமெல்லாம் சோறு. சுவரில் மீன்குழம்பு வழிந்து கொண்டிருந்தது. மீன் துண்டுகள் பிய்ந்து சிதைந்து ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூடவே கீரை, கத்தரிக்காய் வெள்ளைக்கறி... என்று பார்க்கச் சகிக்கவில்லை. அவளால் உடனடியாக பதறலில் இருந்து மீளமுடியவில்லை.

தம்பியின் நண்பனைச் சுகம் விசாரித்ததால் அவனது வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகளில் அவள் ஒரு விலைமாதுவையும் விடக் கேவலமாக உருண்டாள், பிரண்டாள். தாங்க முடியாமல் கூசினாள். கூனிக் குறுகினாள்.

அன்று அவள் சாப்பிடவில்லை. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. மினைக்கெட்டுச் சமைச்சதை கூட்டி அள்ளிக் கொட்டும் போதுதான் மனசுதாங்காமல் ஒரு தடவை அழுது தீர்த்தாள்.

சந்திரவதனா
10.08.2016

இது ரோஜாக்கள் தேசம்


வழி நெடுகிலும் பல பல வர்ணங்களில், பலவகையான ரோஜாக்கள். நான் தினமும் போகும் பாதையில் இச்செடி.

இதைப் பராமரிப்பாரும் இல்லை. பத்தியம் பார்ப்பாரும் இல்லை. மழை, வெயில், பனி, குளிர், காற்று... என்று இயற்கையோடு சங்கமித்திருக்கும் இச்செடியை சும்மா என்னால் தாண்டி விட முடிவதில்லை.

சிவப்பு நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். பார்த்துக் கொண்டிருந்தாலே மனதுள் உவகை ஊறும். இந்த சிவப்பு ரோஜாக்களின் அழகை நின்று நிதானித்து பருகிச் செல்கையில் மனம் பட்டாம்பூச்சியாய் மிதக்கும்.

வாய் இருந்தால் வங்காளம் போகலாம்

ஒரு கோடை விடுமுறைக்கு எனது பேத்திகள் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.

அன்று நாங்கள் ஒரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். எங்களுடன் இன்னும் சில உறவினர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

அன்றும் வழமை போல இடையில் இறங்கி கார்களுக்கு பெற்றோல் அடிக்க வேண்டிய தேவையிருந்தது. அதையும் விடப் பெரியதேவை Toilet. இது ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தேவைப்படும் மிக அவசியமானதொன்று.

ஆரம்ப காலங்களில் நான் இப்படி எங்கு போனாலும் Toilet தேடுவதால் எனது கணவரின் முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். „வெளிக்கிடும் போது வீட்டில் ஒரு தடவை போய் விட்டு வந்திருக்கலாம்தானே“ என்பார். அல்லது „தண்ணீரைக் குறைவாகக் குடித்து விட்டு வந்திருக்கலாம்“ என்பார். தொடர்ந்த காலங்களில் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வரும் அத்தனை பெண்களும் என்னை விட அதிகமாக Toilet தேடியதால் இப்போதெல்லாம் கணவர் எங்கு போனாலும் தானாகவே „அந்தா Toilet இருக்கிறது. போவதானால் போய் விட்டு வா“ என்பார்.

ஜெர்மனியில் அது ஒரு பெரும் வசதி. எங்கு போனாலும் கண்டிப்பாக ஒரு மலசலகூடம் இருக்கும். மலசலகூடங்கள் இல்லாத அறைகளோ, விளையாட்டு மைதானங்களோ, பூங்காக்களோ... எதுவுமே… ஜெர்மனியில் இல்லையென்றே சொல்லலாம். அது விடயத்தில் அவ்வளவு அக்கறையுடன் ஜெர்மனி செயற்படுகிறது.

ஆனாலும் என்ன! ஒரு பிரச்சனை. அதிவேக வீதிகளில் உள்ள பெற்றோல் நிலையங்களிலும், புகையிரதநிலையங்களிலும், இன்னும் சில பொது வெளிகளிலும் உள்ள மலசலகூடங்களின் உள்ளே செல்வதற்கு 50சதம், 80சதம், ஒரு யூரோ என்று அறவிடுவார்கள். அந்தக் காசைப் போட்டால்தான் உள்ளே போவதற்கான கதவு அல்லது தடுப்பு திறக்கும். அவர்கள் அப்படி அறவிடுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அந்தக் காசை அந்த மலசலகூடங்களைத் துப்பரவாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.

அன்று நாங்கள் போன இடத்தில் 80சதம் போட வேண்டும். நாங்கள் எல்லோரும் தாள்காசுகளைக் கொடுத்து, சில்லறைகளாக மாற்றி, நீண்ட வரிசையில் காத்து நின்று காசைப் போட்டு, உள்ளே போய்க் கொண்டிருந்தோம்.

எனது பேத்தி சிந்துவின் முறை வந்தது. அப்போது அவளுக்கு 12 வய தாக இருந்தது. அவளுக்குக் காசை மெசினுக்குள் போட மனம் வரவில்லை.

அங்கு பொறுப்பாக நின்ற பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் „கட்டாயம் காசு போட வேண்டுமா ?“ என்று

அந்தப் பெண் சொன்னாள் „போட்டால்தான் நீ உள்ளே போகலாம்“ என்று

சிந்து விடவில்லை. „நான் பிரித்தானியாவில் இருந்து எனது விடுமுறையை அனுபவிக்க உங்கள் ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன். என்ன..! உங்கள் நாட்டில் Toilet க்குப் போவதற்கும் காசு வசூலிப்பீர்களோ?“ என்று கேட்டாள்.

அந்தப்பெண்ணுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது. உடனே தனது திறப்பால் சலூன் கதவு போல இருந்த அந்த ஆடும் சிறிய கதவை திறந்து „நீ காசு தரவேண்டாம். போ“ என்று விட்டு விட்டாள். சிந்து திரும்பி வரும் போது 'உனது விடுமுறையை மிகுந்த சந்தோசமாக அனுபவி" என்று மலர்ந்த முகத்துடன் வாழ்த்தியும் அனுப்பி விட்டாள்.

இதுதான் „வாய் இருந்தால் வங்காளம் போகலாம்“ என்பதோ?

சந்திரவதனா
20.06.2017

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite