Friday, October 17, 2008

நூல் வெளியீடு - குரு அரவிந்தனின்


நூல் வெளியீட்டு, அறிமுக விழா
நூலாசிரியர்: குரு அரவிந்தன்


நூல் விபரம்:
(1) நின்னையே நிழல் என்று ... சிறுகதைத் தொகுப்பு
(2) எங்கே அந்த வெண்ணிலா - நாவல்
(3) உன்னருகே நானிருந்தால் நாவல்
(4) தமிழ் ஆரம் - பயிற்சி மலர் -3 சிறுவர் பாடநூல்

இடம்: மல்வேன் நூல் நிலைய மண்டபம் - (ஸ்காபரோ)
Malvern Library Hall
30 Sewells Road, Scarborough. Canada. M1B 3G 5

காலம்: 26 - 10 - 2008 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 5:30

தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நூல் வெளியீட்டுக் குழுவினர்.

Book Release – Venue & Date
Kuru Aravinthan, Writer is releasing four books on 26th October 2008 Sunday 5.30 p.m
Location: Malvern Library Hall
30 Sewells Road, Scarborough.
Canada. M1B 3G 5


அணிந்துரை

குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று..

தேசத்தின் விடுதலைக்காய் தேய்கின்ற மக்களுக்கும்
நாசத்தால் வீடிழந்த நாடிழந்த மக்களுக்கும்.
பாசத்தால் தினம் தினம் விம்முகின்ற எம்மவர்க்கும் - அவர்
சோகத்தை தீர்க்க நீர் நாலுவரி எழுதிவைத்தால்
நாடே உமை வாழ்த்தும். நானும்
வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
வண்ணை தெய்வம் பிரான்ஸ்.


பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன்
ரொரன்ரோ பல்கலைக்கழகம், ரொரன்ரோ, கனடா

(சமகால ஈழத்தமிழ் அரசியல், சமூகவியல், வாழ்வியல், பொருளியல், அறிவியல் போன்ற பலதுறைகளையும் வருடி வருகின்ற குரு அரவிந்தனின் இக்கதைகள் எமது சமூகத்தின் பலத்தையும், பலவீனங்களையும் இனம் காட்டுவதன் ஊடாக தமிழ்ச் சமூகத்தின் வருங்கால வளர்ச்சிக்குத் திசைகாட்டும் கருவியாகவும் அமைகின்றன. இம்மாதம் (26-10-2008) ரொரன்ரோவில் வெளிவர இருக்கும் குரு அரவிந்தனின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய, பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாசன் அவர்களின் அறிமுகவுரையிலிருந்து) நவீன இலக்கியத்தின் வளர்ச்சியும், வளமும், வடிவங்களும் சமுதாயத்தின் பன்மை நிலைப்பட்ட சமூகத் தொடர்பாளர்களின் இயக்க நிலைகளினாலேயே உந்தப் படுகின்றன. இக்கருத்து பொதுவாக உலகப்பெருமொழிகள் அனைத்தினதும் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கும் ஏற்புடையதாகும். இந்தியாவில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலத்தில் புகுத்தப்பட்ட கல்வி முறைகளினதும், கருத்து நிலைகளினதும், கிறிஸ்தவமத பரப்புதல் சார்ந்த அணுகுமுறைகளினதும் அறாத்தொடர்ச்சியான விளைவுகளின் வழியாகவே தமிழ் இலக்கியத்தில் உரை நடை, சிறுகதை, நாவல் போன்ற நவீன இலக்கிய வடிவங்கள் வேரூன்றி வளர ஆரம்பித்தன.

கவிதைச் செழுமையிலும் காப்பிய வரம்பினுள்ளும் கட்டுட்பட்டிருந்த தமிழ் இலக்கியப் புலமையினை இந்த நவீன இலக்கிய வடிவங்கள் நெகிழ்ச்சியுறச் செய்தன. நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கிறிஸ்தவமத பரப்புரையாளர்களும், பணியாளர்களும் கணிசமான செல்வாக்கினைச் செலுத்தி வந்துள்ளனர். ஐரோப்பிய அரசுகளின் துணையோடு தென்னாசிய நிலப்பரப்பை வந்தடைந்த கிறிஸ்தவம் அதன் மறைப் பரப்புதல் தேவைகளை முன்னெடுப்பதற்கென தொடங்கி வைத்த மொழி பண்பாட்டுத் தொடர்புகள், ஆய்வுகள், உள்ளிணைவுகள், புலமைசார் உறவாடல்கள் ஆகியவற்றின் விளைவாகவே தமிழ் மொழிப் படைப்பிலக்கியத்தின் நவீன வரலாற்றில் பல புதிய இலக்கிய வடிவங்கள் பரிணமித்து மேம்பாடு பெற ஆரம்பித்தன.

ஐரோப்பிய இலக்கியத்தில் 17ம், 18ம் நூற்றாண்டுகளில் முனைப்பு அடையத் தொடங்கிய உரை நடை, இலக்கிய மரபு அதன் கால வளர்ச்சியில் இலக்கியத்தை சமுதாயத்தின் நுகர் பொருட்களில் ஒன்றாகச் சந்தைப் படுத்தியதென்பது வரலாறுதரும் செய்தி;. 19ம், மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் விரைவாகவும், விரிவாகவும் தமிழிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை போன்றவை பரந்தும் உயர்ந்தும் வளர்வதற்கு அதே காலத்தில் துரித வளர்ச்சியுற்ற அச்சு வாகனத் தொழில்நுட்ப முறைகளும் உந்து சக்தியாக அமைந்தன. ஆங்கிலக் கல்வி அமைப்பின் விளைவாக தமிழ்ச்சமுதாயத்தில் ஓர் புதிய குழுமமாகத் தோன்றிய மத்திய வர்க்கத்தினராலேயே முதலில் இவ்விலக்கியப் படைப்புகள் ஆக்கப்பெற்றன. இப் படைப்பிலக்கியங்களின் கதைப்பொருளாக அவர்களது வாழ்வுப் பிரச்சினைகளே முன்கொணரப்பட்டன. இவற்றை விலைகொடுத்து வாங்கிய வாசகர் வட்டமும் அந்த வர்க்கத்தை சார்ந்தவர்களே. தமிழில் எழுந்த முதல் நாவலும் அதைத்தொடந்து வெளிவந்த படைப்புகளும் இதற்கு சான்றாதாரமாகும்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் அலுவலக அருஞ்சுவடிக் காப்பாளராகப் பணி புரிந்த தேவநாயகம்பிள்ளையும், 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழ் நாவல் இலக்கியத்திற்குப் பாதை அமைத்துக் கொடுத்த மாதவையரும் (1872- 1925) அவரது சமகாலத்தவரான நெய்யூர் அருமைநாயகமும் (1858 -1914) மத்திய வகுப்பினரின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பின்புலமாகவைத்துத்; தமது நாவல்களை எழுதினார்கள். நாவல் இலக்கியத்தைக்; தமிழ் உலகிற்கு முதன் முதலில் ஆக்கித்தந்த இவர்கள் ஆங்கிலேய அரசின் கல்வியமைப்பின் கனிகள் மட்டுமல்ல, அதே அரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பார்த்தவர்கள். இதனை அறியும்போது இவர்களது கதைகளின் களம் இன்னும் துலக்கமடைகின்றது. அதாவது தாம் சார்ந்திருந்த மத்திய வர்க்கத்தினரின் சமய சமூகப் பிரச்சினகளையும் கிறிஸ்தவ சமயப் பிரச்சாரத்தினாலும் அதை ஒட்டி எழுந்த சமயமாற்றம் கலப்புத் திருமணப் பண்பாட்டு முரண்பாடு மேற்கத்தேய நாகரிக நாட்டம், போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டே இவர்கள் நாவல்களை எழுதினார்கள்.

மேற்கத்திய நாகரிகத்தின் சில கூறுகளை ஏற்று அதன் வழியாகத் தமிழ்ப் பண்பாட்டினை வளமாக்கலாம் என்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நாளடைவில சீராய்விடும் என்றும் எண்ணிய இவர்கள் சமுதாயத்தின் அடி மட்டத்தில் வாழ்கின்றவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையறிந்து அதை மாற்ற வழிதேடினார்களோ என்பது கேள்விக்குரியதே. தமது காலத்தை ஓரளவேனும் கடந்த நிலையில் எழுதிய இவர்களின் கதைகளில் காலத்திற்கும் சமூக மரபுகளுக்கும் கட்டுண்டு கதைபுனைந்த இரண்டக நிலையையும் காணமுடிகிறது.

இவை தவிர, ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி, தொழினுட்ப மாற்றங்கள் நாவல் இலக்கியம் முன்னேறி வளர முக்கிய காரணிகளாக அமைந்தன. கையெழுத்துப் பிரதியைப் பல பிரதியாக்கம் செய்யும் அச்சியந்திரங்களும், பாடசாலைக் கல்வியினை அடியொற்றி நூல்களை வாசித்து அறிவைப் பெருக்குவதற்கான தேடலும், ஆர்வமும் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு நல்லதொரு சூழலைப் பிறப்பித்தன என்று 21ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தத்தில் ஆக்க இலக்கியத்தின் அத்தனை வடிவங்களும் முற்றிலும புதிய கருத்து வளங்களுடனும், களவெளிகளுடனும் படர்ந்து விரிதல் கண்கூடு.

நாவல் போன்ற இலக்கியபடைப்புகளின் இயங்குதளம் என்பது நாள்தோறும் நாம் நடமாடும் நனவுலகமாகும். ஓரு கதையின் யதார்த்தப் பாங்குகளும், பண்புகளுமே அக் கதைக்கு உரைகல் ஆகின்றன. தனி மனிதர்கள், குழுமங்கள், குடும்பங்கள், சமூகத்தின் பல்வேறு கட்டமைவுகளில் வாழுகின்றவர்கள் சந்திக்கின்ற சமர் புரிகின்ற பிரச்சனைகளையும் அவற்றை மாற்றவும,; அன்றேல் அவற்றினின்று விடுபட்டு புதிய சூழலை உருவாக்கவும் எழுகின்ற உணர்வலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிக்கின்ற வண்ணமே நாவல்களும் சிறுகதைகளும், நெய்யப்படுகின்றன.

கதையின் பாதைகளையும், நெறிகளையும், இயங்கு தளத்தையும் அக்கதைகளின் பாத்திரங்களும் அவர்களுக்கு ஏற்படும் சவால்களும,; இன்னல்களும், சந்தப்பங்களுமே நகர்த்திச் செல்லுகின்றன. இத்தகைய பாத்திரங்களுக்கு நாளாந்த வாழ்வில் ஏற்படும் இரண்டக நிலைகளும், இரு கிளைப்பாடுகளும், விளுமிய முரண்பாடுகளும், குடும்ப, சாதி,சமய, சமூக உணர்வலைகளும், தனிப்பட்ட மனப்போராட்டங்களும், விரக்திகளும், வேதனைகளும், வெற்றிகளுமே, கதையின் நிகழ் தளத்திற்கு வலுவும், வளமும் சேர்க்கின்றன. தமிழ் ஈழத்தைக் தளமாகக் கொண்டு எழுதப்படும் இலக்கியப் படைப்புகளும் தமிழ் ஈழத்தவரால் எழுதப்படுபவையும் தனித்துவமான இலக்கிய பண்பைக் கொண்டிருப்பதற்கு வேறு காரணிகளும்; உண்டு.

20ம் நூற்றாண்டின் கடைசிக் காலத்திலிருந்து தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுத் தளம், மொழித் தளம், குடும்ப சமூக உறவு, சமய பண்பாட்டுத்தளம் என்பன சிதைவுறத் தொடங்கின. அரசியல் சார்ந்த அசைவியக்கங்களே இதற்கு அடிப்படைக் காரணிகளாய் அமைந்தன. இதனால் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுப் பரப்பின்மீது முன் ஒருபோதுமில்லாத புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழலைப் பிறப்பித்தன. இவை யாவுமே தமிழ், இலக்கிய உலகில் பல புதிய எண்ணக்கருக்களைத் தோற்றுவித்தன. பேரிடர்கள், பேரழிவுகள் இடைவிடாத இடப்பெயர்வுகள், குடிபெயர்வுகள், புலப்பெயர்வுகள் போன்றவை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஈழத்தமிழ்க் கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் போன்றவற்றில் பிரதிபலிக்கப்படுவது வெறும் தற்செயல் நிகழ்வன்று, எனவேதான் குரு அரவிந்தனின் நின்னையே நிழல் என்று... என்ற இச் சிறுகதைத் தொகுதியில் கதைகளின் களம் தமிழீழம், இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி என்று பூகோள அளவிலே பரந்தும் விரிந்தும் செல்வதனைக் காண்கின்றோம்.

தமிழ் தேசிய எழுச்சியினதும் விடுதலைப்போராட்டத்தினதும் பாரிய பக்கவிளைவாக மேற்கத்தேய மற்றும் அமெரிக்கா, கனடா, போன்ற நாடுகளின் பெருநகர்களில் பல்லாயிரக்கணக்கில் ஈழத்தமிழர் 1980களிலிருந்து குடிபுகுந்து வாழ்கின்றனர். இப்புதிய வாழ்வுச்சூழலில் ஏற்படும் சமூக, குடும்ப, பொருளாதார, மற்றும் அரசியல் சவால்களுக்கு துணிவுடனும் தெளிவுடனும் முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு இவர்கள் உந்தப்படுகின்றனர். பல்வேறுபட்ட விழுமிய முரண்பாடுகளையும், மரபு மாற்றங்களையும் எதிர் கொள்ளும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். ஏனவே இப்பின்புலத்தில் ஆக்கப்படும் இலக்கிய வடிவங்களில் இந்தவாழ்வுச்சூழல் இயல்பாக வந்தமைகின்றது.

பல்வேறு பண்பாடுகள், பல் இனமக்கள், பல்வேறுமொழிகள், பூகோள இயற்கையின் தட்ப, வெட்பதாக்கங்கள், உறவுப்பிரிவுகளின் இன்னல்கள், கருத்து முரண்பாடுகள் சமூக நியதிகளை மறுப்பவர்கள், ஒரு மனிதனுக்குள் வாழும் பலமனிதக்கூறுகள், சிதைந்து கருகிய உள்மனங்கள், அடி மனங்களில் படர்ந்திருக்கும் துயரங்கள், தனிமையின் மனஏக்கங்கள், அழுத்தங்கள் இவை போன்ற எண்ணற்ற வாழ்க்கைச் சிக்கல்களையும், உள்மனத்தின் இயக்கநிலைப்பட்ட உணர்வு மோதல்களையும் இடையறாது அடிமனதில் நினைவூட்டிக் கொண்டிருக்கும் ஒர் உணர்வுச்சித்திரமே உயிருள்ள இலக்கியப்படைப்;பாக நிலைக்கின்றது. குரு அரவிந்தனின் உயிருள்ள இலக்கியப்படைப்பான இச் சிறுகதைகளுக்கு இது சாலப்பொருந்தும.;

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது பண்ணாட்டு வாழ்வுப் பிண்ணனியில் ஏற்படும் முரண்பாடுகளையும் தனிமனித, சமூக, குடும்ப சிக்கல்களையும் உள்மாற்றங்கள், மனமாற்றங்கள், சமூக மாற்றங்கள் போன்றவற்றை இதய சுத்தியோடு உள்வாங்க வேண்டும் என்ற தரிசன வீச்சுடனும் கதாசிரியரான குரு அரவிந்தன் தமது கதைகளை இங்கு நெய்திருக்கின்றார். இந்த ஆதங்கம் ஆசிரியரின் எழுத்துக்களில்பட்டுத் தெறித்து பரந்து ஒளி வீசுவதை அவரது கதைகளின் கருவிலும் கற்பனையிலும் காணக்கூடியதாக உள்ளது. 21ம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் சாய்வடுத்தகு தளநிலைகளை உயிர் ஊட்டத்துடன் அவர் படம்பிடித்துக் காட்டுகின்றார். முக்கியமாக இன்றைய தமிழ் சமூகத்தின் வரலாற்றுச் சிக்கல்களை ஒருவகையிலே தமது கதைகளிலே இக்கதாசிரியர் ஆவணப்படுத்துகின்றார். சிறந்த படைப்பாளியான குரு அரவிந்தன் அவர்களை இதற்காக நாம் மனம் திறந்து பாராட்டவேண்டும்.

சமகால ஈழத்தமிழ் அரசியல், சமூகவியல், வாழ்வியல், பொருளியல், அறிவியல் போன்ற பலதுறைகளையும் வருடி வருகின்ற குரு அரவிந்தனின் இக்கதைகள் எமது சமூகத்தின் பலத்தையும், பலவீனங்களையும் இனம் காட்டுவதன் ஊடாக தமிழச்சமூகத்தின் வருங்கால வளர்ச்சிக்குத் திசைகாட்டும் கருவியாகவும் அமைகின்றன. திரு. குரு அரவிந்தன் அவர்கள் மேலும் பல ஆக்கப் படைப்புக்களை வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றோம்.

பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன். ரொரன்ரோ, கனடா.


சிறுகதை - 1
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
(குரு அரவிந்தன் - கனடா. நன்றி – கல்கி)


இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.

'அன்புள்ள அப்பா'
பதினைந்து வயது நிரம்பிய மகள் திவ்யாவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. ஆர்வத்துடன் தொடர்ந்து வாசித்தார்.

'அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு 'அப்பா' என்று என்னால் அழைக்க முடியுமோ தெரியாது. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் டி.என்.ஏ ரிப்போர்ட் உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்.
(more)

சிறுகதை - 2
புல்லுக்கு இறைத்த நீர்..!
(குரு அரவிந்தன் - கனடா – நன்றி : ஆனந்தவிகடன்)

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது.

எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.

'இத்தனை வருடங்களுக்குப் பின்னும் என்னுடைய பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறீங்களே, எப்படி சார்..?' என்று வேறுசிலர் ஆச்சரியப்படுவதும் உண்டு. (more)

சிறுகதை - 3
சுமை
(குரு அரவிந்தன் - கனடா)
(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக் கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.

'எழுந்திருடா' பூட்ஸ் கால் ஒன்று விலாவில் பட்டுத் தெறித்தது.

துடித்துப் பதைத்துக் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சி செய்தான். 'சுள்' என்று முழங்கால் மூட்டு வலித்தது. அடிக்கு மேல் அடிவாங்கிய அந்த உடம்பிற்கு, எங்கே வலிக்கிறது என்பதைக்கூட உணர முடியாமல் இருந்தது. வீங்கிப்போன கால்கள் எழுந்து நிற்கமுடியாமல் துவண்டு சரிந்தன. வந்தது யாராய் இருக்கும் என்று ஊகித்ததில் நிமிர்ந்து பார்க்கவே பயமாக இருந்தது.
'வெளியே வாடா நா..!' தொண்டை கிழிய அவன் கூச்சல் போட்டபோது அவனது குரலை இவனால் இனம் காணமுடிந்தது. அவனது கண்களில் இவன் படும் போதெல்லாம் இப்படித்தான் கொச்சைத் தமிழில் கூச்சல் போட்டுக் கத்துவான். ஒரு போதும் அவனது வாயிலிருந்து நல்ல சொற்கள் உதிர்ந்ததை இவன் கேட்டதில்லை.
(more)

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite