கனடாவிலிருந்து ஒல்கார் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கமைய அவர்களுக்கு உதவு முகமாக அவர்கள் தந்த அறிவித்தல் ஒன்றை எனது மனஓசையிலும் இன்னும் பல இடங்களிலும் பதித்தேன். இங்கே எனதான உதவும் நோக்கம் முழுமன ஈடுபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஈழத்தில் இந்திய இராணுவக்காலம் என்ற தலைப்பில் இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த போதான ஒவ்வொரு அவலங்களையும் சேகரித்து ஒரு புத்தகமாகப் பதியப் போகிறார்கள்.
இந்த அறிவித்தலை எனது மனஓசையில் பதிந்த பின் அது பற்றியதான சர்ச்சைகள் வலைப்பதிவுகள் சிலவற்றில் இடம் பெற்றது பற்றி சுந்தரவடிவேல் எனது பதிவில் சுட்டும் வரை நான் அறியவில்லை. சமீபத்தில் எனக்கு வந்த சில மின்னஞ்சல்கள் கூட இந்திய இராணுவம் சம்பந்தமானதாக இருந்தது என்னுள் கேள்விக் குறியாகியதே ஒழிய விபரம் புரியாதிருந்தது.
முதலில் சுந்தரவடிவேலுக்கு நன்றி. சுந்தரவடிவேலின் சுட்டலின் பின்தான் நேற்று முன்தினம் வந்தியத் தேவனின் எல்லைகள் கடந்து எரிந்த சிறகுகள் பதிவைப் பார்த்தேன்.
வந்தியத்தேவனின் ஆதங்கத்துக்கு என்னால் அரசியல் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. அரசியல் எப்போதும் அரசியல்தான். அதற்குள் நான் தலைப்போடவில்லை.
ஆனால் அந்தக் கவிதை....! அது என்னது அல்ல. அது ஒல்கார் குழுவினரால் எழுதப் பட்ட அறிவித்தலில் உள்ள கவிதை. அது அவர்களில் ஒருவரால் எழுதப் பட்டது.
அந்தக் கவிதையில் உள்ள வரிகள்
நாட்களின் நகர்வுகளில்
ஞாபகங்களின் உடைவில்
காயங்கள் ஆறுவதும்
ஆற்றப்படுவதும் இயல்பு
தேசத்தின் வேர்களில்
நெருப்பள்ளிக் கொட்டியவரை
வானத்தின் மீது
இருளள்ளிப் பூசியவரை
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
இன்னும்..........
பொய்யில்லை. இந்த வரிகள் பொய்யில்லை.
எங்கள் தேசத்தின் மீது, எங்கள் வாழ்வின் மீது, எங்கள் சுயத்தின்... மீது இந்திய இராணுவமும் நெருப்பள்ளிக் கொட்டியது என்பது மறுக்கப் பட முடியாத, மறக்கப் பட முடியாத உண்மை.
தொடரும்இந்தியா நெருப்பள்ளி/இருளள்ளி போட்டதென்றால் தமிழ்நாடும் இந்தியாவின் அங்கமல்லவா? அப்படியென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உங்கள் பார்வையில் குற்றவாளிகள் தானே?
அர்த்தமற்றதாகவே எனக்குப் படுகிறது.
இந்திய இராணுவத்தையும் இந்திய மக்களையும் ஒன்றாக ஏன் பார்க்க வேண்டும்.
சிங்கள இராணுவத்திடமிருந்து தமிழர்களைப் பாதுகாத்தவர்களில் சிங்கள மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பதவியைத் துர்ப்பிரயோகம் செய்யும் இராணுவத்தையும், மனித நேயமிக்க சாதாரண பொது மக்களையும் எந்தக் காலத்திலும் ஒன்றாகப் பார்க்க முடியாது.
நாட்டுப் பற்றோடு போர் புரிய வந்தவன் எவனும் காட்டு மிராண்டித்தனமானவனாய்.. உடலிச்சை கொண்ட வெறித்தனமானவனாய்.... போர் தர்மத்தை மறந்த அதர்மவாதியாய் இருக்க மாட்டான். எந்த அரசியல் வலைகளில் அவர்களில் சிக்கியிருந்தாலும்... யாரது பகடைக்காய்களாக அவர்கள் ஆகியிருந்தாலும்.. அவர்கள் செய்தது அவர்களது தனிப்பட்ட இச்சையினாலான செயற்பாடுகள்.