தபால்கள் கொணர்ந்து தருவதாலேயே தபாற்காரன் மேல் நட்பாயிருந்த எனக்கு அன்று ஏன்தான் தபாற்காரன் வந்தானோ என்றிருந்தது. விடுமுறையும் அதுவுமாய்.. பிள்ளைகளும் வீட்டில் நிற்கும் நேரம் பார்த்து... அந்தக் கடிதம் வந்ததில், இருந்த சந்தோசமெல்லாம் வடிந்து போயிற்று.
பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் நானும் வேலைக்கு விடுப்பு எடுத்து வீட்டில் நிற்பது வழக்கம். முதல் மாதமும் ஏதோ காரணத்துக்காக நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை. விடுப்பு எடுத்து வீட்டில் நின்றேன். அப்படியான விடுமுறை நாட்களில் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளிலும் நானும் பங்கு பற்றி விளையாடுவேன்.
அவர்கள் சிறுவர்களாயிருந்த போது லூடோ, கரம்... போன்ற விளையாட்டுக்கள். கொஞ்சம் வளர மொனோபோலி (Monopoly). இன்னும் கொஞ்சம் வளர ஹேம்போய் (Gameboy), நின்ரெண்டோ (Nintendo) என்று அவர்களின் ஆர்வத்துக்கும், காலத்திற்கும் ஏற்ப விளையாட்டுக்களும் மாறும். அப்போது தொண்ணூறின் ஆரம்ப காலகட்டம். எங்கள் வீட்டுக்குள்ளும் கணினி நுழைந்து பிள்ளைகளின் விளையாட்டுக்கள் மெதுமெதுவாக இணையத்துக்கு மாறிக்கொண்டிருந்தன. சாப்பாட்டைக் கூட மறந்து உலகம் முழுவதும் ´சட்´ செய்வதும், மின்னஞ்சல் அனுப்புவதுமே எனது கடைசி மகனின் வேலையாக இருந்தது.
அன்றும் அப்படித்தான் மேசையில் சாப்பாட்டை வைத்து விட்டு "வா. வந்து சாப்பிடு" என்று பல தடவைகள் கூப்பிட்டுப் பார்ததேன். அவன் வருவதாயில்லை. ஒருவித சலிப்புடனான எரிச்சல் மனதில் தோன்ற கணினி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். "அம்மா பிற்ற (Please) இன்னும் கொஞ்ச நேரம். வெரி இன்ரெஸ்ரிங் (very interresting)” என்று மூன்று பாஷைகள் கலந்து அவன் கெஞ்சினான்.
கணினித் திரையைப் பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறையப் பேருடன் ´சட்´ செய்து கொண்டிருந்தான். அடிக்கடி WWW... என்று அழுத்தினான். மின்னஞ்சலும் அனுப்பிக் கொண்டிருந்தான். இருபது வயதுப் பெண்ணொருத்திக்கு தனது பதினைந்து வயதை இருபத்தியொரு வயது என எழுதினான். அவள் உடனே ´ஐ லவ் யூ´ என்று எழுதினாள். ஒரு ஆணுக்கு தான் ஒரு பெண் என்றும் வயது பதினேழு என்றும் எழுதினான்.
அவன் அப்படி அமெரிக்கா, நியூசிலாந்து... என்று உலகமெல்லாம் பொய்யும், புரட்டும் காதலுமாய்... சட்டன் செய்து கொண்டிருந்தது எனக்குச் சிரிப்பைத் தந்தது. சுவாரஸ்யமாகக் கூட இருந்தது.
இருந்தாலும் "இப்ப வா. வந்து சாப்பிடு" என்றேன்.
இப்போது அவன் கணினித் திரையில் "அம்மா கத்துகிறா. சாப்பிட்டு விட்டு அரைமணியில் வருகிறேன்" என்று எழுதி எல்லோருக்கும் அனுப்பி விட்டுச் சாப்பிட வந்தான்.
பரீட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்த மூத்தவனையும் ஒருவாறு இழுத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினேன். கதைகள் எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் கடைசியில் இன்ரநெற்றிலேயே வந்து சங்கமித்தன.
"நீ இப்பிடி நாள் முழுக்க ´சட்´ செய்து கொண்டிருந்தால் ரெலிபோன் பில் எக்கச்சக்கமா வந்திடும். அது போக உன்ரை கண்ணுக்கும் கூடாது. தெரியுமே" அவனைக் கண்டித்தேன்.
"என்னம்மா, எப்பவும் இப்பிடிச் செய்யப் போறனே? பள்ளிக்கூடம் தொடங்கினால் நேரம் எங்கை இருக்கப் போகுது? அது போக உங்களுக்கு ஞாபகமில்லையே? போன கிழமை போஸ்ரிலை ஒரு CD வந்ததில்லோ! இல்லையில்லை இரண்டு CD. அது AOL என்ற கொம்பனியிலை இருந்துதான் வந்தது. அந்த ஒவ்வொரு சீடீயிலையும் காசில்லாமல் இன்ரநெற்றுக்குப் போய் வர இருபந்தைஞ்சு, இருபத்தைஞ்சு மணித்தியாலங்கள் இருக்குது."
சாப்பிட்டு முடிந்ததும் அந்ந CD க்களை வாங்கி ஒரு முறை வாசித்துப் பார்த்து அது இலவச இன்ரநெற் நுழைவுக்குத்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். அவன் மீண்டும் கணினி அறைக்குள் நுழைந்து கணினிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டான்.
தொடரும் வீட்டு வேலைகளின் மத்தியில் எனது மனதுக்குள் ஒரு ஆசை பிறந்தது. தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாயிருந்த, எந்தத் தொலைபேசி அட்டைகளும் அவ்வளவாக அறிமுகப் படுத்தப் படாத அந்தக் காலகட்டத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மகளுடன் தொலைபேசியில் நிறையப் பேச முடிவதில்லை. ´அவளுடன் ´சட்´ செய்தால் என்ன..?´ என்ற ஆசைதான் அது.
மகனிடமும் எனது ஆசையைச் சொல்லி அந்த 50 மணித்தியாலங்களில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களையாவது எனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவன் கணினியை எனக்காக விட்டுத் தரும்வரை அவனோடு சேர்ந்து நானும் இன்ரநெட் நண்பர்களுடன் அரட்டை அடித்தேன்.
மாலை கணவர் வேலையால் வர அவரைக் கவனித்து விட்டு கணினி முன் போயிருந்து நியூசிலாந்திலிருக்கும் மகளுடன் ´சட்´ செய்யத் தொடங்கனேன். ஓசிதானே என்ற நினைப்பில் உப்புச் சப்பற்ற விடயங்களெல்லாம் எழுதினோம்.
இடையில் எனது கணவர் வந்து ரெலிபோன் பில் பற்றி எச்சரித்த போது அவசரமாய் "அது ஓசி. காசெண்டால் நான் இப்பிடிச் செய்வனே?" என்றேன். எனது புத்திசாலித்தனத்தின் மீது எனது கணவருக்கு நல்ல நம்பிக்கை. மறு பேச்சின்றிப் போய் விட்டார். அன்று இரவு சிவராத்திரிதான். மூத்தவன், கடைசிமகன், நான் என்று மாறி மாறி கீபோர்ட்டைத் தட்டினோம்.
கணவர் இடையிடையே எழும்பி வந்து "என்னப்பா இரவிரவாச் செய்யிறியள். லைற்றையும் போட்டு வைச்சுக் கொண்டு... மனிசரை நித்திரை கொள்ளவும் விடமாட்டியள்" என்று அதிருப்திப் பட்டுக் கொண்டார்.
இன்றும் அப்படியொரு விடுமுறை நாள் தான். ´பிள்ளைகளோடு வெளியில் போகலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா´ என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தபாற்காரன் அதைக் கொண்டு வந்திருந்தான். எனக்கு அதிர்ச்சிதான். ஆயிரம் மார்க்கைத் தாண்டிய ரெலிபோன் பில்லைத் தன்னோடு காவி வந்த அக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு யோசித்தேன். ´ஊருக்கு அம்மாவுக்கும் போன் பண்ணேல்லை. நியூசிலாந்துக்கு மகளுக்கும் போன் பண்ணேல்லை. எப்பிடி இவ்வளவு பெரிசா வந்திருக்கும்..?´ பில்லை மீண்டுமாகச் சரி பார்த்தேன். உள்ளுர் தொடர்புக்குத்தான் 8860யூனிற்றுகள் என்று போடப்பட்டு கணக்கும் போடப் பட்டிருந்தது. ´என்னவாயிருக்கும்.? மிகவும் மலைப்பாக இருந்தது.
இதற்குள் எனது கணவர் பில்லைப் பார்த்துவிட்டு கத்தத் தொடங்கி விட்டார். "மனுசர் கஸ்டப் பட்டு வேலை செய்யிறது உங்களுக்கெங்கை தெரியப் போகுது. நான் வேலைக்குப் போக நீங்கள் வீட்டிலை இருந்து ஊர் ஊரா ரெலிபோன் பண்ணியிருக்கிறியள்"
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ´ஒவ்வொரு சதத்தையும் எவ்வளவு கவனமாகச் செலவு செய்வேன். எப்படி, இப்படியொரு பில் வந்திருக்கும்?´ மிகவும் குழப்பமும், கவலையும் என்னை ஆட்கொள்ள தொலைத்தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு "ஏன், இப்படி ஒரு தவறான கணக்கை அனுப்பியிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர்களும் மிகவும் சங்கடப்பட்டு, மன்னிப்புக் கேட்டு "பொறுங்கள்..! இரண்டு நாட்களில் பதில் தருகிறோம்' என்றார்கள். கடைசியில் தொலைபேசியை வைக்கும் போதுதான் எனக்கு AOL கொம்பனியின் ஞாபகம் வந்தது. உடனேயே அந்த சீடியை வைத்து ´சட்´ செய்தது பற்றிச் சொன்னேன்.
அப்போதுதான் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து பேசிக் கொண்டிருந்தவர் உயிர் பெற்றவர் போல உற்சாகமாக "AOL இனூடான இன்ரநெற் நுழைவு இலவசம் என்றாலும் ஜேர்மனியின் இந்த அந்தத்திலுள்ள உங்கள் நகரத்திலிருந்து மறு அந்தத்தில் இருக்கும் AOL Company உள்ள நகரத்துக்கான இணைப்பு இலவசமில்லையே" என்றார்.
சந்திரவதனா
ஜேர்மனிபிரசுரம் -
யுகமாயினி ஜனவரி 2009