
தெருவீதியில் இருந்த ஒரு மயிர்க்கொட்டியைப் பார்த்து இரக்கம் கொண்டு ஒரு பெண்மணி அதை எடுத்து வீதிக்கு அப்பால் விடப் போன பொழுது விபரீதம் புரிந்திருக்கிறது. மயிர்க்கொட்டி பட்ட இடமெல்லாம் தடித்து உடலில் எரிச்சலைக் கொடுக்க அந்தப் பெண்மணி பயந்து போய் அவசர உதவியை அழைக்கும் நிலைக்குப் போய் விட்டார்.
இப்பொழுது தீயணைக்கும் படையினர் உடலை முழுதாக மறைக்கும் மஞ்சள் உடை அணிந்து மயிர்க்கொட்டிகளைத் தீயைப் பாய்ச்சி அழித்து வருகின்றனர். ஜேர்மனியில் சாக்சன் அன்கல்ற், பயர்ன், பாடன்வூற்றம் பேர்க் ஆகிய மாநிலங்களில் மயிர்க்கொட்டிகள் அதிகம் காணப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். பாடன்வூற்றம் பேர்க் மாநிலத்தில் காட்டுப் பகுதியில் இருக்கும் பாபிகியூ செய்யும் சில இடங்கள் மயிர்க்கொட்டிகளின் தொல்லையால் பாவனைக்குத் தடை செய்யப் பட்டிருக்கின்றன.
தீப்பிடிச்சு தீப்பிடிச்சு என்னை அழிடா என்று மரங்களில் ஒட்டியிருக்கும் மயிர்க்கொட்டிகள் பாடி ஆடாத குறை ஒன்றுதான் மிச்சம். 40 மில்லி மீற்றர் அளவுதான் என்றாலும் மயிர்க் கொட்டிகள் இங்கு இவர்களை பாடாயப் படுத்துகின்றன .
அந்த மயிர்க்கொட்டிகளை நாம் படுத்தும் பாட்டைப் பார்த்தால் சாவதற்கென்றே பிறப்பெடுத்து வருகின்றனவோ என்ற நெருடலான கேள்வி எழுகிறது.
ம்.. இப்ப, வெய்யில் சுள்ளென்று எறிக்கத் தொடங்க மசுக்குட்டி நூல் விட்டு இறங்கிற ஞாபகம் வந்து உடம்பெல்லாம் கடிக்கிறது போலை ஒரு உணர்வு.