Thursday, August 31, 2006

என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்று


மீள்பதிவு

மன்னர் குலக் கன்னியரும் கண் கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ
Prinzessin Diana 1.7.1961-31.8.1997


என்னைப் பாதித்த மரணங்களில் இளவரசி டயானாவினது மரணமும் ஒன்று. 1969 இல் என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் இறந்த போது நான் மிகவும் கவலையுற்றேன். வானொலியே தஞ்சமென அதனருகிலேயே நின்று அவரது இறுதி ஊர்வல விவரணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். "புற்றுநோய் ஏன் வருகிறது?" என்று மனதுக்குள் மிகவும் ஆதங்கப் பட்டேன். "அவர் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லையா?" என அம்மாவிடம் பலமுறை கேட்டேன்.

இப்போது, `எனக்கு உருத்து உறவில்லாத ஒருவரின் அந்த இறப்பு என்னை ஏன் அத்தனை தூரம் பாதித்தது´ என சிந்தித்துப் பார்க்கிறேன். எனது அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டிலே கதைப்பதுவும், அவரது நல்ல செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள் கதைகள்.. போன்றவற்றை எமது காது பட அம்மா வாசித்துக் காட்டுவதும் அவர் மீது ஒரு வித மரியாதையையும் பிரியத்தையும் எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த அவர் மீதான மரியாதையும் பிரியமும்தான் அந்த இறப்பு என்னைப் பாதிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்க வேண்டும்.

இதே போலத்தான் அல்லது இதைவிட அதிகமாக இளவரசி டயானாவின் மரணமும் என்னைப் பாதித்தது. இளவரசி டயானா பற்றிய கட்டுரைகள், டயானாவின் செயற்பாடுகள் என்று நான் இளவரசி டயானா வாழ்ந்த காலத்திலேயே ஒன்று விடாது வாசித்து வந்தேன். இளவரசி டயானா இளவரசர் சார்ள்ஸை மணந்து கொண்ட போது அந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது இளவரசி டயானாவை ஒரு அழகு தேவதை என்றே நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அந்த அழகு தேவதையை விட்டு சார்ள்ஸ் கமிலாவுடன் உறவு கொள்வதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தேன். அரச குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலனங்களும், சச்சரவுகளும் `ஏன் இளவரசி டயானாவை இப்படிக் கஸ்டப் படுத்துகிறார்கள்´ என என்னை ஆத்திரப் பட வைத்தன.

வெளியூர் சென்று வரும் இளவரசி டயானா தனது குழந்தைகளை மீண்டும் சந்திக்கும் போது, ஓடிச் சென்று தழுவுவதையும், மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளையும் பார்க்கும் போது, அவரது மனதில் அன்பையே கண்டேன்.

தொடர்ந்த காலங்களில் டயானா சார்ள்ஸ்ஸின் விவாகரத்து, டயானா டோடியின் உறவு... என்று கடந்து இற்றைக்கு 9 வருடங்களின் முன் அது மரணத்தில் வந்து முடிந்த போது உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றதை மறுப்பதற்கில்லை. எத்தனையோ வீடுகளில் அன்று சமையலே நடக்கவில்லையாம். என் வீட்டில் எல்லாமே வழமை போல் அன்று நடந்திருந்தாலும் அந்த மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது என்பது உண்மை.

Goodbye England's rose
may you ever grow in our hearts
You were the grace that placed itself
where lives were torn apart
You called out to our country,
and you whispered to those in pain.
Now you belong to heaven
and the stars spell out your name.

And it seems to me you lived your life
like a candle in the wind:
never fading with the sunset
when the rain set in.
And your footsteps will always fall here,
along England's greenest hills;
your candle's burned out long before
your legend ever will.

Loveliness we've lost;
these empty days without your smile.
This torch we'll always carry
for our nation's golden child.
And even though we try
the truth brings us to tears;
all our words cannot express
the joy you brought us through the years.

Goodbye England's rose,
from a country lost without your soul,
who'll miss the wings of your compassion
more than you will
ever know.

Bernie Taupin and Elton John

http://vippenn.blogspot.com/2004/09/diana.html

Friday, August 25, 2006

பிற்சா (Pizza)

அது 1986ம் ஆண்டு மே மாதம் 12ந் திகதி. நானும் எனது பிள்ளைகளும் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்து மூன்றாவது நாள். 10ந் திகதி ப்ராங்போர்ட் (Frankfurt) இல் வந்திறங்கிய உடனேயே அதிசயப் பூச்சிகளைப் பார்ப்பது போல எம்மைப் பார்த்து, ஸ்ரேற்மென்ற் (Statement) எடுத்து, புகைப்படம் எடுத்து சில மணிகளின் பின் விமான நிலையத்தின் ஒரு அறையில் விட்டார்கள். அந்த அறையில் எட்டு இரண்டடுக்குக் கட்டில்கள் இருந்தன. அனேகமான கட்டில்களில் போர்த்திய படி வேற்று நாட்டவர்கள் படுத்திருந்தார்கள்.

எனக்கும் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒரு கட்டில் தரப்பட்டு அரைமணியில் சாப்பாடு வந்தது. சாப்பாடு எதுவும் எனக்கோ பிள்ளைகளுக்கோ பிடிக்கவில்லை. ஆளுக்கொரு அப்பிளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு விட்டு இருந்தோம்.

அடுத்தநாள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ள அகதிகள் முகாமொன்றில் கொண்டு போய் விட்டார்கள். அங்கும் பிடித்தமான சாப்பாடெதுவும் கிடைக்கவில்லை. தஞ்சம் கோரி வந்த எங்களுக்கு மீண்டும் ஒற்றை அப்பிள்தான் தஞ்சம். ஊரில் சுண்டக் காய்ச்சிய பாலையே குடிக்கப் பஞ்சிப்படும் என் பிள்ளைகள் அவர்கள் தந்த பச்சைப் பாலைத் தொடக் கூட மறுத்து விட்டார்கள்.

இதற்கிடையில் நான் தொலைபேசியில் என் கணவருக்கு நாம் வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவிக்க, அவர் ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து களவாக இரண்டாம் நாள் இரவு எம்மிடம் வந்து சேர்ந்தார்.

ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து அவர் வேறெங்கும் செல்ல அனுமதியில்லை. பிடிபட்டால், உடனடியாகப் புகைவண்டியில் ஏற்றி ஸ்வெபிஸ்ஹால் நகருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுமட்டுமல்ல தண்டனையாக 400DM கட்டவும் சொல்வார்கள். 350 DM சமூகநல உதவிப் பணத்துடன் வாழும் எனது கணவரின் அப்போதைய நிலை அது.

அடுத்தநாள் காலை, - மூன்றாம் நாள் - எங்களுக்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார் என்பதற்கான தற்காலிக அகதி அடையாள அட்டை தந்து, இன்னொரு அகதி முகாமுக்கு அனுப்புவதற்காக பஸ்சில் ஏற்றினார்கள். கூடவே இன்னும் சில தமிழ்ப்பெண்கள். எனது கணவரும் அவரைப் போலவே களவாக வந்த இன்னொரு கணவரும் செய்வதறியாது நிற்க, எங்களை ஸ்வல்பாஹ்(Schwalbach) அகதி முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். பஸ்சில் சில மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.

அந்த முகாமில் ஓரளவு தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போல மூன்று பிள்ளைகளுடன் வந்தவர்கள் யாரும் அங்கில்லை. களைத்துப் போன எனதும், பிள்ளைகளதும் முகங்கள் அவர்களுக்கு எங்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிட்ட வந்து அன்பாகவும் உதவும் நோக்குடனும் கதைத்தார்கள். எம்மைச் சாப்பிட வரும் படி அழைத்துச் சென்று ஒரு பெரிய ஹோலில் விட்டார்கள். அது கன்ரீனுடன் சேர்ந்த ஹோல். ஹோல் நிறைய பலவித மொழி பேசும் பல விதமான மக்கள் கசா முசா என்று கதைத்தபடி இருந்தார்கள்.

நானும் பிள்ளைகளும் இன்றைக்காவது சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்க, அந்தத் தமிழர்களே எமக்கான சாப்பாட்டை எடுத்து வந்து தந்து விட்டுப் போனார்கள். ஆவலுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்த எனது மூத்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டதும் ஏமாற்றத்தில் துவண்டு போனது. வந்த சாப்பாடு நாம் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்திக்கும் பிற்சா(Pizza). சிப்பி சோகியெல்லாம் அதன் மேல் போட்டிருந்தார்கள்.

"இதையெப்பிடிச் சாப்பிடுறது..? " கோபம், ஏமாற்றம், அழுகை எல்லாம் கலந்த கேள்வி அது.

ஏற்கெனவே, எனது கணவர் எப்படி இங்கே வந்து சேரப் போகின்றார்? என்ற யோசனையும், கவலையும் எனக்குள். அதை மிஞ்சிய வயிற்றுப் புகைச்சல். என் மகனும் இப்படிக் கேட்க எனக்கு உடனேயே எங்கள் மேல் தாங்க முடியாத பச்சாத்தாபம் ஏற்பட்டது. `திரும்பிப் போய் விடுவோம்´ என்ற அங்கலாய்ப்பு வந்தது. போய் `அம்மாவின் கையால் அம்மாவின் சமையலைச் சாப்பிடோணும்´ என்ற அவா வந்தது. எல்லாமாய் அழுகையே வந்தது. `மூன்று நாள் யேர்மனிய வாழ்க்கை போதும்´ என நினைத்துக் கொண்டேன்.

அந்த நேரம் எனது மகன் என்ன செய்தான் தெரியுமா..? அவர்கள் மெனக்கெட்டு பக்குவமாக தயாரித்த பிற்சாவின் மேலே இருந்த எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கோப்பைக்குள் வழித்துக் கொட்டி விட்டு கீழேயுள்ள ரொட்டித்துண்டைச் சாப்பிடத் தொடங்கினான்.

`அட இவனுக்கு எப்படி இப்படியொரு மூளை வந்தது!´ வியந்தேன். மற்றைய மூன்று பிற்சாக்களிலும் இருந்த எல்லாவற்றையும் என் கண்ணீரோடு சேர்த்து வழித்துக் கொட்டி விட்டு ஒன்றுமில்லாத வெறும் ரொட்டியை மற்றப் பிள்ளைகளுக்கும் கொடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.

இப்போதும் நானும் பிள்ளைகளும் சேர்ந்து சாப்பிடுகையில் இந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வோம்.

சந்திரவதனா
யேர்மனி

Thursday, August 24, 2006

தாயகம் நோக்கி - 6


கவனம் மிதிவெடிகள் - உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு
ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்.



காகங்களின் கரையல்களும், வானொலிகளின் இரைச்சல்களும்.... விடியலின் வரவைச் சொல்ல மரக்கட்டிலிலிருந்து எழுந்து கொண்டேன். ஊருக்குப் போகும் நினைவுகள் ஒரு புறம் பதட்டத்தையும் மறு புறம் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன.

நேற்று ஐனனியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த துணிவுடன் யாழ் செல்வதற்கான அனுமதியைப் பெற நிச்சுதனுடன் நந்தவனம் பயணமானேன்.

"நிச்சுதன் மெதுவாய்..."

"பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்."

ஏ-ஒன்பது பாதையின் குழிகளில் மோட்டார் சைக்கிளை இறக்கி விடாமல் அவன் லாவகமாக ஓட்டிச் சென்ற போதும், இடையிடையே மோட்டார் சைக்கிள் துள்ளத்தான் செய்தது. `பறந்து போய் விழுந்து விடுவேன்´ போன்றதொரு உணர்வு எனக்கு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்தில் கிராவல் மண் புகை போல எழுந்து என் மேல் அப்பியது. இடையிடையே எதிர் வரும் வாகனத்துடன் மோதி விடாதிருக்க திருத்தப் படாத பாதையின் கரையில் ஒதுங்குகையில் மோட்டார் சைக்கிள் கவிண்டு விடுமோ என்ற பயம் கூட வந்தது.

நிச்சுதனோ "பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்." என்று சொல்லிக் கொண்டு பயணித்து, என்னை நந்தவனத்தில் கொண்டு சேர்த்தான்.

நந்தவனத்தின் முன்றலில் மாங்காய்களும் பலாப்பழங்களும் மரங்களில் தொங்கின. விலாட் மாங்காயை எட்டிப் பிடுங்கலாம் போலிருந்தது. அங்கு நின்ற இருவரில் ஒருவர் என்னை வரவேற்க, உள்ளே நின்றவர் எனது யேர்மனியப் பாஸ்போர்ட்டை வாங்கி நம்பர் பதிந்து விட்டு, பெயரெழுதும் போது எனது பெயரை.. சந்திரவதனா... என்று இழுத்தவர் கணவரின் பெயரையும் வாசித்து விட்டு "நீங்கள்தானே அக்கா மொறிஸின்ரை அந்த ஆர்ட்டிக்கலை எழுதினனிங்கள்..? நல்லாயிருந்தது." என்றார்.

"எது..?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஈழமுரசிலை வந்தது." என்றார்.

"ஈழமுரசு இங்கை வருமோ..? " மீண்டும் ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஓம் கஸ்ரோ அண்ணையிட்டை வாறது" என்றார்.

ஐரோப்பியாவில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழமுரசை வன்னியில் உள்ளவர்கள் வாசித்தது மட்டுமல்லாமல், முன் பின் தெரியாத ஒருவர், என் பெயரைப் பார்த்ததும் அதை நினைவில் கொண்டு வந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் தந்தது.

"நீங்கள்..?" அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.

"இளங்கோ" என்றார்.

மற்றவர் "அறிவு" என்றார்

எல்லாம் நிரப்பி என்னிடம் கையெழுத்தை வாங்கிய பின் "சரி அக்கா நீங்கள் வீட்டை போங்கோ. நான் சைன் வேண்டிக் கொண்டு வந்து தாறன்." என்றார்.

நான் செய்ய வேண்டிய வேலையை என்னை அலைக்கழிய விடாமல், இளங்கோ தானே செய்ய முன்வந்த போது மனசு நன்றி சொல்லியது.

" நான் வெண்புறாவில்தான் நிற்கிறன்." என்றேன்.

"அப்ப நல்லதாப் போச்சு. அரைமணித்தியாலத்துக்கை அங்கையே கொணர்ந்து தாறன் அக்கா." என்றார்.

சந்தோசமான உணர்வுகள் என்னை நிறைத்திருக்க இளங்கோவிடமும், அறிவிடமும் இருந்து விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த நிச்சுதனுடன் மீண்டும் வெண்புறா சென்ற அரைமணிக்குள் இளங்கோ பாஸைக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்றார்.

வெண்புறா உறவுகள் எல்லோரும் வாசலில் வந்து என்னை வழியனுப்பி வைக்க மதிய வெயில் உச்சியில் சுடும்போது ஊர்க் கனவுகளைச் சுமந்தபடி வெண்புறாவிலிருந்து முகமாலை நோக்கி நிச்சுதனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். "அன்ரி...! திங்கட்கிழமை வற்றாப்பளைப் பொங்கலுக்குப் போறது ஞாபகந்தானே. அதுக்குள்ளை வந்துடுங்கோ" என்ற சுந்தரத்தின் குரல் பின்னால் ஒலித்தது. நீங்கள் வராட்டில் நாங்களும் போகமாட்டம் இன்னொரு குரல் தொடர்ந்தது.

கரடிப்போக்குச் சந்தி, வெள்ளவாய்க்கால் மதவில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது நான் வீழ்கிறேன் என்றுதான் நினைத்தேன். எப்படி முகமாலை வரை போய்ச் சேரப் போகிறேன் என்ற பயத்தில், "எவ்வளவு நேரம் பிடிக்கும்.. நிச்சுதன்..?" என்று கேட்டேன்.

"பயப்படுறிங்கள் போலை இருக்கு அன்ரி. நான் ஓடுற வேகத்தைப் பொறுத்து ஒண்டு ஒண்டரை மணித்தியாலத்துக்கை போயிடலாம். நான் இருபதிலை இருந்து முப்பதுக்குள்ளைதான் ஓடுறன். பயப்படாதைங்கோ"என்றான்.

வீதியோரங்களில் ஆங்காங்கு ஓரிரு கடைகள் திறக்கப் பட்டு வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் மீதி இடங்கள் வீடுகளோ, வாசல்களோ இன்றி பெரு வெளிகளாக வெறிச்சுப் போயிருந்தன.



"இதுதான் அன்ரி நாங்கள் பிடிச்ச இராணுவத்தின்ரை வாகனம்"

"இதிலைதான் அன்ரி பெரிய கிபீர் விழுந்தது"

"இது இராணுவம் ஷோ காட்டுறதுக்காண்டி எங்கடை வாகனத்தைக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டிருக்கிறாங்கள்."



என்று நிச்சுதன் ஆனையிறவுச் சண்டையை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

மோட்டார் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்ததால் காற்றின் எதிர் மோதலில் ஆரம்பத்தில் வெயிலின் அகோரம் அவ்வளவாகத் தெரியவில்லை. போகப் போக பாதைகளின் இருமருங்கிலும் இருந்த காட்டு மரங்களும் செடிகளும் எரிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் பயணம் மிகவும் அகோரமாக அனல் கக்கியது.

பரந்தன் பளை பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது தூரத்தில் வரும் சைக்கிளைப் பார்த்ததும் "அன்ரி, அதிலை வாறது எனக்குத் தெரிஞ்ச பெடியன் போலை இருக்கு. யாழ்பாணத்திலை இருந்து வாறான். கனகாலத்துக்குப் பிறகு வாறான். இறங்கிக் கதைச்சிட்டுப் போவம்." என்ற படி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.

நல்லது. என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு இறங்கினேன். இறங்கிய உடனே என் முன்னே நாட்டப் பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் மனம் திக்கென்றது.


கவனம் மிதிவெடிகள்
உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்...
என்ற வாசகங்களில் கால் கூசியது. இறங்கிய வேகத்தில் பாய்ந்து, விழுந்து ஓடி ரோட்டில் நின்றேன்.

நிச்சுதனின் உரையாடலில் சில நிமிடங்கள் கரைந்தன. மீண்டும் மோட்டார் சைக்களில் ஏறிய பின் என் நினைவுகள் என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தையும், வேப்பம்மரத்தையும் எதிர்கொள்ளப் போகும் உறவுகளையும் சுற்றத் தொடங்கி விட்டது.

"என்ன அன்ரி. வெய்யில்லை களைச்சிட்டிங்களோ..? பேசாமல் வாறிங்கள்..?"

"இல்லை நிச்சுதன். ஊர் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தன்.
அதுசரி நீங்கள் உங்கடை ஊருக்குப் போனனிங்களோ? "

"இன்னும் இல்லை அன்ரி. நான் முகமாலை தாண்டேலாது."

மீண்டும் நான் நினைவுகளுக்குள் மூழ்கிய போது, "அன்ரி, நான் இப்ப எழுபதிலை ஓடுறன் தெரியுமோ.? நீங்கள் என்ரை ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுககத் தொடங்கீட்டிங்கள். அதாலைதான் இவ்வளவு கெதியா வந்து சேர்ந்தனாங்கள்."

"கிட்ட வந்திட்டமோ..?"

ஓமன்ரி. இன்னும் இரண்டு நிமிசந்தான்.

ஒருவாறு தமிழீழச் சோதனைச் சாவடியை வந்தடைந்த போது நா வரண்டிருந்தது. எங்காவது இளநீர் வாங்க முடியுமோ என்று பார்த்தேன். மருந்துக்குக் கூட அங்கே இளநீர் தெரியவில்லை.

கிடுகுகளால் வேயப் பட்ட சோதனைச் சாவடிக்குள் நுழைந்து பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டேன். நிச்சுதன் எனது சூட்கேசைத் தூக்கியபடி ஆண்களுக்கான பக்கத்தால் என்னோடு கதைத்த படி வந்து கொண்டிருந்தான்.

அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்ணிடம் பாஸ் காட்டும் போது அவள் நிச்சுதனை அடையாளம் கண்டு கொண்டவளாய் மெல்லிய சிரிப்புடன் என்னைப் போக அனுமதித்தாள்.

"அன்ரி இனி நீங்கள் தனியத்தான் போகோணும். அங்காலை நான் வரேலாது. அதிலை பஸ் எடுத்திங்களெண்டால் முகமாலை வரை கொண்டு போய் விடுவாங்கள்." சொல்லிக் கொண்டே அந்தக் கொட்டில் வரை வந்து என்னை விட்டிட்டுப் போனான்.

இரண்டு தட்டிவான்கள் பட்டிகளில் மாடுகளை அடைப்பது போல மனிதரை ஏற்றிச் சென்றதைப் பார்த்துப் பயந்து எப்படி எனது உடைமைகளுடன் போய்ச் சேருவது என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதில் ஏறும் துணிவு எனக்கு வரவில்லை. சில நிமிடங்களில் நிச்சுதன் மீண்டும் வந்தான்.

"என்ன நிச்சுதன்..?"

"அன்ரி நான் அனுமதி எடுத்திட்டன். உங்களை அங்கை மட்டும் கொண்டு வந்து விட்டிட்டுப் போறன்."

மனசு நன்றி சொன்னது. மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியை அடைய சில நிமிடங்கள்தான் தேவைப் பட்டன.

அவன் என்னை இறக்கிய போது எம்முன்னே இரண்டு மூன்று இராணுவத்தினர் வந்து விட்டனர். தடுப்படியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சில அடிகள் என்னுடன் நடந்தவன்

"நான் போறன் அன்ரி..." என்றான்.

இப்போ எனக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. எங்கும் இராணுவம். நான் தனியாக என் சூட்கேசை இழுத்துக் கொண்டு...

அவர்களின் பார்வைகளிலும், சிரிப்பிலும் ஏளனமா..? நட்பா..? குரோதமா..? எல்லாம் கலந்தா..? புரியவில்லை. எனக்கு மிக அருகில் நின்றார்கள். பயமாகப் பதட்டமாக இருந்தது.

நிச்சுதனின் மோட்டார் சைக்கிள் திறப்பு நிலத்தில் வீழ்ந்து மண்ணுள் புதைந்து விட்டது. சாடையாகத் தேடி விட்டு நிற்க விருப்பம் இல்லாததால் "பரவாயில்லை, மற்றத் திறப்பைப் பாவிக்கிறன்" என்று சொல்லி விட்டுப் வேகமாக மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நன்றி நிச்சுதன்..!"

திரும்பிப் பார்த்து, சிரித்துக் கொண்டு விரைந்தான்.

பெண்களுக்கான சோதனை இடத்தைக் காட்டி என்னை அங்கே போகும் படி சொன்னார்கள். அங்கு தூரத்தில் வரிசையில் நின்ற சில பெண்கள் என் கண்களுக்குள் பட்ட போது பயம் கொஞ்சம் குறைந்தது. ஒரு சூட்கேசை இழுத்துக் கொண்டும், மற்றையதைத் தோளில் கொழுவிக் கொண்டும் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, முதலில் மறைவான பகுதியில் உடைகளுக்குள் உடம்போடு ஏதாவது வைத்திருக்கிறேனா எனச் சோதித்து வெளியில் அனுப்பினார்கள்.

வெளியில் ஐந்தாறு சிங்களப் பெண்கள் வரிசையில் இருந்து அடையாள அட்டை சூட்கேஸ் போன்றவற்றைச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் "அக்கா சூட்கேசைத் திறங்க." தமிழில் கதைத்தார்கள்.

எனது சூட்கேசில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆர்வமாக ஆராய்ந்தார்கள். ஆளுக்காள் மாற்றி மாற்றி விடுப்புப் பார்த்தார்கள். வெளிநாட்டுச் சாமான் என்பதில் ஆசைப் பட்டார்கள். ஒரு சிறிய கீரெக்கை தரமனமின்றி வைத்திருந்தாள் ஒருத்தி. "வேணுமெண்டால் வைச்சிருங்கோ" என்றேன். "வேண்டாம்" என்று தந்து விட்டாள். கமராவைப் பிரட்டி உருட்டிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. "என்ன போட்டோ எடுத்திருக்கிறன்" என்று கேட்டாள்.

ஒருமாதிரி அடையாள அட்டையையும் காட்டி வெளியில் போன போது நிறைய பேரூந்துகள் நின்றன. பருத்தித்துறைக்கான பேரூந்தைத் தேடி ஏறப் போன போது வெளியில் நின்ற கொண்டெக்கடர் என்னிடம் கட்டணமாக 15 ரூபாவைக் கேட்டு வாங்கினார்.

எதிரே தண்ணீர் விற்பது தெரிந்தது. அதனோடு சேர்ந்திருந்த கடையில் பின்னுக்குப் போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இது வரை அடக்கி வைத்த தாகத்தை இப்போது என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் அங்கே `பிளெயின் சோடா´ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பேரூந்திலிருந்து இறங்கிப் போனேன்.

சிங்களச் சிப்பாய் மிகவும் நட்பாகச் சிரித்த படி என்னை வரவேற்றான்.
"சோடா இல்லை" என்றான். வன்னி தாண்டி விட்டேன்தானே. இது யாழ்ப்பாணத் தண்ணீர்தானே குடிப்போம் என நினைத்து தண்ணீராவது தரும்படி கேட்டேன்.

"தண்ணி இல்லை. நெல்லிக்கிரஸ்தான் இருக்கு." தமிழும் சிங்களுமும் கலந்து சொன்னான். தண்ணி வேணுமெண்டால் பைப்பில் குடிக்கச் சொன்னான்.
வேறு வழி தெரியாததால் சரியென்று பத்துரூபாய் கொடுக்க றம்மிலிருந்து தண்ணீரை ஒரு ரம்ளரில் எடுத்து, நெல்லிரசத்தைக் கலந்து தந்தான். அருந்தினேன். றம் தண்ணீர் ஊத்தையாக இருந்திருக்குமோ என்ற நினைப்பில் எனக்கு நெல்லிரசம் இனிக்கவில்லை.

பஸ்ஸில் ஏறிய பின் வெளியில் கண்களைச் சுழல விட்ட போது இராணுவம், மனிதர் என்று முகமாலை சோதனைச் சாவடி சனமாய்த் தெரிந்தது. நெல்லிரசம் தந்த சிப்பாய், சிரித்த படி என்னைப் பார்த்துக் கை காட்டிக் கொண்டிருந்தான். பேரூந்து ஊரத் தொடங்கியது. என் கிராமத்தை நோக்கி...

சந்திரவதனா
யேர்மனி
2002

தொடரும்

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5

Tuesday, August 22, 2006

நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்


நாள் : 27.08.2006 ஞாயிறு
நேரம் : 14.00 – 20.00
இடம் : VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich

கவிதை நூல்கள்
நங்கூரம்,
உயிர்த்தீ

நளாயினியின் நங்கூரம் கவிதைத் தொகுப்பு பற்றி சுவிசிலிருந்து ரவி

தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள்


தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள் இணைக்கப் பட்டுள்ளன.

1) புலிகளின் புரச்சி இசை விழா
2) மண்ணைத் தேடும் இராகங்கள்

விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்

Monday, August 21, 2006

வாழ்வும் வரும் சாவும் வரும்...


வாழ்வும் வரும் சாவும் வரும்
ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்
கொஞ்சம் வரும் ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்

வீதியிலை நடக்கிறேன்

விதியை நினைக்கிறேன்
தமிழனாய் பிறந்து நான்

தினமும் தவிக்கிறேன்... - தொடர்ச்சி

பாடலை ஒலி வடிவில் கேட்க
viduthalai.mp3

பாடல் - விடுதலை
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்


புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் இன்று பல்துறைகளிலும் கால் பதித்துக் கொண்டு வருவதை நாம் அறிகிறோம். மொழி, காலநிலை, கலாச்சாரம், புலப்பெயர்வு... என்ற பல்வேறு முரண்களின் நடுவே நின்று வாழ வேண்டிய இளைய சமூகத்தினர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்களையும் எதிர் நோக்குகிறார்கள். "இது இதுதான் எமக்கு" என்று முத்திரை குத்தி வைக்கப் பட்ட விடயங்களைத் தாண்டி இன்னொரு விடயத்தைத் தொடும் எந்த ஒரு புதிய செயற்பாடும் முதலில் யாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது கட்டுடைத்தல் போன்றதானதொரு பிரமையையே எமது பெரியோரிடம் ஏற்படுத்துகின்றது. இந்தப் பிரமையினால் இளையோருக்குக் கொடுக்கப் படும் அழுத்தங்கள் மிகமிக அதிகமே. அந்த அழுத்தங்களினால் பல இளைஞர்கள் தமக்கே உரிய, தமக்குப் பொருத்தமான துறைகளில் நிலைத்து நிற்க முடியாது மனம் ஒடிந்து தொடங்கியதைப் பாதியிலே நிறுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் மனஉறுதி படைத்தவர்கள்தான் எல்லா அழுத்தங்களையும் தாண்டி கொஞ்சமேனும் வெளியில் வந்திருக்கிறார்கள்.

அப்படி வந்தவர்களில் சுஜீத்ஜீ யும் ஒருவர். "எனக்கு சங்கீதம் தெரியாது" என்று சொல்லும் சுஜீத்ஜீ எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் கொண்டவர்.

"ஏன் ராப் இசையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று கேட்டால் "புலம்பெயர் ஈழத்தமிழருக்கென்று தனித் துறையாக இறங்க வேண்டும் என்றால் பழக்கம் குறைவான ஏதாவது ஒரு இசையினை தெரிவு செய்தால் வித்தியாசப் படலாம் என்ற எண்ணம்" என்றும் "சில உணர்வுகளினை சங்கீதத்தால் சொல்லி விடமுடியாது" (உதாரணம் : விடுதலை பாடல்) என்றும் சொல்கிறார்.

இவரது விடுதலை என்ற பாடல் ரீரீஎன் நடாத்தும் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. உணர்வு பூர்வமான அந்தப் பாடல் வரிகளை எழுதியவர் சுஜீத்ஜீ யேதான். அழகிய முறையிலான இசையும் ராப் இசைக்கே உரிய முறையில் பாடப்பட்ட விதமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. இசையை அமைத்த சந்தோசும், சுஜீத்தும் இணைந்தே பாடல் காட்சியில் வருகிறார்கள். பலரையும் கவர்ந்து விட்ட பாடல். ராப் இசையை ரசிக்கும் எவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய பாடல். ராப் இசையை ரசிக்காதவர்கள் கூட பாடல் வரிகளில் ஈர்க்கப் படுவார்கள் என்பதில் ஐயமில்லை.

(நிகழ்ச்சியில் இடம் பெற்ற மற்றைய பாடல்கள் கூட தரமான பாடல்களாகவே அமைந்திருந்தன. சில பாடல்களுக்கான காட்சிகளிலும், கமராவிலும் இன்னும் திருத்தங்களும் கவனங்களும் தேவையென்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாயினும், ஒவ்வொரு பாடல்களுக்குமான இசையமைப்புகள் எமது கலைஞர்களின் வளர்ச்சியைப் பறை சாற்றுவதாகவே அமைந்திருந்தன. )

ஈழத்தமிழர்கள் இப்பொழுது பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வகையில் இசைத்துறையில் அதுவும் மேற்கத்திய இசையில் தனக்கிருந்த திறமையினை சிங்கிள்ஸ் என்ற இசைத்தட்டை வெளியிட்டதன் மூலமாக உணர்த்தியிருக்கிறார் சுஜீத்.ஜி.

சுஜீத்.ஜி யுடனான ஒரு நேர்காணல்

எப்படி இந்த இசையில் நாட்டம் வந்தது?
எனக்கு எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் உண்டு. இருப்பினும் எல்லோரும் செய்கிற ஒரு விடயத்தினை நானும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது ஏதாவது வித்தியாசமாக செய்வோமே என்று எண்ணினேன்.

ஏன் இவ் இசையினைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
இன்று மேற்குலகைப் பொறுத்தவரையில் இரண்டுவகையான இசை அதிகமாக இளைஞர்களை ஆக்கிரமிக்கிறது. ஒன்று றிதம் அண்ட் புழூஸ் இசை மற்றையது கிப்பொப் இசை. நான் லண்டனில் இருக்கிற காரணத்தினால் இவை என்னையும் ஆக்கிரமித்து விட்டது.

இதற்கான இசைப் பயிற்சியினை எங்கே பெற்றீர்கள்?
இசைப்பயிற்சியினை எங்கும் பெறவில்லை. கேள்விஞானம் என்று சொல்லலாம். பிரபல்யம் அடைகிற ஆங்கிலப் பாடல்கள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அவைகளை கேட்கும் வழக்கம் உண்டு அவ்வளவுதான். மற்றப்படி சிங்கள்ஸ்க்கு இசையமைத்த சந்தோஷ் மூலமாகவும் பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களினைக் கேட்டுத் தமிழில் பாடல்களை எழுத கேள்வி ஞானம் உதவியது என்கிறீர்களா?
அப்படியல்ல. நான் ஏற்கனவே சில பாடல்களை எழுதிய அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு எப்படியான இசைக்கும் பாடல்களை எழுத முடியும் என்ற நம்பிக்கையினைத் தந்தது.

இந்த இசை அனைவரையும் கவரும் என்கிறீர்களா?
உலகில் எதுவுமே எல்லோரையும் கவர்ந்து விடுவதில்லை. அதற்கு என்னுடைய படைப்பும் விதிவிலக்கல்ல. நான் இலக்கு வைத்த இளைஞர்களை அதாவது மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை நிச்சயமாகக் கவரும், கவர்கிறது.

அதென்ன மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்திருக்கிறீர்கள்?
எந்த ஒரு பொருளுக்கும் அதற்கான நுகர்வோர் வட்டம் இருக்கும். அதுபோல என்னுடைய இலக்கு மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்கள். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல மேற்குலக இசையின் ஆக்கிரமிப்பு அவர்கள் மேலும் இருக்கிறது. எங்களை ஆக்கிரமிக்கும் அந்த இசைக்குள் தமிழினை செலுத்தியிருக்கிறேன்.

இதனைத் தமிழ் ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஏற்கனவே இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நான் தவறான பாதையில் செல்வதாகச் சொன்னார்கள். ஏன் என்று விளக்கம் தர அவர்களால் முடியவில்லை. இந்தியாவின் கர்நாடக மானிலத்து இசைக்குள் தமிழ் தவழும்போது மகிழ்ச்சி அடைபவர்கள் ஏன் மேற்கத்தேய இசைக்குள் தமிழ் துள்ளத் துன்பப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லாத் தமிழ் ஆர்வலர்களும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கர்நாடக இசையினால் சொல்லமுடியாத சிலவற்றை கிப்பொப் இசை சொல்லும்.

- சங்கீதா

சுஜீத்.ஜி பற்றி

SujeethG, as a child, he had no such ambitions of becoming a musical artist. When in London, he realised he had a knack for finding flaws in Tamil songs and would talk about how he could have composed it better, and had his own ideas on how to do things differently. So one day he decided to put pen to paper.

He has always felt if his work is good in his eye, that's enough for him. He wasn't expecting recognition or praise from anyone. SujeethG wasn't just musically artistic, he writes stories, poems and has even made one or two short films.

His friends who asked him to write them songs appreciated his talents. Unfortunately none of the songs were recorded. But plenty of praise came his way. After waiting in hope of his work would getting produced into records, he decided to showcase his talents by making his own album.
(His debute album SINGLES was released in 2005, next one CEYLON hope to be released in January 2007)

I want to show people that an Eelam Tamil also can do something in music. He wanted to project a positive message to society, to make people realise that Eelam Tamils are artistic in this field and can get far in the industry. Although he admires a lot of artists for their various talents, he isn't interested in following current eastern musical trends; he's following his own personal taste.
"I want to provide the second generation of Tamils living in the western world something they can relate to. Even though putting Tamil lyrics to this kind of music would be difficult, I knew I could achieve it."

He certainly has the know how to manipulate the Tamil language to suit any musical structure. This is what makes him different. He has no professional training in the music field and has no musical background. His knack is natural and is helped by observing people in the industry.

He aims to show that ordinary hard working people can achieve their goals.

Friday, August 18, 2006

குருதி தோய்த்தெழுதும் தொடர்கதையா?



அன்றைய நவாலிப் படுகொலையின் ரணம்
ஆறாத வடுவாய்
இன்று வள்ளிபுனத்தில்
அது தொடராய்
மீண்டும் மீண்டும் இது என்ன!
குருதி தோய்த்தெழுதும் தொடர்கதையா?

ஒளிவடிவில் பார்க்க
http://www.eelatamil.com/sensolai/

Monday, August 14, 2006

தாயகம் நோக்கி - 5


மனிதநேய வெளிப்பாடுகளில் வெண்புறாவின் செயற்பாடு

ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கைக் கால் செய்வதென்பது மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது. பயனாளிகள் ஒவ்வொருவரதும் பாதிப்புக்குள்ளான கால்களை துல்லியமாக அளவெடுத்து, அதற்கான வடிவத்தை அச்சில் (plaster of paris) வார்த்தெடுத்து, பின்னர் அந்த அச்சின் வடிவத்தைக் கொண்டே செயற்கைக் கால் பைபர்கிளாஸில் (Fiber glass) செய்யப் படுகிறது.

அதனால்தான் மூன்று தகரக் கால்களை இரண்டு மணித்தியாலத்துக்குள் செய்து முடிப்பது போல வேகமாக Fiber glass கால்களைச் செய்து முடிக்க முடியவில்லை.

ஒரு தகரத்தாலான செயற்கைக் காலினைத் தயாரித்து, ஒரு பயனாளியை ஒரு கிழமை வெண்புறா நிறுவனத்தில் தங்க வைத்து, பயிற்சி கொடுத்து, உணவும் கொடுத்து அனுப்பி வைக்க வெண்புறா நிறுவனத்துக்கு ஏற்படும் செலவு ரூபா12000 (150 யூரோ) தான்.

ஆனால் தகரக்கால்கள் என்ற ஒரே காரணத்தால் 1994 முதல் 2001 மார்கழி வரை வெண்புறா நிறுவனத்தால் பொருத்தப் பட்ட 1197 பேரினது செயற்கைக் கால்களுக்கான திருத்த வேலைகள் மட்டும் 9893 தடவைகள் மீண்டும் மீண்டுமாய் செய்ய வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதே நேரம் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்களுக்கான செலவும் நேரமும் சற்று அதிகமாக இருந்தாலும் ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால் பல முன்னேற்றமான நன்மைகளைக் கொண்டுள்ளது.

அதாவது ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செய்யப்படும் செயற்கைக் கால்,
1. தகரத்தால் செய்யப்பட்ட கால்கள் போலத் துருப்பிடிக்காது.
2. அணிபவருக்கு இலகுவானது. (பாரம் குறைவு)
3. வார்த்தெடுக்கப்பட்ட அச்சில் செய்யப்படுவதால், காலுடன் பொருந்தக்கூடியது. எனவே செயற்கை உறுப்பை பொருத்துவதற்கு எந்தவிதமான பட்டிகளும் தேவையில்லை
4. தகரத்தில் உருவாக்கப்படும் செயற்கைக்காலில் ஏற்படும்
திருத்த வேலைகள் இந்த வகையில் உருவாகும் கால்களுக்கு மிகமிக அரிது.
5. கால்களின் அளவும் முழங்கால் சில்லின் அளவும் மிகத் துல்லியமாக அளந்து
எடுக்கப்படுவதால், முதுகெலும்பு வளைவதற்கான சாத்தியங்கள் இல்லை.
6. பாதிப்புக்குள்ளான காலின் பகுதி மெலிந்து போவதற்கான காரணிகள் குறைகின்றன.
7. பாதிக்கப்பட்ட காலின் பகுதிக்கும் செயற்கை உறுப்புக்கும் இடையில் உள்ள இறப்பரினால் ஆன பகுதி காலில் ஏற்படும் வீணாண எரிச்சல் உபாதைகளைத் தடுக்கிறது.
8. காலினை இலகுவாக மடித்து நீட்டக்கூடியதாக இருக்கும்.
9. இலகுவாகக் கழற்றி வைக்கக்கூடியது.

இதுவரை காலமும் செய்யப் பட்ட தகரத்தாலான செயற்கைக் கால்களையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும், யேர்மனியில் செயற்கை உறுப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பீடு செய்தே நவீன முறையிலான ஃபைபர்கிளாஸில் (Fiber glass) இல் செயற்கை கால்கள் செய்வதில் உள்ள இந்த நன்மைகள் அறியப் பட்டன.

அறியப் பட்டதுடன் மட்டும் நின்று விடாமல் அதைச் செயற்படுத்தும் திட்டம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் யேர்மனியக் கிளையினால் கிளிநொச்சியில் அமர்ந்திருக்கும் வெண்புறா நிறுவனத்தின் செயற்கை உறுப்புச் செய்யும் பட்டறைக்குள் வெற்றிகரமாக செயலாக்கம் பெறத் தொடங்கியது.

எடுத்ததைச் செவ்வனே செய்து முடிக்கும் திறமையானவர்கள் அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் மின்சாரத்தினதும், நவீன தொழில் நுட்பத்துக்கான கருவிகளினதும், பற்றாக்குறைகள் வேலை நேரத்தை நீட்டிக் கொண்டிருந்தன.

அஸ்பெஸ்டோஸ் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெயிலின் வெப்பம் எம்மை வதக்கியது. பொறுப்பாளர் அன்ரனியின் கட்டளைகளுக்கமைய அடிக்கடி Fanta, Spreit என்று சுகுணனும், கண்ணனும் கொண்டு வந்து தந்து கொண்டிருந்தாலும் அவைகளில் எதையும் நான் தொட்டும் பார்ப்பதில்லை. தாகத்தைத் தீர்த்து, வரண்டு போன தொண்டைக்கு இதம் தந்தது அவர்கள் அன்போடு வெட்டித் தந்த இளநீரும், பின் காணிகளுக்குள் எழுந்து நின்ற பனைகளில் ஏறி மயூரன் பிடுங்கித் தந்த நுங்கும்தான்.

மதியம் ஒரு மணித்தியாலம் இடைவேளை. அன்றே கிளிநொச்சிச் சந்தையில் வாங்கப் பட்ட கரவலையால் இறக்கப்பட்ட புதிய இறாலில் பொரியலும், மீனில் குளம்பும்... என்று நாக்குச் சப்புக் கொட்டியது. மனசு சமையல் பணியில் இருக்கும் படையப்பா எனச் செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் தேவசுந்தரத்துக்கும், அங்கிள் என அழைக்கப் படும் நசாருக்கும், பாரைக்குட்டி என அழைக்கப்படும் சந்திரன் தம்பிக்கும் மானசீகமாக நன்றி சொன்னது. சாப்பாட்டுக்கு மேல் பலாப்பழமும், மாம்பழமும் தித்தித்தன.

ஆனாலும் என்னால் இன்று அவை எல்லாவற்றையும் முற்றாகச் சுகிக்க முடியவில்லை. கால் வேலைகளை முடித்து விட்டு பருத்தித்துறையில் இருக்கும் அழகிய சிறிய கிராமமான ஆத்தியடியில் இருக்கும் நான் தவழ்ந்த எனது வீட்டுக்குப் போய் ஒரு கிழமையாவது நின்று வருவதாக நாம் போட்ட திட்டம் நிறைவேறாது போலத் தெரிந்தது. வேலை முடியாமல் எனது கணவரையோ, ஹொல்கெரையோ அங்கிருந்து கூட்டிப் போக முடியாது. அதுதான் மனசு சங்கடப் பட்டது.

ஆத்தியடியையும் எனது வீட்டையும் நினைக்கும் போதெல்லாம் மனசு தழுதழுத்தது. போகவேண்டும் என்று பரிதவித்தது. இருக்கும் ஒரே ஒரு வழி நான் தனியப் போய் வருவதுதான். தனியான பயணம் எந்தளவு சிக்கலாக இருக்கும் என்பது தெரியவில்லை. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் குன்றும் குழியுமான வீதிகளில் சில மணித்தியாலங்களுக்குப் பேரூந்தில் பயணிக்க வேண்டும். வன்னியிலிருந்து புறப்படும் அல்லது வன்னிக்கு வந்து கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்திருக்கிறேன். சனங்களைப் பட்டியில் அடைப்பது போலத் திணித்துக் கொண்டு..., நினைக்கவே பயமாக இருந்தது. ஆனாலும் நான் தவழ்ந்த, தத்தி நடை பயின்ற... என் பிரிய உறவுகளுடன் கைகோர்த்துத் திரிந்த... நான் வாழ்ந்த எனது வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை பயத்தைத் துரத்தியடித்தது.

திடீரென, உடனேயே எனது கிராமத்துக்குப் போய் விடவேண்டுமென்ற ஒரு வேகம் எனக்குள் எழுந்தது. எனது கணவருக்கு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்தநாள் காலையே புறப்பட்டு விடத் தீர்மானித்துக் கொண்டேன்.

மற்றவர்களிடம் விசாரித்த போது, "அப்படி நினைக்கிற போலை நாளைக்கே போகேலாது. பாஸ் எடுக்கோணும். பஸ் புக் பண்ணோணும். இப்படிக் கனக்கச் சிக்கல்கள் இருக்குது அக்கா....! அதோடை பஸ்சுக்கை நீங்கள் இருக்க மாட்டிங்கள் அக்கா. நெரிச்சுத் தள்ளிப் போடுவாங்கள். சிலநேரம் நிண்டு கொண்டுதான் போகவேண்டி வரும்" என்றார்கள்.

எனக்குத் தாமதிக்க இஸ்டமில்லை. எல்லாவற்றையும் தாங்கி நான் பயணிக்கத் தயார். அதனால் "எப்படியாவது நான் போகோணும்" என்று வெண்புறா உறவுகளிடம் சொன்னேன். அவர்கள் நல்லவர்கள். என்னைத் தனியே அனுப்ப அவர்களுக்கு மனம் இல்லாவிட்டாலும் என் விருப்பத்தை நிறைவேற்ற உடனேயே எனக்கு உதவ முன்வந்தார்கள். நாளை காலை அவர்களில் ஒருவருடன் நந்தவனத்துக்குப் போய் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான பாஸ் எடுக்க ஏற்பாடாகியது.

வெண்புறாவின் பொறுப்பாளர் அன்ரனி மோட்டார்சைக்கிள் சாரதி நிச்சுதனிடம் "நாளைக்கு அக்கா பாஸ் எடுத்த உடனை அக்காவை முகமாலை வரை கொண்டு போய் விட்டு விடு. இங்கை இருந்து பஸ்சிலை அக்கா போகமாட்டா" என்றார். எனக்கு மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பழக்கமில்லை.

பின்னேரம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென செஞ்சோலை ஐனனி வந்தாள். விடயத்தைச் சொன்ன போது "நான் பழக்கிறன்" என்று சொல்லி போரின் அனர்த்தங்களில் குழி விழுந்து போயிருந்த ஏ-ஒன்பது வீதியில் என்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு திரிந்தாள். மெதுவாக ஓடி, நிறையக் கதைத்து... அவள் வேகமாக ஓடத் தொடங்கிய போது பயம் குறைந்திருந்தது.

அன்றைய இரவு ஐனனியுடன் கதைத்து, சாப்பிட்டு, படுக்க வெகுநேரமாகி விட்டது. ஊர் செல்லும் நினைவுகளில் தூக்கம் வரமறுத்தது. கூடவே ஏதோ விதமாக நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்ட நுளம்பு ஒன்று என்னைத் தூங்க விடாமல் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தது.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4

Sunday, August 13, 2006

ஆவணி மாத வடலி


ஆவணி மாத வடலி வெளி வந்து விட்டது.
பல கட்டுரைகளுடன் - வடலி

Friday, August 11, 2006

நினைவுப் பதிவு

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய
சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?
அது ஷெல், குண்டு, சூடு என்று அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் 1985ம் ஆண்டுக் காலம். நான் ஜேர்மனிக்குப் புறப்படுவதற்கான ஆயத்தங்களில் இருந்தேன். பாஸ்போர்ட் எடுப்பதற்கு சில ஆவணங்களைப் போட்டோக் கொப்பி எடுக்க வேண்டி இருந்தது. மூத்த இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு கடைசி மகனை அம்மாவுடன் விட்டு விட்டு ஒழுங்கைகள் கடந்து மருதடியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அங்குதான் எங்கோ ஒரு இடத்தில் போட்டோ கொப்பி மெசின் இருக்கிறது என்ற தகவல் எனக்குக் கிடைத்திருந்தது. தம்பிமாரை அனுப்பக் கூடிய இடமல்ல அது. அதனால்தான் நானே சென்றேன்.

ஐயனார் கலட்டி ஒழுங்கைகளைக் கடந்து கொண்டிருக்கும் போது பருத்தித்துறைக் கடலில் இருந்து வந்து கொண்டிருந்த ஷெல்களின் ஆக்ரோசம் கூடியிருந்தது. கூடவே சீனவெடிப் பாணியில் சூட்டுச் சத்தமும் கூடிக் கொண்டே போனது.

"வெளிக்கிட்டனான். வேலையை முடிச்சிடோணும்" என்ற வைராக்கியத்தோடு நான் நடந்து கொண்டிருந்தேன். பிரதான வீதியில் ஏறுவதற்கு இன்னும் 100மீற்றர்தான் இருக்கும் போது சனங்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடத் தொடங்கியிருந்தார்கள். என்ன ஏது என்று யோசிக்க முன்னம் சைக்கிள்கள் சுழன்று அடித்துக் கொண்டு திரும்பின. இளம்பெடியள் பாய்ந்து விழுந்து ஓடினார்கள்.

"பள்ளிக்கூடப் பிள்ளையளுக்குச் சூடு விழுந்திட்டுதாம். வடமாராட்சிப் பள்ளிக்கூடப் பிள்ளையள்." ஓடுபவர்களின் வாய்களில் இருந்து உதிர்ந்தன வார்த்தைகள். எனக்குள் பதட்டம். எனது இரண்டு பிள்ளைகளும் வடமாராட்சிப் பாடசாலையில்தானே.

தொடர்ந்து போவோரின் வாய்களிலிருந்து தீபா, சாந்தி என்ற வார்த்தைகளும் வந்து விழுந்தன. எனக்குப் பகீரென்றது. ஓரிருவரை இடை மறித்து "என்ன நடந்தது? யாருக்குச் சூடு விழுந்தது?" கேட்டேன். "தீபாவுக்கும் சாந்திக்கும் சூடு" என்றார்கள். அந்தக் கணத்தில் நான் என்னை மறந்து விட்டேன். ஒரு பைத்தியக்காரி போல வடமராட்சிப் பாடசாலையை நோக்கி பிரதான வீதியில் ஓடத் தொடங்கினேன்.

"அக்கா, அங்கை போகாதைங்கோ, நில்லுங்கோ, இஞ்சை பாற்றா, மொறிசின்ரை அக்கா..." என்று பல குரல்கள் கனவில் போல என் காதுகளில் வீழ்ந்தன. தடக்கும் சேலையின் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு நான் ஓடிக் கொண்டிருந்தேன். சிலர் என்னை வந்து தடுத்தார்கள். போக வேண்டாம் என்று மன்றாடினார்கள். ஒரு கட்டத்தில் என்னை மேற் கொண்டு நகர விடாமல் முழுவதுமாக மறித்து விட்டார்கள்.

"நீங்கள் திரும்பி வீட்டை போங்கோ அக்கா." சூடு விழுந்த பிள்ளையளை உடனையே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டினம். ஒண்டும் நடக்காது. நீங்கள் போங்கோ. வடிவா விசாரிச்சுப் போட்டு, வீட்டை வந்து எல்லா விபரத்தையும் சொல்லுறம்" என்றார்கள்.

வேறுவழியின்றி நான் வீட்டுக்குத் திரும்பி நடக்கத் தொடங்கினேன். உலகம் இருண்டு விட்டது போலிருந்தது. மனசு "ஆண்டவா என்ரை பிள்ளையை என்னிடம் உயிரோடு தந்து விடு" என்று மன்றாடியது.

வழியெல்லாம் பதட்டத்துடன் மக்கள். நான் வீட்டடிக்குப் போனபோது அப்பாச்சி, அம்மா இருவருமே வீட்டு வாசலில் திகைத்துப் போய் நின்றார்கள். நான் உள்ளே போக மனமின்றி கேற்வாசலில் அப்படியே இருந்து விட்டேன்.

பிரமை பிடித்தவள் போல எவ்வளவு நேரம் அதிலேயே இருந்திருப்பேனோ எனக்குத் தெரியாது. ஒரு சைக்கிள் வருகிறது. ஒரு போராளிதான் ஓட்டி வந்தான். யார் முன்னுக்கு என்று பார்த்தேன். என் கண்களையே நம்ப முடியவில்லை. தீபாவேதான் வருகிறாள். முகத்தில் ஒரு மருட்சி. சிரிக்க மறந்த தன்மை. ஆனாலும் உயிரோடு என் மகள். அப்போதுதான் நான் அடக்க முடியாமல் அழத் தொடங்கினேன்.

---------------------------------

சிங்கள இராணுவத்தின் அட்டகாசம் அன்று அதிகமாயிருந்ததால் வடமராட்சிப் பாடசாலைப் பிள்ளைகளை, ஆசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிள்ளைகள் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். இராணுவம் பருத்தித்துறைக் கடலோடு சேர்ந்த முகாம்களிலிருந்து சுட்டுக் கொண்டு இருந்திருக்கிறது. தீபாவும் சாந்தியும் கைகோர்த்த படி பாடசாலை வீதியில் விநாயகமுதலியார் வீதியடியைக் கடக்கும் போது ஒரு ரவை சாந்தியின் கழுத்தில் பாய்ந்து விட்டது.

தன்னோடு கைகோர்த்து வந்த ஒரு குழந்தை தன் முன்னாலேயே குருதி வடிய சுருண்டு வீழ்ந்ததைப் பார்க்கும் ஒரு ஆறு வயதுக் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? சாந்தி உடனேயே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு விட்டாள். தீபா என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் பட்டாள்.

சாந்தி நான் ஜேர்மனிக்கு வரும் வரை பேசும் சக்தியை இழந்த நிலையிலேயே இருந்தாள். தீபா பல நாட்கள் ஒரு அதிர்ச்சி அடைந்த நிலையிலேயே இருந்தாள். அதிகம் பேசுவதைக் குறைத்துக் கொண்டாள். நித்திரையில் சாந்தி.. சாந்தி.. என்று ஏதேதோ புலம்பினாள். ஷெல் சத்தம் கேட்டால் உடனேயே ஒரு பதட்டத்துடன் ஓடிச் சென்று பக்கத்தில் நிற்கும் யாரையாவது இறுகக் கட்டிப் பிடிப்பாள். யாரும் பக்கத்தில் இல்லை என்றால் அறைக்குள் ஓடிப்போய் கட்டிலுக்குக் கீழ் புகுந்து கொள்வாள். ஜேர்மனிக்கு வந்த பின்னும் சில வருடங்களாக இடி இடிக்கும் சத்தம் கேட்டால் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிப்பாள்.

சந்திரவதனா
11.7.2006

மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று


குண்டுச் சத்தங்களில் ஊரே குழம்பிப்போய், அன்று 85 இல் என் வீட்டுக் கோடியில் ஓர் அரவம். எண்ணிலாப் பயத்துடன் என்னென்று பார்த்தேன். அவன் நின்றான்.

தொண்டை வரண்ட நிலையில், மூச்சு வாங்கிய அவனைப் பார்த்து, "குடிக்க ஏதும் தரவா?” எனக் கேட்டேன். "வேண்டாம்" என்றது அவன் வாய், "வேணும்" என்றது அவன் முகத்தின் பாவம்.

நெல்லிரசம் கலந்து நான் கொடுத்த கிளாசை வாங்கி மூச்சைப் பிடித்த படி குடிக்கும் போது ஓரக் கண்ணால் ஓராயிரம் நன்றி சொன்னான்

அவன் பெயர் தெரியாது எனக்கு. அவன் முகம் தெரியும். அவன் இலட்சியம் தெரியும். மறக்காத அவன் முகத்தை மறக்காது தேடுகிறேன். கிடைக்கவில்லை இன்னும்.

என் வீட்டுக் கோடியும், வேர்வை வடிந்த அவன் முகமும், குடித்து விட்டுத் திருப்பித் தந்த கிளாசில் விரல்கள் படித்த குருதிக் கறையும், "திக்கத்துக்குள்ளை நாலு பேரை முடிச்சிட்டனக்கா" சொன்ன படியே இராணுவ நகர்வுகளை உணர்த்தும் சத்தங்கள் கேட்டு, தோளில் தொங்கிய கிரனைட் பையுடன் நொண்டியபடி அவன் ஓடிய போது அவன் பின்னங்கால்களில் வழிந்த குருதியும் இன்னும் மறக்கவில்லை.

Wednesday, August 09, 2006

இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?


ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம் கண்டுள்ளன. இந்த நிலையில் எமது சஞ்சிகைள் பத்திரிகைளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது?

இனி வரும் காலங்களில் இணைய இதழா, அச்சுப் பதிப்பா எது முன்னிலையில் நிற்கப் போகிறது? எது வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெறப் போகிறது?

இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.

இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாமலேயே இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களிடம் எழலாம். அந்த எத்தனையோ பேர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியே அடுக்காகப் பல கேள்விகள் உள்ளன.

ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலை நிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.

ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. அவன் தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அதன் படைப்பாளிகள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அவைகளை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?

தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 15ஆண்டுகளாக உலா வந்த பூவரசு இப்போது தனது 16வது ஆண்டில் சிறிய தளர்ச்சியையும், ஒரு வித களைப்பையும் கண்டிருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

1991 இல் தமிழ் வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. ஐரோப்பிய அவசரத்தில், புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் பூவரசு 16வருடங்களைத் தொட்டிருப்பது ஒரு சாதனையே. இப்படியான சாதனைகளுக்கு வாசகர்களும், படைப்பாளிகளும் முக்கிய காரண கர்த்தாக்களாக இருந்தாலும், அவர்களை ஒன்று கூட்டி, அவர்களோடு இசைந்து புலம்பெயர் வாழ்வில் முகம் கொடுக்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு சஞ்சிகையை வளர்த்தெடுப்பது என்பது சுலபமான விடயமல்ல. ஆனால் பூவரசு சஞ்சிகையின் ஆசிரியர் இந்துமகேஷ் அவர்கள் அந்தச் சாதனையைச் செய்துள்ளார். அவர் வளர்த்தது பூவரசை மட்டுமல்ல. புலம்பெயர் மண்ணில் இலைமறைகாய்களாக இருந்த எத்தனையோ எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, பூவரசின் ஊடாக அவர்களையும் வளர்த்து விட்டிருக்கிறார்.

அதே நேரம் வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை பூவரசு மூலம் ஊக்குவிக்கவும் இவர் தவறியதில்லை.

புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய, வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.

இம்முறை நான் இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது பூவரசின் தளர்ச்சியும், களைப்பும் மட்டுமல்ல. இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனமுந்தான்.

இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி.புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இவைகளுக்குள் சற்று அதிகமான ஈர்ப்பைத் தந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம். இது ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதை ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அந்த உரையாடலின் போதுள்ள இளையோரின், ஏன் வயதானோரின் மனநிலைகள,; கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.

பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

பூவரசு தொடர வேண்டுமென்றால், அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். தொடர்ந்து வருவார்களா? ஆதரவைத் தொடர்ந்தும் தருவார்களா?

இணைய இதழ்கள், தொலைக்காட்சிகள் போல அதிவேகமாய்ச் செய்திகளை மூலை முடுக்குகள் எல்லாம் பாய வைக்கின்றன. இன்பமோ, துன்பமோ எதுவாயினும் உடனடியாக அறியவும், உணரவும் ஏதுவாகின்றன. அச்சுப்பதிப்புகளால் அது முடிவதில்லை. அதுவும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் போரும், புலம் பெயர்வும் மிகவும் ஐதாக, உலகம் பூராவும் தூவி விட்ட நிலையில் ஒரு அச்சுப்பதிப்பு பலரையும் சென்றடைவது என்பது அவ்வளவு சாத்தியமான காரியமல்ல. ஆனாலும் என்றைக்கும் ஒரு ஆவணமாக பத்திரமாக எம்மோடு கூட இருக்கப் போவதும், நினைத்த போதெல்லாம் எந்த நிலையில் இருந்தும் நாம் ஆசுவசமாகப் படிப்பதற்கு ஏதுவானதும் ஒரு அச்சுப்பதிப்பே. ஒரு அச்சுப் பதிப்பைப் படிப்பதில் உள்ள அலாதியான சுகம்; இணைய இதழில் ஒருபோதும் வந்து விடாது. இருந்தும், வரும் காலத்தில் எது நிலைக்கப் போகிறது என்று கேட்டால், இணைய இதழ்கள்தான் வாழும் என்பது போன்றதான ஒரு அச்சம் கலந்த பிரமை ஏற்படுகிறது.

சந்திரவதனா
17.8.2006

பூவரசு 100வது இதழில் இப்பதிவு பிரசுரமாக இருப்பதால் சில சிறிய திருத்தங்களுடன் மீள் பதிவு செய்துள்ளேன்.

Tuesday, August 08, 2006

பூவரசு (தை-மாசி 2006 )


இணையப் பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லோரும் கணினிக்குள் நேரத்தைக் கரைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் பதிப்புகள் மீதான ஈர்ப்பு எம்மவரிடையே சற்று ஸ்தம்பிதமடைந்து போயுள்ளது. இதனால் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல.

தேர்ந்தெடுக்கப் பட்ட நல்ல ஆக்கங்களைக் கொண்டு உலகளாவிய ரீதியில் தொகுக்கப் பட்ட மிக அருமையான தொகுப்புக்கள் கூட குறுகிய வட்டங்களுக்குள்ளேயே உலா வந்து ஒரு கட்டத்தில் உரிமையாளர்களின் வீடுகளில் உறங்கிப் போன கதைகள் கூட ஏராளம். சந்தைப் படுத்தலில் உள்ள சிக்கலால் பதிப்புகளைத் தொகுப்பவர்களும், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வெளியிடுபவர்களும் பணவிடயத்தில் பாரிய பிரச்சனைகளைச் சந்தித்துச் சோர்ந்து போன கட்டங்களும் உண்டு.

இந்த இக்கட்டான நிலையில், தொடர்ந்தும் பூவரசை பதிப்பாக வெளியிடுவதா, அல்லது இணைய சஞ்சிகை ஆக்கி விடுவதா என்ற ஆசிரியரின் கேள்வியோடும், வாசகர்களின் பதில்களோடும் பூவரசின் 97வது இதழ் என்னை வந்தடைந்திருக்கிறது. பூவரசு தொடர வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பத்தோடான பதிலாக இருந்தாலும் அது இன்னும் எத்தனை காலத்துக்கு சாத்தியமாகப் போகின்றது என்பது தெரியவில்லை. எப்போதுமே பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லையாயினும் "பதிப்பாகத்தான் வரவேண்டும்" என்று என்னால் உரத்துச் சொல்ல முடியவில்லை. இணையங்களின் வரவுக்குப் பின் குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுகளுக்குப் பின் பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்து விட்டதுதான் அப்பட்டமான உண்மை.

இணையங்களோடு தம்மை இணைத்துக் கொள்ளாதவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி உங்களிடம் எழலாம். அவர்களில் வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்பதுதான் முதற் கேள்வி. அந்த வாசிப்பவர்களிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும் மனம் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது அடுத்த கேள்வி? இப்படியான பல கேள்விகள் இருக்கின்றன.

ஊரிலே எமது ஒரு ஆக்கம் பத்திரிகையில் பிரசுரமானால், வீரகேசரி என்றால் சிறுகதைக்கு 50ரூபாவும், தினகரன் என்றால் 25ரூபாவும் என்று தபாலில் அனுப்பி வைப்பார்கள். புலத்தில் நிலை அப்படி அல்ல. படைப்பாளிகளும் சரி, பிரசுரிப்பவர்களும் சரி பண விடயத்தில் தம்மை நிலைநிறுத்த முடியாத ஒரு கடினமான நிலையிலேயே வாழ்கிறார்கள். படைப்புக்களுக்கு எந்த விதமான சன்மானத்தையும் கொடுக்கக் கூடிய நிலையில் புலம்பெயர் பத்திரிகைகள் உலகம் இல்லை. அதேநேரம் நல்ல படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தமது செலவில் தொகுப்பாக்கக் கூடிய நிலையில் எமக்கென அச்சகங்களும் இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் ஊக்குவிக்கப் படுவதற்கான இப்படியான எந்த வசதிகளும் இன்னும் புலத்தில் சரியாக இல்லை.

ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். அனேகமான சமயங்களில் இதழ்களோ, பத்திரிகைகளோ வெளிவரும் போது அவைகளில் படைப்புக்களை எழுதியவர்கள்தான் பெரும்பாலும் பணம் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குபவர்களாகவும் அதன் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வாசகர்களிலேயே தங்கி வாழ்கின்ற பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தொடர்ந்து வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, பூவரசு பற்றி எழுத நினைத்து வந்து எழுதத் தொடங்கினால் சில யதார்த்தங்கள் வந்து முன்னுக்கு நிற்கின்றன.

தை-மாசியில் வரவேண்டிய பூவரசு இத்தனை மாதங்கள் கழித்து தற்போது ஆடி அசைந்து வந்துள்ளது. இதன் வரவு இதழாசிரியரை எத்தனை தூரம் சிக்கல் நிலைக்குத் தள்ளியிருக்கும் என்பது தள்ளி நின்று பார்க்கின்ற எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் 16ஆண்டுகளாக உலா வந்த பூவரசில் இப்போது சிறிய தளர்ச்சியும் ஒரு வித களைப்பும் இருக்கின்றது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.

இந்தப் பூவரசைப் பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம்.
இதழிலே வாசகர்களின் கடிதங்களைத் தொடர்நது ஏ:ஜே.ஞானேந்திரனின் வாழ்வின் வர்ண ஜாலங்கள் கட்டுரை, திருமதி . புஸ்பரட்ணத்தின் படித்துச் சுவைத்தவை, கோசல்யா சொர்ணலிங்கத்தின் ஒளவை தொடர், வளர்மதியின் கோள்கள் பற்றிய தொகுப்பு, இரா.சம்பந்தன், வேதா.இலங்காதிலகத்தின் கவிதைகள், கலா.கிருபாவின் குழந்தைகளின் பயத்தைப் போக்குவதற்கான குறிப்புகள் கூடவே என்.செல்வராஜா அவர்களின் ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும் பற்றிய அருமையான குறிப்புக்களைக் கொண்ட தொகுப்பு, இன்னும் சிறுவர்களுக்கான சில... என்று பல விடயங்கள் இடம் பெற்றுள்ளன.

இவைகளுக்குள் இராஜன் முருகவேலின் ஐஸ்கிறீம் சிலையே நீதானே.. என்ற தொடர் நவீனம் ஏற்கெனவே இணையத்தில் தொடராக வந்த நவீனம்தான். ஆனாலும் அதைப் ஒரு பதிப்பாக கையில் எடுத்து வாசிக்கும் போது அதனை இன்னும் கொஞ்சம் அதிகமாக இரசித்து வாசிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான "சட்" உலகத்துடனான உரையாடல் ஒன்றைத்தான் அவர் கதையாக்கி உள்ளார். அப்போதுள்ள இளையோரின் ஏன் வயதானோரின் மனநிலைகள் கதைக்கும் விதங்கள்.. என்று அவர் கதை சொல்லத் தொடங்கிய பாணியே மிக நன்றாக அமைந்துள்ளது.

பொதுவிலேயே இராஜன் முருகவேலுக்கு நன்றாகக் கதை சொல்லத் தெரியும். எடுக்கும் கரு எதுவாயினும் கதையை நகர்த்தும் விதத்தில் அவருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. தொடங்கினால் நிறுத்தாமல் வாசிக்க வைக்கும் நடை. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே "சட்" உலகத்தினூடு இன்றைய இளைய சமூகத்தின் சில பிரச்சனைகளையும் தொட்டுள்ளார். அடுத்த அங்கத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டியுள்ளார். அவரது மிகுதிக் கதைகளையும் வாசிக்க வேண்டும் என்றால் பூவரசு தொடர்ந்து வரவேண்டும். அதற்கு வாசகர்களின் ஆதரவுதான் அதிகம் வேண்டும். பார்ப்போம்.

சந்திரவதனா
8.7.2006

ஒரு SMS உரையாடல்


பத்து வருடங்களுக்கு முந்திய ஒரு SMS உரையாடல்

குளிக்கும் பேசினுக்குள் தலையைக் கவிழ்த்து, கையில் சவரைத் தூக்கி கொட்டும் தண்ணீரில், அவசரமாய் தலையைக் கழுவத் தொடங்கினான் சாருகன். ஆறுதலாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது கைத்தொலைபேசி சிணுங்கிய பின்தான் இப்படி அவசரமானான். "எங்கேயோ போகப் போகிறான்." நினைத்துக் கொண்டேன்.

தலையைத் துவாலையால் மூடி ஒத்தியபடி சமையலறைக்குள் வந்தான்.

"எங்கை இப்ப அவசரமா வெளிக்கிடுறாய்? நாளைக்கு ஸ்கூலிலை ரெஸ்ற் எண்டெல்லோ சொன்னனி."

"ஓமம்மா..., நான் படிச்சிட்டன். இன்னொருக்கால் திருப்பிப் பார்த்தால் சரி"

"இப்ப எங்கை போறாய்?"

இப்போ அவன் கைத்தொலைபேசியை அழுத்தி... என்னிடம் நீட்டிக் காட்டினான்.
"Charu, hast du heute Zeit? (சாரு, இன்று உனக்கு நேரமிருக்கிறதா?)
- Nora(நோரா)"

நோரா, சாருகனது வகுப்புத் தோழி. பட்டரில் வதக்கிய எனது கத்தரிக்காய் வெள்ளைக்கறியும் சோறும் அவளுக்குப் பிடிக்கும். எப்போதாவது எனது வீட்டுக்கு வரும் போது சாப்பிடுவாள். மிகவும் அழகான பெண். 14வயதுக்கே உரிய பளிச் சோடு குழந்தையாகப் பேசுவாள். நல்ல கெட்டிக்காரி. அவளும் சாருகனும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படிக்கிறார்கள். நல்ல நண்பர்கள்.

மீண்டும் அவன் கைத்தொலைபேசியை அழுத்தி அதற்கு எழுதிய பதிலைக் காட்டினான்
"ஏன்?
- சாரு"


"எனக்கு சில உள்ளாடைகள் வாங்க வேண்டும். உன் ஒருத்தனால்தான் எனக்கு எது பொருத்தம் என்பதைச் சரியாகச் சொல்ல முடியும்.
- Nora(நோரா)"


"சரி, நான் மாலை நான்கு மணிக்கு வருகிறேன்.
- சாரு"

"சரி, அயன் கஃப் சென்ரறில் சந்திப்போம்.
- நோரா. "


"ஏன்ரா, அவளுக்கு உள்ளாடைகள் வாங்க, உன்னை விட்டால் வேறை ஆக்கள் கிடைக்கேல்லையோ? ஆராவது பெட்டையளோடை போறதுக்கு...."

"இல்லை அம்மா, நான்தான் நல்லதா செலக்ட் பண்ணுவன். எப்பவும் சொல்லுவாள். "

"ஓமோம் நல்லாத்தான் சொல்லுவாள். உனக்கு உள்ளாடைகள் வாங்கவே உனக்குத் தெரியாது. நான் அலையோணும். அவளுக்கு நீ வேண்டப் போறாய்...? "

"......"

"ஏன் அவள் உன்ரை கேர்ள் பிரண்டோ? (காதலியோ?)"

"இல்லை இல்லை einfach freundin (சாதாரண நண்பி.)

"அதென்ன சாதாரண நண்பி?"

"என்னம்மா இது கூடத் தெரியாமல். சாதாரணமான நட்பு.
ஒரு அக்கா போல. அல்லது ஒரு தங்கைச்சி போல...."

Monday, August 07, 2006

இம்மியேனும் கவலையின்றி...


அன்புகளும்
நன்றிகளும்
இலக்கணப் பிழை பற்றி
இம்மியேனும் கவலையின்றி
மின்னஞ்சலிலும்
கடிதங்களிலும்
தொலைபேசி வழியாகவும்
வந்து குவிகின்றன

ஏன் சில சமயங்களில்
வீதிகளில் கூட
கை குலுக்கிச் செல்கின்றன.

சந்திரவதனா
7.8.2006

Sunday, August 06, 2006

தாயகம் நோக்கி - 4


தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3

அடிக்கடி ரோச்சைப் பிடித்து நேரம் பார்த்து 5.30 என்றதும் எழுந்து கொண்டேன். வெளியில் போய் இருள் கலைந்து கொண்டிருக்கும் அதிகாலையின் இயற்கை அழகைச் சிறிது நேரம் பருகி விட்டுக் காலைக் கடன்களை முடித்து, குளித்து வரும் போது வோச்சர் ஐயா முற்றம் கூட்டத் தொடங்கி இருந்தார். கணக்காளர் பாஸ்கரன் எனது அறைக்கு முன்பக்கமுள்ள சிறிய முற்றத்தைக் கூட்டத் தொடங்கியிருந்தான். மாஸ்டர் என அழைக்கப் படும் சுகுணன் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தான்.

நான் ஒற்றைப் பனையின் கீழ் கதிரை போட்டு அமர்ந்து கொள்ள சுகுணன் தேநீருடன் வந்தான். அம்மாவுடன் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு இருந்த இடத்தில் எனக்காகத் தேநீர் தயாரிக்கப் பட்டு வருவது புது அனுபவம். தேநீர் சுமாராக இருந்தாலும் வெண்புறா உறவுகள் அத்தனை பேரும் என்மேல் காட்டும் அன்பு என்னை நெகிழ வைத்தது. தமது கஷ்டங்களைப் பற்றியதான அக்கறைகள் எதுவுமின்றி எனக்கு எந்த விதமான அசௌகரியங்களும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலான அவர்களது அவதானம், அவர்கள் மேல் எனக்கு மிகுந்த பிரியத்தை ஏற்படுத்தியது.

அவர்களில் சிலர் காலை வணக்கங்களுடன் என்னைத் தாண்டி கேற் கடந்து கரடிபோக்குச் சந்தி வெள்ளவாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். சிலர் நின்று என்னோடு சிரித்து, பேசிச் சென்றார்கள்.

சொல்லாமல் கொள்ளாமல் வெயில் வெண்புறா நிறுவனத்துக்குள்ளும் புகுந்து மெய் கருக்கத் தொடங்கியது. கால் போடுவதற்காக ஆட்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். சடகோபன் வேலையைத் தொடங்குவதற்காக செயற்கைக் கால் தயாரிக்கும் பட்டறைக்குள் நுழைந்தான். நேரத்தைப் பார்த்தேன். எட்டு மணியாகி இருந்தது.

முதல்நாட்தான் Fiberglass இல் கால்செய்வதற்கான வகுப்பு சரியாகத் தொடங்கியது. நாம் புறப்படும் போதே யேர்மனியின் டுசுல்டோர்ஃப் (Düsseldorf) விமான நிலையத்தில் Fiberglass இல் கால் செய்வதற்கான மருந்துப் பொருட்களில் பவுடர் போல இருந்த சில பொருட்களை எம்முடன் கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விட்டார்கள். பின்னர் நாங்கள் விளக்குவைச்ச குளத்தில் பொருட்களுடன் தாண்டப் பயந்து வவுனியாவில் சிலதை விட்டு விட்டோம். அதனால் வந்த உடனே நாம் எதிர்பார்த்தது போல வகுப்பைத் தொடங்க முடியாதிருந்தது.

ஆனால் அந்த நேரம் அவர்கள் செய்யும் தகரக் கால்களையே செய்ய விட்டு எப்படிக் கால்களைத் தயாரிக்கிறார்கள் எனப் பார்த்தோம். மிகவும் ஆச்சரியம்தான். இரண்டு மணித்தியாலங்கள் கூடத் தேவைப்படவில்லை. வசதியான நவீன தொழில் நுட்ப உபகரணங்கள் ஏதுமின்றி அவர்கள் மூன்று கால்களைச் செய்து முடித்த வேகம் எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

சடகோபனும், ஹரிஹரனும், யுவராஜ்யும் கால் போட வந்தவர்களில் மூவரின் கால்களை ஒரே நேரத்தில் அளவெடுக்கத் தொடங்கி, கத்தரிக்கோலால் தகரங்களை வெட்டி, அதை கால் வடிவத்திற்கு சிறிது சிறிதாகத் தட்டியெடுத்து அடித்து நெளித்து, நேர்த்தியாக மடித்துக் கொண்டிருக்க, சிறீயும் கிருஷ்ணாவும் பாதத்தையும் மேற்காலையும் பொருத்துவதற்கான கட்டையை வெட்ட (உபகரண வசதிகள் இல்லாததால் ஒரு சிறிய வட்டக் கட்டையை வெட்டி எடுப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் தேவைப்பட்டது.) அங்கிருப்பவர்களில் மிகவும் வயது குறைந்த தம்பி என்றழைக்கப் படும், 17 வயது நிரம்பிய சதாசிவம் செயற்கைக் காலின் மேற்பகுதியை அதாவது முழங்காலுக்கு மேல் தொடையோடு பொருந்தும் பகுதிக்கான தோல் பட்டியை மெசினில் தைக்க, இன்னும் சிறிய சிறிய தொட்டாட்டு வேலைகளை மற்றவர்கள் தொடர, நாம் பார்த்துக் கொண்டிருக்கவே இரண்டு மணித்தியாலங்களுக்குள் மூன்று கால்கள் தயார்.

காலையில் கால் இல்லாமல் வந்தவர்களில் அளவெடுக்கப் பட்ட அந்த மூவரும் காலை அணிந்து கொண்டு நடப்பதற்கான பயிற்சியை எடுக்கத் தொடங்கிய போது நியமாகவே எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசமும் வியப்பும் ஏற்பட்டது.

இன்னும் ஐந்து நாட்கள் அவர்கள் மூவரும் வெண்புறாவிலேயே தங்கியிருந்து நடப்பதற்கான பயிற்சியை எடுத்து, காலுடன் செல்வார்களாம். காலை எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை பயிற்சி நடக்கும். அவர்கள் அந்ந ஐந்து நாட்களும் அங்கு தங்கிச் செல்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப் படும். இருப்பிட, உணவுச் செலவுகள் அனைத்துமே வெண்புறாவினுடையதுதான். என்ன ஒரு மனிதநேயமான கரிசனமான செயல்! வியப்பு..! வியப்பு..! வியப்பு...!

தகரத்தில் கால்களைச் செய்யும் அவர்களது அந்த வேகத்துக்கு ஏற்ப Fiberglass கால்களைச் செய்ய முடியாது என்று ஹொல்கெர் சொல்லி விட்டார்.

முதல்நாட்தான் நாம் ஜேர்மனிய விமான நிலையத்தில் விட்டு வந்த பொருட்களை தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் ஜேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் ஆனந்தராஜா அவர்கள் எடுத்து மீளவும் எமக்கு அனுப்பி இருந்தார். வவுனியாவில் விட்டு வந்த பொருட்களும் எம்மை வந்தடைந்தன. இதற்கிடையில் முல்லைத்தீவுக் கடற்கரை வரை சென்று இது சம்பந்தமான சில பொருட்களை கப்பல் தயாரிப்பாளர்களிடமும் பெற்று வந்தோம்.

முதல்நாள் தொடங்கிய வகுப்பை வெண்புறா உறவுகள் அனைவரும் ஒன்றாக இருந்து மிக ஆர்வமாக அவதானித்தார்கள். சரியான உபகரணங்களோ, புதிய தொழில்நுட்ப வசதிகளோ அங்கு இல்லாததால் நாம் கொண்டு சென்ற புதிய Fiberglass கால் செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதில் சில அசௌகரியங்களும் இருக்கத்தான் செய்தன. மின்சாரம் பெரும் பிரச்சனையாக இருந்தது. வழமையில் இரவு மட்டுமே ஆறு மணியிலிருந்து பத்து மணிவரை இயங்க வைக்கப்பட்டு மின்சாரத்தைத் தந்த ஜெனரேட்டரிலிருந்து Fiberglass கால் செய்வதற்குத் தேவையான மின்சாரத்தைப் பெறுவது மிகவும் கடினமாயிருந்தது. பலதடவைகள் மின்சாரம் நின்று நின்று, திரும்பத் திரும்ப ஜெனரேட்டரை இயங்க வைத்து, வகுப்பைத் தொடர்ந்த போது ஜேர்மனிக்குப் போனதும் கண்டிப்பாக இவர்களுக்கு இன்னும் இரண்டு ஜெனரேட்டர் வாங்கப் பணம் சேர்த்து அனுப்ப வேண்டுமென நினைத்துக் கொண்டேன். தாயகம் நோக்கிப் பயணிப்பவர்களை பட்டறைக்குத் தேவையான உபகரணங்களை கொண்டு சென்று அன்பளிப்புச் செய்யச் சொல்ல வேண்டுமென எனது கொப்பியில் குறித்துக் கொண்டேன்.

சடகோபனைத் தொடர்ந்து மற்றையவர்களும் பட்டறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன் தகரக் கால்களைப் பெற்றுக் கொண்ட மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ராஜலட்சுமி நடைப்பயிற்சி எடுக்கத் தொடங்கியிருந்தாள்.

எனது கணவரும் ஹொல்கெரும் பட்டறைக்குள் நுழைந்தார்கள். உடனே நானும் எழுந்து கொண்டேன். முற்றத்து மண் செருப்புக்குள் புகுந்து கால்பாதங்களுடன் சரசமாட பட்டறையை நோக்கி விரைந்தேன். வெயில் சுட்டது.

அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்? அவரைச் சந்திக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா? கேள்வி இன்னும் எனக்குள்...!

சந்திரவதனா
யேர்மனி.

Thursday, August 03, 2006

தாயகம் நோக்கி - 3


தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2

ரோச்சைப் பிடித்து நேரத்தைப் பார்த்தேன். 3.30 மணி. இங்கு வந்த பின் இப்படித்தான். வேளைக்கே விழிப்பு வந்து விடுகிறது. இன்று இன்னும் வேளைக்கு. இயற்கையின் சலசலப்புகள்தான் என்னை அருட்டினவோ!

மெதுவாக எழுந்து மெத்தை இல்லாத மரக்கட்டிலில் முட்டுக்காலில் இருந்த படியே மரச்சட்டங்களினூடே வெளியில் பார்த்தேன். விடியலுக்கான அறிகுறியாய் இருள் விலகியும் விலகாமலும் மங்கிய பொழுது. வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில் நுட்ப நிறுவனம் அமைதியாக உறங்கிக் கிடந்தது.

எனது அறைக்கு முன்னால் கேற்வாசல் மூலையோடு நிற்கும் பருத்த பெரிய ஒற்றை ஆண்பனை ஆடாமல் அசையாமல் அழகாய் கம்பீரமாய் எழுந்து நின்றது.

போரின் அனர்த்தங்களால் பொலிவிழந்து ஆங்காங்கு குழி விழுந்து வாடிப் போயிருக்கும் ஏ9 வீதியில் கடாமுடா என ஏறி இறங்கிச் செல்லும் வாகனங்கள் வீசிச் செல்லும் ஒளி வெள்ளத்தில், கேற்றுக்கு வெளியே மதிலோடு ஏ9 பாதையின் ஓரமாக நிமிர்ந்து நின்ற அறிவிப்புப் பலகையில் உள்ள வெண்புறாச் சின்னமும், வெண்புறா செயற்கை உறுப்பு தொழில் நுட்ப நிறுவனம், கிளிநொச்சி பிராந்தியச் செயலகம் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருந்த வாசகங்களும் மின்னி மின்னி மறைந்தன.

நேற்று வரை மூடிய படியே கிடந்த பாழடைந்த எதிர் வீட்டில் இன்று ஒரு வகை உயிர்ப்புத் தெரிந்தது. மோட்டார் சைக்கிள் ஒன்று வாசலில் நின்றது. திறந்த கதவினூடே ஒரு பெண்ணின் அசைவுகள் தெரிந்தன. இடம் பெயர்ந்து போன வீட்டுச் சொந்தக்காரர் மீண்டுள்ளனர் என்பது புரிந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் இங்கு ஒரு கடை முளைத்திருக்கும். நான் வந்த சில நாட்களுக்குள் இந்த வீதிகளில் முளைக்கும் புதிய புதிய கடைகள் என்னை அப்படித்தான் எண்ண வைத்தன.

பக்கத்துக் கோயிலில் வேர் பரப்பி, விழுது விட்டு, குடை விரித்திருக்கும் அழகிய அரச மரத்தின் கிளைகள் எனது அறையின் தகரக் கூரையில் உரசும் சத்தத்தை விட, அதிகாலையிலேயே குதித்துக் கொண்டும், இறகைச் சிலுப்பிக் கொண்டும் மற்றவர்களைத் தொந்தரவு பண்ணுகிறோமே..! என்ற எந்தப் பிரக்ஞையுமின்றி தமக்கு மட்டுந்தான் இந்தப் பிரபஞ்சம் சொந்தம் என்பது போல கரைந்து கொண்டிருந்த காகங்களின் சத்தம் அதிகமாகவே இருந்தது.

இவையெல்லாவற்றையும் மீறி எங்கிருந்தோ விட்டு விட்டு ஒலித்த அந்தச் சத்தம் என்னைத் தன்பால் ஈர்த்தது. "அது வானொலியா...!" "இந்த நேரத்தில் எந்த வானொலி...!" எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடும் முனைப்பில்... கேட்கும் திறனையெல்லாம் ஒன்று கூட்டி, ஒரு நிலைப் படுத்தி கூர்ந்து கவனித்தேன். அது வானொலியல்ல. ஒலி பெருக்கி.

எங்கோ தொலைவிலிருந்து காற்று அள்ளி வந்த அந்தத் துண்டுத் துண்டு வாக்கியங்களைக் கோர்த்துப் பார்த்ததில், சிறார்களைப் பள்ளிக்கு அழைப்பது தெரிந்தது. அழியாத செல்வமாம் கல்வியைப் பற்றி குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் விளக்கும் அவசரம் தெரிந்தது. கல்வியின் மகத்துவம் விளக்கப் பட்டது. எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருந்து விடக் கூடாது என்ற கரிசனம் தெரிந்தது. தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் ஒழுங்கு படுத்தலில் UNICEF நிறுவனத்தின் நிதியுதவியுடன் கிராமிய கல்வி பொருளாதார நிறுவனம் நடைமுறைப் படுத்தும் அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாது பயன் படுத்தி விட வேண்டுமென்ற அக்கறை தெரிந்தது.

இந்த அக்கறை, மனிதம் மீதான இந்தக் கரிசனம் வன்னிக்குள் எங்கும் ஒட்டியிருந்தது. சிதைக்கப் பட்ட ஒரு பூமியில் நம்பிக்கை விதை நல்லெண்ணத்தோடு விதைக்கப் பட்டு செழிப்போடு வளர்ந்திருந்தது. அந்த நிர்வாகத்திறன் என்னை வியக்க வைத்தது.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி வன்னிமண் செப்பனிடப் பட்டிருந்தது. நான் நினைக்கிறேன் இலங்கையிலேயே கூடுதலான அங்கவீனர்கள் வன்னியில்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால் வன்னி அவர்களை வீதியில் வீசி எறியாமல் தன்னோடு அணைத்து வைத்திருந்தது. ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்தது.

இந்த மனிதத்தனம், இந்த மனிதநேயம், மக்களோடான இந்த நட்பு, மக்களின் எதிர் காலத்தின் மீதான இந்த அக்கறை இவைதான் என்னுள் சந்தோசப் பிரவாகத்தையும் அளவிலாப் பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்தன. போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பது தெரிந்தது.

தாயக விடுதலைக்காய் தோள் கொடுத்த, கால் கொடுத்த, கை கொடுத்த... போராளிப் பிள்ளைகளைச் சந்திக்கும் போதெல்லாம் வன்னியின் இப்படியான நடப்புக்கள் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் ஆச்சரியம் பற்றிப் பேசினேன். அதனால் ஏற்பட்டிருக்கும் இன்பத் திணறல் பற்றிப் பேசினேன். இவையெல்லாவற்றையும் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன் மிக்க அண்ணனைப் பற்றிப் பேசினேன்.

"அண்ணன்" அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளிலிருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் "அண்ணை" என்றும் "அண்ணன்" என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளை விட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து தளிர்த்து சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. "நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்கு உரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்." எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், அது எனது ஆசை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளாதபடி, பொதுவாகக் கேட்பது போல் "அண்ணனை யாருக்காவது சந்திக்கும் வாய்ப்பிருக்கா..?" என்று கேட்டுப் பார்த்தேன்.

எல்லோரிடமிருந்தும் "அண்ணன் இப்ப பிஸியாக இருக்கிறார். முடியாது." என்ற பதில்கள்தான் வந்தன. "எத்தனையோ பேர் வந்து காத்திருந்து விட்டுப் போய் விட்டார்கள்." என்றும் சொன்னார்கள். அந்தப் பதில்களில் நான் சற்று ஏமாற்றத்தை அடைந்தாலும் எனக்குள் விசுவரூபம் எடுத்த அந்த ஆசையை என்னால் வீசி எறிய முடியவில்லை.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காக தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு பேச வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

"என்ன...! வெளியிலை ஆரும் நிக்கினமே...? விடிஞ்சிட்டே..? "
அருகில் ஆழ்ந்து தூங்கியிருந்த எனது கணவரின் விழிப்போடு வந்த கேள்வியில் நான் நினைவுச் சிறகுகள் அறுபட்டு தொப்பென்று மீண்டும் மரக்கட்டிலில் வீழ்ந்தேன்.

"இல்லை. ஒருத்தரும் இல்லை. எனக்கு மூண்டு மணிக்கே நித்திரை போட்டு."

சொல்லி விட்டு மீண்டும் படுத்தேன். எனக்கு நித்திரை வரவில்லை. மனசு இறக்கை கட்டிக் கொண்டு சிலிர்ப்பு, தவிப்பு, துடிப்பு... என்று பல்வேறு உணர்வுகளுடன் எங்கெல்லாமோ அலைந்தது. இடையிடையே "அண்ணையை எப்படிச் சந்திக்கலாம்! அவர் என்னைச் சந்திக்கச் சம்மதிப்பாரா..?" என்ற கேள்விகளுடன் வெண்புறாவுக்குள் வந்து மரக்கட்டிலில் விழுந்தது.

சந்திரவதனா
யேர்மனி.

- தொடரும் -

பெண்களின் மூக்கு


பழைய செய்திதான் என்றாலும் பகிர்ந்து கொள்கிறேன்.

சில வருடங்களின் முன் பெண்களின் மூக்குக்கா ஆண்களின் மூக்குக்கா சக்தி அதிகம் என்று ஜேர்மனியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியிலிருந்து அறிந்து கொண்ட இரு விடயங்கள்:

1)வியர்வையின் வாசனையை வைத்து அது ஆண்களின் வியர்வையா அல்லது பெண்களின் வியர்வையா என்று கண்டு கொள்ளும் சக்தி பெண்களுக்கு இருக்கிறதாம். அதேநேரம் அது வியர்வையின் வாசனைதான் என்று கண்டு பிடிக்கவே ஆண்களுக்கு ஓரளவு நேரம் தேவைப் படுகிறதாம்.

2)ஆண்கள் சந்தோசமாக இருக்கிறார்களா, பயந்து இருக்கிறார்களா, வெறுப்பாக இருக்கிறார்களா, என்பதை எல்லாம் அவர்கள் மேல் வீசும் வியர்வை வாசனையை வைத்தே பெண்கள் உணர்ந்து கொள்வார்களாம். ஆண்களால் அப்படி முடியாதாம்.

Tuesday, August 01, 2006

போராளிக்கலைஞன், ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு


ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு.இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது. - தொடர்ச்சி

இன்று மேஜர் சிட்டு அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் ‘உயிர்ப்பூ’ படத்தில் இவர் பாடிய ‘சின்னச் சின்னக் கண்ணில்’ என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும். - தொடர்ச்சி

தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன. - தொடர்ச்சி

சிட்டு என்ற அருமையான போராளிப் பாடகனை அறிமுகப்படுத்திய பாடலிது. அதன்பின் ஏறத்தாழ 75 பாடல்களைப் பாடியிருக்கிறார் சிட்டு.01.08.1997 அன்று ஜெயசிக்குறு இராணுவத்தினருக்கெதிரான மூன்றாவது வலிந்த தாக்குதலான ஓமந்தைப் ... மேலும்

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite