Tuesday, August 29, 2017

விமல் குழந்தைவேலின் வெள்ளாவி



ஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்...

இவையெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா?

இவையெல்லாம் விமல் குழந்தைவேல் எழுதிய ´வெள்ளாவி` நாவலில் இறைந்து கிடக்கும் சொற்கள்.

பார்த்தவுடனோ, படித்தவுடனோ எல்லோருக்கும் இவைகளின் பொருட்கள் புரியாவிட்டாலும் கதையின் ஓட்டத்தில் எல்லாவற்றிற்கும் பொருள் புரிந்து விடும். அதுவும் இந்திய வட்டார வழக்குகளையே வாசித்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஈழத்து வாசகர்களுக்கு இதுவொன்றும் பெரும் பிரச்சனையே அல்ல.

முழுக்க முழுக்க பேச்சுத் தமிழில் எழுதப்பட்ட நாவல் வெள்ளாவி. இது மட்டக்களப்பு வட்டார வழக்குத்தமிழா அல்லது தீவுக்காலை, கோளாவில், பனங்காடு போன்ற கிராமங்களில் பேசப்படும் வட்டாரவழக்கா என்பது தெரியவில்லை.

சாதாரணமாக நாவல்களிலோ அன்றில் சிறுகதைகளிலோ ஒருவர் கதைப்பது மட்டுமே அந்தந்த வட்டாரவழக்குகளில் வரும். இங்கு கதை நெடுகிலும் வட்டாரத்தமிழே. அது கதைக்குப் பலமா, பலவீனமா என்பது கூடக் கேள்விக்குறியே. ஒரு வேளை நல்லதமிழில் கதையை எழுதி, பேசும் விடயங்களை மட்டும் பேச்சுத்தமிழில் எழுதியிருந்தால் நாவலின் தரம் பன்மடங்கு அதிகரித்து, ஒரு நல்ல இலக்கியமாகப் பரிணமித்திருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதே நேரம் முழுக்கமுழுக்க பேச்சுத்தமிழில் ஒரு நாவலைப் படிப்பது வும் சுவாரஷ்யமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நேர்த்தியாக எழுதப்பட்ட நாவலென்று அடித்து வைத்துச் சொல்ல முடியவில்லை. கூடவே ஏராளம் எழுத்துப் பிழைகள், இலக்கணப்பிழைகள், வசனப்பிழைகள்.

 **********

கதையின் நாயகி பரஞ்சோதி, எட்டுப் பத்து வயதுப் பெண்களோடு எட்டுக் கோடு விளையாடும் பதினெட்டு வயதுப் பெண்ணாக அறிமுகமாகிறாள்.

பரஞ்சோதியின் அம்மா மாதவி. பேய்வண்ணானின் மகள். சின்ன வயதிலேயே தாயை இழந்தவள். 22வயதில் மச்சான் முறையான செம்பவனோடு பழகியதில் திருமணமாகாமலே கர்ப்பமாகி விட்டாள். இந்த விடயம் பேய்வண்ணானுக்குத் தெரிந்த அடுத்த காலையிலேயே மச்சான் முறையான செம்பவனை முதலை விழுங்கி விட்டது. இந்தக் கவலையில் பேய்வண்ணான் இறந்து போக கர்ப்பம் தரித்திருந்த பரஞ்சோதியின் அம்மா மாதவி தனித்துப் போனாள்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களில் ஒருவரான சலவைத்தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த மாதவிக்கு வறுமைதான் பெரும் சொத்தாகியது. சலவைத்தொழில் மட்டும் செய்து அவளால் வாழ முடியவில்லை. அல்லது வாழ விடவில்லை. அவள் வறுமையில் வாடி தனிமையில் நின்ற போது கொழுகொம்பாக அவளைத் தாங்க எந்த ஆண்களும் முன்வரவில்லை. ஆனால் புறக்கணிக்கப் பட்ட சாதியில் பிறந்த அவளின் உடலை மட்டும் புறக்கணிக்க மறுத்தார்கள் அந்த (உயர்சாதி) ஆண்கள். வறுமை, தனிமை இரண்டுமே அவளைக் கையாலாகாதவளாய் ஆக்கி விட்டிருந்தன.

அம்மா மாதவியின் இந்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் பருவம் பரஞ்சோதிக்கு வந்த போது வீட்டிலே ஒரு போரே தொடங்கி விட்டது. பரஞ்சோதி, தாய் மாதவியோடு சண்டை பிடித்தாள், எரிந்து விழுந்தாள். ஒரு பரம எதிரி போலவே தாயை எதிர் கொண்டாள். தான் தன் தாய் போல வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்தாள். அதனால் பருவமடைந்ததிலிருந்து பதினெட்டு வயது வரை வீட்டுப் படலையைக் கூடத் தாண்டாது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாள். தாய் மாதவி எவ்வளவு கேட்டும் வீடுகளுக்குச் சென்று சலவைக்கான உடுப்புக்களை எடுத்து வரவோ, போடியார் வீட்டுக்குப் போய் வீட்டுவேலைகளுக்கு உதவவோ மறுத்தாள்.

அவளது இந்த வைராக்கியம் வென்றதா அல்லது அவளைச் சுற்றியிருந்த சமூகம், அவள் ஆசைகள், கனவுகள், வைராக்கியம் எல்லாவற்றையும் கொன்று போட்டதா என்பதுதான் கதை.
**********

அந்தக் கதையைத்தான் தீவுக்காலை, கோளாவில், பனங்காடு... போன்ற இடங்களுக்கே வாசகர்களை அழைத்துச் சென்று விமல் குழந்தைவேல் சொல்கிறார். பல இடங்களில் நெகழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.

கண்ணகி மதுரையை எரித்து விட்டு இலங்கையை நோக்கி வந்து குந்திய இடங்கள்தான் இலங்கையில் உள்ள கண்ணகை அம்மன் கோயில்கள் என்றும் எழுதியிருக்கிறார். வாசிக்கச் சுவாரஸ்யம்தான். இது அவரின் கற்பனையா அல்லது எங்கேயும் பதியப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

கதை நகர்த்தலில் சிற்சில குறைகளும் உள்ளன. தான் தாயைப் போல வந்து விடக் கூடாது என்ற மிகுந்த வைராக்கியத்துடன் வாழும் ஒரு பெண், யாரென்றெ தெரியாத ஒருவன் தன்னைப் புணரும் போது, அதுவும் இருட்டில் அவன் முகம் கூடத் தெரியாத போது தன்னை அவனிடம் அர்ப்பணித்து விடுவது என்பது ஏற்புடையதே அல்ல. அதை ஒரு வன்புணர்வு. அவள் விரும்பாமலே நடந்தது என்று சித்தரித்திருந்தால் அது ஒரு நிதர்சனமான சம்பவமாகத் தோன்றலாம். அவள் அதைக் கனவாக நினைப்பது என்பது நிட்சயமாக நடைமுறையுடன் ஒட்டாத ஒன்று.

மற்றும் மாதவி கர்ப்பமாயுள்ளது பேய்வண்ணானுக்குத் தெரியவந்த காலையில் அவள் கர்ப்பத்துக்குக் காரணமான செம்பவனை முதலை விழுங்கி விட்டது என்பதுவும் நாடகம் போலவே உள்ளது. ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று அவன் ஊரை விட்டு ஓடிவிட்டான் என்றிருந்தால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.

இருந்தாலும் காதல், சோகம், கோபம், பாசம், நெகிழ்ச்சி, சில பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள்... என்று மிகுந்த சுவாரஸ்யமான விடயங்கள் கதை நெடுகிலும் இறைந்து கிடக்கின்றன.

எல்லா சுவாரஸ்யமும் முதல் அத்தியாயம் வரைதான். இரண்டாவது அத்தியாயத்தில் விமல் குழந்தைவேல் வாசகர்களை ஏமாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் இயக்கங்கள் முளைத்து விட்டன. ஈழப்போர் தொடங்கி விட்டது. பரஞ்சோதியின் மகன் அரவிந்தனுக்கும் பதினைந்து வயதாகி விட்டது. அதோடு விமல் குழந்தைவேல் கதையையே புரட்டிப் போட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. போர் எமது வாழ்வைப் புரட்டிப் போட்டதுதான். அதற்காக சும்மா எதையாவது எழுதிவிட்டுப் போய் விட முடியாது. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மாபெரும் விடயம். அதை எழுந்தமானத்தில் அல்லது நுனிப்புல் மேய்வது போல் தொட்டு விட்டுச் செல்வது எந்தவகையில் சரியாகும்.

இந்நாவலை இன்னும் பலவருடங்கள் கழித்து வாசிக்கும் ஒருவர், `வீட்டிலே சைக்கிளோ அன்றில் வேறு பிரியமான பொருளோ வாங்கிக் கொடுத்திருந்தால் ஒருவர் விடுதலைப் போராட்டத்துக்குப் போயிருக்க மாட்டார்´ என்று எண்ணக் கூடும். `பரஞ்சோதியின் மகன் சைக்கிளை விற்று காசைக் கொடுத்து விட்டு விடுதலைப் போராட்டத்துக்குப் போய் விட்டான்.´

விமல் குழந்தைவேல் இப்படி எழுதி எத்தனையோ போராளிகளின் தியாகங்களையும், செயற்பாடுகளையும், அவர்களின் உத்வேகங்களையும் நெருப்பில் போட்டுக் கருக்கி விட்டார். அவர்கள் எந்த இயக்கத்தவர்களாய் இருந்தால் என்ன... அவர்களை அர்த்தமற்றவர்களாகவே ஆக்கி விட்டார்.

நாவலை முதல் அத்தியாயத்துடன் நிறுத்தியிருந்தால் நாவல் பேசப்பட்டிருக்கும். ஒரு பதிவாக இருந்திருக்கும். இப்போது...

- சந்திரவதனா
29.08.2017

Friday, July 21, 2017

ஊர்ச்சனம் என்ன சொல்லும்

அவள் முடிவு அவளதாக இல்லாமல் அவர்களானதாக இருந்ததில் அவளுக்கு வலி அதிகமானதாகவே இருந்தது. பெண்விடுதலைக்காய் மேடையில் பேசும் அவளது அம்மாவும் அவள் விடயத்தில் ஊர்ச்சனம் என்ன சொல்லும் என்றுதான் பார்த்தாள். அவள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படப் போகிறாள் என்பதைப் பற்றி அக்கறைப் படவேயில்லை. ஊரெல்லாம் சொல்லிச் செய்த கல்யாணம் அவர்கள் பார்த்துச் சிரிக்கும் படியாக ஆகி விடக் கூடாதே எனபதில்தான் மிகுந்த கவனமாக இருந்தாள்.

சந்திரவதனா
21.07.2017

உரையாடல்

சில வாரங்களுக்கு முன்னர் ஒரு உரையாடலில் கலந்து கொண்டேன். நான் பேசவேயில்லை. கேட்டுக் கொண்டிருந்தேன். அத்தனை சுவாரஷ்யமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைத்தொழில் சம்பந்தமான விடயங்களையும், நாங்கள் மறந்து போய்விட்டவைகளையும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

அதிலே ஒருவர் விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவியில் வரும் சலவைமுறை பற்றியும் குறிப்பிட்டு, பாராட்டினார்.

சில இடையூறுகளினால் தொடராமல் விடப்பட்ட பலவற்றில் வெள்ளாவியும் ஒன்றாய் நின்று விட்டது. சின்னச்சின்னதாக அவ்வப்போது எதையாவது வாசித்தாலும் பெரிய வாசிப்புகளில் சிலமாதங்களாகவே ஈடுபட முடியாதிருந்தது. இப்போது மீண்டும் வெள்ளாவியுடன் ஐக்கியமாகிறேன்.

சந்திரவதனா
20.07.2017

கவிதையும் வாழ்வும்

மழை அழகாய் இருந்தது. சுடும் வெயிலும் கூட அழகாய்தான் இருந்தது. மலர்களும் அழகழகாய் இருந்தன. விழும் இலைகளும் கூட அழகாய்தான் இருந்தன.

கவிதைகள் அழகாய் இருந்தன. வாழ்க்கை மட்டும் கவிதை போல அழகாய் இருக்கவில்லை.

அவள் எழுதிய

நான்
யார் யாருடன் பேசலாம்
யார் யாருடன் பேசக் கூடாது
என்பதையெல்லாம்
அவனேதான் தீர்மானிக்கிறான்

தான்
யார் யாருடனெல்லாம்
உறவு வைத்திருக்கிறேன் என்ற விடயத்தில்
நான் தலையிடவே கூடாது என்ற
நிபந்தனைகளைச் சற்றும் தளர்த்தாமல்...


என்ற கவிதை அழகென்றும், அருமை என்றும் நூற்றுக் கணக்கான பின்னூட்டங்களும், விருப்பக் குறிகளும்.

நிலத்தில் சிதறியிருந்த சோற்றுப் பருக்கைகளையும், சுவரில் ஒட்டியிருந்த மீன்குழம்பின் கறைகளையும் - சமைப்பதற்கு எடுத்த நேரத்தையும் விட, அதிகம் நேரம் எடுத்து துடைத்த அவளது மனதின் வலி பற்றி கவிதை படித்த யாருக்கும் தெரிந்திருக்காது.

எல்லாம் அந்தத் தொலைபேசி அழைப்பால் வந்தது. பார்த்துப் பார்த்து அவனும் இவன் சாப்பிடும் நேரந்தான் அழைக்க வேண்டுமா? அழைத்தவன் அவளது தம்பி வீட்டில் இல்லை என்று அவள் சொன்னதும் பேசாமல் அழைப்பைத் துண்டித்திருக்கலாம்.

„சுகமா இருக்கிறீங்களோ அக்கா?“ என்று சும்மா கேட்டு வைத்தான். „ஓம்“ என்று சொல்லி விட்டு இவளும் இணைப்பைத் துண்டித்திருக்கலாம். சனி எங்கெல்லாம் குந்தியிருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் அவளுக்குத் தெரிவதில்லை. „நீங்களும் சுகமா இருக்கிறீங்கள்தானே..?“ அவள் கேட்டு முடித்தாளோ, இல்லையோ அவளுக்கே இன்னும் தெரியவில்லை. `ணொங்´ என்ற சத்தமும், தொடர்ந்து படாரென்று உடையும் சத்தமும். நெஞ்சு ஒரு தரம் திடுக்கிட்டது. திரும்பினாள்.

நிலமெல்லாம் சோறு. சுவரில் மீன்குழம்பு வழிந்து கொண்டிருந்தது. மீன் துண்டுகள் பிய்ந்து சிதைந்து ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூடவே கீரை, கத்தரிக்காய் வெள்ளைக்கறி... என்று பார்க்கச் சகிக்கவில்லை. அவளால் உடனடியாக பதறலில் இருந்து மீளமுடியவில்லை.

தம்பியின் நண்பனைச் சுகம் விசாரித்ததால் அவனது வாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த வார்த்தைகளில் அவள் ஒரு விலைமாதுவையும் விடக் கேவலமாக உருண்டாள், பிரண்டாள். தாங்க முடியாமல் கூசினாள். கூனிக் குறுகினாள்.

அன்று அவள் சாப்பிடவில்லை. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. மினைக்கெட்டுச் சமைச்சதை கூட்டி அள்ளிக் கொட்டும் போதுதான் மனசுதாங்காமல் ஒரு தடவை அழுது தீர்த்தாள்.

சந்திரவதனா
10.08.2016

இது ரோஜாக்கள் தேசம்


வழி நெடுகிலும் பல பல வர்ணங்களில், பலவகையான ரோஜாக்கள். நான் தினமும் போகும் பாதையில் இச்செடி.

இதைப் பராமரிப்பாரும் இல்லை. பத்தியம் பார்ப்பாரும் இல்லை. மழை, வெயில், பனி, குளிர், காற்று... என்று இயற்கையோடு சங்கமித்திருக்கும் இச்செடியை சும்மா என்னால் தாண்டி விட முடிவதில்லை.

சிவப்பு நிறம் எனக்கு மிகவும் பிடிக்கும். பார்த்துக் கொண்டிருந்தாலே மனதுள் உவகை ஊறும். இந்த சிவப்பு ரோஜாக்களின் அழகை நின்று நிதானித்து பருகிச் செல்கையில் மனம் பட்டாம்பூச்சியாய் மிதக்கும்.

வாய் இருந்தால் வங்காளம் போகலாம்

ஒரு கோடை விடுமுறைக்கு எனது பேத்திகள் பிரித்தானியாவில் இருந்து வந்திருந்தார்கள்.

அன்று நாங்கள் ஒரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்தோம். எங்களுடன் இன்னும் சில உறவினர்களும் சேர்ந்து கொண்டிருந்தார்கள்.

அன்றும் வழமை போல இடையில் இறங்கி கார்களுக்கு பெற்றோல் அடிக்க வேண்டிய தேவையிருந்தது. அதையும் விடப் பெரியதேவை Toilet. இது ஆண்களை விட பெண்களுக்கு அடிக்கடி தேவைப்படும் மிக அவசியமானதொன்று.

ஆரம்ப காலங்களில் நான் இப்படி எங்கு போனாலும் Toilet தேடுவதால் எனது கணவரின் முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். „வெளிக்கிடும் போது வீட்டில் ஒரு தடவை போய் விட்டு வந்திருக்கலாம்தானே“ என்பார். அல்லது „தண்ணீரைக் குறைவாகக் குடித்து விட்டு வந்திருக்கலாம்“ என்பார். தொடர்ந்த காலங்களில் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வரும் அத்தனை பெண்களும் என்னை விட அதிகமாக Toilet தேடியதால் இப்போதெல்லாம் கணவர் எங்கு போனாலும் தானாகவே „அந்தா Toilet இருக்கிறது. போவதானால் போய் விட்டு வா“ என்பார்.

ஜெர்மனியில் அது ஒரு பெரும் வசதி. எங்கு போனாலும் கண்டிப்பாக ஒரு மலசலகூடம் இருக்கும். மலசலகூடங்கள் இல்லாத அறைகளோ, விளையாட்டு மைதானங்களோ, பூங்காக்களோ... எதுவுமே… ஜெர்மனியில் இல்லையென்றே சொல்லலாம். அது விடயத்தில் அவ்வளவு அக்கறையுடன் ஜெர்மனி செயற்படுகிறது.

ஆனாலும் என்ன! ஒரு பிரச்சனை. அதிவேக வீதிகளில் உள்ள பெற்றோல் நிலையங்களிலும், புகையிரதநிலையங்களிலும், இன்னும் சில பொது வெளிகளிலும் உள்ள மலசலகூடங்களின் உள்ளே செல்வதற்கு 50சதம், 80சதம், ஒரு யூரோ என்று அறவிடுவார்கள். அந்தக் காசைப் போட்டால்தான் உள்ளே போவதற்கான கதவு அல்லது தடுப்பு திறக்கும். அவர்கள் அப்படி அறவிடுவதற்கும் ஒரு காரணம். உண்டு. அந்தக் காசை அந்த மலசலகூடங்களைத் துப்பரவாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.

அன்று நாங்கள் போன இடத்தில் 80சதம் போட வேண்டும். நாங்கள் எல்லோரும் தாள்காசுகளைக் கொடுத்து, சில்லறைகளாக மாற்றி, நீண்ட வரிசையில் காத்து நின்று காசைப் போட்டு, உள்ளே போய்க் கொண்டிருந்தோம்.

எனது பேத்தி சிந்துவின் முறை வந்தது. அப்போது அவளுக்கு 12 வய தாக இருந்தது. அவளுக்குக் காசை மெசினுக்குள் போட மனம் வரவில்லை.

அங்கு பொறுப்பாக நின்ற பெண்ணைப் பார்த்துக் கேட்டாள் „கட்டாயம் காசு போட வேண்டுமா ?“ என்று

அந்தப் பெண் சொன்னாள் „போட்டால்தான் நீ உள்ளே போகலாம்“ என்று

சிந்து விடவில்லை. „நான் பிரித்தானியாவில் இருந்து எனது விடுமுறையை அனுபவிக்க உங்கள் ஜெர்மனிக்கு வந்திருக்கிறேன். என்ன..! உங்கள் நாட்டில் Toilet க்குப் போவதற்கும் காசு வசூலிப்பீர்களோ?“ என்று கேட்டாள்.

அந்தப்பெண்ணுக்கு மிகுந்த சங்கடமாகி விட்டது. உடனே தனது திறப்பால் சலூன் கதவு போல இருந்த அந்த ஆடும் சிறிய கதவை திறந்து „நீ காசு தரவேண்டாம். போ“ என்று விட்டு விட்டாள். சிந்து திரும்பி வரும் போது 'உனது விடுமுறையை மிகுந்த சந்தோசமாக அனுபவி" என்று மலர்ந்த முகத்துடன் வாழ்த்தியும் அனுப்பி விட்டாள்.

இதுதான் „வாய் இருந்தால் வங்காளம் போகலாம்“ என்பதோ?

சந்திரவதனா
20.06.2017

Friday, April 28, 2017

வெள்ளாவி - விமல் குழந்தைவேல்

வெள்ளாவி நூலை நூலகத்திலிருந்து தரவிறக்கி வைத்து விட்டு மறந்து விட்டேன். ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் ஞாபகம் வந்து எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். தொடக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது. விமல் குழந்தைவேலுவின் முகப்புத்தகப் பதிவுகளைத்தான் இதுவரை வாசித்திருக்கிறேன். இதுதான் அவரது நான் வாசிக்கும் முதல் நாவல்.

பரஞ்சோதி என்பது ஒரு சிறுமியின் பெயர். எனக்கு அதை ஆண் பெயராகத்தான் தெரியும். ஆனாலும் அச்சிறுமியும், புளியம்மரமும் மனதுள் ஒருவித குறுகுறுப்பையும் ஊர் நினைவுகளையும் கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக அந்தப் பேச்சுத் தமிழ் அருமை.

எங்கு சென்றாலும் நூலைத் தொடரவேண்டும் என்ற ஆவல் மனதுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. மிகவும் நன்றாகத் தொடரும் என்றே நம்புகிறேன்.

சந்திரவதனா
28.04.2017

Tuesday, April 18, 2017

அவனென்ன செத்தா போய்விட்டான்?

நெஞ்சுக்குள் பந்து உருள்வது போலச் சிலசமயங்களில் சில துயரங்கள் எம்மை அழுத்தும். மறந்து விட்டோம் என்று நினைப்பவை கூடச் சிலபொழுதுகளில் கிளர்ந்தெழுந்து எம்மை வாட்டும்.

இதற்கு இதுதான் நியதி. இது மாற்ற முடியாத காயம் என்று தெரிந்தாலும் பேதைமனம், மறுகிக்கொண்டே இருக்கும்.

அப்படித்தான் மனதைத் துயரம் அழுத்தும் ஒரு பொழுதில் அவளின் அறைக்குள் நுழைந்தேன்.

„இதோ பார். எங்கள் Sonnenshine (சூரியப்பிரகாசம்) வருகிறாள். இரண்டு மூன்று நாட்களாக எங்கே போயிருந்தாய்? நீ வந்தாலே எங்கள் அறை ஒளிரும். எப்படி உன்னால் இப்படி எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது..!“

அன்ரோனெலா மூச்சு விடாமல் அடுக்கிக் கொண்டே என்னை வரவேற்றாள். அவளுடன் அவ்வறைக்குள் இருந்த மற்றவர்களும் என்னை இன்முகத்துடன் வரவேற்றார்கள். எனக்கே ஆச்சரியமாகவிருந்தது. ´அகத்தின் அழகு முகத்தில் தெரியும்` என்பார்கள். என் துயரத்தை என் முகம் இவர்களுக்குக் காட்டவில்லையா?

யோசனை ஒரு புறம் இருந்தாலும், அவர்களது வரவேற்பில் என் அகம் குளிரமாலில்லை. துன்பத்தின் மேல் ஒரு மகிழ்ச்சி விரவிப் படர்ந்தது.

சற்று நேரம் அளவளாவினோம்.

வாரஇறுதியில் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தாள். அவளது ஒற்றை மகனால் விழாவுக்கு வர முடியாமற் போய் விட்டது. வரவில்லை. அவளுக்கு அது ஒரு குறைதான். ஒரேயொரு மகன். உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோரும் கூடிக் குதூகலித்திருந்த போது அவன் மட்டும் இல்லை.

சுசானே கேட்டாள் „நீ உன் மகனைக் கண்டிக்கவில்லையா? நீ கவலைப் பட்டிருப்பாய் என்று அவனுக்குத் தெரியாதா?“ என்று

உடனே அன்ரொனெலா மறுத்தாள். „இல்லை. நான் அப்படி ஏதாவது சொல்லி அவனுக்குள் ஒரு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த விரும்பவில்லை. பல்கலைக்கழகப் படிப்பு. நிறையப் படிக்க இருந்திருக்கலாம். வரமுடியாது போனதால் அவனே தனக்குள் வருந்தியிருக்கலாம். பிறகு நானும் சொல்லி அவனை இன்னும் ஏன் வருத்துவான்? முன்னரென்றால் நான் இப்படித்தான் எல்லாவற்றிற்கும் வருந்துவேன். கத்துவேன். சண்டை பிடிப்பேன். வாக்குவாதப் படுவேன். அதனாலேயே மனவுளைச்சலில் அல்லாடுவேன். பின்னர் ஒரு உளவியல் நிபுணர்தான் சொன்னார் „அவனோ அவளோ வரவில்லையென்றோ, பேசவில்லையென்றோ, நீ சமைத்ததைச் சாப்பிடவில்லையென்றோ வருந்தாதே. அவனென்ன செத்தா போய்விட்டான்? எங்கோ சந்தோசமாக வாழ்கிறான்தானே“ என்று. அதற்குப் பிறகு நான் இப்படியான விடயங்களுக்காக பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை“ என்றாள்.

உண்மைதான். இப்படியான விடயங்களுக்காக மனதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லைத்தான்.

இருந்தாலும் அவனோ அல்லது அவளோ எம்மிடையே மிகச்சாதரணமாகச் செத்துத்தான் போகிறார்கள் என்பதை அவளுக்கோ, மற்றவர்களுக்கோ சொல்லாமல், சிரித்துக் கொண்டே விடைபெற்றேன்.

சந்திரவதனா
18.04.2017

Tuesday, April 11, 2017

வார இறுதியில் 3 தமிழ்ப்படங்கள் பார்த்தேன் (Revelations)



Netflix இல் நான்கு தமிழ்ப்படங்கள் போட்டிருந்தார்கள்.

விசாரணை, ரேடியோப்பெட்டி, நிலா, Revelation. விசாரணை ஏற்கெனவே பார்த்ததுதான்.

அதனால் ரேடியோப்பெட்டி, நிலா, Revelation மூன்றையும் நாளுக்கொன்றாய்ப் பார்த்தேன்(தோம்). மூன்றும் வெவ்வேறு கோணத்தில் அமைந்த கதைகள். மிகச்சாதாரணமாகச் சொல்லப்படுகின்றன.

நன்றாக இருந்தன.

ரேடியோப்பெட்டி - மகனால் உதாசீனம் செய்யப்பட்ட தந்தையை (+தாயையும்) மையப்படுத்திய கதை.

நிலா - ஒரு ரக்சி ரைவரையும், அவனுக்குப் பிரியமானவளையும் மையப்படுத்திய கதை.

Revelation - இந்த மூன்றிலும் சற்று அதிகமாக எனக்குப் பிடித்த படம். பாத்திரங்கள் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறார்கள். கதை பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்ல விரும்பவில்லை, இன்னும் பார்க்காதவர்களுக்காக.

11.04.2017

Sunday, January 15, 2017

பிட்டு

சனி எங்கெங்கெல்லாம் குந்தியிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அவருக்கு அன்று அவரது இரவுச்சாப்பாட்டில் குந்தியிருந்ததோ?

அவர் எங்கள் குடும்ப நண்பர். கடந்த சனிக்கிழமை, கனடாவிலிருந்து எனது கணவருடன் தொலைபேசிக் கொண்டிருந்தார். திடீரென எனது கணவர் என்னைக் கூப்பிட்டு „நீயும் ஒரு ஹலோ சொல்லி விடு“ என்று சொல்லி தொலைபேசியை என்னிடம் தந்தார்.

இரண்டு கதை கதைத்ததும் அந்நபர் கேட்டார். „அந்தப் புட்டு எப்பிடி அவிக்கிறனிங்கள்? என்ரை மனிசியின்ரை புட்டு இங்கை நல்ல பேமஸ். எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால்... உங்கட புட்டு... நல்ல சின்னச் சின்னதா, மெதுமையா...“ அவர் 3 வருடங்களின் முன் விடுமுறைக்கு வந்து எம்மோடு நின்று போனவர்.

எனக்குச் சங்கடமாக இருந்தது. அவர் குறிப்பிட்டது எனது கோதுமைப் பிட்டைத்தான். நான் ஒன்றும் பெரிய வேலைகள் பார்ப்பதில்லை. அரை மணித்தியாலத்துக்கு மாவை அவிய விட்டு அரித்து வைத்து விட்டேன் என்றால் நினைத்த உடன் பிட்டை அவித்து விடுவேன். அவசரசமான நேரங்களிலெல்லாம் பிட்டையே அவித்து விடுவதால் எனது கணவர் எனக்கு செம்மனச்செல்வி என்று பெயர் வைத்திருப்பது தெரியாதவர்கள் என் பிட்டைச் சாப்பிட்டு விட்டு பாராட்டாமல் சென்றதில்லை.

தேங்காய்ப்பூவையும் எனது கணவரே துருவித்தர குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக வைத்தெடுத்து, கொதிதண்ணியில் மாவைக்குழைத்து, அந்தத் தேங்காய்ப்பூவைப் போட்டு பிட்டு அவிப்பேன்.

„சும்மா சாதாரணமாக எல்லோரையும் போலத்தான் அவிக்கிறேன்“ என்று சொன்ன பின், சரி இவவோடையும் கதையுங்கோ என்று சொல்லி தொலைபேசியை அவவிடம் கொடுத்... வாங்கினாவா, இல்லையா தெரியவில்லை.

„ணொங்“ என்ற சத்தம். தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

எனது கவலையெல்லாம், அன்று அவருக்கு அவரது மனுசியின் அந்த அருமந்த பிட்டு கிடைக்காமல் போயிருக்கும்

சந்திரவதனா
10.01.2017


https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154387893812869

I Want Wish You A Merry Christmas (Jose Feliciano - Feliz Navidad)

நத்தார் வருகிறது என்று சொல்லி செப்டெம்பரிலேயே கடைகளில் இனிப்புப் பண்டங்களும், பரிசுப் பொருட்களும் என்று விற்பனைகள் தொடங்கின. நத்தார்தினம் நெருங்க நெருங்க அதே பேச்சு. அதே மூச்சு… என்று ஏக அமர்க்களம்.

எல்லாம் நத்தார் தினத்தோடு அப்படியே வடிந்தோடி விட்டன. அது பற்றிப் பேசுவாரில்லை. அவரவர் தம்பாட்டில் தத்தமது வேலைகளில் மூழ்கி விட்டார்கள்.

ஆனாலும் எனது நண்பியொருத்தி நத்தார் தினத்தன்று எனக்கு அனுப்பி வைத்த இந்த வீடியோவைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் மனதுள் ஒரு மகழ்வுத் தூறல்.

.

சந்திரவதனா
02.01.2017

Tuesday, January 10, 2017

Happy New Year



Happy New Year
Happy 2017


சந்திரவதனா
31.12.2016

Ethanai Manitharkal Ulagathile



எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே...

ஏழையின் உறக்கங்கள் பாதையிலே - அந்த
மாளிகை மயக்கங்கள் போதையிலே

யாரோ ஒருவன் தோட்டமிட்டான் - அதில்
யாரோ பலனை அநுபவித்தார்

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கெல்லாம் நன்றி

ஒரே திக்குமுக்காட்டமாய் இருக்கிறது.

வந்து குவிந்திருக்கும் அன்பு வாழ்த்துகளுக்கெல்லாம் எப்போ லைக் போட்டு, எப்போ நன்றி சொல்லி...

உண்மையிலேயே ஒரு குழந்தையைப் போல மிக மகிழ்ந்தேன். இத்தனை நட்புகளா என்று மனங் குளிர்ந்தேன். எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல நேரம் வாய்க்கும் என்று நம்புகிறேன்.

அதுவரைக்கும் என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கெல்லாம் என் நெஞ்சார்ந்த நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரவதனா
14.12.2016

எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன்!



அப்போது எனது அப்பா மருதானை புகையிரத நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கென ஒதுக்கப் பட்ட ரெயில்வேக்குச் சொந்தமான வீடு வத்தளையில் இருந்தது. கர்ப்பப்பையில் என்னைச் சுமந்திருந்த அம்மா தவறுதலாக வீழ்ந்ததில் மேல் மாடியிலிருந்து இருந்து கீழ்மாடிக்குரிய படியில் உருளத் தொடங்கி விட்டா. கடைசிப்படியில் உருண்ட போது நினைவை இழந்து விட்டா. அதன் பலனாக அவசரமாக மருத்துவமனை. அதே வேகத்துடன் பருத்தித்துறை வந்து சேர்ந்து மந்திகையில்தான் அவசரமாக எட்டுமாதக் குழந்தையாகப் பிறந்தேன். சரியாக ஒரு மாதம் மூச்சைத் தவிர வேறெந்த சத்தமும் இன்றி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்திருக்கிறேன். உயிரோடு வாழ்வேனா, என்று அம்மாவும், அப்பாவும் மற்றைய உறவுகளும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 57வயதுகள் வரை வாழ்ந்து விட்டேன்.

சந்திரவதனா
11.12.2016


https://www.facebook.com/photo.php?fbid=10154296292837869&set=a.427273142868.208326.610002868&type=3&theater

ஜெயலலிதா


ஆற்றாமையில் மனம் துடிக்கவில்லை. அழுது வடிக்கவில்லை. வருத்தம் என்றறிந்த போது கூட மனம் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்தத் துடிப்பான பெண்ணின் துடிப்படங்கி விட்டது என்ற செய்தியில் மனம் துயர் கொள்ளத் தவறவில்லை.

என் பதின்மங்களில் எங்கிருந்தோ வந்தாள், சவாலே சமாளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, மாடிவீட்டு மாப்பிள்ளை, ராமன் தேடிய சீதை... என்று பல படங்கள் மூலம் என்னைக் கவர்ந்த, நான் எனக்குள் பதிந்து வைத்திருந்த அம்முக்குட்டியை, இந்திய முதல் அமைச்சராக தொலைக்காட்சிகளிலும், செய்திகளிலும் பார்த்த போதிலெல்லாம் அந்த அம்முக்குட்டிதான் இந்த ஜெயலலிதா என்று என்மனம் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை.

மரணம் இயல்பானது தான். இயற்கையானது தான். தவிர்க்க முடியாததுதான். ஆனாலும் அத்தனை சுலபமாக அதைக் கடந்து விட முடிவதில்லை.

ஒவ்வொரு மரணமும் மனதில் துயரை அப்பி விட்டு, தம்பாட்டில் சென்று கொண்டிருக்கின்றன.


சந்திரவதனா
06.12.2016

Tuesday, January 03, 2017

அப்பால் ஒரு நிலம்

வாசிப்பின் அலாதியான சுகத்தை சுகித்தவாறே குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலத்தை` வாசித்துக் கொண்டிருக்கிறேன். 

மற்றவர்களைப் போல என்னால் ஒரு புத்தகத்தை மிக வேகமாக வாசித்து விட முடியாது. நான் வாசிக்கும் போது சில பக்கங்களையும், சில பந்திகளையும், சில வசனங்களையும் திரும்பத் திரும்ப வாசித்து, சுகித்துக் கொள்வேன். அதனால் ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்து முடிக்க எனக்கு நிறைய நேரங்கள் தேவைப்படும்.


குணா கவியழகனின் கதை சொல்லும் உத்தி சற்று வேறானது. மிகுந்த சுவாரஸ்யமானது. கதைக்களம் போர்க்களமாக இருப்பதால் அது தரும் உணர்வுகளும் வேறானவை.


„நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என செல்வம் அருளானந்தம் எழுதித் தீராப் பக்கங்களில் எழுதியதை வாசித்து வயிறு குலுங்கச் சிரித்தேன். பிறகும் நினைத்து நினைத்துச் சிரித்தேன். இதே „நாறல் மீனைப் பூனை பார்த்த மாதிரி...“ என்று குணா கவியழகன் எழுதியதைப் படித்துச் சிரிக்க முடியவில்லை. இங்கு பூனையாக இலங்கை இராணுவமும், நாறல் மீனாக இராணுவத்திடம் பிடிபட்ட வீரன் என்ற கதையின் நாயகனும்... அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


கூடவே கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ வையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் நான் வாசித்த கதைகள் பற்றிய சிந்தனைகள் எழும் போதெல்லாம் கவிதாவுக்கு அந்த நேரத்தில் எப்படி இப்படியான சிந்தனைகள் எழுந்தன என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன. கதையின் நாயகர்களும், கருக்களும் எங்கிருந்து கவிதாவுக்குக் கிடைத்தார்கள் என்பதை ஆறுதலாகக் கவிதாவிடமே கேட்க வேண்டும். புத்தகத்தை முழுதாக வாசித்து விட்டுக் கேட்கலாமென்றிருக்கிறேன்.


ந்திரவதனா
29.11.2016
   


https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10154255566952869?pnref=story

அந்த மௌன நிமிடங்களில்..!


அன்று தம்பி வந்து நின்றதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாய் இருந்தது. நானும் தங்கைமாருமாக அவனுடன் கதை கதையென்று கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் சந்தோஷத்தைப் பார்த்து அம்மாவும் சந்தோஷத்தோடு, தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தா. தம்பி அப்போது அனேகமான பொழுதுகளில் சென்றிக்கு நின்று ஆமியை உள்ளே வராமல் பார்த்துக் கொள்ளும் பணியில் இருந்தான். அத்தோடு விடுதலைப்புலிகளின் நியாயவிலைக் கடையையும் பொறுப்பாக நின்று நடாத்திக் கொண்டிருந்தான்.

அவன் வீட்டில் இருக்கும் போது படுக்க ஒரு தலையணி காணாதென்று சண்டை பிடித்து, காலுக்கு, கையுக்கு, தலைக்கு என்றெல்லாம் தலையணி வைத்துப் படுப்பான். கிணற்றில் தண்ணீர் அள்ளும் வேலையைத் தவிர வேறொரு வேலையும் செய்ய மாட்டான். பெரிய ஸ்ரைல் பார்ப்பான். கண்ணாடிக்கு முன்னால் மணிக்கணக்காய் நின்று தலைமயிரை அழகு படுத்துவான். நல்ல உடுப்புகள் மட்டுந்தான் போடுவான். இப்போ அவன் சைக்கிளில் பின்னுக்குக் கரியர் பூட்டி, கரியரில் ஒரு பக்கீஸ் பெட்டி கட்டி, அதனுள் நியாயவிலைக்கடைச் சாமான்களைக் கொண்டு போவதைப் பார்த்து எங்களுக்கு ஒரு புறம் சிரிப்பும், மறுபுறம் கவலையும் வரும். இப்போதும் அதையெல்லாம் சொல்லி அவனைப் பகிடி பண்ணிக் கொண்டிருந்தோம்.
அந்த மௌன நிமிடங்களில்..!

சந்திரவதனா
27.11.2016
 

இவர்கள் எல்லாம் யார் ?

ஒரு பெண்ணை வே... என்றழைக்கும் ஆண்களைப் பார்த்தால் எனக்கு அடித்து நொருக்க வேண்டும் போலிருக்கும். எந்தவிதக் கூச்சமுமின்றி கண்ட நிண்ட பெண்களுக்கெல்லாம் வலை விரிக்கும் ஆண்களில் சிலர், வாய் கூசாமல் அவள் ஒரு .... என்று சொல்லும் போது, எனக்கே எனக்கான பெரும் பொறுமையை நான் இழந்து விடுவேனோ என்று அச்சம் கொள்வேன். அவ்வளவு கோபம் வரும் எனக்கு. இவர்கள் எல்லாம் யார் ஒரு பெண்ணுக்கு அப்படியொரு பெயரைச் சூட்டிவிட? 

சந்திரவதனா 
22.11.2016

எழுதித் தீராப் பக்கங்கள்


மனம் விட்டுச் சிரிப்பதனால் மனமும் உடலும் மிகவும் இலேசாகின்றன. மனிதன் மிகவும் உற்சாகமடைகின்றான். இன்றைய இறுக்கமான உலகில் நாம் எத்தனை தடவைகள் அப்படி மனம் விட்டுச் சிரிக்கிறோம்?

எங்காவது யாராவது சிரித்துக் கொண்டாடும் போது கூட, சிலர் கேட்பார்கள் „இருக்கிற பிரச்சனைக்குள்ளை இந்தக் கூத்தும் கும்மாளமும் அவசியமோ?“ என்று. அவர்களெல்லோரும் என்ன நினைக்கிறார்கள், மனிதர்கள் துன்பங்களையே நினைந்து நினைந்து அழுது புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்றா? இன்பங்களை விடத் துன்பங்களே அதிகமாகத் துரத்தியடித்த எங்கள் வாழ்வில் மனதை இலேசாக்கும் நகைச்சுவைகளும், சிரிப்புகளும் அவசியமானவையே.


இந்த நிலையில் செல்வம் அருளானந்தத்தின் „எழுதித் தீராப் பக்கங்கள்“ குறிப்படத்தக்கதொரு நூலாக, வரப்பிரசாதமாக எமக்குக் கிடைத்துள்ளது. இதை வாசிப்பவர்கள் தொடர் நெடுகிலும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எந்தக் கஷ்டத்தையும், அழுது வடிக்காமல் நகைச்சுவையுடன் சொல்லி விடும் பாங்கு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அது செல்வம் அருளானந்தத்துக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.


இந்த நூலின் சிறப்பு என்னவென்றால் வெறுமே புனையப்பட்டதாகவோ அன்றில் வேண்டுமென்றே வலிந்தெழுதப் பட்டதாகவோ இல்லாமல் தன்பாட்டில் அது ஒரு பெரும் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு செல்கிறது. ஆனாலும் அடக்க முடியாமல் சிரிப்பு வருகிறது. அல்லல்களையும், அவதிகளையும் கூட இத்தனை சுவாரஸ்யமாக வயிறுகுலுங்கச் சிரிக்கும் படியாக எழுதி விடலாம் என்பதை செல்வம் அருளானந்தம் நிரூபித்துள்ளார்.


2016 இல் வெளிவந்த ஈழத்துப்படைப்பாளிகளின் நூல்களில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகவும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆரம்பகால வாழ்க்கையையும், அவர்கள் அநுபவித்த அல்லல்களையும் மிக யதார்த்தமாகவும், நகைச்சுவை ததும்பவும் கூறிய நூல்களில் மிகமுக்கியமானதொரு பதிவாகவும், தொகுப்பாகவும் `எழுதித் தீராப் பக்கங்கள்` பரிணமிக்கிறது.
பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயரும் வரையான காலத்தின் பதிவுகளை ஊர் நினைவுகளும் கலந்து எள்ளலும், நொள்ளலுமாய் செல்வம் அருளானந்தம் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களைக் கோர்த்து விடுகிறார். 240 பக்கங்களைக் கொண்ட இந்நூலை ஒரு சாதாரண நினைவுக்குறிப்பு என்று சொல்லி விட்டு நகர்ந்து விட முடியாது. இது கலாச்சாரம், பண்பாடு, மொழி, காலநிலை... என்று எல்லாமே மாறுபட்ட ஒரு நாட்டுக்குள் அகதியாக நுழைந்து எந்தவித முன்னனுபவமுமின்றி வாழ்வைத் தொடங்கிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பற்றியதொரு ஆவணப்பதிவு.


நீண்டு கொண்டிருக்கும் புலப்பெயர்வில் ஒவ்வொரு காலத்துக்குமான புலம்பெயர்ந்தோரின் வெளிநாட்டு அனுபவங்கள் மாற்றம் கண்டு கொண்டே போகின்றன. இன்று புலம்பெயர்பவர்களுக்கு ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோரின் அவலங்களோ, அவர்கள் பட்டபாடுகளோ தெரியாது. அது ஒரு பதிவாகியது மிகமிக வரவேற்கத் தக்கது.
ஊர், உறவுகள், அம்மா, அப்பா, சுற்றம் என்ற கட்டுக்கோப்புக்குள் வாழ்ந்து விட்டு திடீரென்று இந்த ஒருவரது கட்டுப்பாடும் இல்லாத ஒரு இடத்தில் கட்டுடைத்து மதுப்போத்தல்களுடன் ஆராவாரித்ததையும், ஆடிப்பாடியதையும், மங்கையரைக் கண்டு மனம் பேதலித்தையும் கூட செல்வம் அருளானந்தம் பதியத் தவறவில்லை.


இதில் அவர் தன்னை ஒரு ஹீரோவாகவோ, தீரனாகவோ பதியவில்லை. தானும் ஒரு சாதாரண எல்லோரையும் போன்றவன் என்பதாகவே பதிந்துள்ளார். அதுவே இந்த நினைவுப்பகிர்வுக்கு பெரும் பலமாக அமைந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.
கதை நெடுகிலும் சொரிந்து கிடக்கிறது சிரிப்பு. ஆழ்ந்து நோக்கின் சிரிப்பினுள்ளே உறைந்து கிடக்கிறது துயர்.


செயின் ஆற்றை விட்டுச் செல்வம் அருளானந்தம் கனடா நோக்கிப் பறக்கும் போது மனம் கனத்துப் போகின்றது.


சந்திரவதனா
21.11.2016


(எழுதித் தீராப் பக்கங்கள் பற்றி சிறியதாகவும், பெரியதாகவும் என்று 3 தடவைகள் எழுதி விட்டேன். அத்தனை தூரம் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருக்கிறது. நகைச்சுவைகளை நான் எப்போதும் ரசிப்பேன். அழுகுணிப் படங்களை விட சிரிக்க வைக்கும் படங்களையே நான் பெரிதும் விரும்புவேன். அழுவதற்காக, மனம்வருந்துவதற்காக என் பொழுதைச் செலவழிப்பதை விட சிரித்து மகிழப் பொழுது கிடைத்தால் அது பெரும் வரமல்லவோ. அப்படியொரு வரமாக எனக்கு எழுதித் தீராப் பக்கங்கள் கிடைத்தது.)

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்கள்

ஒரே நேரத்தில் ஐந்தாறு நூல்களைப் படிப்பது நல்லதோ கெட்டதோ தெரியவில்லை. என் வரையில் அது எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போதுதான் செல்வம் அருளானந்தத்தின் `எழுதித் தீராப் பக்கங்கள்´ வாசித்து முடித்தேன். எழுதித் தீராப் பக்கங்கள் சில வாரங்களாக நான் போகுமிடமெல்லாம் என்னோடு பயணித்தது. சிரிக்காமல் அந்தப் புத்தகத்தைக் கடக்கவே முடியாது. ஒரு தரம் மருத்துவரிடம் காத்திருந்த போது 98ம் பக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். 


///அவன் எங்களை மேலும் கீழும் வினோதமாய்ச் செவ்வாய்க்கிரக உயிரினங்களைப் பார்ப்பதைப் போல் பார்த்து விட்டு „நீங்கள் வேறுநாட்டிலை இருந்து வந்த ரூறிஸ்டோ?“ எனக் கேட்டான். 

 
„இல்லை கொஞ்ச நாளைக்கு முதல் வந்த இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள்“
இப்போ எங்களை நாறல் மீனைப் பூனை பார்ப்பது போலப் பார்த்தான்.///


கேட்டதும் ஒரு இலங்கைத் தமிழன்தான். என்னையறியாமல் `களுக்´ கென்று சிரித்து விட்டேன். அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவர்கள், புத்தகங்கள் கொண்டு வந்து வாசித்துக் கொண்டிருந்தவர்கள், அங்குள்ள பத்திரிகை, சஞ்சிகைகளைப் புரட்டிக் கொண்டிருந்தவர்கள் என்று எல்லோரும் சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்தார்கள். அசடு வழிய வேண்டியதாயிற்று.


சற்று நேரங்கழித்து ஒரு பெரியவர் கேட்டார். „ஏதாவது Comedy வாசிக்கிறியோ?“ என்று. „இல்லை, ஒரு பெரும் அவலத்தை ஒருவன் இப்படிச் சிரிக்கும் படியாக எழுதியுள்ளான்“ என்றேன். „அப்படியென்ன எழுதியிருக்கிறான்?“ என்று மீண்டும் கேட்டார். „இது தனியொருவன் கதையல்ல. சொந்த நாட்டை விட்டு இங்கு வந்து நாய் படாப் பாடுபட்ட ஆரம்ப கால இலங்கைத் தமிழரின் கதை“ என்றேன். „ஜெர்மனிய மொழியில் கிடைக்குமா?“ எனக் கேட்டார்.


*************


எழுதித் தீராப் பக்கங்களை வாசித்து முடித்து விட்டேன்தானே என்று தள்ளி வைக்க முடியவில்லை. மீண்டும் ஒருதரம் வாசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதனால் அதை வாசிக்க வேண்டிய புத்தகங்களோடு வைத்து விட்டு குணா கவியழகனின் ´அப்பால் ஒரு நிலம்` நூலைத் தொடர்கிறேன். அதோடு முடியும் தறுவாயில் இருக்கும் தமிழினியின் `ஒரு கூர்வாளின் நிழலில்´ மைக்கேல் பரிந்துரைத்த குமார் மூர்த்தியின் `முகம் தேடும் மனிதன்´ (மின்னூல்), Sim Hanifa அறிமுகம் செய்த (ஏற்கெனவே 2004 இல் பத்மாநாபஐயர் அறிமுகம் செய்திருந்தும் நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட) கவிதாவின் `யுகங்கள் கணக்கல்ல´ (மின்னூல்) என்று எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
இவைகளோடு மைக்கேல் பரிந்துரைத்த Im Western nichts Neues (அகதி, All quiet on the Western Front, by Erich Maria Remarque) ஐயும் ஒலிப்புத்தகமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


இன்னும் உமையாழ் குறிப்பிட்ட கண்டிவீரன், பொன் குலேந்திரனின் அறிவியற்கதை, நேற்று மின்னஞ்சலில் வந்த சொல்வனம் 161, வானவில் போன்றவற்றிலும் சிலதைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். 


கற்றுத் தந்த ஆசிரியர்களைப் போல நல்ல நூல்களை அறிமுகப்படுத்தும் நண்பர்களையும் நான் மதிக்கிறேன். நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.


சந்திரவதனா
17.11.2016

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite