Thursday, November 17, 2016

இராஜன் முருகவேல் (சோழியான்)

 
முகம் தெரியாத உறவுகளுக்காக மனம் கலங்குவதும் வாழ்வில் சாத்தியமாகிறது.

உலகப்பந்தின் முன் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தோடுதான் இராஜன் முருகவேல் யாழ் இணையத்தில் சோழியானாக எனக்கு அறிமுகமானார். அது 2001 என்று நினைக்கிறேன். இணையத்துக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த ஆரம்பப் பொழுது. எப்போதும் கருத்தாடல், கருத்து மோதல் என்று நேரம் காலம் பாராது அதே தியானமாய் இருந்து எழுதித் தள்ளினோம். அப்போது யாழ்கருத்துக்களத்தில் எழுதியவைகள் எல்லாவற்றையும் தொகுத்தாலே சில நூல்களை உருவாக்கி விடலாம்.

இராஜன் முருகவேல் உருவாக்கினார். எனது படைப்புகளில் 25 படைப்புகளைத் தேர்ந்தெடுத்து „பதியப்படாத பதிவுகள்“ என்ற பெயரில் ஒரு மின்னூலை உருவாக்கினார். அதை 30.10.2004 இல் தனது தமிழமுதம் என்னும் இணையத்தளத்திலும் வெளியிட்டு வைத்தார். இத்தனைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. தொலைபேசியதுமில்லை. மின்னஞ்சல் தொடர்புகள் கூட இருந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் பொதுவெளியில் பேசிக்கொண்டவைதான்.


இணையம் என்னும் பெருவெளி இன்றெமக்கு பல நட்புகளைத் தந்திருக்கிறது. „அது நட்பே அல்ல, அது உறவே அல்ல“ என்று வாதிடுபவர்களும் உள்ளார்கள். 


எப்படித்தான் யார் வாதிட்டாலும் சோழியான் என்று எம்மால் நன்கு அறியப்பட்ட இணையம் தந்த நண்பன் இராஜன் முருகவேலின் இறப்புச் செய்தி என்னுள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தத்தான் செய்தது. கேட்டதும் ஆற்றாமையினால் புரண்டெழுந்து அழுது புலம்பாவிட்டாலும் மனம் வலிக்கத்தான் செய்தது.


சோழியானுடனான நட்பு கிட்டத்தட்ட 15 வருடங்கள் நீண்டது. ஆரம்பத்தில் நாங்கள் யாழ் கருத்துக்களத்தில் நிறையவே பேசினோம். கருத்திட்டோம். எதிர்வாதம் புரிந்தோம். ஆனாலும் நண்பர்களாகவே இருந்தோம். ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த பூவரசு இதழில் இன்னும் இருவருடன் இணைந்து நால்வராக „இனி அவர்கள்“ என்றதொரு நெடுங்கதையும் எழுதினோம். தொடர்ந்த காலங்களில் பிறந்தநாட்கள், பெருநாட்களிலாவது வாழ்த்தைத் தெரிவித்து எமது நட்பை உறுதிப் படுத்திக் கொண்டே இருந்தோம்.


இராஜன் முருகவேல் எப்போதும் எழுதிக் கொண்டே இருந்தார். அவரது எழுத்தில் எப்போதும் ஒரு பண்பு இருக்கும். தேவையற்ற வார்த்தைகள் எதுவும் இராது. நகைச்சுவை கண்டிப்பாகக் கலந்திருக்கும். இணைய அரட்டைகளை முன்வைத்து எழுதிய அவரது ஐஸ்கிறீம் சிலையே நீதானே... குறிப்பிடத்தக்கது. இன்னும் பல எழுதினார். அவர் தொகுத்து தனது இணையத்தில் வெளியிட்ட ஈழத்துப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. இன்னும்... இன்னும்… அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.


எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.


வருந்துகிறேன் சோழியான்! உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!


சந்திரவதனா
16.11.2016

என் தம்பியர்


அன்றொரு பொழுதில் ஈழம் வென்று தருவதாகச் சொல்லிச் சென்றனர் என் தம்பியர். இன்றவர்கள் இல்லை. நின்றாடுவது ஈழக்கனவும் அவர்கள் பற்றிய நினைவுகளுமே!

சந்திரவதனா
11.11.2016


https://www.facebook.com/search/top/…

மனசு விசித்திரமானது

மனசு விசித்திரமானது.
யாரை உள்வாங்கும் யாரைப் புறந்தள்ளும் என்பது அதற்கே தெரிவதில்லை. சிலரை மட்டும் நெஞ்சிருத்தி வைத்திருக்கும்


சந்திரவதனா
08.11.2016  

காதலையும், கவிதையையும்

காதலையும், கவிதையையும் முகநூலில் கொட்டும் ஆண்கள், அவைகளைத் தமது மனைவியரிடமும், பெண்கள் தமது கணவர்களிடமும் கொட்டினால் வாழ்க்கை எவ்வளவு அழகாக இருக்கும்.

சந்திரவதனா
28.10.2016 

KG பேனா

திருடன் மணியன்பிள்ளை பற்றிய குறிப்புகளைப் படித்ததிலிருந்து எனது பாடசாலைத் தோழி ஒருத்தி நினைவில் வந்து கொண்டிருக்கிறாள். அப்போது எனக்கு அவள் மேல் கோபம் இருந்தது. என் KG பேனா களவு போய் விட்டதில் மிகுந்த வருத்தம் இருந்தது. 

பின்பொரு சமயத்தில் அவளுக்காக வருந்தினேன். அப்பா இல்லாதவள். என் பேனாவை அவள்தான் எடுத்தாளா என்பது எனக்கு இன்னமும் சரியாகத் தெரியாது. 

ஒருவேளை எடுத்திருந்தாலும், ஒரு போதும் அதைப் பாடசாலைக்குக் கொண்டு வந்து எழுதவோ, „நானும் KG பேனை வைத்திருக்கிறேன்“ என்று சொல்லித் தம்பட்டமடிக்கவோ முடியாத நிலையில் தவித்திருந்த துர்ப்பாக்கியவதி.

சந்திரவதனா
20.10.2016


http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=158%3Akg-&catid=39%3A2009-07-02-22-34-59&Itemid=15

Friday, October 21, 2016

ஒரு கூர்வாளின் நிழலில்


எவ்வளவு சுலபமாக நாம் சிலதை மறந்து விடுகிறோம். இணையமோ, முகநூலோ இல்லையென்றால் இன்றையநாள் தமிழினியின் நினைவுநாள் என்பதை நான் நினைத்திருக்க மாட்டேன்.

நாங்கள் சாதாரணமனிதர்கள்தான். எங்களால் மட்டுமே ஒருவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடவும், நினைத்த மாத்திரத்தில் தூக்கியெறிந்து விடவும் முடியும்.

தமிழினி என்ற ஆளுமையை நான் அண்ணாந்து பார்த்தது ஒரு காலம். சிறையிலிருந்து வெளியில் வந்த பின் அவளது புகைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து அவள் கண்கள் என்ன சொல்ல விளைகின்றன என விடை தேடியது இன்னொரு காலம். முகநூலில் அவளது ஆக்கங்களைப் படித்து, விமர்ச்சித்து நட்பாக இருந்தது சொற்பகாலம். மிகமிகச் சொற்பகாலம்.
அவள் இறந்த பின்தான் அவளைப் பற்றியிருந்த நோய் பற்றி அறிந்து அதிர்ந்தேன்.
`ஒரு கூர்வாளின் நிழலில்´ வாசிக்கத் தொடங்கி, சில பக்கங்களுடன் எனது கண்களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக (https://www.facebook.com/chandravathanaa.selvakumaran/posts/10153911735227869) நின்று போயிருந்தது. அதனால் அது பற்றிய சர்ச்சைகள் எதற்கும் நான் இதுவரை பதிலளிக்கவில்லை. 

இன்னும் தமிழினி பற்றி பல்வேறு கசப்பான கருத்துக்கள். அதன் மீதான உண்மைகள், பொய்கள்... போன்றவற்றிலான ஆராய்ச்சிகளும், கேள்விகளும் மனதை ஒரு புறம் குடைந்தாலும், அவள் பற்றிய நினைவுகள் தோன்றும் போதெல்லாம் எனக்குள் தோன்றும் வேதனை இன்றும் என்னை ஆக்கிரமித்திருக்கிறது. 

மீண்டும் `ஒரு கூர்வாளின் நிழலை´க் கையில் எடுத்துள்ளேன். வாசித்த பின்னர்தான் அது பற்றிப் பேசமுடியும்.

சந்திரவதனா
18.10.2016

Monday, October 17, 2016

வயிற்றுக்காகத் திருடுபவர்கள்

உருளைக்கிழங்கு களவெடுத்ததற்காக இரு மனிதர்களை பெற்றோலோ அன்றி வேறேதோ ஊற்றி உயிரோடு கொளுத்தினார்கள் சிலர். அதை வேடிக்கையாகவும், வினையாகவும் பார்த்துக் கொண்டு நின்றார்கள் இன்னும் சிலர். பார்த்துக் கொண்டு நின்ற அத்தனை பேரும் ஒன்றிணைந்து தடுத்திருந்தால் அந்த உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

உருளைக்கிழங்கைத் திருடிய திருடர்கள்தானே! எப்படிக் கொடூரமாய்ச் செத்தால் எமக்கென்ன என்பது போலவோ அன்றி நல்லாகச் சாகட்டுமே என்பது போலவோ கல்லுளிமங்கர்களாக இருந்து விட்டார்கள்.

திருடர்கள் ஏன் உருவாகிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் சிந்திப்பதில்லை. அதுவும் வயிற்றுக்காகத் திருடுபவர்கள்...?

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அரசும், இரக்கமற்ற சமூகமும் இருக்கும் வரை திருடர்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். திருடனைத் திருந்தவே விடாத சட்டம் இருக்கும் வரை திருடர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.

`திருடன் மணியன்பிள்ளை´ என்ற நூலின், பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். மைக்கேல் இந்நூல் பற்றிச் சொன்ன பின்தான் தேடிப்பார்த்தேன். 590 பக்க நாவலைப் பற்றி 5 பந்திகளில் எழுதி முடித்து விட்டார் மைக்கேல். (https://www.facebook.com/photo.php?fbid=352599961746466&set=a.140907742915690.1073741827.100009893940426&type=3&theater) இணையத்திலும் விரவியிருக்கின்றன நூல் பற்றிய குறிப்புகள்.

இப்போது `திருடன் மணியன்பிள்ளை´யையும் வாசித்து விடவேண்டுமென்று மனம் உன்மத்தம் கொண்டுள்ளது.

சந்திரவதனா
17.10.2016

எழுதினால்_கொஞ்சம்_தேவலை

சின்ன வயதில் சிந்தாமணி, கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன்… போன்றவைகளில் தொடர்களை வாசித்து விட்டு அடுத்த தொடருக்காக பெருந்தவிப்புடன் ஒரு கிழமை காத்திருப்போம். அந்த ஒரு கிழமைக்குள் அண்ணன், நான், தம்பி பார்த்திபன் மூவரும் அத்தொடர்களைப் பற்றி நிறையவே அலசி ஆராய்வோம். அடுத்து என்ன வரும் என்று ஆளாளுக்கு ஒவ்வொரு கதை புனைந்து கதைத்துக் கொள்வோம். சில கதைகள் பற்றி அம்மாவுடனும் கதைப்போம். அம்மாவும் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்திருப்பா.

அதை நினைவு படுத்துகிறது உமையாழ் பெரிந்தேவியின் எழுதினால்_கொஞ்சம்_தேவலை (https://www.facebook.com/…/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%A…)

இப்போது சோலிகள் பல. அப்போதிருந்த அந்தளவு எதிர்பார்ப்பும், புத்தகங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், யார் முதலில் வாசிப்பது என்பதிலான பிக்கல், பிடுங்கல்களும் இல்லை. வாசித்த பலதையே மறந்து போகுமளவுக்கு வயதும் ஏறிக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும், அவ்வப்போது உமையாழ் எதிர்பார்த்துக் காத்திருந்த நபர் வந்தாரா? றியாத் விமானநிலையத்திலிருந்து உமையாளை அழைத்துச் சென்றாரா? என்ற கேள்விகள் மனதில் எழுத்தான் செய்கிறது.

சந்திரவதனா
16.10.2016

குட்டைப் பாவாடைப் பெண்

ஒரு நியதி போல நாம் ஒரு சிலரை அடிக்கடி எதேச்சையாகச் சந்தித்துக் கொள்வோம். அப்படித்தான் இவளையும்.

அனேகமான ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் நானும், கணவருமாக சுப்பர்மார்க்கெட்டுக்குப் போவோம். அங்கிருக்கும் 12 கவுண்டர்களில் ஏதாவதொன்றில் அவள் இருப்பாள். அதில் இல்லாத பொழுதுகளில் சுப்பர்மார்க்கெட் தகவல்நடுவத்திலோ, பேக்கரியிலோ, இன்னும் எங்காவது ஓரிடத்திலோ தென்படுவாள். ஒரு சிரிப்புடனோ, கையசைப்புடனோ அல்லது ஒரு ´ஹலோ` வுடனோ கடந்து கொள்வோம்.

இன்று அவள் நாங்கள் போன கவுண்டரிலேயே இருந்தாள். முகத்துக்கு நன்றாக அரிதாரம் பூசி, புருவங்களை வில்லாக வளைத்துக் கீறி, உதட்டுக்குச் செக்கச்செவேலெனச் சாயம் பூசி... பளிச்சென்று சிரித்தாள். கார்ட்டை இயந்திரத்தினுள் போட்டு வேண்டிய பொருட்களுக்கான கணக்கைச் சரிசெய்த கையோடு, கார்ட்டை இழுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு பின் நிற்கும் வரிசையைக் கூடப் பொருட்படுத்தாது நாலு வார்த்தை பேசிச் சிரித்தாள்.

இவளைப் பற்றி இற்றைக்குப் பத்து வருடங்களின் முன் நான் எழுதிய ஒரு பதிவு


பலத்த காற்றும், சிணுங்கும் மழையும், மரங்கள் சொரிந்த இலைகளை தெரு முழுவதும் இழுத்துக் கொண்டு திரிந்த அந்தக் குளிர்ந்த இரவில் அவள் அந்தத் தரிப்பிடத்தில் காத்திருந்தாள். பேருந்து நிற்க முன்னரே குட்டைப் பாவாடையுடன் பளிச்சென்று தெரிந்த அவளைக் கண்டு சில கண்கள் அகல விரிந்தன. பேருந்தினுள் அவள் ஏறியதும் ஒட்டு மொத்தப் பேரூந்துப் பயணிகளின் பார்வைகளும் அவள் பக்கம் ஒருதரம் திரும்பின. அவள் என்னைத் தாண்டும் போது "ஹலோ" என்ற படி அழகாகச் சிரித்துக் கொண்டாள். தாண்டிய பின்னும் தாண்டாமல் நின்ற, அவள் விட்டுச் சென்ற கமகமக்கும் உயர்தர வாசனைத் திரவியம் என்னுள் ஒருவித சந்தோச உணர்வைத் தோற்றுவித்தது.

சந்திரவதனா
15.10.2016

வாயில் ஏன் புகை?

வாயில் ஏன் புகை?
உயிரோடு உனக்கென்ன பகை?


நேற்றைய பயணம்
இலட்சியப் பாதையில்
இன்றைய சயனம்
அலட்சியப் போக்கிலா

 

வாயில் கக்கும் நெருப்பு
சூழலை மட்டுமா கெடுக்கும்
ஈரலையும் பொசுக்கும்
ஈன்றவர் இதயம் துடிக்கும்

காற்றின் போக்கில்
தூசுகள்தான் போகும்
ஆற்றின் வேகத்தில்
துரும்புகள்தான் அலையும்

வழிகாட்டி இங்கே
விழி மூடலாமா?
படகோட்டி இங்கே
தடம் மாறலாமா?

வீட்டுக்கு மூத்தவனே
விடியலுக்காய் பூத்தவனே
விட்டிலாய் மாறாதே
மாயையில் மாளாதே!

தீபா செல்வகுமாரன்
11.12.1997

நிலவுமொழி செந்தாமரையை (https://www.facebook.com/photo.php?fbid=1143642165673791&set=a.169553609749323.27936.100000840568456&type=3&theater) சிகரெட்டுடன் பார்த்ததும் எனக்குள் தோன்றியது கவலை மட்டுமே! என்னைச் சுற்றியுள்ள யார் புகைத்தாலும் நான் கவலைப்படுவேன். அவர்கள் எனக்குப் பிடித்தமானவர்களாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கவலைப்படுவேன். ஏன் இப்படி இந்தப் புகையில் தங்களைத் தாங்களே கருக்கிக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொள்வேன்.
எனக்கு ஏனோ நிலவையும் பிடிக்கும். அதனால்தான் கவலையும் வந்தது. எனது மகள் தீபா 1997 இல் எழுதிய இந்தக் கவிதையும் நினைவில் வந்தது.

சந்திரவதனா
14.10.2016

Thursday, October 13, 2016

பொதி கொண்டு வருபவன்

கடந்த வெள்ளியன்றும் வழமையான வெள்ளிக்கிழமைகளில் போலவே எனது மகன் துமிலன் மதிய உணவுக்கு என்னிடம் வந்திருந்தான். கிழமையில் ஒரு நாளாவது கண்டிப்பாக என்னைச் சந்திக்க வேண்டுமென்பதற்காக அவனாகவே விருப்போடு ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடு அது.

அவன் வந்து கொஞ்ச நேரத்தில் அழைப்புமணி அழைத்தது. அந்த நேரம் நான் உள்ளியும், வதக்கிய வெங்காயமும், பொரித்த கத்தரிக்காயும்… என்று பல்வித நறுமணங்கள் கமகமக்க நின்றேன். அதனால் மகனிடம் „என்னெண்டு ஒருக்கால் போய்ப் பார். அனேகமாக பார்சலாக இருக்கும். எனக்கொரு பார்சல் வரவேண்டும்“ என்றேன்.


படிகளில் இறங்கிக் கீழே போனவன் மேலே வரவில்லை. ஏதோ சர்ச்சைப் படுபவர்கள் போல வந்தவனும், எனது மகனும் கதைக்கும் சத்தம் கேட்டது. வெளியில் போய் மேலிருந்தே படிகளுக்கும், விறாந்தைக்கும் இடையில் இருந்த இடுக்குகளினூடு பார்த்தேன். பொதி கொண்டு வருபவன்தான் மேலே நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தான். சொற்கள் தெளிவாக என் காதுகளில் விழவில்லை. வெளிச்சத்தங்கள் அதிகமாயிருந்தன.

பெரும்பாலான சமயங்களில் பொதி கொண்டு வருபவர்கள் என் மகனை அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது சில வாரங்களாக வருபவன் புதியவன். இளையவன். என் பிள்ளைகளின் வயதை ஒத்தவன்.


ஒருவேளை இவனும் என் மகனை அறிந்தவனோ அல்லது இருவரும் நண்பர்களோ என நான் எனக்குள் யோசித்துக் கொண்டேன்.


ஒருவாறு மகன் மேலே வந்ததும்
„என்ன பிரச்சனை?“ என்றேன்.
„நீங்கள்தான் பிரச்சனை“ என்றான்
„நானா? என்ன பிரச்சனை?“
„வழக்கமாக ஒரு பெண் வந்து பார்சலை வேண்டுவாளே! அவளுக்கு நீ யார் கணவனா?“ என்று கேட்டான். நான் „இல்லை மகன்“ என்றேன். „இருக்காது, அவள் உன்ரை மனைவியாக இருக்கலாம். இல்லாவிட்டால் சகோதரியாக இருக்கலாம். அம்மா..! அதை நான் நம்பமாட்டேன்“ என்று கொண்டு நின்றான்“ என்றான்.


அன்று மாலையே இதையொத்த இன்னொரு சம்பவம் நடந்தது. இரவு வீடு வந்ததும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். நிட்சயமாக 34வயதுள்ளவள் போல இளமையாக நானில்லை. முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது. எனது மகனுக்கு இப்போதுதான் 34. எனக்கு மார்கழியில் 57 ஆகிறது.


சந்திரவதனா
13.10.2016

எனது மகனுக்கு நானே ஏடு தொடக்கினேன்

இன்று ஏடுதொடக்கல் பற்றிய பல பதிவுகளைப் பார்க்கும் போது நான் எனது கடைசி மகன் துமிலனுக்கு நானே ஏடு தொடக்கிய நாள் ஞாபகத்தில் வந்தது. கூடவே இந்தப் பதிவும் ஞாபகம் வந்தது. 

எனக்கு எட்டிய எட்டுக்கள்

ஊரில், சோறு தீத்துவதும், ஏடு தொடக்குவதும்… கோயிலில்தான் செய்யப்படும். கோயில் ஐயர்தான் முதலில் சோறு தீத்துவார். அவரேதான் ஏடு தொடக்குவதும். எனது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் முறைப்படி கோயிலிலேயே இவை தொடங்கப் பட்டன. மூன்றாவது மகனுக்கு ´எனக்கில்லாத அக்கறை ஐயருக்கு இருக்கா´ என்ற கேள்வி என் மனதில் எழ நானே பென்சில் பிடித்து அவனை எழுத வைத்தேன்.
 
அதனால் ஒரு குறையும் வரவில்லை. இன்று அவன் ஒரு எழுத்தாளர், நிருபர், பத்திரிகை ஆசிரியர்.

சந்திரவதனா
11.10.2016

Saturday, October 08, 2016

எழுதித்தீராப் பக்கங்கள்


யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளிவந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ, விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.

சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும், வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது, தலையைப் பிய்த்துக் கொள்வேன். நிலத்திலே ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

இப்போது என்னிடம் ஓரளவு புத்தகங்கள் கைவசம் உள்ளன. நூற்றுக்கணக்கான மின்னூல்களைத் தரவிறக்கி வைத்திருக்கிறேன். போதாததற்கு நல்ல வாசக நண்பர்கள் பல படைப்புகளை இணைப்புகள் தந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவைகளுள் புத்தகமாக உள்ள எதை வாசிக்கலாம் என்று யோசித்த பொழுது மைக்கேல் எழுதிய
/////செல்வண்ணருக்குள் இப்படியொரு கதைசொல்லி இருப்பதை நான் நினைத்துப் பார்த்தயேயில்லை. எழுது, எழுதடா என்று என்னை ஊக்கமளித்த மனுஷனிடம் உள்ளடங்கியொரு, எழுதுமேசை(தை) இருப்பதை நான் அறியவேயில்லை..! /////
என்ற வாக்கியமும், குறிப்பிட்ட அந்தப் பதிவும் ஞாபகத்தில் வந்தன.

கூடவே உமையாழ் பெரிந்தேவி எழுதிய அற்புதமும்.

எழுதித் தீராப் பக்கங்களைக் கையிலெடுத்துக் கொண்டேன்.

எழுதித்தீராப் பக்கங்கள் செல்வம் அருளானந்தத்தின் நினைவுக் குறிப்புகளுடன் மார்ச் 2016 இல் நூலுருப் பெற்றுள்ளது. இதில் உள்ள நினைவுகள் அவர் தாய்வீடு சஞ்சிகைக்காக ஏற்கெனவே தொடராக எழுதியவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை போல 26 உள்ளன. பெல்ஜியத்தினூடு பிரான்சுக்குப் புலம் பெயர்ந்து அங்கிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்து வாழும் காலத்தின் பதிவுகள், எங்கள் பலரது புலம்பெயர் வாழ்வின் படிமங்களாக விரிகின்றன. எள்ளலும், நொள்ளலுமாய் அதை அவர் சொல்லும் விதம் அருமை. ஒன்றொன்றாய் அடுக்கி, அடுக்கி மிக நேர்த்தியாகப் பல விடயங்களை கோர்த்து விடுகிறார்.

முதல்கதையை வாசித்து விட்டு நிறுத்தி, பின்னர் தொடரலாம் என நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன்.. ஆனால் அருள்நாதர் வானத்தைக் காட்டி 'கொண்டலிலை மழை கறுக்குது' என்றார், என்ற வாக்கியம் என்னை நிறுத்த விடவில்லை. இரண்டாவது விஜேந்தம்மான் - வீடு வேய்வது பற்றியது. எங்களூர் விடயம். சுவாரஸ்யத்தையும், இப்படியான முறைகளும் உள்ளதா என்ற வியப்பையும் தந்தன. அடுத்து தட்சூண். தட்சூணின் மொழிபெயர்ப்பு, நான் ஜெர்மனிக்கு வந்த போது எனது கணவரின் நண்பர்கள் - அவர்கள் ஒன்றரை-இரண்டு வருடப் *பழையகாய்கள் - ஜெர்மனியமொழி தெரிந்தவர்கள் போல சவடால் விட்டதைத்தான் ஞாபகப் படுத்தியது. தட்சூணின்இழப்போ இன்னும் பல துயர்களை ஞாபகப் படுத்தியது.

அதற்கு மேல் வாசிக்க முடியாமல் சில அத்தியாவசிய வேலைகள்.

அப்போது மனம் வேண்டியது: எந்த அவசரங்களும் இல்லாது இப்படியே இருந்து ஆசை தீர வாசித்துத் தீர்த்துவிட பொழுதுகள் வசப்பட வேண்டும்.

(*பழையகாய்கள், கார்ட்காய்கள்... போன்றவை, ஆரம்பகாலப் புலம்பெயர்ந்தோர் உருவாக்கிய பதங்கள். இச்சொற்களுக்கென ஒரு தனி அகராதியே தயாரிக்கலாம்)

சந்திரவதனா
08.10.2016

Sunday, October 02, 2016

அவன்விதி (Ein Menschenschicksal) - மிகையில் ஷோலகவ் (Michail Alexandrowitsch Scholochow)


போர் கொடியது. அது அன்பாலும், மென்உணர்வுகளாலும் பின்னப்பட்ட மனித உறவுகளைச் சின்னாபின்னமாக்கி, அவர்களையும், அவர்தம் மனங்களையும் சிதைத்து விடுகிறது. வாழ்க்கையை வாழ முடியாத வாழ்க்கையாக்கி, புயற்காற்றில் அடிபட்ட துரும்பாய் அலைக்கழித்து விடுகிறது. கூடிக் குலாவி வாழ வேண்டியவர்களைத் திக்குத் திக்காய் வீசி எறிந்து விடுகிறது.

அப்படியொரு, போர் என்னும் கொடிய புயற்காற்றில் அலைக்கழிக்கப்பட்டு, ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்து, மனதால் வீழ்ந்து போன ஒரு ஒரு உருசியப் போர்வீரனின் உருக்கமான கதை 'அவன் விதி'.

இக்கதை மிகையில் ஷோலகவ் (Michail Alexandrowitsch Scholochow) எழுதிய The Fate of a Man (1957) இன் தமிழ் மொழிபெயர்ப்பு. ´மீனவன்` மொழி பெயர்த்துள்ளார்.

அவன் அந்திரேய். உருசியப் போர்வீரன். அன்பான கணவனாக, குழந்தைகளை ஆதரிக்கும் தந்தையாக... குடும்பத்தோடு, தன் வீட்டில் வாழ வேண்டியவன். ஆனால் ஒரு போராளியாகிறான். விதி அவனைப் போர்க்களத்துக்கு அழைத்துச் செல்கிறது.

மனைவி, குழந்தைகள் குடும்பம் என்று மெதுமெதுவாக வாழ்க்கையை ஆரம்பித்து, அதையே ஆராதித்து வாழ்ந்து கொண்டிருந்த சாதாரண குடிமகன் அவன். உருசிய வறுமையில் அடிபட்டு, உறவுகளை இழந்து, உள்நாட்டுப் போரில் பங்கு பற்றி... இளம்பராயத்தைக் கடந்தவன். மனைவி, குழந்தைகள் மேல் அன்பும், பாசமும் மிக்கவன். வாகனமோட்டி. போர் அவனைப் போர்க்ளத்துக்கு அழைக்கிறது. மறுக்க முடியாத நிலையில் குடும்பத்தை விட்டு ஜெர்மனியப் படையுடன் போராடச் செல்கிறான். அன்றைய நாள், புகையிரதநிலையத்தில் அவன் குடும்பத்தை விட்டுப் பிரியும் நாள் மனதைக் கலங்கடிக்கும்.


நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இதுபோல ஒரு போதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள் பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்து போய் விட்டன. காலையிலும் அதே கதைதான். இரயில் நிலையத்திற்குப் போ னோம். அவள் இருந்த இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள் உதடுகள் கூட வீங்கியிருந்தன. அவளுடைய தலைமயிர் கொண்டக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது. அவளது கண்கள் மங்கியிருந்தன. மருள் கொண்டவள் போல விழித்துக் கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவள் என்னை ஏற விட்டால்தானே? பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக் கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக் கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அது போல... குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும், பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப்பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அது போல. கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள். ஒரு சொல் கூட அவளால் பேச முடியவில்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொள் இரீனா, என் கண்ணே! நான் புறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன் எனக்கு' என்றேன். ஒவ்வோரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக் கொண்டே அவள் சொன்னது இதுதான்: அந்திரேய்... (அவன்விதி, பக்-15)

அந்திரேய் ஒரு விசுவாசமான போர்வீரன். வாகனமோட்டியாக உருசியப் படையில் பணி புரிகிறான். ஜெர்மனியப் படையுடனான போரில் போர்க்கைதியாகிறான். ஒரு போர்க்கைதியாக அவன் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாதவை.

´மிகையில் ஷோலகவ்` அதைச் சொல்லும் விதம் அபாரம். ஒரு போர்வீரனாக, கணவனாக, தந்தையாக என்று ஒவ்வொரு நிலையிலுமான ஒரு மனிதனின் உணர்வுகளை, அன்பை, காதலை, துயரை, ஏமாற்றத்தை, கடமையுணர்வை... என்று மிகமிக யதார்த்தமாகவும், உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லிக் கொண்டு போகிறார். அவர் தான் அந்திரேயோ என்று எண்ணும் படியான அநுபவபூர்வமான, உயிரோட்டமான, நிதர்சனமான எழுத்து நடை.

மிகப்பெரிய எழுத்தாளன் ´மிகையில் ஷோலகவ்`. இப்படியொரு எழுத்தாளனின் ஒரு படைப்பையேனும், அதுவும் தமிழில் வாசிக்கக் கிடைத்தது பெரும் வரம் என்பேன்.

வெறும் 64 பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்நாவல் ஒரு போர்வீரனின் நாட்டுப்பற்றை, விசுவாசத்தை, நேர்மையை, திறமையை, இயலாமையை, சோகம் நிறைந்த மிகக் கடினமான வாழ்க்கையை… மிகவும் உருக்கமாகச் சொல்கிறது.

வாசித்துக் கொண்டு போகும் போது பல இடங்களில் மனம் கலங்கிக் கசிந்து விடுகிறது. சில இடங்களில் கடந்து போக முடியாமல் மீண்டும் மீண்டுமாய் வாசிக்க வைக்கிறது.
உதாரணமாக:
சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம் 'வாழ்வே ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய்? என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி. சூரியன் பளிச்சென்று ஒளி விடும் போதானாலும் சரி... இனி ஒரு போதும் விடை கிடைக்காது. (அவன்விதி, பக்-9)

இறுதியில் சிறுவன் வான்யா வைக் கண்டு பிடிக்கும் பகுதிகள் மிகுந்த நெகிழ்ச்சியானவை. இந்நாவலை ஒரு சிறுகதை என்று ஜெர்மனிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இது ஒரு பெருங்கதை. வாழ்வை வாழ முடியாமல் செய்யும் போர் என்ற கொடியபுயலில் உருக்குலையும் ஒரு மனிதனது வாழ்வின் கதை. இக்கதை உருசிய மொழியில் ஒரு பிரபல்யமான படமாகவும் எடுக்கப் பட்டுள்ளது. இப்படியான பிறமொழிப் படைப்புகளை மொழிபெயர்ப்பது அரும்பணி. மொழிபெயர்த்த மீனவன் போற்றப்பட வேண்டியவர்.

அவன் விதி நூலகத்தில்

சந்திரவதனா
2.10.2016

Tuesday, September 27, 2016

Gluecksfeder (Zamioculcas zamiifolia) ம் பூக்கும்




Gluecksfeder (Zamioculcas zamiifolia) ம் பூக்கும் என்பது இப்போதுதான் எனக்குத் தெரியும்.  

வருடங்களாக என் வீட்டில் ஒரு கரையில் தன்பாட்டில் இருக்கிறது. கனக்க மினைக்கெடவும் தேவையில்லை. வெயில் பட்டால் இலைகள் மெல்லியபச்சை நிறமாகும். வெயில் இல்லையென்றால் கடும்பச்சையாகும். அவ்வளவுதான் இது பற்றி எனக்குத் தெரிந்தது.
இத்தனை வருடங்கள் கழித்து திடீரென்று ஒரு பூப் பூத்துள்ளது. முதலில் பூ என்று கூட எனக்குத் தெரியவில்லை.

இணையத்தில் தேடிய போதுதான் தெரிந்தது
மிக அபூர்வமாக, வசதியாகவும், நன்றாகவும் உணரும் பட்சத்தில் மட்டுமே இது பூக்கும் என்பது.

 
அதுவும் மற்றைய தாவரங்கள் போலல்லாது தாவரத்தின் அடியிலேயே பூக்கும்.


சந்திரவதனா
27.09.2016

Wednesday, September 21, 2016

ழகரம் - 5


ழகரம் - 5 இதழ் கிடைத்திருக்கிறது.  

ழகரம் இதழ், கனடாவிலிருந்து 1997 இல் ஆனி, ஆடி, ஆவணி/புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் வெளிவந்து நான்கு இதழ்களுடன் நின்று போயிருந்தது. இப்பொழுது மீண்டும் 5வது இதழாக ஆனி 2016 இல் வெளிவந்துள்ளது. 

தமிழ்நதி, கிரிதரன், பொ. கருணாகரமூர்த்தி... இன்னும் பலர் எழுதியுள்ளார்கள். அவைகளைப் படிப்பதற்கு முன் இதழை அனுப்பி வைத்த கருணாகரமூர்த்திக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நூலையோ, இதழையோ அஞ்சலில் அனுப்பி வைப்பதில் உள்ள, அதற்கான ஆயத்தங்கள், நேரம்... என சிரமங்களை நான் அறிவேன். ஆனாலும் பலநூல்கள் என்னைச் சேருவதற்கு கருணாகரமூர்த்தி ஏதுவாக இருந்திருக்கிறார்.

மிக்க நன்றி கருணாகரமூர்த்தி!

சந்திரவதனா

21.09.2016

Wednesday, September 14, 2016

நூலை ஆராதித்தல்




நேற்று ஒரு நூல் என் கரம் கிட்டியது. பெரிய்ய்ய்ய நூல். 452 க்கு மேற்பட்ட பக்கங்கள்.
வழமையில் பத்மநாபஐயர் யார் யாரினதோ நூல்கள் எல்லாம் கொடுத்தனுப்பி எம்மை மகிழ்ச்சிப் படுத்துவார். இம்முறை அவரது நூல்.

இந்நூல் பத்துவருட முயற்சியில் வெளிவந்தது என்று எங்கோ வாசித்த ஞாபகம். ஆனாலும் இப்படியொரு நூல் வரப்போகிறதென்பது நூல் வெளிவரும் வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நேற்று மாலை வேலையால் வந்துதான் நூலை அவசரமாக நுனிப்புல் மேய்ந்தேன். பத்மநாபஐயரின் பவளவிழாவை என்னத்தைச் சொல்லி கவலைக்குரியதாக்கினார்களோ, அந்த சர்ச்சைக்குரிய `ஐயர்´ என்ற சொல் நூல் முழுவதும் இறைந்து கிடக்கிறது. 

நிறையப் பேர் எழுதியுள்ளார்கள். எல்லோருமே பத்மநாபஐயரை அழகாக ஆராதித்துள்ளார்கள். கண்ணில் பட்ட வசனங்கள் பலதில், பத்மநாபஐயரின் இலக்கியச் செயற்பாடுகள் குறித்தான செய்திகள் வியக்க வைத்தன. பத்மநாபஐயர் மேல் இன்னும் அதிகமான மதிப்பை உருவாக்கின.

பத்மநாபஐயரின் குடும்பப் புகைப்படங்கள், இலக்கியப் புகைப்படங்கள், மூனாவின் ஒவியங்கள்.. என்று இன்னும் பல உள்ளன. 

நுனிப்புல் மேய்ந்து விட்டு அதிகம் எழுத முடியாது. முழுவதையும் முதலில் படிக்க விளைகிறேன்.

சந்திரவதனா
14.09.2016

Sunday, September 11, 2016

ஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)

இரண்டு நாட்களுக்கு முன் மருந்துக்கடைக்குப் போனபோது இந்தக் காலாண்டுக்கான மருத்துவசஞ்சிகையையும் இலவசமாகத் தந்து விட்டார்கள். இம்முறை ஹோமியோபதி சம்பந்தமான செய்திகளும், மருத்துவக் குறிப்புகளும் விரவிக் கிடந்தன. 

அவற்றில், வாசிப்பது மனதின் அழுத்தங்களைக் (Stress) குறைக்கும் என்ற தலைப்பிலும் ஒன்று இருந்தது. நரம்பியல் உளவியலாளர் டேவிட் லெவிஸ் சொல்கிறார் மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை ஆறு நிமிடங்கள் வாசிக்கும் போதே, மனம் உலகை மறந்து, மனதின் அழுத்தம் மிகவும் குறைந்து விடுகிறது என்று. 

மனதின் அழுத்தம் நடப்பதினால் (walk) 42% குறைகிறது என்றும், வாசிப்பதனால் 68% குறைகிறது என்றும் வாசிப்பது திகில் கதையோ அன்றில் காதல் சமூக, அறிவியல் கதையோ என்பது பிரச்சனையே இல்லையென்றும் உதிரியாக இன்னொரு தகவலையும் தந்துள்ளார்.

அதை நாமும் எமது வாசிப்பின் போது உணர்கிறோம். 

மனஅழுத்தம் குறைகிறதோ இல்லையோ நான் வாசிக்கும் போது உலகையே மறந்து விடுகிறேன். என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன். சமயங்களில் வீட்டில் வாழைப்பழம் தீர்ந்து விட்டது, தோடம்பழம் தீர்ந்து விட்டது போன்றதான விடயங்களைக் கூட கவனிக்க மறந்து போய் விடுகிறேன்.

***************************

கடைசி இரண்டு வாரங்களுக்குள் எனக்கு ஜெயரூபனின் (மைக்கல்) சில சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பதிவுகள் (pathivukal.com) இணைய ஆசிரியர் கிரிதரன் தனது தளத்தில் பல பொக்கிஷங்களைப் புதைத்து வைத்திருக்கிறார். இன்னும் சில பழைய திண்ணையில் (old.thinnai.com) உள்ளன. வாசிக்கும் பொழுதுகளில் மானசீகமாக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே வாசித்தேன்.

ஜெயரூபனின் (மைக்கல்)
எழுத்துக்கள் வசீகரமானவை. கதை சொல்லும் உத்தியும் வித்தியாசமானது. புனைவுகள் இன்றிய நியங்களின் வடிவங்களான இவரது கதைகளை வாசிக்கும் போது கதைப்புலம் ஒரு படம் போல மனதுள் விரியும். கதை மாந்தர்கள் அங்கு நடமாடிக் கொண்டிருப்பார்கள். கதைகளை தன்னிலையிலும் சொல்லியிருப்பார். படர்க்கையிலும் சொல்லியிருப்பார். அவை பெரும்பாலும் எம் வாழ்வோடு நெருங்கிய விடயங்களைப் பேசுவனவாகவும், எமக்கு நெருக்கமாகவும், எம்முள் தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் அமைந்திருக்கும். நாம் நெகிழ்ந்து, கசிந்து, நெக்குருகி வாசித்துக் கொண்டிருப்போம். நினைவுகள் கிளறப்பட்டு, எம் வாழ்வில் நிகழந்த ஏதோ ஒரு துயரமானதோ அல்லது சந்தோசமானதோ சம்பவத்தை அந்தக் கதையோடு பொருத்திப் பார்த்து, அந்தக் காலத்துக்கே சென்று அந்தப் பொழுதுகளில் கரைவோம்.

அவரது கதைகளில் `ஜடாயு` என்ற சிறுகதையை கடைசியாக வாசித்தேன். மனசு கனமானது. நினைவுகளில் இருந்து அகற்ற முடியாமல் காலைகளின் விழிப்பில் கூட மனக்கண்ணுள் ஒரு சிறுவனும், அவனது தந்தையும் ஒரு கடற்கரையில் நடக்கும் காட்சி தெரிந்தது. அன்பால் பின்னப்பட்ட ஒரு குடில் தெரிந்தது. அச்சிறுவன் வளர்ந்து கொண்டிருக்கும் போது அந்தத் தந்தையின் கனவிலும், கற்பனையிலும் எத்தனையெல்லாம் இருந்திருக்கும் என்ற சிந்தனை தவிர்க்க முடியாமல் எழுந்து கொண்டே இருந்தது.

மகன் கூட வே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான்... என்று எல்லா யாழ்ப்பாணத் தந்தையர்க்கும் இருந்த கனவு அந்தத் தந்தையிடமும் கண்டிப்பாக இருந்திருக்கும். அந்த அம்மா, அக்கா...

இவையெல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது. பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு திரும்புவார்கள் என்று அன்போடும், அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும், புத்தகப் பையையும் யாரோ ஒருவனிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும், தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.

`ஜடாயு´ மீன்பிடித் தொழிலை சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. அம்மாவையும், அப்பாவையும், அக்காவையும் விட்டு விட்டு அவர்களது அன்புத் தம்பி போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும், புத்தகப்பையும்தான் வீட்டுக்கு வந்தன. அது தந்த ஏமாற்றத்திலும், ஏக்கத்திலும் மனதாலும், உடலாலும் சாய்ந்து போன ஒரு தந்தையின் கதை அது.

ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வருத்தியிருக்கிறது. பெரும்பாலும் அந்த வலியை, அந்தக் குடும்ப அங்கத்தவர்களில் ஒருவர்தான் எங்களுக்குச் சொல்லியிருப்பார். இக்கதையில் குடும்பத்தை விட்டுச் சென்ற அந்த மகனே, தான் போனபின்னான தனது குடும்பத்தின் வலியை தன் பார்வையில் இருந்து சொல்கிறார். கதையை வாசிக்கும் போது நான் அங்கே அந்தக் கடற்கரை வீட்டுக்கே போய் விட்டேன்.

வாசித்து முடித்த பின், அந்தத் தந்தை, எனது தந்தை... இன்னும் எத்தனையோ தந்தையர் என் நினைவுகளில் மிதந்தார்கள். இன்றைய பொழுதில் எதுவுமே இல்லையென்று ஆனபின்னும் அந்த வலிகளுடனேயே மடிந்து போன அவர்களை நினைத்து ஆதங்கப் படுவததைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

ஜடாயு கதையையும் மறக்க முடியவில்லை.

அதன் முடிவை எழுதும் போது ஜெயரூபன் என்ன நினைத்தாரோ எனக்குத் தெரியாது. எனக்குள் தோன்றுவது 'எங்கள் பிள்ளைகள் நாட்டின் பிள்ளைகள் ஆன போது, ஊர்ப்பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளானார்கள்' என்பதே.

ஜெயரூபனின் (மைக்கல்) `ஏழாவது சொர்கம்´ நாவல் பற்றி பதிவுகளிலும், வேறு தளங்களிலும் பலர் சிலாகித்துள்ளார்கள். புலம்பெயர் நாவல்கள் பற்றிய ஆங்காங்கு காணப்படும் கட்டுரைகளிலும் கூட மறக்காமல் இந்த `ஏழாவது சொர்க்கம்` குறிப்பிடப் பட்டுள்ளது. அதையும் கிரிதரனின் பதிவுகள் தளத்தில் தேடி எடுத்து வாசித்தேன்.

அதை வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த முடியாத அளவுக்கு அந்நாவல் என்னை ஈர்த்திருந்தது. ஜடாயு சிறுகதையை வாசிக்கும் வரை அந்த உலகிலிருந்து மீள முடியாதிருந்தேன்.

அதை இன்னொரு தரம் வாசித்து விட்டு அது பற்றி ஏதும் எழுத முடிந்தால் எழுதுகிறேன்.

சந்திரவதனா
11.09.2016

Wednesday, August 31, 2016

பத்மனாப ஐயர் (பவளவிழா)




தனிப்பட்ட பத்மனாபஐயரை எனக்குத் தெரியாது. இலண்டனுக்குப் பல தடவைகள் சென்றிருந்தும் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை.

"வந்தனிங்கள் சந்திச்சிருக்கலாமே, போன் பண்ணியிருக்கலாமே!" என ஓரிரு தடவைகள் வருந்தியிருக்கிறார்.

தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாத நகரில் நான் இருக்கிறேன், எனத் தெரிந்த பின் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது அஞ்சல் மூலமாகவும், தங்கை மூலமாகவும், மகள் மூலமாகவும் எமக்கு (எனக்கும்/கணவருக்கும்) கணிசமான புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அவரோடு பல தடவைகள் நூல்கள் சம்பந்தமாகவும், நூலகம் சம்பந்தமாகவும்,  இன்னும் அது சார்ந்த விடயங்கள் சம்பந்தமாகவும் தொலைபேசியிருக்கிறேன். மிகவும் சுவையாகப் பேசக் கூடியவர். அதாவது நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். அவரது ஒவ்வொரு பதிலிலும் நகைச்சுவை கலந்திருக்கும். சிரிக்க வைத்துக் கொண்டே கதைப்பார். தொலைபேசியை வைத்த பின்னும் அவரது பகிடிகளை அசைபோட்டுச் சிரித்துக் கொண்டிருப்பேன்.

எனது மனஓசை நூலைக் கூட அவர் மூலமாகத்தான் வெளியிடுவதாக இருந்தேன். பதிப்புரை கூட எழுதித் தரச் சம்மதித்திருந்தார். அந்த நூல் சம்பந்தமான கதைகளின் போதுதான் குறிப்பிட்ட சிலரது பெயர்களைச் சொல்லி அவர்களும் நூலை வாசித்துப் பார்த்து, சிலதைத் தணிக்கை செய்வார்கள் என்றார்.

பத்மனாபஐயரின் கதையில் அவர்கள் அதை வாசித்து, தணிக்கை செய்து... நூல் வெளி வர 2-3 வருடங்களோ இன்னும் கூடவோ தேவைப்படலாம் என்று தெரிந்தது. அத்தோடு எனது படைப்புகளைத் தணிக்கையின் பெயரில் வெட்டிக் கொத்த அவர்களையோ அன்றி வேறுயாரையுமோ அநுமதிக்கும் மனநிலையும் எனக்கு இருக்கவில்லை.

எனக்குத் தெரிய பலரது புத்தகங்கள் பத்மனாபஐயர் குறிப்பிட்ட அந்த நபர்களின் மெய்ப்புப் பார்த்தல்களால் வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு தொகுப்புகளில் எனக்குத் தெரிந்த ஓரிரு அருமையான சிறுகதைகள் வெட்டிக் கொத்தி சிதைக்கப் பட்டு பிரசுரமாகியுமிருந்தன. ஓரிரு மாதங்கள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் கதைக்கும் போது என்ரை புத்தகத்தை வேறையேதாவது வழியிலை வெளியிடுறன். நீங்கள் தனியாள் இல்லை. உங்களுக்கு கனக்கச் ´சிண்`ணுகள் இருக்கினம். அவையள் எல்லாரும் வாசிச்சு, ஓம் பட்டு, வெட்டிக் கொத்தி... அப்பிடி வேண்டாம். நானே செய்யிறன் என்றேன்.

அப்பிடிச் சொல்லுறிங்களோ..? என்று விட்டுப் பலமாகச் சிரித்தார்.

எனது மனஓசை நூல் வெளிவந்த பின் என்னிடம் தந்திருந்தால் நான் இதை இன்னும் வடிவாச் செய்து வெளியிட்டிருப்பன் என்று சொல்லி வருந்தினார். சில தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. பத்மனாபஐயரின் பதிப்புரையுடன், தமிழியல் வெளியீடாக அது வந்திருந்தால் நூலுக்கு ஒரு தனிமதிப்பு இருந்திருக்கும். மகிழ்வாகவும் இருந்திருக்கும்.

அதே நேரம் நூல் வெளிவராமலேயும் இருந்திருக்கலாம்.

தொடர்ந்த காலங்களில் எனது அண்ணனின் தீட்சண்யம் நூலாவதற்கும், தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள் கொடி நூலாவதற்கும் சுவடி பதிப்பகத்துடன் தொடர்பு கொண்டு தன்னாலான உதவிகளைச் செய்திருந்தார்.

இப்படி அவர் எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு உதவியுள்ளார். எத்தனையோ பேரது புத்தகங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவரது, அவர் பற்றிய புத்தகம் வெளிவரும் போது இப்படியொரு பிரச்சனையைக் கொடுத்தது மட்டுமல்லாது, அவரது 75வது பிறந்தநாளை ஒட்டிய பவளவிழாவை மனச் சந்தோசத்தோடு கொண்டாட விடாது அவரோடு ஒட்டியிருந்த அவரது நட்புகளே அவரைச் சங்கடப் படுத்தியிருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

சந்திரவதனா
31.08.2016

Tuesday, August 30, 2016

மந்தாரை




எனது வேலைத்தளத்தில் ஒரு நடைமுறை இருக்கிறது. 50 வது பிறந்தநாளுக்கு சிற்றுண்டிகளுடன் ஒரு தேநீர் விருந்து வைத்து ஒரு பூங்கொத்தும், இரண்டு செக்ற் போத்தல்களும் பரிசாகத் தருவார்கள்.

நான் 50க்கு வரும் போது எனக்கு ஏதாவது தரும் எண்ணம் இருந்தால் பூங்கொத்துக்குப் பதிலாக ஒரு பூஞ்செடி தந்து விடுங்கள் என்றொரு அறிவித்தல் கொடுத்தேன்.

2001 இல் அவர்கள் எனது பத்தாவது வருட சேவையைக் கௌரவித்து நட்சத்திர உணவகத்துக்கு அழைத்து விருந்தோடு, ஒரு அழகான பூங்கொத்தும், இரு செக்ற் போத்தல்களும், ஒரு பவுண் காசும் தந்திருந்தார்கள். அந்தப் பூங்கொத்து ஒரு கிழமை அழகாக எனது வரவேற்பறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இரண்டாவது கிழமை குப்பைவாளிக்குள் முடங்கிக் கொண்டது. அதனால்தான் அப்படியொரு அறிவித்தல் கொடுத்தேன்.

எனது விருப்பத்தை சந்தோசமாக ஏற்றுக் கொண்டு எனது 50வது பிறந்த நாளுக்கு மந்தாரைமலர்(Orchideen) செடிகளைப் பரிசாகத் தந்தார்கள். எனது வீட்டுக்குள் ஊதா, மஞ்சள், வெள்ளை என்று மூன்று வர்ணங்களில் மூன்று மந்தாரைச் செடிகள் வந்து சேர்ந்தன. மூன்றும் இந்த ஏழு வருடங்களாக காலையில் எழுந்ததும் என்னை மகிழ்விப்பவைகளில் ஒன்றாக மாறி மாறிப் பூத்துக் கொண்டே இருக்கின்றன. (இதற்கு மந்தாரை என்ற பெயர் சரிதானா என்பது தெரியவில்லை)

தற்சமயம் எனது வேலைத்தளத்தில் முற்கூட்டியே குறிப்பிட்டவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி பூங்கொத்தை விரும்புகிறீர்களா அல்லது பூஞ்செடியை விரும்புகிறீர்களா? எனக் கேட்டு விடுகிறார்கள்.

நேற்றைய ஒரு தேடலின் போது கண்களில் தட்டுப்பட்டது
Orchideen க்கான வாழ்வு காலம் 10வருடங்கள் மட்டுமே

சந்திரவதனா
30.08.2016
 

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite