
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், கனடா ரொறொன்ரோ பல்கலைகழக தென்னாசியவியல் ஆய்வு மையமும் இணைந்தே இந்த விருதுக்குரியவர்ளை தெரிவு செய்கிறார்கள.தமிழ்மொழி கலை இலக்கியம் சார்ந்து பணியாற்றுபவர்களின் வாழ்நாள் சாதனையை கெளரவிக்கும் வகையிலேயே இவ்விருது 2001ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகின்றது.
இவ்வகையில் முறையே தமிழின் முக்கிய படைப்பாளியான சுந்தர ராமசாமி (2001), பல வேற்றுமொழி படைப்புகளை தமிழுக்கு மொழிபெயர்த்த ஈழத்தை சோந்த கே.கணேஷ்(2002), தமிழ் இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன்(2003) ஈழத்து நூல்களை தமிழ்ப்பரப்புக்கு அறிமுகம் செய்த பதிப்பாசிரியரான இ.பத்மநாபஐயர்(2004) அமெரிக்க பல்கலைககழக தமிழ்ப் பேராசிரியரான ஜோர்ஜ் ஹார்ட் (2005) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்சியாக நாடகரும் ஊடகருமான ஏ.சி.தார்சீசியஸ் தெரிவாகி இருக்கிறார்.விருது வழங்கும் விழா எதிர்வரும் யூன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக் கழக வளாகத்தில் வழமைபோல் நடைபெற உள்ளது.
இயல் விருதுக்கு ஏ.சி.தார்சீசியஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான தமிழ் இலக்கிய தோட்டத்தின் அறிவிப்பில்,'மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது. ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.
அவருடைய பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் வெகுவாகப் பாராட்டப் பெற்றவை. லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார்.
ஸ்விற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது' என விதந்துரைத்துள்ளது.
இவ்விருது கிடைத்தமை குறித்து திரு ஏ.சி. தார்சீசியஸிடம் கேட்ட போது ' நான் எதிர்பாராதது. தமிழ் இலக்கிய முன்னோடிகளுக்கும் ஆளுமைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த விருதுக்கு நானும் தெரிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. தாயகங்களுக்கு வெளியே இப்படியான இயல்பீடம் அமைத்து கெளரவிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. புலப்பெயர்வால் வேர்களை இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் என் போன்றவனுக்கு இது உற்சாகத்தை தருகின்றது.' எனத் தெரிவித்தார்.
தாசீசியஸ் அவர்கள் இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி வானொலியை நிறுவியவர் என்பதும், பிரான்சில் இருந்து ஒளிபரப்பாகும் ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றியவர் என்பதும், தமிழ் நாடகத்திற்கான கட்டியம் என்னும் ஆய்விதழ் ஒன்றை திரு அன்ரன் பொன்ராசா, திரு.வீ.அரசு ஆகியோருடன் இணைந்து வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: புதினம்