Thursday, December 31, 2009

புதுவருட வாழ்த்துக்கள் - 2010


Tuesday, December 01, 2009

'தீட்சண்யம்' நூல் வெளியீட்டு விழா - ஒரு பார்வை


ஈழத்துக் கவிஞர் மறைந்த தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது 92 கவிதைகள் அடங்கிய 'தீட்சண்யம்' என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 22.11.2009 ஞாயிறு அன்று லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Friday, November 27, 2009

உங்களை நாங்கள் வணங்குகின்றோம்!


எங்கள் இலட்சிய மாடத்தின்
அத்திவாரக் கற்களே!
அமைதியாக எம் மண்ணில்
புதைந்திருக்கும் விதைகளே!

Tuesday, November 24, 2009

கவிதை நூல் வெளியீட்டு விழா

கடந்த ஞாயிற்றுக்கிழமை 22.11.2009 அன்று லண்டன், என்பீல்ட நாகபூசணி அம்பாள் ஆலய மண்டபத்தில் மறைந்த கவிஞர் தீட்சண்யன் (எஸ்.ரி.பிறேமராஜன்) அவர்களது ´தீட்சண்யம்` கவிதை நூல் தீட்சண்யனின் தங்கை திருமதி சந்திரா இரவீந்திரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப் பெற்றது.

Thursday, November 19, 2009

மனஓசை - கவிஞர். முல்லை அமுதன்

நூல்- மனஓசை
நூலாசிரியர்- சந்திரவதனா
விமர்சனம்- கவிஞர். முல்லைஅமுதன்


ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது.

Saturday, November 07, 2009

லண்டனில் நூல் வெளியீட்டு விழா

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்)


தீட்சண்யம்
கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா

காலம் - 22.11.2009

ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு
Chandra Ravindran - 0044 7846946536
Chandravathanaa Selvakumaran - theedchanyan@googlemail.com




Saturday, October 17, 2009

தெ. நித்தியகீர்த்தி


T. Nithyakeerthy
04.03.1947 - 15.10.2009)

எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி (04.03.1947 - 15.10.2009)  தனது தொப்புள் கொடி நாவலை வெளியிட இரண்டு நாட்களே இருக்கையில், அதற்கான வேலைகளை மிகவும் ஆர்வமாகவும், சந்தோசமாகவும் மேற்கொண்டிருந்த வேளையில் மாரடைப்பினால் திடீரென மரணித்து விட்டார்.



எனது கணவரின் சகோதரர், மைத்துனர் என்ற உறவு முறைக்கு அப்பால் ஒரு இலக்கிய நண்பனை இழந்து விட்ட உணர்வுகளோடு...

எழுத்தாளர் தெ. நித்தியகீர்த்தி விக்கிபீடியாவில்
நித்தியகீர்த்தியின் மீட்டாதவீணை நாவல்

நித்தியகீர்த்தியின் சில படைப்புகள்
* Code of Conduct  - SHORT STORY
* கன்பரா கண் விழிக்குமா?
* தமிழ் உணர்வு - (சிட்னியில் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

Tuesday, September 22, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள் - 2

கல்லூரிச்சாலையின் பசுமை நினைவுகளோடு சம்பந்தம் உள்ள ஒரு பதிவு இது என்பதால் இதை மீள்பதிவு செய்கிறேன்.

எமது வாழ்வில் நல்ல விதமாகவோ அன்றிக் கெட்ட விதமாகவோ மனதில் தடம் பதித்துப் போனவர்கள் பலர் இருப்பார்கள். இவர்கள் அடிக்கடியோ அன்றி எப்போதாவதோ எமது நினைவுக்குள் முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் லxxxம் ஒருவன்.

லxxல்
அவன் பற்றிய பூர்வீகம் எதுவுமே எனக்குத் தெரியாது. நான் Tuitoryக்குப் போகும் ஒவ்வொரு பொழுதிலும், அவன் வகுப்பு நடக்கும் அறையின் வாசலில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பான். அந்த வாசல் Tuitoryயின் வாசலைப் பார்த்த படியே இருப்பதால் உள்ளே நுழைவது யாராக இருந்தாலும் அவனைத் தரிசிக்காது செல்ல முடியாது. நான் வரும் நேரங்களில் மட்டுந்தான் அதில் அவன் நிற்கிறானா என்பது எனக்குத் தெரியாத விடயம்.

இப்போதென்றால் ஒரு தெரிந்தவரைக் கண்டால் ஒரு "ஹலோ"வோ அல்லது ஒரு "வணக்கமோ" அதையும் விட்டால் ஒரு புன்னகை சிந்தலோ இல்லாமல் நகர மாட்டோம். அப்போது (31வருடங்களுக்கு முன்) அதுவும் ஒரு பதின்னான்கு வயதுப் பெண் ஒரு ஆணைக்கண்டு தெரிந்தது போல் பாவனை பண்ணிக் கொள்வது விபரீதமான விளைவுகளையே தரும். இதற்கு மேலால் அவன் மீது எனக்கு எந்த விதமான ஈடுபாடும் இருக்கவும் இல்லை. அதனால் எந்தவித பாவனையுமின்றி நான் அவனைத் தாண்டி விடுவேன்.

நிட்சயம் அவன் என்னை விட வயதானவனாக இருப்பான். ஆனாலும் ஆங்கில வகுப்புக்கு மட்டும் எனது வகுப்பில் வந்தமர்வான்.

அவனது பெயர் லxxல் என்பதை ஆங்கில வகுப்பில் ஆங்கில ஆசிரியர் கூப்பிடும் போதுதான் நான் அறிந்து கொண்டேன். அவனது பிறப்பிடம் மட்டக்களப்போ அல்லது திருகோணமலையோ அல்லது வேறு இடமோ தெரியவில்லை. ஆனால் எங்கோயோ இருந்து பருத்தித்துறைக்கு வந்து அந்த ரியூற்றரியிலேயே ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கிறான் என்பது மட்டும் அரசல் புரசலாக என் காதிலும் வந்து விழுந்திருந்தது.

Tuitoryயில் ஒரு பாடம் முடிந்து வரும் இடைவேளையின் போது பெண்கள் Toilet பக்கம் செல்வதாயின் அவனது அறையைக் கடந்துதான் செல்ல வேண்டும். நான் அந்த அறையைக் கடக்க வேண்டிய ஒவ்வொரு பொழுதிலும் அவன் ஓடி வந்து அறை வாசலில் நின்று என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான். ஒரு நாளேனும் அவன் என்னுடன் கதைக்க முயற்சித்ததாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்போதுமே அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை கவிந்திருக்கும்.

இது ஒரு புறம் இருக்க எங்களுக்கு பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. பிரியப் போகிறோம் என்ற நினைப்பில் எனது சக மாணவிகள் Autograph களுடன் திரிந்தார்கள்.

"ஆழக்கடல் வற்றினாலும் அன்புக்கடல் வற்றக் கூடாது." என்பதில் தொடங்கி எத்தனையோ சினிமாப் பாடல்களின் வரிகளால், பழமொழிகளால்... என்று தொடர்ந்து "என்னை மறந்து விடாதே..." என்பது வரை எழுதி எழுதி Autographஐ நிறைத்தார்கள்.

நானும் என் பங்குக்கு எனது Autographஐ ஒவ்வொருவரிடமும் நீட்டி வாழ்த்துக்களையும், கையெழுத்துக்களையும் வாங்கிக் கொண்டேன். இத்தனையும் சக மாணவிகளிடந்தான். மருந்துக்குக் கூட சக மாணவர்களிடம் கையெழுத்தை வாங்கும் பழக்கம் அப்போது இல்லை.

அன்று Chemistry வகுப்பு முடிய 5நிமிட இடைவேளை. அவசரமாக வகுப்பறையை விட்டு வெளியில் எமக்கான அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து... மீண்டும் ஆங்கில வகுப்புக்குத் திரும்பிய போது எனது மேசையில் எனது புத்தகங்களுடன் இருந்த எனது Autographஐக் காணவில்லை.

எல்லாமாணவிகளையும் மட்டுமல்லாது, Tuitory பொறுப்பாளரையும் கேட்டு விட்டேன். `ம் கூம்...` அது எங்கே யார் கைக்குப் போயிருக்குமென்று யாருக்குமே தெரியவில்லை. "பெடியன்களில் யாரோ எடுத்து விட்டாங்கள் போலை." சில மாணவியர் கருத்துத் தெரிவித்தனர். பார்த்துப் பார்த்து வேண்டிய கையெழுத்துக்களும், வாழ்த்துக்களும் தொலைந்து போய் விட்டதில் எனக்கு வருத்தந்தான். என்ன செய்வது...?

ஒரு வாரத்துக்குள் அம்மாவிடம் கேட்டு இன்னொரு Autograph வாங்கி, மீண்டும் ஒவ்வொருவரிடமாக நீட்டிக் கொண்டிருந்தேன். இப்படியே Tuitoryயின் இறுதிவாரமும் வந்து விட்டது. அந்த வாரத்தில் ஒருநாள், இடைவேளைக்கு வெளியில் போய் வந்த போது, தொலைந்த எனது Autograph எனது புத்தகங்களின் மேல் வைக்கப் பட்டிருந்தது. எனக்கு அளவிலா மகிழ்ச்சி. கூடவே பயமும், யார் யார் என்ன கிறுக்கியிருப்பார்கள் என்ற குழப்பமும் இருந்தது.

ஆங்கில வகுப்பு முடிந்து வீடு சென்றதும் Autographஇன் பக்கங்களைப் புரட்டினேன். எனது எண்ணம் சரியாகவே இருந்தது. மூன்று பக்கங்களில் ஒரே கையெழுத்தில் யாரோ ஒருவர் அழகாக எழுதியிருந்தார்.

அவற்றில் ஒரு பக்கத்தில்
கோட்டையிலே பெண் பிறந்தாலும்
தலையில் கொட்டியபடியேதான் நடக்கும்
என்ற வாக்கியங்கள் இருந்தன.

அந்த ஒரு வாரத்துக்குள் எனது நண்பிகள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் அதை எழுதியது லxxல் ஆக இருக்கலாம் என்ற பதில் எனக்குக் கிடைத்தது. அவர்கள் தந்த தகவல்களின்படி அவனது கையெழுத்துத்தான் அது என என்னால் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் முடிந்தது.

ஆனால் எனது பத்தாம்வகுப்புப் பரீட்சை முடிந்து, முடிவுகளுக்காகக் காத்திருந்து, மீண்டும் நான் பதினோராம் வகுப்பில் அதே Tuitoryயில் போய்ச் சேர்ந்த போது அவன் அங்கு இல்லை. "நீயா எழுதினாய்?" என்றோ, அல்லது "ஏன் அந்த வாக்கியங்களை எனக்கு எழுதினாய்?" என்றோ கேட்பதற்குக் கூட எனக்கு ஒரு வாய்ப்புத் தராமல் அவன் தனது சொந்த ஊருக்குப் போய்விட்டான் என்பது தெரிந்தது.

அந்த Autographம் இந்திய இராணுவத்தின் அத்துமீறலில் எனது வீட்டுக்குள்ளிருந்து வீசி எறியப்பட்டு விட்டது. ஆனால் இரக்கமா, விருப்பமா என்று தரம் பிரித்தறிய முடியாத அவனது பார்வையையும், அவன் எழுதிய அந்த வசனங்களையும் என் மனதுள் இருந்து தூக்கியெறிய முடியவில்லை.

சந்திரவதனா
7.11.2005
http://www.manaosai.com/

Friday, September 18, 2009

பசுமை நிறைந்த பள்ளி நினைவுகள்

எனது வீடு, எனது ஊர்... எனது நாடு.. என்னும் போது தோன்றக்கூடிய பரவசநிலையைத் தரக்கூடியதே எனது பாடசாலை என்பதும். 32வருடங்களுக்கு முன் முடிந்து போய்விட்ட எனது பாடசாலை வாழ்க்கை பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. அவ்வப்போது ஒவ்வொன்றாக மனசுக்குள் மிதக்கும் அந்த நினைவுகள் வந்தி என்னை அழைத்த இந்த சில நாட்களுக்குள் இன்னும் அதிகமாகவே கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன.

மற்றவர்களைப் போல ஒரே மூச்சில் அத்தனையையும் என்னால் எழுதி முடித்து விட முடியும் போல் தெரியவில்லை. கண்டிப்பாக எப்போதாவது எழுத வேண்டும் என நினைத்த எனது தூயகணித ஆசிரியையோடான நினைவுகளோடு தொடங்குகிறேன். அழைத்த வந்திக்கு நன்றி.

அந்த ரீச்சரை எல்லோரும் பொல்லாத ரீச்சர் என்றுதான் சொல்வார்கள். ஒன்பதாம் வகுப்புக்கு அவதான் எங்களுக்கு வகுப்பு ரீச்சராக வந்தா.

எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்து வந்த நாம் எட்டாம் வகுப்பு பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் Arts, Science எனப் பிரிக்கப் பட்டோம். அப்போதெல்லாம் சயன்ஸ் மாணவர்களுக்குத்தான் மதிப்பு. ஆர்ட்ஸ் மாணவர்கள்தான் பிற்காலத்தில் சட்டத்தரணியாகவோ,  அன்றி இன்ன பல நல்ல வேலைகளிலோ அமரப் போகிறார்கள் என்ற சிந்தனை அந்த நேரத்தில் யாருக்கும் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆர்ட்ஸ்க்குப் போகும் மாணவர்களைக் கொஞ்சம் மட்டமாக நினைப்பது இயல்பாக இருந்தது. இதற்கு, சயன்ஸ்க்குப் போனால்தான் ஒரு டொக்டராகவோ அன்றி என்ஜினராகவோ வரலாம் என்ற அந்தக் காலப் பெற்றோரின் கனவு காரணமாக இருக்கலாம்.

சயன்ஸ் பிரிவினருக்கான 9ம் வகுப்புக்குத்தான் அந்தப் பொல்லாத ரீச்சர் வகுப்பாசிரியையாகினா. அவ எங்களுக்கு வகுப்பாசிரியை மட்டுமல்ல தூயகணிதத்துக்கும் அவதான் ஆசிரியர் எனத் தெரிய வந்தது. இது எங்கள் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பல மூலைமுடுக்குகளிலும் பேசப்படும் ஒரு விடயமாக எல்லோரையும் கலக்கியது.

'பெரிய மாணவிகளுக்குக் கூட அடிப்பாவாம். உலுப்பி எடுத்து விடுவாவாம்...` பலரும் சொன்னார்கள்.

ஆனால் அந்த ரீச்சரைப் பார்த்த போது எனக்கு அப்படி ஒன்றும் பொல்லாத்தனமாய் தெரியவில்லை. வெள்ளையாக, அழகாக, ஆனால் என்னைப் போலக் கட்டையாக இருந்தா. சுருட்டைத் தலைமயிரை மடித்துச் சின்னதாகக் கொண்டை போட்டிருந்தா. முதல் நாள் பார்வையிலே நட்பாகச் சிரித்தா. எப்போதுமே ஒரு முறுவல் அவவின் முகத்தில் ஒட்டியிருப்பது போலத்தான் எனக்குத் தெரிந்தது.

முதல் நாளைய தூயகணிதத்தில் அல்ஜிபிராவில் பிளஸ்(+), மைனஸ்(-) என்று வந்த போது எல்லோருமே சற்றுத் தடுமாறினோம். நாம் குழம்பும் போதுதான் ரீச்சர் பொறுமையிழப்பது தெரிந்தது.

சின்ன வகுப்பிலிருந்து சாதாரணமாகப் படித்துக் கொண்டு வந்த கணிதத்தை விடுத்து எட்டாம் வகுப்பில் New Maths என்று எதையோ போட்டுக் குழப்பி விட்டு ஒன்பதாம் வகுப்புக்கு வந்த போது அங்கு PureMaths, AppliedMaths என்று வேறு வடிவங்களைக் காட்டினார்கள். எங்கள் சயன்ஸ் பிரிவிலேயே டொக்டர் கனவோடு இருந்தவர்கள் Chemistry, Physics உடன் Biologyயையும் Zoologyயையும் தமக்கான பாடங்களாக எடுக்க, நான் ஆர்க்கிரெக் கனவுடன் தூயகணிதத்தையும்(Pure Maths), பிரயோககணிதத்தையும்(Applied Maths) எனக்கான பாடங்களாகத் தேர்ந்தெடுத்திருந்தேன். பிளஸ்(+), மைனஸ்(-) கொஞ்சம் குழப்பியது..

அன்றிரவே எனது அண்ணனிடம் பிளஸ்(+), மைனஸ்(-) பற்றிய குழப்பத்தைச் சொன்னேன். பொல்லாத ரீச்சர் பற்றியும் சொன்னேன்.

அவன்
பிளஸ் + பிளஸ் = பிளஸ்
மைனஸ் + மைனஸ் = மைனஸ்
மைனஸ் x மைனஸ் = பிளஸ்
“இதை சரியான படி ஞாபகம் வைத்திரு. தூயகணிதத்தில் எந்தக் குழப்பமும் வராது” என்றான். இன்னும் சில அடிப்படை நுணுப்பங்களைச் சொல்லித் தந்தான். அந்த ஒரு நாள் அதுவும் வெறுமனே அரைமணி நேர அண்ணனின் விளக்கம் எனக்கு கணிதத்தை மிக்சுலபமாக்கி விட்டது. என்னை மிஞ்ச யாருமில்லை என்ற அளவுக்கு கணிதம் என்னோடு மிகவும் இசைந்தது. பரீட்சைகளில் தூயகணிதத்தின் Algebraவுக்கும் சரி Geomatryக்கும் சரி 100 புள்ளிகளே எப்போதும் கிடைத்தன. பிரயோககணித ஆசிரியரிடமிருந்து Computer என்ற பட்டம் கிடைத்தது.

பொல்லாத ரீச்சர் என்று மற்றவர்களால் வர்ணிக்கப்பட்ட அந்த ரீச்சர் என்னோடு மட்டும் எப்போதுமே அன்பாகவும், நட்பாகவும்  நடந்து கொண்டா.

ஒருநாள் றிலே நடக்கும் என்பதால் அன்றைய எல்லாப் பாடங்களும் ரத்து என்ற நினைப்பில் முதல் நாள் தந்து விட்ட தூயகணித homeworkஐ வகுப்பில் யாருமே செய்யவில்லை. ஆனால் தூயகணிதம் முடியத்தான் றிலே ஆரம்பமாகும் என்ற போது எல்லோரும் விழித்தோம். ஒட்டு மொத்த வகுப்பே செய்யவில்லை. ரீச்சர் ஒவ்வொருவராகப் பார்த்து கொப்பிகளைத் தூக்கி எறிந்து கொண்டும், அடித்துக் கொண்டும் வந்தா. மிகவும் மரியாதையான இன்னொரு ரீச்சரின் மகளை ஒரு உலுப்பு உலுப்பி வகுப்புக்கு வெளியில் போய் நிற்கும் படி பணித்தா. அந்த மாணவி மிகவும் கெட்டிக்காரி. எல்லோராலும் மதிக்கப்படும் மாணவி. அவளுக்கே இந்நிலை என்றால் என் நிலை என்ன? பயம் என்னைத் தின்றது. மற்றவர்கள் எல்லோரும் Homework கொப்பியாவது வைத்திருந்தார்கள். நான் கொப்பியைக் கூடக் கொண்டு செல்லவில்லை.

ரீச்சர் என்னை நெருங்க நெருங்க பயமும் அதிகரித்தது. ரீச்சர் எனக்கு முதல் பிள்ளையின் கொப்பியைப் பார்த்து விட்டு அந்தப் பிள்ளைக்கு அடித்தா. எனக்கு உடலும் மனதும் பயத்தில் பரபரத்தது. அடுத்தது நான். ´என்ன நடக்கப் போகிறது. அடிப்பாவா? கொப்பியைத் தூக்கி எறிவாவா?` கைகளைப் பிசைந்தேன். கோபாவேசத்துடன் சுழலும் ரீச்சரின் முகத்தைப் பார்த்தேன். சட்டென மாறிய அவவின் முகத்தில் சாந்தம் நிலைக்க மெல்லிய முறுவலுடன் என்னைத் தாண்டிப் போய் எனக்கு அடுத்த பிள்ளையின் கொப்பியைத் தூக்கி எறிந்து விட்டு அடுத்த லைனுக்குப் போனா.

என்னை Homework செய்தாயா? கொப்பி கொணர்ந்தாயா என்ற எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு வகையில் அது நியாயமற்றதுதான். வகுப்பில் அத்தனை பேரும் தண்டனை பெறும் போது எனக்கு மட்டும் தண்டனை தராதது பிழையே. அந்த நேரத்தில் எனக்கு அது பிழையென்று தெரியவில்லை. தப்பினேன் பிழைத்தேன் என்ற நிம்மதியும், ஒரு மனதார்ந்த நன்றியுமே இருந்தது. இன்றைக்கும் அந்த ரீச்சரின் நினைவு என்னோடு இருக்கிறது.

சந்திரவதனா
17.09.2009

Sunday, September 13, 2009

மடமையைக் கொளுத்துவோம்!

- சந்திரா ரவீந்திரன்

வீட்டினருடனான சம்பாஷணையை முடித்துக் கொண்ட மாமா என் மேசைக்கருகில் வந்தார்.

"இது என்ன பேப்பேஸ்?"

"அது... நான் எழுதின கதை மாமா, வாசித்துப் பாருங்கோ"
அந்தப் பேப்பர் தாள்களைத் தூக்கிய மாமா நான் கூறியதும் சந்தோசமாக வாசிக்க ஆரம்பித்தார்.

நேரத்தைப் பார்த்த நான் அவசரமாக வீதியில் இறங்கினேன்.

"எங்கை.... பயணம்?"
வழியில் வந்த பக்கத்து வீட்டு மாமி விசாரித்ததும் தயங்கிய நான்,

"கூட்டமொண்டு யாழ்ப்பாணத்திலை, அங்கைதான் போறன்"
கூறி முடிக்கமுன்,

"கூட்டமோ? யாழ்ப்பாணத்திலையோ? அதுக்கு... நீ இங்கையிருந்து... தனியா... அடியாத்தை நல்லாயிருக்கடி"
மாமி வாயைப் பிளந்தாள். எனக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்தது.

"ஏன் மாமி? யாழ்ப்பாணத்துக்குத் தனியாத்தானே படிக்கப் போறன். பிறகு இதுக்கு மட்டும் ஒரு ஆள் தேவையோ?"

"சுஜா, நீ யாழ்ப்பாணம் படிக்கப் போறனி எண்டு நல்லாவே தெரியுது. இங்கையிருந்து யாழ்ப்பாணம் போற அளவு தூரத்துக்கு வாயும் நீண்டிருக்கடி! குமர்ப்பிள்ளை... தனியா, ஏதோ ஒரு கூட்டத்துக்குப் போகத்தான் அவசியமோ, எண்டுதான் கேக்க வந்தனான். பரவாயில்லை. கேட்டது என் தப்பு. நீ போயிட்டுவாம்மா"
மாமியின் கிண்டல் பேச்சு ஆற்றாமையை மேலும் வளர்த்தது.

"அது... ஏதோ ஒரு கூட்டம் இல்லை மாமி. ஒரு இலக்கியப் புத்தக வெளியீட்டு விழா."
நான் நறுக்கென்று கூறினேன்.

"இலக்கியம். பெரிய இலக்கியம். எங்களுக்குத் தெரியாத இலக்கியம்!... காலம் கெட்டுப் போச்சடி"
மாமி தனக்குள் முணுமுணுத்தவாறே என்னைக் கடந்து வேகமாக நடந்து, ஒரு வீட்டினுள் நுழைந்து மறைந்தாள்.

"சரியா...ன லூஸ் மாமி!" எனது கோபத்தை அந்த வரிகளில் அழுத்தமாகக் காட்டி முணுமுணுத்து விட்டு, நான் பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

சிறிது தூரம் நடந்ததும், ஒரு ரியூட்டரி வாசலில் நின்ற ஒரு ஆசிரிய இளைஞனும், சில மாணவிகளும் எதைப் பற்றியோ கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

"பாரடி! அந்தக் குமரியளை! யாரோடை கதைக்கிறது, எவடத்திலை நிண்டு கதைக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல்... வாசலுக்கை...! காலம் கெட்டுப் போச்சடி..."

நான் திடுக்குற்றுத் திரும்பினேன். ஒரு வயதான பெண் அருகிலொரு இளம் பெண்ணுடன் என்னைக் கடந்து முன்னேறினாள்.

அவளது அந்தக் கீழ்த்தரமான கணிப்பீடு என்னை என்னவோ செய்திருந்தது. அந்த ஆசிரிய இளைஞனும் தான், சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த உரையாடல்களில் கறுப்புப் புள்ளி இடப்பட்டது அந்தப் பெண்களுக்குத்தான்! இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்காக நியாயம் கதைக்கப் போனாலும் ´வாய் நீண்டு போச்சுது" எண்டு சண்டைக்கு வருகிறார்களே! மனம் புழுங்கியது. நான் எனக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

நான் சந்திக்கு வந்து, அடுத்த வீதிக்குத் திரும்பிய பொழுது சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள், வீதியின் ஓரமாக வந்து கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண்ணின் அருகில் சென்று ஏதோ சொல்ல, "ஸ்டுப்பிட்... ராஸ்கல்" என்று திட்டிக் கொட்டி விட்டு அவள் நடந்தாள். நான் அவர்களைக் கடந்து சென்றேன்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைக் கண்டதும் மெல்லத் தலையைக் குனிந்து கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"யாழ்ப்பாணத்துக்குப் போறேன் அங்கிள்"

'எதுக்கு?' என்று கேட்க விரும்பாமல் நெற்றியைச் சுழித்துக் கொண்டே அவர் விடைபெற்றார்.

'அப்பப்பா!' பார்வைகளைப் பர்த்தால் திரும்பி வீட்டிற்கே ஓடிவிடலாம் போலிருந்தது.

´என்ன மனிதர்கள் இவர்கள்? இந்த வீதியாலை எத்தனை ஆண்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மட்டும் தான் அனைவரது அவதானிப்புகளுக்கும், சிந்தனைக்கும் ஆளாக வேண்டுமோ? இவர்களுக்கு வேறு சிந்தனையே இல்லையோ?'

என் மனம் என்னுள் அல்லாடியது.

நான் பஸ் ஸ்ராண்டை அடைந்த பொழுது, யாழ்ப்பாண பஸ் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தில் அமர்ந்த பொழுது அவர்,

"ஹலோ" என்றார். திடுக்குற்ற நான் நிமிர்ந்த பொழுது, அருகிலிருந்தவரைக் கண்டு ஆச்சரியமடைந்தவாறே,

"ஆ... ஹலோ" என்றேன். பிரபல எழுத்தாளர் சதுரா புன்னகை சிந்திக் கொண்டிருந்தார்.

"எங்கை... வெளியீட்டு விழாவுக்கோ?" நான் கேட்டதும்,

"ஓமோம், நீங்களும அங்கைதானே?" அவர் நம்பிக்கையோடு விசாரிக்க, நான் ´ஆம்` என்று தலையாட்டினேன்.

"இன்விற்ரேசன் வந்ததோ... அல்லது பேப்பரில பார்த்தனிங்களோ?"

"இன்விற்ரேசன் காட் வந்தது" நான் கூறிவிட்டு "விழாவிலை நீங்களும் பேசுவீங்களா?" - அவருடைய அருமையான மேடைப்பேச்சுக்களை மனதில் வைத்தவாறே ஆவலுடன் கேட்டேன்.

'ம்... பேசச் சொல்லிக் கேட்டால் பேசுவன்.'

'ஆயத்தப்படுத்தாமல்... எப்பிடி உங்களாலை சட்டென்று பேசமுடியுது?'

அவர் மெதுவாகச் சிரித்து விட்டு என்னைப் பார்த்தார்.

"நீங்கள்... ஒரு கதையை எழுதிறதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கிறிங்கள். பிறகு எழுதத் தொடங்க, எழுத வேண்டியதெல்லாம் சரளமாய் வந்து அமைஞ்சிடுது இல்லையா?... அது மாதிரித்தான் இதுவும். ஆரம்பத்தில கொஞ்சம் நிதானமாக வார்த்தைகளை விடவேணும். பிறகு மனசிலை தோன்றுகிறதெல்லாம் சரளமாய் வாயிலை வந்திடும்."

"எனக்கெண்டால், மனசில தோன்றுவதுகூடப் பலருக்கு மத்தியில பேச வராமல் மறைஞ்சு போயிடும்" நான் ஏக்கத்துடன் கூறினேன்.

"சுஜா, அது ஒரு தாழ்வு மனப்பான்மையால வாறது. நாங்கள் பலருக்கு முன்னால பேசுகிற போது பிழையாக எதையாவது பேசிவிடுவோமோ என்கிற பயம்! அந்தப் பயம் இருக்கக் கூடாது. எடுத்த எடுப்பில நிறையப் பேசவேணுமெண்டு நினைக்காமல், மனசில படுகிறதை சுருக்கமாய் நாலு வார்த்தையிலை பேசி முடிச்சிட்டால், அடுத்தடுத்த தடவைகள் பேசுகிறபோது, பயம் தெளிஞ்சு, அதிகம் பேசக்கூடிய துணிச்சல் வந்திடும். அந்த விசயத்தை ஒரு பயங்கரமாய் நினைச்சு, மனசைப் பாராமாக்கக் கூடாது. அதைச் சிம்பிளாக நினைக்க வேணும்." அவர் ஒரு ஆசிரியர் போல் புத்திமதி கூறினார்.

எனக்கு அது புரிந்தது. நான் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

"சுஜா, அப்போ நீங்கள் இந்த விழாவிலை சின்னதாக ஒரு வாழ்த்துரை வழங்குங்களேன் பார்க்கலாம்."

"ஐயையோ, எவ்வளவு பெரிய ஆட்களுக்கு முன்னால.. நான்... நான்..." நான் தயங்க,

"பார்த்தீங்களா, பார்த்தீங்களா, இன்னமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை உங்களுக்குப் போகவில்லை! நீங்கள் பேனையாலை வெளிப்படுத்திற துணிவை, வார்த்தையாலை வெளிப்படுத்துங்கோ." அவர் மீண்டும் மென்மையாக என் மனதைத் திருத்த முற்பட்டார்.

"சரி, இண்டைக்கு நான் முயற்சி பண்ணுறன்." கூறிய பொழுது அவர் மகிழ்ச்சியோடு சிரித்தார்.

"ஏன் சிரிக்கிறீங்கள்?" நான் புரியாமல் கேட்டேன்.

"இல்லை, என்ரை மனுசி சொல்லுவாள் ´நீங்கள் ஒரு ரீச்சரா இல்லா விட்டாலும், போற இடமெல்லாம் ரீச்சர் வேலை பார்ப்பீங்கள்!` எண்டு. இப்ப இந்த... பஸ்சுக்குள்ளையே தொடங்கி விட்டன். இல்லையா?" அவர் கூறியதும் சிரிப்பு வந்தது.

நான் சிரித்து விட்டுத் திரும்பிய பொழுது, எனக்கு நேரே மறு புறத்து ஆசனத்தில் இருந்த இளைஞன் முறைத்துப் பார்ப்பது தெரிந்தது. ´யார் அது?` உற்றுப் பார்த்தேன். ஞாபகம் வந்தது. அவன் எங்கள் ஊர்க்காரன்தான். எப்பவோ ஒருநாள் அண்ணாவுடன் கதைத்துக் கொண்டு நின்றபோது நான் கண்டிருக்கிறேன்.

´ஏன் இப்படி முறைக்கிறான்?´ எனக்குப் புரியவில்லை. நான் தலையைக் குனிந்து கொண்டேன்.

பஸ், யாழ்ப்பாணத்தை அடைந்த பதினைந்து நிமிடங்களில் நானும் எழுத்தாளர் சதுராவுமாக விழா மண்டபத்தை அடைந்தோம். நாம் போகும்போது விழா ஆரம்பமாகியிருந்தது. ஒரு இலக்கியவாதி, மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து பலரது கருத்துக்கள், சர்ச்சச்சைக்குரிய விடயங்கள் நகைச்சுவைச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் எழுத்தாளர் சதுராவை விழாத்தலைவர் பேச அழைத்தார். அவர் மேடைக்கு ஏறும் போழுதே பலர் ஆர்வமாக அவரது பேச்சைக் கேட்கத் தயாராகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கணீரென்ற கவர்ச்சியான குரலில், ரசமான வார்த்தைகளால் நூலின் குறை நிறைகளை அள்ளி வீசினார். என் அவதானம், பிசகாமல் அவர் பேச்சிலேயே நிலைத்திருந்தது! அவர் பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கிய போதும் என் வியப்பு மாறாமலே இருந்தது.

இறுதியாக, "விரும்பியவர்கள் பேசலாம்" என்று தலைவர் கூறிய பொழுது, என்னைப் பேசும்படி சதுரா ஜாடை காட்டினார். நான் தயங்கினேன். அவர் கட்டாயப்படுத்தினார். நான் எழுந்து சென்று நான்கு வரிகளில் வாழ்த்துரை வழங்கி விட்டு வந்தமர்ந்த பொழுது வியர்த்துக் கொட்டியது. சதுரா வாயை மூடிக்கொண்டு மெலிதாகச் சிரித்தார்.

விழா முடிவடைந்து வெளியில் வந்தபொழுது,

"பரவாயில்லை, நாலு வசனம் எண்டாலும் நல்லாத்தான் இருந்தது" அவர் புன்னகையுடன் கூறி விட்டுத் தனக்கு அறிமுகமானவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது நான் விடைபெற்றுக் கொண்டு பஸ் ஸ்ராண்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

பஸ் வீடு வந்து சேர்ந்த பொழுது வீட்டு வாசலில் அண்ணா நின்றிருந்தார். அவர் முகம் அசாதரணமாக இருந்தது.

"இப்ப... என்ன நேரம்?"
அவரின் கேள்வியில் கடுமை தெரிந்தது கண்டு நான் திடுக்குற்றேன். நேரத்தைப் பார்த்தேன்.

"ஆ... ஆறரை"
அந்தச் சூழ்நிலை ஏற்படுத்திய பயத்தில் நாக்குளறியது.

"விழா எத்தினை மணிக்கு முடிஞ்சது?"
குரலில் அதே கடுமை.

"ஐந்தே காலுக்கு"
நான் உள்ளே போக எத்தனித்தேன்.

"நில்லடி, போகும்போது தனியாத்தான் போனியா?"
குரலில் சீற்றம் மிகுந்திருந்தது.

"தனியாத்தான் போனனான்..."
புரியாமல் விழித்தேன்.

"பஸ்சுக்குள்ளை... பக்கத்திலையிருந்து சிரிச்சுச் சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தவன் ஆரடி?"

"அண்ணா, அவர்... அவர்... எழுத்தாளர் சதுரா. எதிர்பாராமல் பஸ்சுக்குள்ளை சந்திச்சோம்."

´பளார்` என்ற ஓசையுடன் அவர் கைவிரல்கள் என் கன்னத்தில் பதிந்து மீண்டன. நிலை தடுமாறினேன்! கன்னம் ´பக பக` வென்று எரிந்தது. கண்ணீர் வரவில்லை. பதிலாக கோபம் பீறியது!

"செய்யிறதை நியாயத்தோடை செய்யுங்கோ"
நான் கத்தினேன்.

"எனக்கு... நீ நியாயம் சொல்லுறியா?"
மீண்டும் ´பளார்` என்ற ஓசையுடன் கன்னம் அதிர்ந்தது! இப்போ ஆற்றாமையில், வலியில் அழுகை வந்தது.

"எல்லாரும் திரும்பிப் பார்க்கிற அளவுக்குச் சிரிப்பு வாற மாதிரி... அப்பிடி யென்ன கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் முறைத்தார். பதில் சொல்ல மனம் வரவில்லை. ஆத்திரத்தில் என் உதடுகள் துடித்தன. காறித்துப்ப வேண்டும் போல் மனம் துடித்தது. பஸ்சிற்குள் என்னை முறைத்துப் பார்த்த, எங்கள் ஊர் இளைஞனின் உருவம் என் மனக்கண்ணில் விகாரமாகத் தெரிந்தது.

"மிக மிக எளியவன்" என் வாய் அவனை எண்ணி முணுமுணுத்தது.

"என்னடி கதைச்சனிங்கள்?"
அண்ணா மீண்டும் வெடித்தார்.

"ம்... என்ன... கதைச்சோமோ? ரெண்டு பேரும் எப்போ மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் எண்டதைப் பற்றிக் கதைச்சோம்" சட்டென்று ஆடிப்போன அவர் விழி பிதுங்க விசித்திரமாக என்னைப் பார்த்தார். நான் தலை குனிந்து நின்றேன்.

"என்ன துணிச்சலடி உனக்கு...?"
அவர் மீண்டும் வெறி பிடித்த சிங்கமாகப் பாய்ந்த பொழுது, சட்டென்று நான் விலகிக் கொண்டேன்.

... "யாரோ ஒருத்தன் சொன்னதை வைச்சு, ஏதோவிதமாய்க் கற்பனை பண்ணிக் கொண்டு என்னை நாயாய் அடிக்கிறீங்களே! உங்களுக்கு வெட்கமாயில்லை? உங்களுக்கு உங்கட தங்கச்சியைப் பற்றித் தெரியேல்லையே? என்னைப் பற்றி அப்பிடித் தப்பாய் நினைத்துச் சொன்னவனுக்கு நல்ல பதிலடி கொடுக்க உங்களுக்குத் தெரியேல்லையே? என்னைத்தான் அடிக்கத் தெரியுது. பெண்களுக்கெண்டு தெரிந்தவர்கள், சிநேகிதர்கள் யாருமே இருக்கக் கூடாது. அவையள் இந்த உலகை, மனுசரை சுதந்திரமாகப் பார்க்கக் கூடாது. அப்பிடித்தானே? இப்ப நான், பெண்ணாய்ப் பிறந்திட்டேனே எண்டு மட்டுமில்லை, உங்கட தங்கச்சியாய்ப் பிறந்திட்டேனே எண்டும் வேதனைப்படுறன்"

நான் என்னையும் மீறி விம்மி விம்மி அழுதேன். சிறிது நேரம் உணர்ச்சிகளற்று அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவர், சட்டென்று தலையைக் குனிந்தவாறே கேற்றைத் திறந்து கொண்டு வெளியில் எங்கேயோ போய்க் கொண்டிருந்தார்.

இவ்வளவு நிகழ்ச்சிகளையும் அவதானித்துக் கொண்டு வாசற்படியில் படுத்திருந்த எங்கள் வீட்டு நாய், இப்போ மெல்ல எழுந்து ஆசுவாசமாக உடலைக் குலுக்கி, வாலை அசைத்துக் கொண்டு என் கால்களிற்குள் வந்து நின்றபோது, அதன் தலையைத் தொட்டுத் தடவி விட்டேன். மனம் இலேசாகிக் கொண்டு வந்தது.

§§§§§

மாமா வாசித்து முடித்த அந்தச் சிறுகதையை மேசையில் வைத்து விட்டு, "சுஜா, கதை நல்லாயிருக்கு, ஆனால் உன்ரை பெயரையே இந்தக் கதாநாயகிக்கும் போட்டிருக்கிறியே?" என்றார்.

"ஏன் மாமா? பெயர் நல்லாயில்லையா? அப்ப... வேற ஒரு பெயரை மாத்திட்டால் போச்சு." நான் கூறியதும் அவர் சிரித்தார்.

"அது சரி, இப்ப எங்கேயோ போறாய் போல கிடக்குது" மாமா விடய தேவையோடு விசாரித்தார்.

"யாழ்ப்பாணத்தில ஒரு இலக்கியக் கூட்டம் மாமா... அதுதான்..." நான் கூறிவிட்டுப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன்.

"சுஜா, நீ இப்பிடி இலக்கியக் கூட்டம்... இலக்கியக் கூட்டம் எண்டு அடிக்கடி யாழ்ப்பாணம் போறது எனக்கென்னவோ நல்லதாப் படயில்லை. நீ... வயசுக்கு வந்த பிள்ளை! ஊர் உலகம் ஒவ்வொண்டு சொல்லப் பிந்தாது. என்னவோ மனசில பட்டதைச் சொல்லிட்டன். நான் வாறன்." மாமா போய்விட்டார்.

நான் சிலையாக நின்றேன்.

சந்திரா ரவீந்திரன்
1986


ஈழநாடு - 1986

Friday, September 11, 2009

நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்


காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில்
'நூல் அறிமுகமும், ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சியும்'

காலம்: 07-11-2009
சனிக்கிழமை
பி.ப. 3.00 மணி.

இடம்:
Trinity Centre.
East Avenue,
Eastham.
London,
E12 6SG.
Eastham tube station இற்கு அருகாமை)

* சிறப்புரைகள்
* நூல் அறிமுக உரைகள்
* ஈழத்து நூல்களின் கண்காட்சி

-அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-பிரவேசம் இலவசம்.

தொடர்புகட்கு:
முல்லை அமுதன்
34.RED RIFFE ROAD
PLAISTOW
LONDON
E13 0JX
Tel: 0208 5867783
e.mail: mullaiamuthan_03@hotmail.co.uk

Wednesday, September 09, 2009

தொப்புள்கொடி (நாவல்)

மனஓசையின் 3வது வெளியீடாக தொப்புள் கொடி நாவல்

தொப்புள்கொடி - நாவல்
ஆசிரியர்: தெ.நித்தியகீர்த்தி (Australia)
முதற்பதிப்பு: சித்திரை 2009
அட்டை வடிவமைப்பு:மூனா
தயாரிப்பு: சுவடி பதிப்பகம்
வெளியீடு: மனஓசை பதிப்பகம்

தொடர்புகளுக்கு:
Chandravathanaa
Nithyakeerthy

ISBN - "978-3-9813002-2-2"

Monday, August 31, 2009

நானும் இணையமும்

முன்கதை:
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர் குழுமத்தில் உரையாடப்பட்டதற்கு அமைவாக இந்த விளையாட்டினை மு.மயூரன் தொடக்கி வைத்துள்ளார். வெறும் விளையாட்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுக்கு ஓர் ஆழமான நோக்கம் இருக்கிறது. ஒவ்வொருவரும் வலைபதிய வந்த கதையைச் சொல்வதன் ஊடாக வெவ்வேறு கோணத்தில் தமிழ் இணையத்தின் வரலாற்றுத் தகவல்களோடு அதற்கும் தமக்குமான உறவையும் சொல்லத் தொடங்குவார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்தக்கதைகள் தகவல்களாக ஆவணமாகப் போய்ச்சேரும்.

விதிமுறை:
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் மூவருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்ல வேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

வலைபதிய வந்த கதை:
தினமும் இரவில் அன்றைய நாளின் நிகழ்வுகளை டயறியில் எழுதி விட வேண்டுமென்பது எனது அப்பா எனக்குக் கற்றுத் தந்த பாடங்களில் ஒன்று. அதனால் நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டிருப்பேன். தாயகத்தில் வாழ்ந்த போது எனது எழுத்துக்களில் சிலதை அங்கு வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி.. என்று எல்லாவற்றிற்கும் அனுப்புவேன். நான் அனுப்பிய எதுவும் பிரசுரமாகால் போனதில்லை. அந்த உற்சாகத்தில் நான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தேன்.

புலம் பெயர்ந்த பின்னும் எழுதினேன். ஆனால் புலத்தில் ஆரம்ப காலத்தில் எனது எழுத்துக்களுக்கான தளங்கள் இருக்கவில்லை. எழுதி எழுதி எனது லாச்சிகளையும், அலுமாரிகளையும் நிரப்பிக் கொண்டேன்.


1990 இலேயே எனது வீட்டுக்குள் கணினி வந்து விட்டாலும், 1993-1994 களில்தான் எனக்கு கணினியோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது அதனைப் பயன்படுத்தும் முறை அவ்வளவாகத் தெரியாதிருந்தது. 1996 வரை என் பிள்ளைகளோடு சேர்ந்து தூர தேசத்தில் வாழும் எனது உறவுகளுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது என்ற ரீதியில்தான் கணினியைப் பயன் படுத்தினேன்.

1997 இல் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஊடகங்களின் பற்றாக் குறையைக் கவனத்தில் கொண்ட எனது மகன் திலீபன், தான் ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிட விரும்புவதாகச் சொன்னான். அவனது அந்த எண்ணம் நல்லதாகவே பட்டதால் அதைச் செயற்படுத்த உதவும் முகமாக கணினியில் சில விடயங்களைப் பழக ஆரம்பித்தேன். எனது கணவர் கீறுவது, வடிவமைப்பது சம்பந்தமான விடயங்களைக் கவனிக்க நான் எழுதுவது எப்படி என்பதைக் கவனிக்கத் தொடங்கினேன். திலீபனின் முழு முயற்சியுடன் எனதும், கணவரதும் பங்களிப்புடன் "இளங்காற்று" என்ற பெயரில் அழகிய சஞ்சிகை உருவானது.

அதோடு ஆங்கில எழுத்துக்களை மட்டும் எழுதப் பழகியிருந்த நான் தமிழ் எழுத்துக்களையும் கணினியில் தட்டத் தொடங்கினேன். ஆனாலும் இப்போது போல அப்போது அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பதுவும், வேகமாகத் தட்டுவதும் மிகச் சிரமமாகவே எனக்குத் தெரிந்தன. நான் படும் சிரமத்தைப் பார்த்த எனது கணவரிடம் ஒரு உத்தி தோன்றியது. அவர் கீபோர்ட்டின் மாதிரி ஒன்றை வரைந்து அதில் எங்கெங்கே என்னென்ன தமிழ் எழுத்துக்கள் வரும் என்பதையும் குறித்து எனது கணினிக்குப் பின்னுள்ள சுவரில் ஒட்டி விட்டார். ஏற்கேனவே ஆங்கிலத்தில் தட்டச்சத் தெரிந்த எனக்கு அதை வைத்து தமிழ் எழுத்துக்களைப் பழகுவது வெகு சுலபமாக இருந்தது. ஒரு வாரத்தில் எந்தெந்த விரல்களுக்கு என்னென்ன எழுத்துக்கள் என்பதை நான் நினைவு படுத்தி எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது எனக்கு பாமினி அறிமுகமாகவில்லை. Ravi A என்ற எழுத்துருவையும், நல்லூர் என்ற எழுத்துருவையும் தான் பாவித்தேன். இளங்காற்று சஞ்சிகைகளும் முழுக்க முழுக்க இந்த எழுத்துருக்களை வைத்தே உருவாகின.

அதன் பின், அதாவது 1997இன் நடுப்பகுதியிலிருந்து மெது மெதுவாக ஐரோப்பிய நாடுகளில் தமிழ் ஊடகங்கள் முகம் காட்டத் தொடங்கின. எனது எழுத்துக்களுக்கு அவைகள் தளமாகின. சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல எனக்கு ஒரு வழி கிடைத்தது.

எனது எழுத்துக்கள், பெண்களிடையே புதிய மாற்றங்களை ஏற்படுத்துமளவுக்கு பல புலம் பெயர்ந்த வீடுகளிலும் எனது கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கின. சில வீடுகளில் இந்த மாற்றங்களை ஏற்க முடியாத ஆண்களால் வானொலிகள் உடைத்தெறியப் பட்டன. அப்போதுதான் கத்திக் கூறுவதை விட, எழுத்து வலிமையாக இருப்பதை உணர்ந்தேன். எனது சமூகத்தின் பல தவறான கொள்கைகளையும், செய்கைகளையும் சுட்டிக் காட்டவும், அதில் உள்ள பாதிப்புகளை அவர்களை உணர வைக்கவும் எனக்கு என் எழுத்துக்கள் உதவின.

அந்த எழுத்துக்களைச் சேமித்து எப்போதும் எவர் விரும்பிய நேரமும் பார்க்கக் கூடிய வகையில் செய்து வைக்க இணையம் என்ற ஒன்று சாத்தியமானது என்பதை 2001, 2002 களில் உணர்ந்து கொண்டேன். எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவது உடனடியாக எனக்குச் சுலபமானதாக இருக்கவில்லை. HTML என்றாலே என்னவென்று எனக்கு அப்போது தெரியாது.

என்னால் எனக்கென ஒரு இணையத்தளத்தை உருவாக்க முடியவில்லையே என நான் ஆதங்கப் பட்ட போது எனது மகன் துமிலன் ஒரு HTML புத்தகத்தை என்னிடம் தந்து "அம்மா இதைப் படித்துப் பாருங்கள்" என்றான்.

மெதுமெதுவாக எனக்குத் தெரிந்தளவு ஜேர்மன் மொழியோடு அவைகளைப் பார்த்தும், படித்தும், கிரகித்தும்… எனக்கென ஒரு தளத்தை உருவாக்கினேன். அது http://www.selvakumaran.com/

எனக்கென ஒரு தளத்தை உருவாக்குவதற்கு முன்னரே 2001அளவில் மோகன் அவர்களின் யாழ் இணையம் எனக்கு அறிமுகமானது. அந்த சமயத்தில் யாழ்கருத்துக்களத்தில் ஒரு சிலரே எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் காரசாரமான விவாதங்கள், சண்டைகள், கருத்து மோதல்கள்... என்று இணையத்தினூடான ஊடாடல்களுக்கும், கருத்துப்பகிர்வுகளுக்கும் அது ஒரு பெரும்தளமாக விளங்கியது. எழுதவும், வாசிக்கவும், பலவிடயங்களை அறிந்து கொள்ளவும் அது உதவியது. ஆனாலும் காலப்போக்கில் அது மோகன் என்பவரின் தனிப்பட்ட மேலாண்மையிலிருந்து விலகி பலரும் உரிமை கொண்டாடும் ஒரு தளமாக மாறியது. கருத்துமோதல்களை விட தனிமனித மோதல்களே அதிகமாயின. இந்த நிலையில் ஆரோக்கியமான விவாதங்களையோ, கருத்தாடல்களையோ அங்கு தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அதிலிருந்து மெதுமெதுவாக விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளின் களமாகவும், பெரிய விவாதக்களமாகவும் யாழ்கருத்துக்களம் இருந்ததை யாரும் மறந்து விடவோ, மறுத்து விடவோ முடியாது.

யாழ்கருத்துக்களத்தில் எழுதத் தொடங்கிய போதுதான் எனக்கு பாமினி அறிமுகமானது என்ற ஞாபகம். ரவியிலிருந்து பாமினிக்கு மாறிய போது சில எழுத்துக்களை எனது விரல்களுக்கு மாற்றிப்பழக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் எனது இணையத்தளத்தையும் முழுக்க முழுக்க பாமினி எழுத்துருவுடன்தான் உருவாக்கினேன். அப்போதெல்லாம் எனது இணையத்தளத்தை அலுவலகத்திலிருந்தோ, வேறு இடங்களிலிருந்தோ பார்க்கும் போது ஒன்றையுமே வாசிக்க முடியாத நிலைதான் இருந்தது. இதே போல மற்றவர்களின் தளங்களை என்னால் சரியாக வாசிக்க முடியாதிருந்தது. இது எனக்குள் எப்போதும் ஒரு எரிச்சலையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. `ஏன் எல்லோருமே ஒரு எழுத்துருவைப் பாவிக்கக் கூடாது?` என்று எனக்குள்ளே கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. நிவாரணம் தேடுமளவுக்கு என்னிடம் கணினித்துறையிலான அனுபவமோ, அறிவோ இல்லாதிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அதாவது 2003 ஜூலை மாதத் திசைகளில் ´உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில்...` என்று காசி அவர்களின் கட்டுரை வெளியானது. அப்போது ´இது எப்படிச் சாத்தியமாகும்!` என்று ஆச்சரியப் பட்டேன்.

காசி அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு ´வலைப்பூ` என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

வலைப்பூவில் எழுதுவதாயின் கண்டிப்பாக யூனிக்கோட் தேவைப்பட்டது. சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது. எனது வலைப்பூவிற்கு மனஓசை என்ற பெயரிட்டுக் கொண்டேன்.

யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரத்துடன் எதை விரும்பினாலும் அதை என்னால் வலைப்பூவில் பதிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது. இவைகளோடு இலவசம், சுலபமாக எதையும் இணைக்கக் கூடிய தன்மை... என்று எல்லாம் சாதகமாகவே இருந்தன. கூடவே பல விடயங்களை உடனுக்குடன் பலரின் பார்வைக்குக் கொண்டு வரவும், சந்தோசங்கள், உணர்வுகள், நினைவுகள், அறிந்தவைகள்.. படித்தவைகள்... என்று பல விடயங்களை தனித்தனிப் பதிவுகளாகப் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களின் எண்ணங்கள், கருத்துக்களை அறிந்து கொள்ளவும் ஏதுவாக இருந்தது. உலகத்தின் எங்கோ ஒரு மூலையை ஆறுதலாக வீட்டில் இருந்து தரிசிக்க முடிந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலைபதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் மதி கந்தசாமியின் வலைப்பதிவுகளின் தொகுப்பு http://tamilblogs.blogspot.com/ இன் உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது.

தமிழ்மணத்தின் வரவின் பின் http://tamilblogs.blogspot.com/ இன் தேவை இல்லாமற் போனது.

நான் Blogspot இல் தான் எனது முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின் வேறு பலதளங்கள் அறிமுகமாயின. ஆயினும் நான் Blogspot இலேயே இருக்கிறேன்.

அதே போல பாமினியில் எழுதி யூனிக்கோட்டுக்கு மாற்றுவது எனது வழக்கம். எனது விரல்கள் பாமினி எழுத்துருவுடன் நன்கு பரிச்சயமாகி விட்டன. மீண்டும் இன்னொரு எழுத்துக்கு மாறுவது பற்றிய எண்ணம் எனக்கு இதுவரை வரவில்லை. சில சமயங்களில் வேறு எழுத்துருக்களில் ஏதாவது தேவைப்படும் போது அதைக் கூட பாமினியில் எழுதி விட்டு சுரதாவின் புதுவையிலோ அன்றி இஸ்லாம்கல்வியிலோ மாற்றிக் கொள்வதே எனக்கு மிகுந்த வசதியாகத் தெரிகிறது.

எனது கீபோர்ட் சாதாரணமான ஜேர்மனியக் கீபோர்ட். ஆங்கிலக் கீபோர்ட்டுகளுடன் பார்க்கும் போது இதில் Ä Ü Ö என்ற எழுத்துக்கள் கூடுதலாக இருக்கின்றன. அதை விட ´ல` வும், ´ண` வும் இடம் மாறியுள்ளன. , . - போன்றவைகளும் மாறித்தான் உள்ளன. லண்டனுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ போகும் போது கீபோர்ட்டை பழக்கப்படுத்த எனக்கு ஒரு சில நாட்கள் தேவைப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.

வலையுலகப் பிரவேச அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்:
டிசே த‌மிழ‌ன்
சயந்தன் - சாரல்
மலைநாடான் -Kurinchimalar
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Tuesday, August 25, 2009

அமானுஸ்யங்கள்

விழிப்பு வந்து சில நிமிடங்களாகும் வரை அந்தக் கனவு நினைவில் வரவில்லை. வெளியில் இருந்து வந்த மண்வெட்டியால் வறுகி வறுகி இழுக்கும் ஓசை இரவிரவாக பனி கொட்டியிருப்பதை உணர்த்தியது. உறுமிக் கொண்டு செல்லும் கார்களின் ஓசைகள் நான் விழித்தேனோ இல்லையோ ஊர் விழித்து விட்டது என்பதைத் தெளிவு படுத்தியது. வீட்டுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் மெலிதான சத்தமும், மணிக்கூட்டின் டிக், டிக் சத்தமும், இன்னும் மின்சார இணைப்புடனான கருவிகளும் ஒருவித ஒழுங்குடனான ரிதத்துடன் ஒலித்துக் கொண்டே இருந்தன.

எட்டுமணி வரை கட்டிலில் இப்படிப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பது என்பது, அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை, ஐரோப்பிய வாழ்க்கையில் என்றேனும் அபூர்வமாகத்தான் நடக்கும். ஊரெல்லாம் ஒரு வைரஸ் காய்ச்சல். காய்ச்சல் என்று மட்டும் சொல்லி விட முடியாத படியான உடல் உபாதைகள். சில மாதங்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த இந்த வைரஸ் தொல்லையிலிருந்து நான் தப்பி விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் அது என்னையும் கெட்டியாகப் பிடித்து விட்டது. கை வைத்தியத்தோடு சமாளித்து விடலாம் எனப் பார்த்து, இயலாத நிலையில் மருத்துவரை நாட வேண்டியதாகி விட்டது.

அதன் பலன் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு நான் மீண்டும் போர்த்திக் கொண்டு படுத்து விட்டேன். நித்திரையை விட கனவுகள்தான் அந்த மூன்று மணித்தியாலங்களிலும் என்னை ஆட்கொண்டிருந்தன. இன்றைய அந்த அதிகாலைக் கனவுகளை விட அர்த்தராத்தியிரியில் கண்ட கனவு ஒன்று என்னை இன்னும் மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே இருந்தது. நன்கு நினைவு படுத்திப் பார்த்தேன்.

அது எனது அண்ணன்தான். கனவிலே அவன் என்னை இறுகக் கட்டியணைத்தான். அதுவும் மூன்று தடவைகள் போல ஞாபகம். இறந்து போனவர்கள் பேயாக அலைவார்கள் என்று பயந்த காலங்கள் ஓடி ஏதாவது ஒரு வடிவிலாவது என்னிடம் வரமாட்டார்களா என்ற ஏக்கம் நிறைந்த காலங்களோடேயே வாழ்க்கை நகர்ந்தும், ஓடியும் கொண்டிருக்கிறது. 2000இல் மரணித்து விட்ட எனது அண்ணன் என் நினைவுகளில் எப்போதுமே இருப்பது போலில்லாமல் கனவுகளில் அவ்வப்போது மட்டும்தான் வருவான். அனேகமான கனவுகளில் மௌனமாக இருந்து விட்டுப் போய் விடுவான். எப்போதாவது கனவில் பேசியிருப்பானா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. எமது ஊர் வீட்டின் ஏதாவது ஒரு பகுதியிலோ அன்றி ஊரின் ஏதாவது ஒரு தெருவிலோ அவனோடு நானும் இருப்பது போலவும், நடப்பது போலவும் பல கனவுகள் பல முறை வந்துள்ளன. ஆனால் இப்படியொரு கனவு இதுதான் முதல் முறை. அதுவும் என்னை மிகுந்த வாஞ்சையோடு கட்டியணைத்தான். எனக்குள் இன்னும் ஆனந்தமாகவே இருந்தது.

யாரிடமாவது இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும் போல இருந்தது. அம்மாவைத் தொலைபேசியில் அழைத்துப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. விட்டு விட்டேன். நினைவில் அந்தக் கனவு இனித்துக் கொண்டே இருந்தது. கூடவே நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

மாலையில் எனது வேலைத்தோழி தொலைபேசியில் அழைத்தாள். எனது உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தான் ஒரு கனவு சம்பந்தமான புத்தகம் வாங்கியிருக்கிறேன் என்றாள். உடனேயே நான் எனது கனவு பற்றிச் சொன்னேன். 'பொறு பொறு. உனது கனவின் அர்த்தத்தை நான் சொல்கிறேன்' என்றவள் புத்கத்தின் சில பக்கங்களைப் புரட்டி, ஏதோ ஒரு பக்கத்தில் நிலைத்து, 'உனது சகோதரனைக் கனவில் கண்டிருக்கிறாய். மிகவும் நல்ல சைகை அது...' என்றாள். இன்னும் தொடர்ந்து சொன்னாள்.

எந்த மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிந்து விடும் என் மனதும் சில சமயங்களில் ஏதேதோ நம்பிக்கைகளில் சலனப் படத் தொடங்கியது என் வீட்டில் நடந்த முதல் மரணத்தின் பின்தான். இன்னும் கூட எதையும் நம்புவதில்லை என்றாலும் சில சைகைகளை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை. அவ்வப்போது சில உணர்த்தல்கள் என்னையறியாமலே எனக்குக் கிடைத்திருக்கின்றன. அதை எக்காரணம் கொண்டும் மறுக்கவும் முடிவதில்லை.
என்ன.. அப்படி நல்லது நடந்து விடப் போகிறது..? தமிழீழம் கிடைத்து விடப் போகிறதோ..!

ஓரிரு நாட்கள் நகர்ந்தன. அந்தக் கனவு மட்டும் மறக்காமல் எனக்குள் தித்தித்துக் கொண்டே இருந்தது. நினைவுகள் மனதுக்குள் விரிந்து விரிந்து நான் எனது கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன். ஜேர்மனி எனக்கு மறந்து போயிருந்தது. நான் எனது அண்ணனுடனும் மற்றைய உறவுகளுடனும் ஆத்தியடி வீட்டில்;, பருத்தித்துறையின் காற்றில் மிதந்து வரும் அதற்கேயுரிய வாசனைகளுடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். இடையிலே தேநீர் தேவைப்பட்டது போலும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து பாலை எடுக்கும் போது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எப்படியோ தடுக்கி, கைகள் மேற்தட்டுடன் மோதி பாற்பெட்டி நிலத்தில் வீழ்ந்தது. நினைவுச் சிறகுகள் பட்டென்று அறுபட நான் சட்டென்று நியத்துக்கு வந்தேன். சமையலறை நிலத்தில் கிட்டத்தட்ட ஒரு லீற்றர் அளவுள்ள பால் ஓடிக்கொண்டிருந்தது. மனசுக்குள் சுருக்கென்றது.

பயமாக இருந்தது. நெஞ்சுக்குள் குளிர்வது போல இருந்தது. மீண்டும் மனதுக்கு எட்டாத ஏதோ ஒரு உணர்த்தல். இப்படித்தான், இதே மாதிரித்தான் அன்றும் ஒரு நாள் நடந்தது. அது 1997 இல் பழைய வீட்டில் நடந்தது. அன்றும் சமையலறைக்குள் பால் ஆறாய் ஓடியது. பின்னர் ஊரிலிருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. எண்ணிப் பதினைந்து நாட்களுக்குள் அப்பாவின் மரணம்.

சே... என்ன... நானா இப்படி... எனக்குள் கேள்வி எழுந்தது. அப்படியொன்றும் நடக்காது. ´காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தது போல...` மனதைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

சமையலறையைச் சுத்தம் செய்து முடித்த பின் தேநீருக்கான ஆர்வம் இருக்கவில்லை. அப்போதுதான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணனின் மகன் பரதன் அந்த வெள்ளிக்கிழமை வன்னிக்குள் நடந்த போரில் வீரமரணம் அடைந்து விட்டான் என்று.

சந்திரவதனா
25.8.2009

Tuesday, August 11, 2009

சிதைவுகள்

நேற்று அவளைச் சந்தித்த போது அவள் கவலையாக இருப்பது போலவே தெரிந்தது. எனக்கு 9.30க்கு அப்பொயின்ற்மென்ற். அவசரமாக நடந்து கொண்டிருந்த போதே அவள் தனது 7வயது மகனுடன் என் எதிரில் வந்தாள். அதே வேகத்தில் நடந்தால்தான் குறித்த நேரத்தில் போகவேண்டிய இடத்தை நான் அடைவேன்.

ஆனாலும் அந்த முகத்தைப் பார்த்த பின் ஒரு ´ஹலோ´வுடன் சாதாரணமாகத் தாண்டிவிட என்னால் முடியவில்லை.

“எப்பிடி இருக்கிறிங்கள்?”

“பரவாயில்லை அக்கா”

சொன்ன விதத்திலேயே ஏதோ ஒரு சோகத்தின் அழுத்தம்.

“வேலை செய்யிறிங்கள்தானே?”

“அந்தச் சீனா ரெஸ்ரோறன்ற் வேலையை விட்டிட்டனக்கா? ஆனால் உதிலை இருக்கிற ரெஸ்ரோறன்றிலை இப்ப வேலை செய்யிறன். சலாட் கழுவுற வேலைதான். 8யூரோ சம்பளம் தாறான். பரவாயில்லை. மக்டொனால்ஸ், சீனாக்கடை இரண்டிலையும் எண்டால் நாள் முழுக்க வேலை சேய்யோணும். இதெண்டால் 5மணித்தியாலம்தான். அதுதான் இது எனக்கு வசதியா இருக்கு. கொஞ்சநேரமெண்டாலும் வீட்டிலை பிள்ளையளோடை நிற்கலாம்.”

கடைசியாக என்னைச் சந்தித்த போது ஏதாவது வேலை எடுத்துத் தரும்படி கேட்டிருந்தாள். இப்ப அந்த வேலையும் இருக்கிறது. ஆனாலும் அவளிடத்தில் ஏதோ ஒரு சோர்வு.

“சரி, சந்தோசமாயிருங்கோ. நான் போகோணும்.”

“அக்கா, நான் இந்தியாவுக்குப் போப்போறன்.”

“ஊருலாவா?”

“இல்லை, இல்லை. இவன் சின்னவனையும், மகளையும் அங்கை கொண்டு போய் விடப்போறன். இங்கையிருந்து கெட்டுப் போடுவினம்.”

“எந்த மகளை?”

“இரண்டாவதை”.

அவளுக்குப் 12வயது என்பது எனக்குத் தெரியும்.

“என்ன? 12வயது மகளை அங்கை கொண்டு போய் விடப் போறிங்களே. இவருக்கும் 7 வயதுதானே. அம்மா இல்லாமல்...”

“ஓ.. கொஞ்சநாளைக்கு நிண்டு எல்லாம் பழக்கிப் போட்டு வரப்போறன். அங்கை என்ரை தங்கச்சி குடும்பமா இருக்கிறாள். அவளோடைதான் விடப்போறன்.”

“ஏன்?”

“இங்கையிருந்தால் பிள்ளையள் கெட்டுப் போடுங்கள். மூத்தவன் சிகரெட் எல்லாம் குடிக்கத் தொடங்கீட்டான். பெடியளோடை பார்ட்டி, டிஸ்கோ எண்டு போயிட்டு குடிச்சிட்டும் வாறான்.”

எனக்கு அவனையும் தெரியும் 19வயது மகன்.

"அதுக்காண்டி இந்தப் பிள்ளையளைத் தனியா யாரையும் நம்பி இந்தியாவிலை கொண்டு போய் விடப் போறிங்களே? அங்கை இந்தியாவிலை ஒருதரும் சிகரெட் குடிக்கிறேல்லையே? அங்கையுள்ள பிள்ளையளும் இதுகளைப் பழகித்தானே வைச்சிருக்குதுகள்."

“இல்லையக்கா, இங்கை கூட.”

இன்னும் சொல்லிப் பார்த்தேன் அவள் ஏற்பதாய் இல்லை. நடுரோட்டில் அழுது விடுவாள் போலிருந்தது..

“என்ன இருந்தாலும் யோசிச்சுச் சேய்யுங்கோ. பொம்பிளைப்பிள்ளை. அதுவும் 12வயசு. அம்மா இல்லாமல் தனிய இன்னாரு இடத்திலை... அதோடை உங்கடை கணவரும் மற்ற இரண்டு பிள்ளையளும் இங்கை, நீங்கள் இந்த இரண்டு பேரோடையும் அங்கேயும் இங்கேயும் எண்டு...”

நான் என்ன சொன்னாலும் அவள் மாற மாட்டாள் போலத் தெரிந்தது. எனக்கு நேரமாகியது. நான் விடைபெற்றேன்.

Friday, June 26, 2009

கவிதைகளால் என்னோடு பேசியவன்



அன்பையும், பாசத்தையும் பொழியும் ஒரு சில கவிதைகளோடு, பல போர்க்காலக் கவிதைகளையும், மாவீரர் சம்பந்தமான கவிதைகளையும் கொண்டு,
92 கவிதைகளுடன் வெளிவருகிறது தீட்சண்யம் கவிதைத் தொகுப்பு.
எழுத முனையும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் முந்திக் கொண்டு பொலபொலவென்று கொட்டி விடுவது கண்ணீர்த்துளிகள்தான். அந்தத் துளிகளில் பிரிய உறவொன்று இந்த உலகத்திலேயே இல்லை என்ற சோகம் நிறைந்திருக்கிறது. மரணத்தின் வலி ஒட்டியிருக்கிறது. எத்தனை தரந்தான் கண்ணீராகக் கொட்டி விட்டாலும் விட்டுப் போகாது மனதின் ஒரு ஓரமாக ஒட்டியிருக்கும் சோகத்தின் வலி அது.
அண்ணன்..
கூடப் பிறந்தவன். என்னோடு மிகப்பிரியமாக இருந்தவன். இனி அவன் இல்லை என்று ஆன பின்னும் நினைவுகளோடு எனக்குள்ளே வாழ்பவன். இன்று இந்த உலகத்தின் எந்த அந்தத்திலும் அவன் இல்லை என்ற உண்மை ஒரு வலியாக விவரிக்க முடியாத வேதனையாக அடிமனதின் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது. அதை எந்தப் பொழுதிலும் தூக்கி எறிந்து விட முடியவில்லை. இறந்து விட்டான். போய் விட்டான். இனிக் கிடைக்க மாட்டான்... என்ற பல ஏமாற்றங்களையும் தாண்டி அவனோடான நினைவுகள் மீண்டும் மீண்டுமாய் மனதுள் விரிந்து கொண்டிருக்கின்றன. இன்று மட்டும் என்றில்லை. இந்த ஒன்பது வருடங்களில் பல பொழுதுகளில் அவனுடனான சின்னச் சின்ன சம்பவங்கள் கூட மனசுக்குள் எட்டிப் பார்த்து கண் சிமிட்டியிருக்கின்றன. சில சிறியதாகத் தொடங்கி பெரிய படமாக விரிந்தும் இருக்கின்றன. அவைகளில் சில சுகமானதாகவும், சில தாங்க முடியாத சோகத்தின் கனமானதாகவும் முடிந்திருக்கின்றன.

இப்போதும் அப்படித்தான்.
அவனது கவிதைகளைத் தொகுக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மருகி, அவன் நினைவால் உருகி நொய்ந்து போயிருந்தேன். அதனால்தானோ என்னவோ 2002இல் பதிவாக்க நினைத்த இந்தத் தொகுப்பு பதிவாவதற்கு 2009 வரை சென்று விட்டது.

2002இல் நினைத்தது 2009இல் நிறைவேறுகிறது.

அப்போது 2002 இலேயே இதில் பல கவிதைகளைத் தொகுத்து மாதிரி வடிவமாக்கி வன்னி வரை கொண்டு சென்றேன். அதன் பிரதிகளை வன்னியில் மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன், அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் ஜவான், மறைந்த கவிஞர் நாட்டுப்பற்றாளர் நாவண்ணன், செஞ்சோலை ஜனனி ஆகியோருக்குக் கொடுத்தேன். எல்லோருமே இது புத்கமாக வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டினார்கள்.
அங்கு கிடைத்த மேலதிக கவிதைகளையும் இத்தொகுப்பில் இணைத்து, மீண்டுமாகச் செய்து விட்டு அனுப்புவதாகக் கூறி ஜேர்மனி திரும்பிய பின்னும் கவிஞர் நாவண்ணன் இதில் மிகுந்த ஆர்வம் கொண்டு முனைப்போடு செயற்பட்டார். இலக்கியச் செல்வர் முல்லைமணி (வே.சுப்பிரமணியம் S.l.E.A.S), ஆசிரியர் திரு.க.ஜெயவீரசிங்கம் (BA) வற்றாப்பளை போன்றோரிடம் அணிந்துரை, முகவுரை எல்லாம் எழுதுவித்து வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அந்த நேரத்தில் கவிஞர் நாவண்ணன் அவர்கள் வாழும் போது இந்தப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்கான பொசிப்புகள் ஏனோ இல்லாமற் போய் விட்டன.
இந்தத் தொகுப்பை மீண்டும் மீண்டுமாய் பல தடவைகள் படித்து, தொகுத்து, மீண்டும் வடிவமைத்து பொங்கி வரும் சோகத்தோடும், அணை உடைக்கும் கண்ணீரோடும் பதிப்பாக்குகிறேன்.

சுவடி பதிப்பகத்தாரின் தயாரிப்பில்,
´மனஓசை` வெளியீடாக
வெளிவருகிறது ´தீட்சண்யம்` கவிதைத் தொகுப்பு


THEEDCHANYAM (Poems)
Author: S.T.Premarajan (Theedchanyan)
(Thiyagarajah Premarajan)

First Edition: May 2009
© by Manaosai Verlag
© Chandravathanaa Selvakumaran
Email: chandra1200@gmail.com
Compilation: Chandravathanaa Selvakumaran
Illustrations & Cover design: Muunaa
Production: Chuvadi, Chennai - 600 005, India
Printed by:
Chennai Micro Print (P) Ltd, Chennai – 29

ISBN- 978-3-9813002-1-5

Tuesday, May 26, 2009

அமைதியற்ற நாட்கள்


"சந்திரா, மெதுவாக... ஏன் இவ்வளவு வேகமாக உழக்குகிறாய்? உனது காலுக்கு இது நல்லதல்ல."

மெலானியின் அன்பான அதட்டல் என்னை மீண்டும் உடற்பயிற்சி நிலையத்துக்குள் அழைத்து வந்தது. சைக்கிள்கள், ரெட்மில்லர்களுடன், இன்னும் ஏதேதோ சாதனங்கள் இரைந்து கொண்டிருந்தன. வேர்வைகள் வடிய காதுக்குள் ஐபொட்டின் வயரைச் சொருகி பாட்டுக்களை ரசித்தபடி எல்லோரும் தத்தமது உடலுக்கு ஏற்ற பயிற்சிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சில சிரிப்புகள், சில முகஸ்துதிகள், அனைத்தையும் மீறிய இரைச்சல்கள், கண்ணாடிச்சுவரினூடு தெரியும் கிம்னாஸ்ரிக் வகுப்பாரின் அசைவுகள்.. எல்லாமே என் கண் முன்னே நடந்து கொண்டிருந்தாலும் நான் வேறொரு உலகத்தில் இருந்தேன். அது 19.5.2009 இன் காலைப்பொழுது.

´எங்கள் தலைவர் கொல்லப்பட்டு விட்டாராம்.` அதை நான் நம்பவில்லை. ஆனாலும் மனதில் அமைதியில்லை. அவரது மகன் சார்ள்ஸ் என்று சொல்லி ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்றார்களே! அது உண்மையிலேயே சார்ள்ஸ்தானா? மனதுக்குள் பதிந்து வைத்த இரண்டு படங்களையும் மனம் மீண்டும் மீண்டுமாய் ஒப்பீடு செய்து பார்த்துக் கொண்டே இருந்தது.

´ஏன் எல்லோருமே பொய் சொல்கிறார்கள்? ஏன் எம்மையெல்லாம் கொல்லாமல் கொல்கிறார்கள்?`

சரியாக உடற்பயிற்சியைச் செய்ய முடியவில்லை. மெலானியும், குளோரியாவும் என்னை பல தடவைகளாக எச்சரித்து விட்டார்கள். ´இருப்பது, அசைவது, சைக்கிளை உழக்குவது என்று எல்லாவற்றையுமே நிதானமிழந்து செய்து கொண்டிருக்கிறேன்` என்றார்கள். "சந்திரா, உனக்கு இன்று என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். மெலானி வந்து சத்திரசிகிச்சைக்குள்ளான முழங்காலை அழுத்திப் பார்த்து விட்டு இன்று இன்னுமொரு புதிய பயிற்சி தொடங்க வேண்டுமென்று சொல்லி இன்னொரு இயந்திரத்திடம் என்னை அழைத்துச் சென்றாள். 70கிலோக்களை வைத்து விட்டு சில மாற்றங்களைச் செய்து விட்டு அந்த இயந்திரத்தில் படுத்தபடி காலை ஊன்றி அழுத்தச் சொன்னாள். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்குப் போய்விடலாம் போலிருந்தது.

70கிலோ... "என்னால் முடியாது. கொஞ்சம் குறைத்து விடு" என்றேன். 50கிலோ ஆக்கினாள். பரவாயில்லாமல் இருந்தது. Menuscus ஒப்பரேசன் செய்யப் பட்டதிலிருந்து தற்போது ஒரு வருடமாக இதே ரோதனை.

அவர்கள் அன்பும், சிரிப்பும் என்னைத் தழுவினாலும் அன்றைய பொழுதில் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை. வீட்டுக்கு ஓடி விடவேண்டும் என்பதே நினைப்பாயும், முனைப்பாயும் இருந்தது.

பயிற்சி முடித்து, உடைமாற்றும் அறையில் பெண்களின் அரட்டைகளுக்கும், சிரிப்புகளுக்கும் நடுவில் குளித்து, வெளியில் வந்த போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. காரை புகையிரதநிலையத்தில் விட்டு விட்டு பேரூந்தைப் பிடிக்க வேண்டும். எனது கணவர் மாலை வேலையால் வரும் போது அவருக்குக் கார் வேண்டும்.

இடையிலே எந்த இடையூறுகளும் வராவிட்டால் 12மணி பேரூந்தைப் பிடித்து விடலாம். விரைந்தேன். ஒரு செக்கன் பிந்தியிருப்பேன் போலத் தெரிந்தது. நானும் காரை நிற்பாட்ட, பேரூந்து புறப்படுவதற்கான சமிக்ஞையைச் செய்தது. அடுத்த பேரூந்துக்கு 20நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

ம்.. இந்த நேரத்தில் தொலைபேசியில் முடிக்க வேண்டிய சில விடயங்களை முடித்து விடலாம் என்று தோன்ற, கைத்தொலைபேசியினூடு வேலையிடத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அடுத்தநாள் வேலைக்கு வர ஒருமணிநேரம் பிந்தலாம், என்பதைச் சொன்னேன். அடுத்த சனிக்கிழமை குடும்ப நண்பர் ஒருவருக்கு எமது வீட்டில் சாப்பாடு என்பதை மீண்டுமொரு முறை உறதிப் படுத்தலாம் என்ற நினைப்பில் அவரை அழைத்தேன்.

அந்த ஜேர்மனிய நண்பர்தான் மீண்டும் அந்த இடியைத் தூக்கிப் போட்டார்.
"கேட்டனியா செய்தியை" என்றார்.

"என்ன, சார்ள்ஸ் அன்ரனியின் செய்திதானே? அது சார்ள்ஸ் இல்லை. இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டுப் பார்" என்றேன்.

"இல்லையில்லை உங்கள் தலைவர் இறந்து விட்டதாக எல்லாத் தொலைக்காட்சிகளும் அவர் உடலைக் காட்டுகின்றன."

"இல்லை, இருக்காது."

"இல்லை காட்டுகிறார்கள். இப்போதும் காட்டுகிறார்கள். அது உங்கள் தலைவரின் உடல்தான்."

சாப்பாட்டுக்கு வருவது பற்றிய உறுதிப்படுத்தலைச் செய்து கொண்டு தொலைபேசியை வைத்து விட்டேன்.

´இருக்காது. அவ்வளவு சுலபமாக எங்கள் தலைவரை.... இவர்களால் முடியாது.`

தலைவர் நாட்டில் இல்லை. அவர் என்றைக்கோ, வேற்று நாட்டுக்குப் போய் விட்டார்... என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார்களே!

இப்போது...

என்ன நடந்தது...?

- தொடரும் -

Monday, April 27, 2009

அக்கரைப்பச்சைகள்

ரொறென்றோ மாநகரின் வீதியின் இருமருங்கிலும் கட்டிடங்கள் வானளாவ எழுந்திருக்க, வீதிகள் வாகனங்களால் நிறைந்திருந்தன. என் மகன் கார் கண்ணாடிகளினூடே உலகப் பிரசித்தி பெற்ற CN ரவரை தனது கமராவுக்குள் அடக்கிக் கொண்டிருந்தான். அவன் இப்படித்தான். கமரா கையில் கிடைத்தால் போதும், பாலுமகேந்திரா ஆகி விடுவான்.

உயரங்களில் அழகு பிரதிபலிக்க, கீழே சாலையோரங்களில் உருண்டு கிடந்திருந்த கோலா ரின்களும், உருட்டிப் போடப்பட்டிருந்த அழுக்குப் பேப்பர்களும் கனடா மீதான எனது பிரமைகளை ஒவ்வொன்றாகக் களைந்து கொண்டிருந்தன. ´ஜேர்மனியின் சுத்தத்துக்கும், ஒழுங்குகளுக்கும் மத்தியில் கனடா எந்த மூலைக்கு வரும்.` மனம் தன்னையறியாமலே ஒப்பீடு செய்யத் தொடங்கியது.

தற்போதெல்லாம் எந்த நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாலும் சட்டென்று இப்படியொரு எண்ணம் தோன்றி விடுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. எனது தாய் நாட்டுக்கு அடுத்த படியாக நான் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜேர்மனியை நேசிக்கிறேன் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஆனாலும் எம்மவரில் பலர் ஜேர்மனியில் வதிவிட உரிமை கிடைத்ததும் லண்டனுக்கு ஓடி விடுவதும், கனடாவுக்கு ஓடி விடுவதும் நடக்காமலில்லை. புகலிட அந்தஸ்து கிடைக்காது என்று தெரியும் பட்சத்தில் இன்னொரு நாட்டுக்கு ஓடி, தம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியந்தான். ஆனால் புகலிட அந்தஸ்துக் கிடைத்த பின் வருடக்கணக்காக வாழ்ந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவது ஏதோ அக்கரைப்பச்சைத் தனமாகவே எனக்குத் தெரிந்தது.

மல்லிகாவும் அப்படி குடும்பமாக ஜேர்மனியை விட்டு ஓடிப் போனவர்களில் ஒருத்திதான்.

அது 1993ம் ஆண்டின் ஓர் நாள் என்றுதான் எனக்கு ஞாபகம். வேலை முடிந்து வீடு திரும்பும் போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது. ரீன்ஏஜ் பருவக் குழந்தைகள் வீட்டில். வேலை முடிந்து விட்ட ரிலாக்ஸ் மனதில் இருந்தாலும் என் வரவுக்காய் காத்திருக்கும் பிள்ளைகள் பற்றிய கவலைகள், யோசனைகள், பதட்டங்கள்... என்னிடம் இருந்தன.

வீட்டுக்குள் நுழைந்த போது எனது சிந்தனைகளோடு ஒட்டாது வீடு இருந்தது. வரவேற்பறை கலகலப்பால் நிறைந்திருந்தது. மல்லிகாவும், அவளது கணவரும், அவர்களது ஆறு குழந்தைகளும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார்கள். எனது குழந்தைகள் தமது படிப்பு, மற்றைய விடயங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டு உடைக்கு மாறி, எனது குழந்தைகளின் அன்றைய பொழுதுகள், தேவைகள் பற்றிய அளவளாவல்களுக்கான எனது சுதந்திரத்துடன் கூடிய சின்ன சந்தோசம் சட்டென என் கனவுகளிலிருந்து கலைய அவர்களது கலகலப்புடன் நானும் கலந்து கொண்டேன்.

மல்லிகா குடும்பத்தினரது திடீர் விஜயம், அதுவும் முன்னறிவுப்பு ஏதுமின்றிய அந்த வரவு எனக்குள் கேள்விக் குறியாகவே குந்தியிருந்தது.

"ஏதாவது குடிச்சனிங்களோ? ரீ போடட்டோ?" என்ற போது எனது கணவர்
அவசரமாக "பிறிட்ஜ் க்குள்ளை இருந்து இறால் பக்கற் எடுத்து வைச்சிருக்கிறன்" என்றார்.

´ம்.. சமைக்க வேண்டும். சாப்பிடாமல்தான் வந்திருக்கிறார்கள்.`

அந்த நேரத்தில் சமைக்க வேண்டுமென்பது எனக்குச் சுமையாகவே தெரிந்தது. பிள்ளைகளுக்கும், கணவருக்குமான உணவை, காலை வேலைக்குப் பின் சமைத்து வைத்து விட்டே மாலை வேலைக்குச் சென்றேன். இப்போது எனக்குத் தேவையாக இருந்தது பிள்ளைகளையும், கணவரையும் கவனித்து விட்டு ஒய்யாரமாக எனது சோபாவில் அமர்ந்து ஒரு தேநீர் அருந்துவதே. இருந்தாலும், மனசின் சோர்வை வெளியில் தெரியவிடாமல் சில நிமிடங்கள் அவர்களோடு அளவளாவி விட்டு, எழுந்து குசினிக்குள் சென்றேன்.

பின்னால் தொடர்ந்து வந்த கணவர் "அவையள் நாளைக்கு இரவு கனடாவுக்குப் புறப்படுகினமாம். திரும்பி வாற எண்ணம் இல்லை. சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்திருக்கினம்" என்றார்.

எனது சோர்வு, களைப்பு எல்லாம் சட்டென என்னை விட்டுப் பறந்தன. நம்ப
முடியாதிருந்தது. ஓரிரு தடவைகள் மல்லிகா கனடா பற்றி அங்கலாய்த்திருக்கிறாள்தான். எல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் என்று நினைத்திருந்தேன். ஒன்றிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் ஆறு பிள்ளைகளின் படிப்புகள், நட்புகள், இன்னும் எத்தனையோ விடயங்கள்.. எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டு புறப்படுவாள் என்ற எண்ணம் எனக்குக் கனவிலும் வந்ததில்லை.

"புட்டு விருப்பமோ, இடியப்பம் விருப்பமோ?" என வெளியில் சென்று மல்லிகாவைக் கேட்டேன். "இடியப்பம் எண்டால் இதுகள் வாயிலையும் வையாதுகள்" என்றபடி அவளும் எழுந்து குசினிக்குள் வந்தாள்.

"கனடாவுக்குப் போப்போறம். எல்லாம் சரி வந்திட்டுது. நீங்களும் இங்கை இருந்து என்ன செய்யப் போறியள். வெளிங்கிடுங்கோ. ஒண்டாப் போவம்" என்றாள்.

"ம்... கும் என்னாலை ஏலாது. ஏழு வருசங்கள் இங்கை வாழ்ந்திட்டம். பிள்ளையள் இங்கை படிக்கினம். இதையெல்லாம் குழப்பிக் கொண்டு..."

"என்ன சொல்லுறிங்கள்? நீங்கள் எத்தனை வருசமா வாழ்ந்த உங்கடை நாட்டையும், ஊரையும் விட்டுப் போட்டு வந்தனிங்கள். இது பெரிய விசயமே? உங்கடை அவர் நீங்கள் ஓமெண்டால் வருவாராம். உங்களை சமாளிக்கிறது என்ரை பொறுப்பெண்டு சொல்லிட்டார். உங்கடை கையிலைதான் இருக்கு. வாங்கோ"

எனக்குத் தெரியுந்தானே எனது கணவரைப் பற்றி. தனக்கு பிடிக்காத ஒன்று என்றால் என்னைச் சாட்டி விட்டு தான் நல்லபிள்ளைக்கு இருந்து விடுவார். பரவாயில்லை.

இருப்பதில் நிலைப்படுவதிலேயே பிரியம் கொண்டவள் நான். அங்கு இங்கு என்று தாவுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது நாடு விட்டு நாடு பாய என் மனத்தில் துளி எண்ணமும் இல்லை.

'போனால் இலங்கை. இருந்தால் ஜேர்மனி' இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்ற விதமாக, திடமாக எனது மறுப்பைத் தெரிவித்தேன். மல்லிகாவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. எப்படியாவது கதைத்து என்னை மாற்றலாம் என்ற அவளது நம்பிக்கை தளர்ந்ததில் அவள் முகம் வாடிப் போயிற்று.

பிட்டும், இறால் பிரட்டலும், மதியம் வைத்த போஞ்சியும், கத்தரிக்காய் வதக்கல் குழம்பும்.. என்று எல்லோரும் ஒரு பிடிபிடித்தார்கள். எனது குழந்தைகளுக்கும் மல்லிகாவின் குழந்தைகளோடு அரட்டை அடிக்க முடிந்ததில் வலுவான சந்தோசம். அவர்கள் புறப்பட இரவு 11மணிக்கு மேலாகி விட்டது.

வாசலில் நின்றும் "நல்லா யோசிச்சுப் போட்டு நாளைக்குப் போன் பண்ணிச் சொல்லுங்கோ. நல்ல சந்தர்ப்பத்தை விட்டிடாதைங்கோ" என்றாள் மல்லிகா.

´யோசிக்க எதுவுமே இல்லை. எனது முடிவு ஜேர்மனி அல்லது இலங்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை` என்பதை நான் சொல்ல நினைத்தும் சொல்லாமலே கையசைத்து விடை கொடுத்தேன்.

இந்த மல்லிகா வீட்டை நோக்கித்தான் நாம் கனடாவின் வீதியொன்றில் பயணித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஜேர்மனியில் இருந்த போது எனது கணவர்தான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். மல்லிகாவின் கணவரும், எனது கணவரும் ஏதோ ஒரு அமைப்பு ரீதியான நண்பர்கள். நான் ஒரேயொரு தடவைதான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். ஆறு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம். மல்லிகாவைப் போலவே அழகான குழந்தைகள். வீடு விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆனாலும் எனது ரசனைக்குள் அகப்படாத ஏதோ ஒரு குப்பைத்தனம். மூலைகள், முடுக்குகளில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை என்று எண்ணும் படியாக சிலந்திப் பின்னல்கள். ஆங்காங்கு எறும்புகளின் ஊர்வலம். குசினிக்குள் முற்றுமுழுதாகக் கரப்பான் பூச்சிகளின் இராச்சியம்.

"ஏன்..?"
தாங்க முடியாமல் கேட்டு விட்டேன்.

"அது தமிழ் ஆட்கள் எல்லாற்றை வீட்டிலையும் இருக்கும். அதுக்கு ஒண்டும் செய்யேலாது" என்றாள் மல்லிகா.

ஊரில் கரப்பான் பூச்சி தவிர்க்க முடியாததாய் இருக்கலாம். ஜேர்மனியில் அப்படியல்ல. ஜேர்மனியர் யாருடைய வீட்டிலும் கரப்பான் பூச்சியைக் காணவே முடியாது. இப்படியானவற்றை அழிப்பதற்கான மருந்துகளும், வசதிகளும் இங்கு ஏராளம். வீட்டுக்குத் திரும்பும் போது எனது உடைகளோடு ஏதாவது வந்து விடுமா என்ற பயம் எனக்குள்ளே இருந்தது.

இனிமையான ஒரு சந்திப்பைப் பற்றிய கனவுகளோடு அந்தக் கரப்பான் பூச்சிகளின் ஊர்வலமும் தவிர்க்க முடியாமல் நினைவில் வந்து கொண்டே இருந்தது. மூன்று வருடங்களின் பின் சந்திக்கப் போகிறோம். எப்படி இருப்பார்கள். பிள்ளைகள் வளர்ந்திருப்பார்களோ... என்ற பல கேள்விகளுடன் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தோம்.

வரவேற்பு இனிமையாக, சந்தோசப் படுத்தியது. மல்லிகா எப்போதும் போல் அழகாகவே இருந்தாள். பிள்ளைகள் ஒரு படி வளர்ந்திருந்தார்கள்.

தோசை, இட்லி, பிட்டு.. என்று சாப்பாடு அமர்களமாக இருந்தது. சாப்பிட்டு விட்டுச் சோபாவில் அமர்ந்த போதுதான் கவனித்தேன், காலடியில் கரப்பான் பூச்சி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

திடீரென மகன் கீச்சிட்டான். பார்த்தால் சுவரில் எனது தலைக்கு மேலே கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

சந்திரவதனா
ஜேர்மனி
13.2.2009

Saturday, April 11, 2009

கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்

எம் தமிழ்மக்கள் படும் துன்பங்களுக்கு ஒரு விடிவு வேண்டி, புலம்பெயர் தமிழர்களால் நாடு தழுவியதான‌ கவனயீர்ப்பு போராட்டங்களும் உண்ணாநோன்புகளும்.

பிரான்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிச்சுவர் பகுதியில் இடம்பெற்று வரும் இந்த போராட்டத்தில் நான்கு இளைஞர்கள் சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்

இத்தாலி மிலானோ நகரில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை ஐரோப்பிய பாராளுமன்ற இத்தாலி கிளை அமைந்துள்ள அலுவலகத்திற்கு அண்மையிலுள்ள திடலில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு மிகவும் பதட்டமான சூழ்நிலையில் இடம் பெற்றுள்ளது

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்கேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி திங்கள் அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளான இன்றும். டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு: ஆறு பேர் உண்ணாவிரதப் போராட்டம்

நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது தாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் ஐந்தாவது நாளாக..

சுவிஸ் ஜெனீவா,பேர்ண், சூரிச் நகரங்களில் தமிழ் மக்களால் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுப்பும் நோக்குடன் சுவிஸ்சில் கடந்த 6ஆம் திகதி பேர்ண், சூரிச்சில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டங்கள் நேற்றும் பல மாநிலங்களில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜெனீவா ஜ.நா முன்றலிலும, பேர்ண் பாராளுமன்ற பிரதான தொடரூந்து நிலையத்தை அண்மித்த பகுதியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நிகழ்த்துகின்றனர்.

தென்னாபிரிக்கவில்: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் அவர்கள் தன்னுடைய உண்ணாநோன்பை இரண்டவாது நாளாக தென்னாபிரிக்க டேர்பன் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தன்னுடைய கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிசீலிக்கும் வரைக்கும் தான் இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.

சுவீடனில் நடக்கும் தொடர் போராட்டத்தில் இந்திய தூதரக வாசலின் மத்தியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சுவீடன் காவற்துறையினர் பலர் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வளங்கினர்.

கனடாவில்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

நியூயோர்க் மாநகரில்: விடுதலைப் புலிகளே தமிழர் பிரதிநிதிகள், நியூயோர்க் நகர மும்முனை ஆர்ப்பாட்டங்களில் தமிழர்கள் முழக்கம். நியூயோர்க் மாநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நீராகாரம் கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டம் மூன்று நாடுகளின் ஐ.நா. நிரந்தர வதிவிட பிரதிநிதிகளின் அலுவலகங்களின் முன்பாக தொடர்ச்சியாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது.

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Wednesday, February 11, 2009

வீரமரணம் (கப்டன் மயூரன்)


மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

5.2.2009 அன்று நடைபெற்ற மோதலில் மயூரன்(பரதன் பிறேமராஜன்) களப்பலியானார்.

மயூரன்(பரதன்), பிறேமராஜன்(கவிஞர் தீட்சண்யன்), மஞ்சுளா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், ஜனகன் (France), கௌசிகன், தாட்சாயணி ஆகியோரின் அன்புச் சகோதரனும், திரு+திருமதி தியாகராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் (ஆத்தியடி, பருத்தித்துறை) அன்புப் பேரனும் ஆவார்.

இவர் வற்றாப்பளை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்டவர்.

தகவல் - புலிகளின் குரல்

Sunday, February 08, 2009

இலவசம்

தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த எனக்கு அன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கும் நேரம் பார்த்து... அந்தக் கடிதம் வந்ததில், இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று.

பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் நானும் வேலைக்கு விடுப்பு எடுத்து வீட்டில் நிற்பது வழக்கம். முதல் மாதமும் ஏதோ காரணத்துக்காக நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. விடுப்பு எடுத்து வீட்டில் நின்றேன். அப்படியான விடுமுறை நாட்களில் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் நானும் பங்கு பற்றி விளையாடுவேன்.

அவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்... போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி (Monopoly). இன்னும் கொஞ்சம் வளர ஹேம்போய் (Gameboy), நின்ரெண்டோ (Nintendo) என்று அவர்களின் ஆர்வத்துக்கும், காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். அப்போது தொண்ணூறின் ஆரம்ப காலகட்டம். எங்கள் வீட்டுக்குள்ளும் கணினி நுழைந்து பிள்ளைகளின் விளையாட்டுக்கள் மெதுமெதுவாக இணையத்துக்கு மாறிக்கொண்டிருந்தன. சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் ´சட்´ செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே எனது கடைசி மகனின் வேலையாக இருந்தது.

அன்றும் அப்படித்தான் மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு "வா. வந்து சாப்பிடு" என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்ததேன். அவன் வருவதாயில்லை. ஒருவித சலிப்புடனான எரிச்சல் மனதில் தோன்ற கணினி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். "அம்மா பிற்ற (Please) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் (very interresting)” என்று மூன்று பாஷைகள் கலந்து அவன் கெஞ்சினான்.

கணினித் திரையைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் ´சட்´ செய்து கொண்டிருந்தான். அடிக்கடி WWW... என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே ´ஐ லவ் யூ´ என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.

அவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து... என்று உலகமெல்லாம் பொய்யும், புரட்டும் காதலுமாய்... சட்டன் செய்து கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பைத் தந்தது. சுவாரஸ்யமாகக் கூட இருந்தது.

இருந்தாலும் "இப்ப வா. வந்து சாப்பிடு" என்றேன்.

இப்போது அவன் கணினித் திரையில் "அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன்" என்று எழுதி எல்லோருக்கும் அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.

பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவனையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.

"நீ இப்பிடி நாள் முழுக்க ´சட்´ செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்திடும். அது போக உன்ரை கண்ணுக்கும் கூடாது. தெரியுமே" அவனைக் கண்டித்தேன்.

"என்னம்மா, எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே? பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது? அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே? போன கிழமை போஸ்ரிலை ஒரு CD வந்ததில்லோ! இல்லையில்லை இரண்டு CD. அது AOL என்ற கொம்பனியிலை இருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடீயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு, இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது."

சாப்பிட்டு முடிந்ததும் அந்ந CD க்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். அவன் மீண்டும் கணினி அறைக்குள் நுழைந்து கணினிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.

தொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் எனது மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. ´அவளுடன் ´சட்´ செய்தால் என்ன..?´ என்ற ஆசைதான் அது.

மகனிடமும் எனது ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது எனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவன் கணினியை எனக்காக விட்டுத் தரும்வரை அவனோடு சேர்ந்து நானும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தேன்.

மாலை கணவர் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணினி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் ´சட்´ செய்யத் தொடங்கனேன். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினோம்.

இடையில் எனது கணவர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது அவசரமாய் "அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே?" என்றேன். எனது புத்திசாலித்தனத்தின் மீது எனது கணவருக்கு நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார். அன்று இரவு சிவராத்திரிதான். மூத்தவன், கடைசிமகன், நான் என்று மாறி மாறி கீபோர்ட்டைத் தட்டினோம்.

கணவர் இடையிடையே எழும்பி வந்து "என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு... மனிசரை நித்திரை கொள்ளவும் விடமாட்டியள்" என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.

இன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். ´பிள்ளைகளோடு வெளியில் போகலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா´ என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அதைக் கொண்டு வந்திருந்தான். எனக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தேன். ´ஊருக்கு அம்மாவுக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்..?´ பில்லை மீண்டுமாகச் சரி பார்த்தேன். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப்பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. ´என்னவாயிருக்கும்.? மிகவும் மலைப்பாக இருந்தது.

இதற்குள் எனது கணவர் பில்லைப் பார்த்துவிட்டு கத்தத் தொடங்கி விட்டார். "மனுசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்"

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´ஒவ்வொரு சதத்தையும் எவ்வளவு கவனமாகச் செலவு செய்வேன். எப்படி, இப்படியொரு பில் வந்திருக்கும்?´ மிகவும் குழப்பமும், கவலையும் என்னை ஆட்கொள்ள தொலைத்தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு "ஏன், இப்படி ஒரு தவறான கணக்கை அனுப்பியிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களும் மிகவும் சங்கடப்பட்டு, மன்னிப்புக் கேட்டு "பொறுங்கள்..! இரண்டு நாட்களில் பதில் தருகிறோம்' என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் எனக்கு AOL கொம்பனியின் ஞாபகம் வந்தது. உடனேயே அந்த சீடியை வைத்து ´சட்´ செய்தது பற்றிச் சொன்னேன்.

அப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாக "AOL இனூடான இன்ரநெற் நுழைவு இலவசம் என்றாலும் ஜேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து மறு அந்தத்தில் இருக்கும் AOL Company உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே" என்றார்.

சந்திரவதனா
ஜேர்மனி


பிரசுரம் - யுகமாயினி ஜனவரி 2009

Thursday, February 05, 2009

ஒரு சில பதிவுகள்

மனதைத் தொட்ட அல்லது மனைதைப் பாதித்த பதிவுகளில் ஒரு சில

கனடிய பாராளுமன்றத்தில் ஈழப்பிரச்சனை தொடர்பான அவசர விவாதம் நடைபெற்றது.
- காரூரன் -

கனடிய தமிழர்களின் குரலுக்கு செவிமடுத்து அவசர விவாதத்தை இன்று இரவு Feb 4த் நடத்தினார்கள். காரசாரமாக பல தகவல்களுடன் ஈழப்பிர்ச்சனை ஆராயப் பட்டது. கனடா உலகத்தில் சமாதானத்துக் கான தூதுவ நாடு, இலங்கை விடயத்தில் மௌனமாக இருக்கின்றது என்ற வினாக்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. more

மாதங்கி மாயா அருள் பிரகாசம் ( M.I.A) வன்னி மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளார்!
- காரூரன் -


உலகப் புகழ் பெற்ற ஒஸ்கார்(Oscar) விருதுக்கும், கிறாமி (Grammy) விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டோர் தெரிவில் இருக்கும் தமிழிச்சி தானும் ஒரு அகதி, தான் பெறும் விருதை விட போரினால் பாதிக்கப் பட்டிருக்கும் தமிழ் மக்களிற்கான ஒரு தீர்வே முக்கியம் என்கின்றாள். மேற்குலகில் இசைத்துறையில் தனக்கென்று அடையாளத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் உறவு, நமக்காக எப்போதும் குரல் எழுப்பி வருகின்றாள். more

Sunday, January 11, 2009

ஒரு சனிக்கிழமை

கோடை அவரசரமாக ஓடி விட்டது போலிருந்தது. குளிர் நகரமெங்கும் பரவிக் கிடந்தது. மரங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் வழமை போலவே நடமாடிக் கொண்டிருந்தார்கள். கனடாவின் தேசியச்சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த மேப்பிள் இலைகள் குவியல் குவியலாய் வீதியோரங்களில் ஒதுங்கியும், சப்பாத்துக் கால்களுக்குள் மிதிபட்டும், காற்றோடு அலைந்து கொண்டும் திரிந்தன.

நானும், கணவரும் அன்றைய சனிக்கிழமை வழமைக்கு மாறாக எனது பகுதி நேர வேலைகளில் ஒன்றின் அதிகாரியான திருமதி சீக்கிளர் வீட்டை நோக்கிப் பயணித்தோம். திருமதி சீக்கிளர் என்னிடம் ஒரு உதவி கேட்டிருந்தாள். எனது கணவர் அவளது கணவருக்கு கணினியில் ஒரு டிஷைன் போட்டுக் கொடுக்க வேண்டும். எனது கணவர் வரைவதில் நிறைய ஆர்வம் உள்ளவரும், கணினியில் இந்த வழியில் நிறைய அறிந்து வைத்திருப்பவரும் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததாலேயே இந்த உதவியைக் கேட்டிருந்தாள்.

நாமும் மறுக்கவில்லை. ஜேர்மனியருக்கு இப்படியான உதவிகள் செய்வதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் பெரிதாக இல்லை. நேரம் இருக்கும் பட்சத்தில் செய்யலாம். உதவி செய்த நேரத்தையும், செய்த உதவியின் கனத்தையும் கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தந்து விடுவது அவர்களது நல்ல பழக்கங்களில் ஒன்று.

எங்கள் வீட்டிலிருந்து எட்டுக் கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருக்கும் அந்த வீட்டைக் கண்டு பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை. முதல்நாள் இரவே கணினியில் அந்த வீட்டு முகவரியைக் கொடுத்து பாதையைப் பிறின்ற் பண்ணி எடுத்திருந்தோம்.

ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த வீடு நாம் வாழும் ஸ்வெபிஸ்ஹால் நகரையொட்டிய உன்ரர்முன்கைம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்திருந்தது. அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் ஆஹோர்ன் (மேப்பிள்), பியர்க்கே (அரசு)... போன்ற பெரிய பெரிய விருட்சங்கள் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன.

வீட்டின் வாசற்கதவில் அனேகமான எல்லா ஜேர்மனிய வீடுகளும் போலவே மேப்பிள் இலைகளோடு வேறும் சில குறிப்பிட்ட இலைகளும், வாடா மல்லி போன்ற பூக்களும் கலந்து செய்யப்பட்ட மலர் வளையம் தொங்கியது. எமது நாட்டில் பேயைக்கலைக்க வேப்பிலையைப் பயன் படுத்தியது போல ஜேர்மனியில் மேப்பிள் இலைகளைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். வீட்டு வாசலில் மேப்பிள் இலைகள் தொங்கினால் பேய் வீட்டை நெருங்காது என்பது ஜேர்மனியர்களின் நெடுங்கால நம்பிக்கை. ஆனாலும் ஏன் அதைக் கொழுவுகிறோம் என்று தெரியாமல் வெறுமனே அழகுக்காகக் கொழுவுவர்கள்தான் இன்று அதிகமானோர்.

நாம் அழைப்புமணியை அழுத்த முன்னரே திருவாளர் சீக்கிளர் கதவைத் திறந்து கைகுலுக்கி எம்மை வரவேற்றார். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஓரிரு தடவைகள்தான் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஜேர்மனிய மொழியில் பிரசுரமான புத்தகங்களில் நல்ல படைப்புகள் அடங்கிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை ஒலி வடிவத்துக்கு மாற்றுவதே அந்த அலுவலகத்தின் வேலை. ஆனால் அது திருமதி சீக்கிளருக்குச் சொந்தமான அலுவலகம். திருவாளர் சீக்கிளர் விளம்பர சம்பந்தமான இன்னொரு அலுவலகத்தை வேறு இடத்தில் சொந்தமாக நடாத்துகிறார். கோர்ட், சூட் அணிந்து அதிகாரி என்ற பிரதிபலிப்போடு மட்டுமே எனக்குத் தெரிந்த அவர் வீட்டிலே கட்டைக் காற்சட்டையுடன் ரீ சேர்ட் மட்டும் அணிந்து மிகவும் சாதாரணமாகக் காட்சியளித்தார். சிரிப்பு மட்டும் எப்போதும் போல் அப்பாவித்தனமாக ஆனால் அழகாக இருந்தது.

வீடு வெப்பமூட்டப்பட்டு மிகுந்த கதகதப்பாக இருந்தது. வரவேற்பறை அமெரிக்க ஸ்ரைலில் சமையலறைக்கும், சாப்பாட்டு அறைக்கும், விருந்தினர் அறைக்கும் இடைகளில் சுவர்களோ, மறிப்புகளோ இல்லாமல் பெரிதாக அமைந்திருந்தது. தளபாடங்களிலும், மேசை விரிப்புகளிலும், திரைச்சீலைகளிலும், அழகை விட அதிகமாகப் பணம் மிளிர்ந்தது. மெத்தென்ற பெரிய சோபாவில் அமர்ந்த போது நேரெதிரே இருந்த பிளாஸ்மா தொலைக்காட்சி எங்கள் ஊர் திரையரங்குகளை ஞாபகப் படுத்தியது. அவரும் எம்மோடு அமர்ந்து கதைக்கத் தொடங்கினார்.

"எங்கே திருமதி சீக்கிளர்?" கேட்டேன்.

"அவளுக்குக் கொஞ்சம்; தலையிடி. சரியான அலுப்பு. இன்னும் படுக்கையில் இருக்கிறாள்!" என்றவர் "உங்களுக்காக சைலோன்(சிலோன்) தேயிலை வாங்கி வைத்திருக்கிறேன். தேநீர் அருந்துகிறீர்களா?" என்று கேட்டார்.

"இல்லையில்லை. இப்போதுதான் காலையுணவை எடுத்தோம். திருமதி சீக்கிளரும் எழுந்த பின் அருந்தலாம். இப்போது வேலையைத் தொடங்கலாம்" என்றோம்.

"நல்லது" என்ற படி எழுந்த அவர் சாப்பாட்டு மேசைக்கு லப்ரொப் பைக் கொண்டு வந்தார். எனது கணவர் தனது வேலையைத் தொடங்கினார். நான் சோபாவில் அமர்ந்த படியே புத்தகக் கூடைக்குள் அடுக்கப்பட்டிருந்த சஞ்சிகைகளில் இருந்து ஒரு ஜேர்மனிய சஞ்சிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். மனம் சஞ்சிகையில் முழுவதுமாக லயிக்காமல் கவனங்கள் சிதறிக் கொண்டே இருந்தன.

திருவாளர். சீக்கிளர் கோப்பிக்கொட்டைகளை கோப்பி மெஷினுக்குள் கொட்டி உரிய பொத்தானை அழுத்தினார். கோப்பிக் கொட்டைகள் அரைபடும் சத்தத்தைத் தொடர்ந்து கோப்பி சிந்தத் தொடங்கியது. தண்ணீரைக் கொதிக்க வைத்து தேநீரும் தயாரித்தார். குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பட்டரை வெளியில் எடுத்தார். பாணை மெஷினில் மெல்லிய துண்டுகளாக வெட்டி பட்டரைப் பூசினார். ஒரு தட்டு (Tray) எடுத்து கோப்பிக்குவளை, தேநீர்க்குவளை, பாண் வைக்கப் பட்டிருந்த கோப்பை, குடிகோப்பை, சீனி, பால், கரண்டி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு வரவேற்பறை வாசலோடு ஒட்டியிருந்த படிகளில் ஏறி மேலே கொண்டு சென்றார்.

மேலேதான் படுக்கையறை இருக்கிறது என்று முதலே சொல்லியிருந்தார். தனது மனைவிக்குத்தான் காலையுணவை எடுத்துச் செல்கிறார் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. பல் துலக்காமலே கட்டிலில் அமர்ந்த படியே, காலையுணவை உண்பது இவர்களின் வழக்கங்களில் ஒன்று. எம்மைப் போல முதலில் தேநீர் அருந்தி பின்னர் காலையுணவு என்பது இவர்களிடம் இல்லை. தேநீர், கோப்பி, காலையுணவு எல்லாமே ஒன்றாகத்தான் நடக்கும். மேலே அவர்கள் மிகமிக மெதுவாகக் கதைதக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் அவர் கீழே வந்து எம்மோடு சில கதைகளும் வீட்டின் வேலைகளும் என்று செய்து கொண்டிருந்தார். துடைத்தார். அடுக்கினார். குப்பை நிரம்பிய பையை எடுத்துச் சென்று வெளியில் இருக்கும் அதற்குரிய வாளிக்குள் போட்டு விட்டு வந்தார்.

பெரிய அதிகாரி என்ற தோரணையோ, தான் ஆண் என்ற மிடுக்கோ இன்றி வீட்டு வேலைகளெல்லாம் தனக்கே உரியவை என்பது போன்ற அவரது செயற்பாடு எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது. இதையெல்லாம் எனது கணவரும் கவனிக்கிறார் என்பதில் எனக்கு சந்தோசமாகக் கூட இருந்தது.

அரை மணித்தியாலத்தின் பின் மீண்டும் மேலே சென்ற திருவாளர் சீக்கிளர் தட்டை ஏந்தியபடி கீழே வந்தார். திருமதி சீக்கிளர் காலையுணவை முடித்திருந்தாள். கழுவ வேண்டிய குவளைகளையும், கோப்பைகளையும் டிஸ்வோஷருக்குள் அடுக்கி விட்டு மீண்டும் "ஏதாவது குடிக்கிறீர்களா, சாப்பிடுகிறீர்களா?" என்றார் எம்மை நோக்கி.

இம்முறை "ஏதாவது குடிக்கிறோம்" என்றோம். அப்பிள் ஜூசும், ஒறேஞ் ஜூசும், வெள்ளைச் சோடாவும் கொணர்ந்து மேசையில் வைத்து கிளாசுகளையும் வைத்தார். மீண்டும் மேலே போய் வந்தார்.

ஒரு மணி நேரத்துக்குப் பின் மிக மெதுவாக திருமதி சீக்கிளர் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். அந்த இடைவெளியில் அவள் தலைமயிரைக்கழுவி, குளித்திருப்பது தெரிந்தது. மிக மெல்லிய சிறிய உருவம். சற்றுப் பிசகினாலும் ஒரு சூனியக் கிழவியின் தோற்றத்தை நினைவு படுத்தக் கூடிய முகம். அந்த முகத்தில் எப்போதும் போல ஒட்டி வைத்த ஒரு புன்னகை. திருவாளர் சீக்கிளரின் இயல்பான, அப்பாவித்தனமான சிரிப்போடு ஒட்டாத செயற்கை கலந்த புன்னகை. 50வயது என்று சொல்ல முடியாத விதமாக முக அலங்காரம். கூடவே இளமை தெளிக்கும் ஆடைத் தேர்வு.

திருவாளர் சீக்கிளர் விரைந்து சென்று படிகளிலேயே அவளின் உதட்டோடு தன் உதட்டை அழுத்தி, "அன்பானவளே எப்படி இருக்கிறாய், நலம்தானே?" என்று கேடடார். திருமதி சீக்கிளர் அளந்து விட்டது போல "ஆம்" என்ற படி நேராக என்னிடம் வந்து நட்போடு கைகுலுக்கினாள். தாமதமாக எழுந்து வந்ததற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். எனது கணவரிடமும் சென்று கைலுகுலுக்கி நான்கு வார்த்தைகள் பேசி விட்டு மீண்டும் வந்து என்னோடு சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

"எனது இனிமையானவளே, என்ன குடிக்கப் போகிறாய்?" திருவாளர் சீக்கிளர் அவளிடம் கேட்டார். "சூடாக ஸ்ரோபெரி தேநீர்" என்றாள். மீண்டும் தண்ணீர் கொதிக்க வைத்து ஸ்ரோபெரி தேநீர் தயாரித்து வந்து கொடுத்தார். கொடுக்கும் போது மீண்டும் அவளது உதடுகளோடு தனது உதட்டை அழுத்தி, கண்ணுக்குள் கண்கள் பார்த்து "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றார். அவளும் பதிலாக "நானும் உன்னை மிகவும் காதலிக்கிறேன்" என்றாள்.

திரும்பிச் சென்றவர் எங்களுக்கும் இலங்கைத் தேயிலையில் தேநீர் தயாரித்து ஒரு குவளை நிறைய தேநீரும், தனித்தனியாக பால், சீனியும் கொண்டு வந்து மேசையில் வைத்தார். கூடவே பட்டரும், கிரான்பெரி ஜாமும் தடவிய சில ரோஸ் பண்ணிய பாண்துண்டுகளும், சீஸ் சீவல்களும், கேக் துண்டுகளும், பிஸ்கிற்றுகளும் வைத்து சாப்பிடும் படி சொன்னார். எனது கணவரும் வந்திருந்து நால்வருமாக தேநீர் அருந்தி, சிறிதளவு அவைகளைச் சாப்பிட்டு, நிறையவே கதைத்தோம். இலங்கையைப் பற்றி மிகுந்த ஆர்வத்தோடு நிறையக் கேட்டார்கள். ஆறு வருடங்களின் முன் தாம் அங்கு கண்டிப் பகுதிக்குச் சுற்றுலா போய் வந்ததாகச் சொன்னார்கள்.

ஒரு மணி நேரம் கதைகளிலேயே கரைந்தது. முடிவில் தமது ஐந்து மாடி வீட்டின் ஒவ்வொரு மாடியையும் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்கள். குளியலறைகளும், படுக்கையறைகளும், விருந்தினருக்கான அறைகளும் என்று அது ஒரு அரண்மனை போலக் காட்சியளித்தது. இருவருக்கு மிக அதிகம் அந்த வீடு. வீட்டின் கீழே உள்ள நிலக்கீழ் அறைகளைக் கூட ஒரு அலுவலகமாக அழகாக உருவாக்கி வைத்திருந்தார்கள். கூடவே sauna, solarium என்று வீட்டுக்குள் வசதிகள் நிறைந்திருந்தன.

மீண்டும் கணவர் வேலையைத் தொடங்கி விட்டார். நானும் சஞ்சிகையில் மூழ்கி ஏதோ ஒரு அரவத்தில் நிமிர்ந்த போது சமையலறையின் மூலையில் உதடுகள் பொருத்தி மிகத் தீவிரமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த ஐம்பது வயதுத் தம்பதிகள். சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டேன். இது ஐரோப்பியாவில் சாதாரணம் என்றாலும் எனது மேலதிகாரிகளை அந்தத் தோற்றத்தில் பார்ப்பது சற்றுச் சங்கடமாகவே இருந்தது.

தொடர்ந்த ஒவ்வொரு பொழுதுகளிலும் திருவாளர் சீக்கிளர் திருமதி சீக்கிளருக்குத் தேவையான உதவிகள் மட்டும் என்றில்லாமல் தேவைக்கு மீறியவைகளைக் கூடச் செய்து கொண்டிருந்தார். எனது கணவரும் திருவாளர் சீக்கிளருக்குப் பிடித்த மாதிரி டிஷைன் போட்டு முடித்தார்.

தம்பதிகள் இருவருமாக எமக்கு பெரிய நன்றி சொல்லி உரிய பணத்தையும் கையில் தந்தார்கள். விடை பெற்ற போது `ஆண்கள் இப்படியும் இருக்கலாம்` என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்ட திருவாளர் சீக்கிளரின் செயற்பாடுகளை எனது கணவரும் கவனித்தார் என்பதில்தான் எனக்குள் அதிக திருப்தியும், மகிழ்ச்சியும் ஊஞ்சலாடியது.

எல்லாம் கார் கதவைத் திறக்கும் வரைதான். காருக்குள் இன்னும் நான் சரியாகக் கூட ஏறி இருக்கவில்லை. எனது கணவர் "உவன் என்ன சரியான விடுபேயனா இருக்கிறான். பொம்பிளையாப் பிறக்க வேண்டியவன்." என்றார்.

சந்திரவதனா
12.11.2008

பிரசுரம் - யுகமாயினி (December 2008)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite