Monday, November 27, 2006

எங்கள் இலட்சிய மாடத்தின் அத்திவாரக் கற்களே!




எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!

பூகம்பங்களாய் களமாடிய நீங்கள்!
பூவிதழ்களாய் விரிந்திருக்கிறீர்கள்-ஆனால்
இங்கெரியும் தீபங்களால் நீங்கள்
மூட்டிடும் விளக்குகள் ஏராளம்.!

கல்லறைக்குள்ளிருந்தே களப்புலிகளைப் பிரசவிக்கும்
வல்லமை கொண்டவர்கள் நீங்கள்!
மலர்தூவ வருவோரின் மனங்களில் பொறிபாய்ச்சி
கனல் தெறிக்க வைப்பவர் நீங்கள!!

நெய்யூற்றி உங்கள் முன்னால்
விளக்கெரிப்போம் நாங்கள்-உங்கள்
இலட்சியத்தின் சுமையினை துணிந்தே
பொறுப்பெடுப்போம் நாங்கள்.!

- தீட்சண்யன் -

Sunday, November 26, 2006

தலைவருக்கு வாழ்த்துக்கள்


மாங்குளத்தில் மாவீரர் விழாக்கவி - (1990)


அரங்குகள் பல கண்ட
ஆசான் முருகேசனுக்கும்
அடுத்தடுத்துக் கவி படித்த
நல்ல தமிழ் கவிஞர்கட்கும்
அமர்ந்திருந்தும் ஆர்ப்பரித்தும்
கவி கேட்கும் மக்களுக்கும்
சிரம் தாழ்ந்த வணக்கம்!

வாருங்கள்!
மண்ணுக்காய் மரணித்த மாவீரர் தினம் சிறக்க
மடை திறந்த வெள்ளமென வாருங்கள்!
வந்து பாருங்கள்!
சனத்தோடு சனமாகக் கைகளைத் தட்டுங்கள்

முன்னிரண்டு விரலெடுத்து மூச்சிழுத்து
பன்னிரண்டு மைல் கேட்க விசிலடியுங்கள்
போதும்! அது போதும்!
பின் இரண்டு மணியளவில் வீடடைந்து
விழா மறந்து
மாவீரர் செயல் மறந்து
மாற்றான் ஷெல் மடியிலே வீழும் வரை
உறங்குங்கள்!

விடிந்தெழுந்து வேறேதும் சேதியுண்டா..?
என்று கேளுங்கள்..! வேறென்ன..!
ஈழ மண் மீட்டெடுக்க எவனோ ஈன்ற
இளைஞர்கள் இல்லையா எங்களிடம்!
நாமென்ன முட்டாள்களா!
நம் மகனை அனுப்புதற்கு!
என மெல்ல ஒதுங்குங்கள்.
- மிகுதி

Wednesday, November 22, 2006

அவல்


சன்னமாக மிதந்த மாமியின் குரல் ஓலமாக எழுந்த போதுதான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தேன். மாமி அப்படி அழுது நான் பார்த்ததில்லை. தூரத்துச் சொந்தமாக இருந்தாலும் மாமாவைத் திருமணம் செய்து கொண்டதால் மாமியாக எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டவள்.

மாமியின் சீதன வீட்டின் ஒரு பகுதியில் அவளது தாய் தந்தையருக்கும் உரிமை இருந்தது. மாமியுடனான நெருக்கத்தில் நாங்கள் அடிக்கடி அந்த வீட்டுக்குப் போய் வருவோம். மாமியின் தாயார் செல்லம்மாப் பாட்டி இன்முகத்துடன் எங்களை வரவேற்பாள்.

நாற்சார முற்றத்தில் பெரியவர்கள் இருந்து கதைக்க, நாங்கள் பிள்ளைகள் எங்காவது ஒரு மூலையில் இருந்து சிப்பியோ, சோகியோ வீசிச் சம்பா விளையாடுவோம். மாமிக்கு நான்கு தம்பிமார். கடைசி இரண்டு தம்பிமாரும் எங்கள் சோடிகள்தான். எல்லோருக்கும் ஏழில் இருந்து பத்து வயதுக்குள்தான். ஆனாலும் கடைசித் தம்பி எழிலன் ஒருநாளும் எங்களோடு இருந்து விளையாட மாட்டான். எப்போதும் தாயின் சேலையை எடுத்து அரையும் குறையுமாக உடுத்திக் கொண்டு, சேலைத்தலைப்பால் போர்த்திக் கொண்டு நெளிவான். நாணிக் கோணி நிற்கும் அவனது பாவனை ஒரு பெண் போலவே இருப்பதாகச் சொல்லி எல்லோரும் சிரிப்பார்கள். ரசிப்பார்கள்.

"எழிலன்...! வாடா, விளையாடுவம்" என்றால் அழகாகச் சிரிப்பானே தவிர எங்களோடு சம்பா போடவோ, ஒளித்துப் பிடித்து விளையாடவோ வரமாட்டான்.

“பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்திருக்க வேண்டியவன்….“ செல்லம்மாப் பாட்டியும், பாட்டாவும் பெருமையோடு சொல்வார்கள்.

நடனம் ஆடிக் காட்டுவான். சரோஜாதேவி போலக் கண்களைச் சுழற்றி, கழுத்தை ஒரு வெட்டு வெட்டி மந்தகாசப் புன்னகையுடன் தலை குனிவான்.

அவன்தான் இறந்து விட்டானாம். இப்போது அவனுக்குப் பதினாறு வயதிருக்கும். ஓலங்களுக்கும் ஒப்பாரிகளுக்கும் நடுவில் அரசல் புரசலாய் ஏதேதோ கதைகள்.

கடிதம் எழுதி, கிணற்றுக்கட்டில் வைத்து விட்டு, கடிதத்தின் மேல் ஒரு கல்லையும் வைத்து விட்டு தன்னை முடித்துக் கொண்டு விட்டானாம். மாரிக்கிணறு. அதுவும் ஆழக் கிணறு. காலையில் செல்லம்மாப் பாட்டி தண்ணீர் எடுக்க கிணற்றடிக்குப் போன போதுதான் கிணற்றுக்குள் அவன் மிதப்பதைக் கண்டாவாம்.

கடிதத்தில் தனது சாவுக்கு நான்கு பேர் காரணம் என்றும் தனது விருப்பத்துக்கு மாறாக அவர்கள் நடக்கும் போதும் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும், அந்த உபாதையை தன்னால் தாங்க முடியாததாலேயே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அந்த நான்கு பேர்களின் பெயர்களையும் எழுதியிருந்தானாம். நான்கு ஆண்கள் இவனோடு பாலுறவு வைத்திருந்தார்களாம். எனக்கு எதுவும் சரியாகப் புரியவில்லை.

அவனுக்கு வந்தது உடல் உபாதையா, உள உபாதையா என்ற சிந்தனை ஏதுமின்றி „இவனைப் பார்த்தால் பொம்பிளை மாதிரித்தானே, அதாலைதான்…“ என்று ஒரு சாராரும், „இவன் விரும்பாமல் நடந்ததோ?“ என்று இன்னொரு சாராரும்… அவல் கிடைத்த திருப்தியில் மென்று கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாப்பாட்டியும் மாமியும் இன்னும் ஓலமிட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

சந்திரவதனா
ஜேர்மனி
22.11.2006

Wednesday, November 15, 2006

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?


இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது.

சின்னவயதில் அம்மா எதையாவது கொடுத்து விட்டு வரச் சொன்னால் கொண்டு போய் இவனது அம்மாவிடம் கொடுத்து விட்டு வருவேன். என் தோதுக்கு அங்கு யாரும் இல்லை. அவனது அக்கா என்னை விடப் பல வருடங்கள் மூத்தவள். மற்றதெல்லாம் பெடியன்கள். அதனால் அங்கு போவதில் எனக்கு ஆர்வமும் இருந்ததில்லை.

எனது அம்மாவும் அவனது அம்மாவும் மாலை வேளைகளில் எங்கள் வீட்டு விறாந்தை நுனியில் இருந்து ஏதோ குசுகுசுப்பார்கள். சில வேளைகளில் எங்கள் வீட்டு மல்லிகைப் பந்தலின் கீழ் இருந்தும் கதைப்பார்கள். இவனது அப்பாவும் இடையிடையே எனது அப்பாவுடன் கதைப்பார். எப்போதாவது அழகாக வெளிக்கிட்டுக் கொண்டு அம்மாவும் அப்பாவும் அவர்கள் வீட்டுக்குச் சோடியாகப் போய் வருவார்கள். நானும் கூடப் போக வேண்டிய கட்டங்களும் வந்திருக்கின்றன. அந்தப் பொழுதுகளை எப்படிக் கழிப்பது என்று தெரியாமல் நான் அவர்களது வீட்டுப் பூந்தோட்டத்துக்குள் சுற்றுவேன். தென்னைமரத்தோடு சாய்ந்திருப்பேன். என்னை விட நான்கு வயது அதிகமானாலும் அப்போது இவனும் சின்னப் பெடியன்தான். ஆனாலும் கிரிக்கெட் மட்டையோடு வெளியே போய் விடுவான். இவனது அக்கா மட்டும் என்னைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சம் கதைப்பா. இந்தளவு உறவு எமது இரு குடும்பங்களுக்கும் இடையே இருந்தது.

இந்த நித்தியங்களில் பெரிதான மாற்றங்கள் எதுவும் ஏற்படாமலே, காலங்கள் ஓடின. நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாள் காலை நான் பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் வடமராட்சி வீதிச் சந்தியில் வைத்து இவன் ஏதோ ஒரு நோட்டீஸை விநியோகித்துக் கொண்டிருந்தான். நானும் தங்கையும் இவனைத் தாண்டும் போது எனக்கும் நீட்டினான். ஆண்கள் என்றாலே ஒதுங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அன்றைய பெண்களுக்கான எழுதப்படாத சட்டமாக இருந்தாலும், அதுவே எனது பழக்கமாகவும் இருந்தாலும் தந்தது இவன் என்பதால் தயங்காமல் வாங்கிச் சென்றேன். அது ஏதோ ஒரு பகிஸ்கரிப்பை ஒட்டிய நோட்டீஸ்தான்.

ஆனால் மதிய இடைவேளையில் வீடு திரும்பிய போது அண்ணன் கொஞ்சம் மூட்அவுட்டாக நின்றான். மதிய உணவில் கூடக் கை வைக்காமல் என்னையே காத்திருப்பது போல நின்றான். கண்களில் அவமானம் கலந்த கவலை தெரிந்தது. என்னைக் கண்டதும் "ஏன் அவன்(####) லெற்றர் தர வாங்கினனீ?" என்றான். எனக்கு அழுகையே வந்து விட்டது.

"ஆர் சொன்னது?" என்றேன்.

"அவன்தான்(####) சொன்னவன், உன்ரை தங்கைச்சி நான் லெற்றர் குடுக்க வேண்டினவள், என்று"

நல்லவேளையாக நான் அந்த நோட்டீஸை எனது பாடசாலைப் புத்தகங்களுடனேயே வைத்திருந்ததால் அதை அண்ணனிடம் காட்டி சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டேன். ஆனாலும் அவனின் அந்தச் செயல் என்னை மிகவும் உறுத்திக் கொண்டே இருந்தது. கவலையாகக் கூட இருந்தது.

அதன் பின் அவனை தெருவில் எங்காவது காண நேர்ந்தாலும், காணாத மாதிரியே பாவனை பண்ணினேன். „ஏன் அப்படி என் மேல் பழி சுமத்தினாய்?“ என்று கேட்பதற்கெல்லாம் அப்போது எனக்குத் துணிவு வரவில்லை. காலங்கள் வருடக்கணக்கில் ஓடிய போதும் எனக்கு அந்த சம்பவம் மறக்கவில்லை.

எனக்குத் திருமணமாகிய பின் எனது கணவர் கூட ஒருநாள் "அவன் லெற்றர் தர வாங்கினாயாமே!" என்று, சிறிய சந்தேகத்துடன் கேட்டார். அப்போது அவன் வெளிநாடு சென்று விட்டான்.

இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10-12 வருடங்களின் பின் அவனுக்குத் திருமணப் பேச்சுக்கள் நடந்து அவனும் வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.

அதன் பின்னர் எங்கள் ஊர் வழக்கப்படி ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் கால்மாறிச் செல்கையில் எமது வீட்டுக்கும் வந்தான். எமது வீட்டில் எல்லோருமாக அவனையும், மணப்பெண்ணையும் வரவேற்று வரவேற்பறையில் இருத்தி வைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அரைமணி நேரமாக நான் அந்தப் பக்கமே போகாமல் இருந்தேன். எனது தங்கைமார்தான் வந்து "அக்கா வாங்கோ. புதுமணத்தம்பதிகள் எப்பிடி வடிவாய் இருக்கினம் எண்டு பாருங்கோ" என்று வருந்தி அழைத்தார்கள். எனது அண்ணன் அப்போது ஊரில் இல்லை. இருந்திருந்தால் வந்து கதைக்கும் படி என்னை அழைத்திருக்க மாட்டான்.

மனமில்லாமல் வரவேற்பறைக்குச் சென்றேன். புதுமணக் களையோடு அவன் இருந்தான். எதுவுமே நடக்காதது போல என்னோடு கதைத்தான். என்னால் அதிகம் கதைக்க முடியவில்லை. „என் மீது ஏன் களங்கம் சுமத்த முயன்றாய்?“ என்று கேட்கவும் முடியவில்லை.

ஆனால் எப்போதோ ஒரு நாள் என் வீட்டுக்கு நான் இல்லாத வேளையில் வந்த போது எனது ஓட்டோகிராபை(autograph) எடுத்து „இது நீரோடு செல்கின்ற ஓடம். இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்.“ என்று அவன் எழுதி வைத்த பாடல் வரிகள் சட்டென்று நினைவில் வந்து போயின. அதைக் கூட ஏன் எழுதினான் என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

இத்தனைக்கும் அவன் ஒரு விளையாட்டுத்தனமான பொறுப்பற்ற பெடியன் அல்ல. படிப்பு, வேலை, குடும்பம்… என்று வாழ்க்கையின் படிகளில் சரியாகவே ஏறிக் கொண்டிருந்தவன்.

இன்றைக்கு, அவன் முகம் என் ஞாபகத்தில் அவ்வளவாக இல்லை. ஆனாலும் இற்றைக்கு 32வருடங்களுக்கு முந்திய அன்றைய பொழுதில், ஒரு பெண்ணை மிகப்பெரிய குற்றவாளியாக நிறுத்தக் கூடிய... குடும்ப வாழ்க்கையையே குலைக்கக் கூடிய... விதமான அந்தப் பழியை என் மேல் சுமத்த முனைந்த அவனது செயலுடன் கூடிய அந்த சம்பவம் என் நினைவில் இருந்து அகலவே இல்லை.

சுந்திரவதனா
15.11.2006

Monday, November 13, 2006

பேத்திகள் வந்திருந்தார்கள்














சிந்து, நிலா















சிந்து, நதி















நதி, நிலா

பேத்திகள் வந்திருந்தார்கள்.என்னைச் சுற்றியுள்ள மற்றைய எல்லாவற்றையும் மறந்திருந்தேன்.அஞ்சல்கள், பின்னூட்டங்கள் எல்லாம் வாசிக்கப் படாமல் அப்படியே இருந்து விட்டன. இனித்தான் அவைகளைக் கவனிக்க வேண்டும்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite