Monday, April 02, 2007

WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்

பயம்
நீங்கள் 14வது மாடிக்கு நடந்தே, அதாவது படிகளில் ஏறியே போயிருக்கிறீர்களா? ம்... ´லிப்ற்´ இல்லாவிடில் என்ன செய்வது, நடக்கத்தானே வேண்டும். ஆனால் ´லிப்ற்´ இருக்கத் தக்கதாகவே நடந்திருக்கிறீர்களா? நான் நடக்கிறேன். ´லிப்ற்´ பக்கத்தில் இருக்க நான் மாடிப்படிகளில் ஏறியே போகிறேன். காரணம் பயம். பூட்டப்பட்ட அந்த சிறிய இடம் கொண்ட ´லிப்ற்´ க்குள் சில விநாடிகள் கூட நிற்கப் பயம்.

முன்னர் அப்படியில்லை. சிறுவயதில், கொழும்பில் முதன்முதலாக அப்பாவுடன் ´லிப்ற்´ றில் போன போது என் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. எப்படி இது சாத்தியம் என்ற வியப்பு. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் ஓடிச் சென்று " அம்மா, இன்று றூம் நடந்நது" என்றேன். அதன் பின்னான பொழுதுகளிலும் ´லிப்ற்´ என்னைப் பயமுறுத்தியதில்லை. ஆனால் இப்போது... எப்போது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. மெதுமெதுவாக ஆரம்பித்த பயம், இப்போது பூதாகரமாக என்னை ஆட் கொண்டுள்ளது.

சில வாரங்களின் முன் 14வது மாடிக்கு நடந்தேன். அது ஒரு நாள்தான் என்பதால் பரவாயில்லை. சில மாதங்களின் முன் காலில் ஒரு வலி காரணமாக மருத்துவமனையில் பிரத்தியேக சிகிச்சை பெற வேண்டியிருந்தது. மருத்துவமனைக்குரிய பேரூந்து நிலையத்தில் இருந்து 9வது மாடிக்குப் போனாலே, எனது சிகிச்சைக்குரிய இடத்தை அடையலாம். கிழமையில் இரு நாட்கள் படி 4 வாரங்கள் செல்ல வேண்டியிருந்தது. 5வது மாடிவரை ஓடி ஓடி ஏறுவேன். 6வது மாடியில் மெதுவாக மூச்சு வாங்கத் தொடங்கும். கால்கள் தடுமாறும். ஆனாலும் ஏறுவேன். 9வது மாடிக்குப் போய்ச் சேரும் போது களைத்திருப்பேன். ´லிப்ற்´ றின் உள்ளே போவோரும், வெளியே வருவோரும் என்னை விநோதமாகப் பார்த்துக் கொண்டே போவார்கள். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.

தினமும் மூன்று நான்கு மாடிகளை ஏறியே கடக்கிறேன். வேலையிடத்தில் எனது நண்பிகள் எல்லோரும் என்னைப் பார்த்துப் பகிடி பண்ணுவார்கள். எனது கணவரோடு கூட எங்கே சென்றாலும் அவர் ´லிப்ற்றில்´ நுழைய நான் படிகளில் விரைவேன். ஆனால் 5வது மாடிவரை ´லிப்ற்´ றையும் விட வேகமாக ஓடி ஏறி விடுவேன். அதன் பின்தான் என்னில் சோர்வு ஏற்படத் தொடங்கும்.

WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை எனது இந்தத் தன்மை கூட WEIRD ஆக இருக்குமோ?

ஏகாந்தம்
பலரோடோ அன்றில் சிலரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது, சில நிமிடங்கள்தான் முழுமையாக நான் அங்கு இருப்பேன். பின்னர் நான் மட்டும் அங்கு இருக்க, எனது நினைவுகளும், சிந்தனைகளும் வேறெங்காவது பறந்து விடும். நடந்தவை, நடக்கப் போவதான கற்பனை... ஏதோ ஒன்றுடன் நான் லயித்து விடுவேன். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதே என் காதிலோ, சிந்தனையிலோ விழாது. இதனால், என்னைச் சுற்றி உள்ளவர்களின் "என்ன உலகம் சுற்றப் போய் விட்டாயா? கனவு காண்கிறாயா? எந்த உலகத்தில் நிற்கிறாய்? ....? " என்பது போன்றதான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது அசடு வழிவது உண்டு.

இது தொலைக்காட்சி பார்க்கும் போதும் வானொலி கேட்கும் போதும் கூட நடக்கும். கண்கள் தொலைக்காட்சியில் இருக்கும். கவனம் வேறெங்கோ நிலைத்திருக்கும்.


மறதி
செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளைக் கூட மறந்து விடுவது. மறக்கக் கூடாது என்று நினைவாகத் துண்டுப் பேப்பரில் எழுதி, கண்ணுக்குத் தெரியக் கூடிய இடத்தில் குத்தி வைத்து விட்டு துண்டை கவனத்தில் எடுத்துப் பார்க்கவே மறந்து விடுவது.

இஸ்திரிப்பெட்டியின் பிளக்கைக் களற்றினேனா, மின்சார அடுப்பை அணைத்தேனா, வீட்டுக்கதவைப் பூட்டினேனா, கார்லைற்றை நிற்பாட்டினேனா... என்றெல்லாம் அநாவசியமாகக் குழம்புவது. ஆனால் அவையெல்லாம் எந்த சிந்தனைக்கும் இடமின்றி தன்பாட்டிலே நடந்திருக்கும்.

ஞாபகசக்தி
இத்தனை மறதிகள் மத்தியில் பழசுகள் எதுவுமே மறக்காமல் இருப்பது. சின்னவயது சம்பவங்கள் அத்தனையும் மீண்டும் மீண்டுமாய் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அதையும் விட ண்கள். எனது நண்பர்கள், உறவினர்கள் சக வேலையாட்கள்.. என்று எல்லோரது தெலைபேசி எண்களுமே, அது எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லாமே எனக்கு மனப்பாடம். (இத்தனைக்கும் நான் யாருக்கும் அடிக்கடி தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுவது இல்லை) பிறந்தநாட்களும் அப்படியே. தெரிந்தவர்களின் கார் இலக்கங்கள் கூட மறப்பதில்லை.

யாராவது முன்னர் எப்போதாவது எனக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாலும், எனது தொலைபேசியில் அந்த இலக்கம் விழும் பட்சத்தில் அவர் சில வருடங்கள் கழித்து அழைப்பை மேற்கொள்ளும் போது அந்த இலக்கத்தை வைத்தே இன்னார்தான் என்று கண்டு பிடித்து விடுவேன்.

பிடிக்காதது
துப்பரவாகப் பிடிக்காத விடயம் தொலைபேசுவதும், தொலைபேசியில் அலட்டுவதும். தொலைபேசி சிணுங்கினால் ஒன்றுக்குப் பத்தாக யோசித்தே தொலைபேசியை எடுப்பேன். கதைக்கும் போது அலட்டினால் முன்னர் என்றால் பேனாவால் பக்கத்தில் உள்ள பேப்பர் எல்லாம் கிறுக்கித் தள்ளி விடுவேன். இப்போதென்றால் அவர்களுக்கு ம்... கொட்டிக் கொண்டு, கணினியின் முன் போயிருந்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இனியில்லை என்ற அவசிய தேவைகள் இன்றி அம்மா, எனது குழந்தைகள், மிஞ்சினால் எனது சகோதரர்கள் தவிர்ந்த வேறு யாருக்கும் தொலைபேசி எடுக்க மாட்டேன். இதனால் பலரது, அதாவது மிக நெருக்கமான உறவுகளின் அதிருப்திக்குக் கூட ஆளாகியிருக்கிறேன்.

தொந்தரவு
எந்த நேரமும் பாட்டுக் கேட்க வேண்டும். எந்த சீரியஸான வேலையில் இருந்தாலும் பரவாயில்லை. பாட்டு வேண்டும். ரேடியோ ஒலிக்கா விட்டால் என்னில் ஏதோ ஒன்று குறைந்து விட்டது போல உணர்வேன். சோர்வாகி விடுவேன். சின்னவயதில் படிக்கும் போது கூடப் பாட்டுப் போட்டு விட்டுத்தான் படிப்பேன். இப்போதும் படுக்கும் போதும் பாட்டு வேண்டும். இது ஆரம்பத்தில் எனது கணவரைத் தொந்தரவு செய்வதாகவே இருந்திருக்கிறது. "இதென்ன தேத்தண்ணிக் கடையே? இராப்பகலா..." என்ற அவரது கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். இப்போது என்னோடு சேர்ந்து அவரும் பழகி விட்டார்.

தவிர்க்க முடியாத இன்னும் சில
#கவலையோ, சந்தோசமோ எதுவாயினும் டயறி போல எழுதித் தள்ளி விடுவது.
#எங்கு போனாலும் புத்தகங்கள் வாங்குவது.
#ஒரே நேரத்தில் பல புத்தகங்களை வாசிக்கத் தொடங்கி விடுவது.
#எதைக் கொடுத்தாலும் புத்தகங்களை இரவல் கொடுக்க மனம் சம்மதிக்காதது.
#உடுப்பு அலுமாரியில் ஒரு உடுப்பின் மடிப்பு சற்றுக் கலைந்திருந்தாலும், மீண்டும் மீண்டுமாய் அதை எடுத்து மடித்து வைப்பது.
#தொலைக்காட்சியின் முன் 15 நிமிடங்களுக்கு மேல் விழித்திருக்க முடியாமல் நித்திரையாகி விடுவது.
#யாருடையதாவது வீட்டுக்கு விருந்தினராகச் சென்று விட்டு, அவர்களின் வரவேற்பறையில் மணிக்கணக்கில் இருந்து கதைப்பதை எந்த வகையிலும் ரசிக்க முடியாமல் நித்திரை தூங்கி விடுவது.

கவலையானது
தனிமையிலோ அன்றிப் பலர் நடுவிலோ எப்போதும் மனதுக்குள் ஏதாவது நல்ல கதைகள், கவிதைகள் என்று புனைந்த படியே இருந்து விட்டு, வீட்டுக்கு வந்த பின் அதை எழுத நினைக்கும் போது எழுத முடியாமல் அந்தப் புனைவுகள் கலைந்து போய் விடுவது.

அந்தந்த நேர உணர்வுகளின் எழுச்சியில், மனதின் ஆழத்திலிருந்து எழும் விடயங்களை அழகாக எழுதத் தொடங்கி, சில பக்கங்களை நிரப்பி விட்டு, அவைகளை முடிக்க முடியாமலே விட்டு விடுவது.

ரசனை
தெளிந்த நீரோடை, நீலவானம், பனிப்போர்வை, வண்ணப்பூக்கள்.. அழகிய குழந்தைகள்... எதைக் கண்டாலும் அவைகளின் அழகில் மனம் சொக்கி அப்படியே லயித்து நடுரோட்டில் கூட நின்று விடுவது.

செல்லி என்னை அழைத்ததால் WEIRD என்ற பதத்தின் சரியான பொருள் விளங்காமலே இதை எழுதினேன். மிக அதிகமாகவே எழுதி விட்டேன் போலிருக்கிறது. செல்லி ஏன் அழைத்தேன் என்று தலையிலே கை வைக்காது விட்டால் சரி.

சந்திரவதனா
ஜேர்மனி
2.4.2007

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite