
சித்திரைப்புத்தாண்டு என்றால் என்ன..? வேறு என்ன பண்டிகை என்றால் என்ன...? இலங்கையின் எந்த மூலையில் கடமையில் இருந்தாலும் அப்பா விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து விடுவார். ஆனால் சில சமயங்களில் வேலை காரணமாக இரவு யாழ்தேவியில் பயணித்து விடியத்தான் வீடு வந்து சேர்வார். அப்பா வந்து விட்டால் வீட்டில் ஒரு தனிக் கலகலப்புத்தான். அதுவும் கொண்டாட்ட தினங்களில் சொல்லவே தேவையில்லை. சீனவெடி, அனுமார்வெடி, ஈக்கில்வெடி......... என்று பழங்கள், சொக்கிளேட்ஸ்சோடு நிறைய வெடியும் கட்டாயம் கொண்டு வருவார்.
மார்கழியிலேயே உயரத் தடியில் தென்னோலை கட்டி வீடெல்லாம் தூசு தட்டி, ஈக்கில் வார்ந்து விளக்குமாறு கட்டி வீடெல்லாம் கழுவி பழையன எறிந்து, புதியனவோடு தைப்பொங்கலைக் கொண்டாடியிருந்தாலும், அப்பா வர முன்னமே அம்மா மீண்டும் ஒரு தரம் சித்திரைப் புத்தாண்டுக்காய் வீட்டை மூலைமுடுக்கு விடாமல் கூட்டித் துப்பரவாக்கி மஞ்சள் தெளித்து விடுவா. அத்தோடு சித்திரைக்குப் பொங்க என்று பயறு வறுத்துத் திரித்து, சேரல் பச்சை அரிசி வாங்கி பிடைத்துத் துப்பரவாக்கியும் விடுவா. அது மட்டுமல்லாமல் எங்களுக்கும் சித்தப்பாமார், மாமிமார், அப்பாச்சிமார் எல்லோருக்கும் புது உடுப்பு வாங்கியும் தைத்தும் வைத்து விடுவா. அண்ணன் சித்தப்பாவோடு சேர்ந்து மாவிலை பிடுங்கி ஒவ்வொரு அறை வாசல் நிலையிலும் கட்டியிருக்கும் கயிற்றில் மாவிலைத் தோரணத்தைக் கொழுவி விடுவார். நானும் உதவி செய்வேன்.
அப்பா விடியத்தான் வந்தாரென்றால் வந்ததும் தோய்ந்து, புதிய வேட்டியைக் கட்டிக் கொண்டு சூரியன் தெரியக் கூடிய இடமாகப் பார்த்து, முற்றத்தில் மூன்று கல்லு வைத்து பொங்கல் பானையை அடுப்பில் வைத்து விட்டு அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுத்து, பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அரிசையைப் பிடைத்தது, கழுவியது, எல்லாம் அம்மா என்றாலும் பால் பொங்கும் போது அரிசியைப் போடுவது அப்பாதான். பொங்கல் பானையைச் சுற்றி மாவிலை கட்டுவதும் அப்பாதான். குத்துவிளக்கை அம்மாவே ஏற்றி விடுவா.. வழமையாக வெள்ளிக்கிழமைகளில் ஒரு திரிதான் சுடர் விடும். புத்தாண்டு என்றால் மூன்று அல்லது ஐந்து திரிகள் ஏற்றப்படும். குத்துவிளக்கு கூடு பத்தி எரிந்து விடாமல் இருக்க அடிக்டி கவனித்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்வதுவும் அம்மாதான்.
வறுத்த ஏலத்தின் தோலை உடைத்துக் கொடுப்பதும், முதலில் அம்மா பயறு உடைக்கும் போது அம்மாவின் கையோடு சேர்ந்து என் கையையும் வைத்து திருகணையை சுழற்றுவதும் எனக்குப் பிடித்த வேலைகள்.
அப்பா தேங்காய் துருவும் போது சில்வர் சட்டியில் வெள்ளை வெளேரென்று விழும் பாலும் இனிப்பும் கலந்த முதற் பூவையும், வெட்டும் போது கஜூவையும், முறிக்கும் போது கரும்பையும் எடுத்துச் சாப்பிட ஆசை வரும். ஆனால் சுவாமிக்குப் படைக்கும் முன் எதையும் சாப்பிடக் கூடாது. சுவாமி கோவிப்பார். என்று அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே சொல்லியுள்ளார்கள். அதனால் மனசைக் கட்டுப் படுத்திக் கொள்வேன். வீடெல்லாம் தேங்காய்ப்பாலில் சர்க்கரை கொதிக்கும் பயறு கலந்த ஒரு இனிமையான வாசம் நிறைந்து பசி வயிற்றைக் கிள்ளும். ஆனால் தலைவாழை இலையில் மூன்று அகபபை பொங்கல் போட்டு, தயிர் விட்டு, வாழைப்பழம் வைத்து, கற்பூரம் கொழுத்தி, சாம்பிராணித் தட்டுள் கொதிக்கும் தணலில் புகைக்கும் சாம்பிராணியின் நடுவே சுவாமிப் படத்துக்கு ஆரத்தி எடுத்து அப்பாவுடன் சேர்ந்து நாங்களும் தேவாரம் படித்து கா.. கா... என்று கத்திக் கூப்பிட்டு காகமும் வந்து சாப்பிட்ட பின்தான் நாங்களும் பொங்கலைச் சாப்பிடலாம்.
இந்தக் கொண்டாட்ட நாட்களில் மேசையில் வைத்து கதிரையில் இருந்து சாப்பிடுவதெல்லாம் நடக்காது. சுவாமி அறையில் வாழை இலை போட்டு, சப்பாணியில் குடும்ப அங்கத்தவரில் ஒருவர் கூடத் தப்பாது ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிடுவோம். மிகவும் சந்தோசமாக இருக்கும்.
பின்னர் எங்கள் வீட்டுப் பொங்கல் பக்கத்து வீடுகளுக்கும், பக்கத்து வீட்டுப் பொங்கலுகள் எங்கள் வீட்டுக்கும் வரும். நல்ல நேரம் பார்த்து புது வருசத்திலன்றே போக வேண்டிய வீடுகளுக்கு ஊர்ச் சொந்தக்காரர் எல்லோரும் மாறி மாறிப் போய் கண்டிப்பாகத் தேநீர் அல்லது கோப்பி குடித்துச் செல்வார்கள். அது ஒரு வியாழனாக இருந்தால் கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்ற பயத்தில் காத்திருந்து அடுத்த நாள் ஒவ்வொரு வீடுகளாய்ப் போய் ஒரு வாய் தண்ணியாவது குடித்து வருவார்கள்.
முக்கியமான விசயத்தை மறந்து விட்டேன். கைவிசேஷம். இன்று எந்த நேரம் நல்ல நேரம் என்று பார்த்து கைவிஷேசம் வாங்குவார்கள். கொடுப்பார்கள்.
அம்மாவுக்கு எப்போதும் அப்பாதான் கைவிசேசம் கொடுப்பார். சுவாமிப் படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டு அப்பா வெற்றிலைக்குள் வைத்துக் கொடுக்கும் பணத்தை அம்மா கண்ணில் ஒற்றி விட்டு கவனமாக சுவாமி அறை அலுமாரிக்குள் வைப்பா. அந்தக் காசை அடுத்த புதுவருடம் வரும் வரை செலவழிக்க மாட்டா.
இந்தக் கைவிஷேச நேரம் இரவானால் அன்று முழுக்க அம்மா காசெதையும் கையால் தொடவே மாட்டா. கடைக்குப் போக வேண்டிய தேவையோ, அதனால் காசைத் தொட வேண்டிய தேவையோ ஏற்படாதபடி முதலே எல்லாம் வாங்கி வைத்து விடுவா.
புத்தாண்டன்று எங்கள் முதல் விசிற் அப்பாச்சி வீட்டுக்காய்த்தான் இருக்கும். அதன் பின் அம்மம்மா வீடு. இரவு கோயில். காவடியும் பொங்கலும் என்று பட்டுப் பாவாடை சரசரக்க.............
(தொடரும்)