1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.
அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.
அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.
அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.
இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.
பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.
இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?
உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.
அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.
இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.
எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.
உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)
மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.
ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.
அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்.
Wednesday, December 22, 2004
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
►
2011
(6)
- ► November 2011 (1)
- ► April 2011 (1)
- ► March 2011 (1)
-
►
2010
(10)
- ► November 2010 (1)
- ► October 2010 (2)
- ► March 2010 (1)
- ► February 2010 (3)
-
►
2009
(27)
- ► December 2009 (3)
- ► November 2009 (4)
- ► October 2009 (1)
- ► September 2009 (5)
- ► February 2009 (3)
- ► January 2009 (2)
-
►
2008
(38)
- ► December 2008 (2)
- ► November 2008 (5)
- ► January 2008 (1)
-
►
2007
(47)
- ► December 2007 (1)
- ► September 2007 (8)
- ► August 2007 (1)
-
►
2006
(138)
- ► October 2006 (15)
- ► September 2006 (25)
- ► August 2006 (22)
- ► April 2006 (12)
- ► March 2006 (9)
-
►
2005
(172)
- ► December 2005 (12)
- ► November 2005 (25)
- ► April 2005 (13)
- ► March 2005 (15)
- ► February 2005 (37)
-
▼
2004
(172)
- ▼ December 2004 (7)
- ► November 2004 (10)
- ► October 2004 (11)
- ► September 2004 (13)
- ► August 2004 (24)
- ► April 2004 (23)
- ► March 2004 (11)
- ► February 2004 (7)
-
►
2003
(36)
- ► November 2003 (11)
- ► September 2003 (8)

