Wednesday, December 22, 2004

பர்தா

1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்கு ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

அவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம்! இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. "ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்" என்ற ஆதங்கம் தோன்றியது.

அவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.
"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா?" என்று கேட்டேன்.

அவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது
"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்" என்றாள்.

இது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா? இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.

பின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொண்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.

இன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...?

உஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை? என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.

அதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.

இது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.

எந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் "செய்" என்றோ "செய்யாதே" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.

உஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை? இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா? என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)

மற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.

ஏன் எழுதக் கூடாது? என்பது எனது கேள்வியாகிறது.

அங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.
நான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்
உஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்
.

Wednesday, December 15, 2004

இன்று முகுந்தின் திருமணம்


எனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

நானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன். இந்த அவசரத்துள் கணினிப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் எதையும் உருப்படியாகப் பதிக்க முடியவில்லை.

நிறைய விடயங்கள் எழுத உள்ளன. நிறையப்பேரின் மின்னஞ்சல்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பின்னூட்டம் என்பது ஒன்று கிடைத்தாலே பெரிய விடயம். அவைகளுக்குக் கூட பதில் எழுதவில்லை.

இன்று முகுந்தின் திருமணம். இந்த அவசரத்திலும் முகுந் சரஸ்வதி தம்பதியினரை வாழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

http://mugunth.tamilblogs.com/files/Invitation_English.jpg

Thursday, December 09, 2004

KG பேனா

அப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்களில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.

Ciel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.

Ciel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா "KG பேனை நல்லது" என்று.

KG பேனையின் விலை 6 ரூபா. Ciel என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ்ரீச்சரின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.

பின்னொருநாள் ரீச்சர் KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்குப் பிடித்திருந்தது. வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.

எனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேரூந்திலோ, துவிச்சக்கர வண்டியிலோ வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்குள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் சாமான்களும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.

அப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொல்லி வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் சொன்னேன். அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.

அப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கிச் சைக்கிளை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்த சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக உள்ளதோ அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் அவ்வளவாக இல்லை.

அப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கழுத்துப் பகுதியோடு சேர்ந்த ரீயுப்பை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கழுத்தைக் கழற்றி விட்டு இன்னொரு ரியூப்பால் மையை உறிஞ்சி கீழ் உடம்பினுள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.

எனக்கு சந்தோசமும் பெருமையும். அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ரீச்சர் எனது பேனையையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டியது எனக்கு இன்னும் அதிகப் படியான பெருமையைச் சேர்த்தது.

எனக்குப் பேனா கிடைத்து மூன்று நாளுக்குள் நான் நிறையவே எழுதி விட்டேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.

மூன்றாம் நாள் ஸ்போர்ட்ஸ் வகுப்பு. புத்தகங்கள் கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு விளையாட்டு மைதானம் வரை சென்று 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனையைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள். விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு தண்ணீர் விடாய்க்குது என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.

என் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் சைக்கிளை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார் என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கு அந்தப் பேனா தொலைந்த விடயம் இன்றைவரைக்கும் தெரியாது. இனித் தெரியவும் மாட்டாது. ஆனால் இந்த நிகழ்வு எனக்குள் அவ்வப்போது தோன்றி நான் கேட்டதும் களைப்பையும் பொருட்படுத்தாது, என்னையும் அழைத்துச் சென்று, பேனா வாங்கித் தந்த அப்பாவின் அன்பை நினைக்க வைத்து ஒருவித நெகிழ்வை ஏற்படுத்தும்.

Tuesday, December 07, 2004

முல்லை நானில்லை.


முல்லை எனக்கு வேண்டியவர். அவரது படைப்புக்களை நான் ரசிப்பேன்.
அதனால் அவரது படைப்புக்களில் சிலதை திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் முல்லை நானில்லை.

Friday, December 03, 2004

சாதனை


ஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.

இன்றைய திண்ணையில் நேசகுமார் சக இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அச்சமும் அதனாலான வேண்டுகோளும் நியாயமானதுதான். சில புல்லுருவிகளால் ஒட்டுமொத்த சாமியார்களையும், துறவிகளையும் நாம் தப்பாக எடை போட்டு விடக் கூடாதுதான்.

ஆனால் புல்லுருவிகளை இனங்காண்பது எப்படி?
அதற்கிடையில் அவர்களிடம் ஏமாந்து போபவர்கள் எத்தனை பேர்?

Thursday, December 02, 2004

சாமியார்கள்

ஜெயேந்திரர் பற்றிய செய்திகள் குமுதம் தொடங்கி வலைப்பதிவுகள் வரை ஆக்கிரமிப்பைப் பெற்ற போதும் நான் அதை வாசிக்கவேயில்லை. இந்தப் பொய்ச் சாமியார்களின் வேலைகளே பெண்தேடல்தானே! இதுவும் அப்படியான ஒரு கேஸாகத்தான் இருக்குமென்று நினைத்து, விட்டு விட்டேன். எனக்கு இந்தச் சாமியார்களை விட இவர்களிடம் ஏமாந்து போகும் பெண்களிடம்தான் அதிக வெறுப்பு. ஒரு தரமா இரு தரமா? காலங்காலமாய் கபடமாய் ஏமாற்றப் படுபவர்கள் ஒரு புறமிருக்க, தெரிந்து தவறிப் போபவர்கள் எத்தனை பேர்? அதனால்தான் எனக்கு இந்தச் சாமியின் விடயத்தை வாசிக்கவே தோன்றவில்லை.

இப்படியிருக்க ஒரு நாள் எனது கணவர் இந்தச் சாமி பற்றிய பேச்சைத் தொடங்கினார். எனக்குள் எரிச்சல். "என்ன பெண் கேஸ்தானே! எனக்கு வேண்டாம்." என்றேன்.

"இல்லையில்லை அவர் ஒரு ஊழல் செய்திருக்கிறார். அதை மறைக்க கொலை செய்திருக்கிறார்." என்றார்.

"சாமியார்களுக்கு இதுவும் அத்துபடியோ..!" என்று கேட்டு விட்டு, அதை விட்டு விட்டேன்.

இப்போது எழுத்தாளர் அனுராதா ரமணனின் வாக்குமூலம் எப்படியோ என்பார்வைக்குக் கிட்டி விட்டது. சும்மா விட்டுப் போக முடியவில்லை.

அனுராதா ரமணனின் குமுறல்

ஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார். கையைப் பிடித்து இழுத்து மிக அநாகரீகமாக நடந்து கொண்டார். தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர் குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.

காவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதா ரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால் அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள் அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.

ஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் 'இருண்ட முகங்கள்' குறித்தும் அவர் எழுதினார். ஆனால் பல்வேறு தரப்பு பிரஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப் பட்டுவிட்டது.

தற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

பேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார்.

அவரது பேட்டி விவரம்:

சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான்.

எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னை அனுப்பி வைத்தார்.

நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள 'அம்மா' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார்.

அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான் நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத் தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை.

அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ.. நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர் "முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா" என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார்.

அவர் "இல்லை" என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார்.

பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி " என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றை வெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன்" என்று மிரட்டினார்.

"புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே" என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னை சங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர். இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும் பாதிக்கப்பட்டது.

இந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன். அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார்.

ஆனால் சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன். அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன்.

அப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை. தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்து விழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.

மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனா அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன்.

ஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால் மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதை புண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன்.

அப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான் மீண்டேன்.

ஆனால் இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்தி படைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள்.

கணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமே என்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.

என் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில் மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன்.

இதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள் வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன் அங்கு போனேன். அப்போது "நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும். என்னை மன்னிக்க வேண்டும். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும்" என்று பேரம் தொடங்கினார் சங்கராச்சாரியார்.

ஆனால் "உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால் உன் காவி உடையை உடனே நீ கலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்க ஒரே வழி" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.

லட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரிய வந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூட மன்னிக்க முடியாதது.

அந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.

மேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில் இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார்.

பேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும் தனக்கு நேர்ந்த அவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது.

பேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

- அனுராதா ரமணன் -


அனுராதாவிடம் போலீஸ் விசாரணை:

இந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

மடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.

தற்ஸ்தமிழ்
30 நவம்பர் 2004


Wednesday, December 01, 2004

அப்பா


அப்பாவின் அன்பு பற்றி வலைப்பதிவில் பலர் எழுதியுள்ளார்கள்.
முன்னரெல்லாம் "வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும்
அப்பன் செத்தால்தான் அப்பன் அருமை தெரியும்" என்று சிலர் சொல்வார்கள்.

நான் இருக்கும் போதே அப்பாவின் அருமையை உணர்ந்திருந்தேன். அப்பா என் மேல் நிறையவே பாசம் வைத்திருந்தார். 1.12.1997இல் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரோடான நினைவுகள் இன்னும் என்னோடு வாழ்கின்றன. அதனால்தானே என்னவோ அனேகமான எனது படைப்புக்களில் அப்பாவின் நினைவுகளும் இடம் பிடித்து விடுகின்றன.



அப்பாவின் நினைவுகளைச் சுமந்த சில கதைகள்

எதனால்...?
கல்லட்டியல்
சங்கிலித்துண்டங்கள்
பதியப்படாத பதிவுகள்
குண்டுமணிமாலை

அப்பா அம்மாவுடன் - 1956

இது சில வருடங்களுக்கு முன் எழுதப் பட்டது.

"நான் தமிழன்"
மார் தட்டிச் சொன்னாய்

"மமே கொட்டியா"
புத்தன் வழி வந்தவர்கள்
மத்தியில் சொல்லி
எத்தனை இன்னல்கள் பட்டாய்

58இல் தமிழன் அடிபட்டதிலிருந்தே
இரத்தம் கொதிக்க
கொழும்பு மோகம் கொண்டவர் மீது
கோபப் பட்டாய்

கொழுந்து விட்ட உன் கோபத் தீயில்
வளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்
உணர்வு கொண்டெழுந்து
விடுதலை வேட்கையுடன்
களம் புகுந்த போது
பாசத்தில் நெஞ்சு வெந்தாலும்
தேசத்தை எண்ணிப் பேசாதிருந்தாய்
புத்திரரின் வீரத்தை எண்ணி
பூரித்தும் இருந்தாய்

தாண்டிக்குளம் தாண்டும்
விதியொன்று வந்த போது
மீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு
தாண்டினாய்
கொழும்பு வசதி பிடிக்காது
வவுனியாவிலே தஞ்சம் கொண்டாய்

வருத்தமுற்ற போது
வைத்தியம் செய்ய
போதிய மருத்துவர் இன்றி
எல்லாத் தமிழரையும் போல்
அடிபட்டும் போனாய்

வலிந்த
என்னைச் சுமந்த உன் தோள்கள்
வலுவிழந்து..
கால்கள் நடை தளர்ந்து...

களத்தில் இரு புத்திரரையும்
புலத்தில் மறு பிள்ளைகளையும்
தொலைத்து விட்டு
எங்கோ அந்தகாரத்துக்குள்
பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி
களைத்த உன் விழிகள்
பன்னிரண்டு வருடங்கள் கழித்து
என் முகம் பார்த்ததும்
கொட்டும் அருவியாகி
எனை நனைத்த போது
உனை அணைத்துத் தாயானேன்
எனை நனைத்த அக்கணத்தை
உயிருள்ளவரை மறவேன்.

சந்திரவதனா
1.12.1999

Wednesday, November 24, 2004

மாவீரன்



மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்தவன்
தாயின் தழுவல்
பொற்கை மறந்தவன்
சொந்த வீட்டுப்
படுக்கை மறந்தவன்
புதுத் தளிர்க்கை மறந்தவன்
பந்த பாசம் எல்லாம் ஒன்றாய்
வெந்து மாளும்
வேட்கை நிறைந்தவன்
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி
கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்தவன்.........

தீட்சண்யன்

Monday, November 22, 2004

சுவை சேருகிறதா?

தேநீரை கரண்டியால் கலக்கிக் குடிப்பதையும் விடசூடு பறக்க ஆற்றிக் குடிக்கும் போது அதில் சுவையும் சேர்ந்து கொள்கிறது என்கிறார்களே!இது பற்றிய உங்கள் கருத்து என்ன..?

Thursday, November 18, 2004

முறியாத பனை

- சந்திரா. ரவீந்திரன் -

நீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு! ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்! சில சமயம் வயிற்றைக் குமட்டும்! பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..!" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்! - மிகுதி

Monday, November 15, 2004

இவ்வார நட்சத்திரம் - ஜெயந்தி சங்கர்

இவ்வார வலைப்பூ நட்சத்திரமாக சிங்கப்பூரிலிருந்து ஜெயந்தி சங்கர் மிளிர்கிறார். இவரது ஆக்கங்களை இணையத்தளங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணலாம். இவரது இவ்வார வலைப்பூ ஸ்பெஷலை வாசித்து மகிழ தமிழ்மணம் அல்லது தோழியர் பக்கம் செல்லுங்கள்.

Thursday, November 11, 2004

கப்டன் மயூரன்(சபா)


சிவா தியாகராஜா

என் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

என் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது..... மிகுதி

Wednesday, November 10, 2004

அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.

அதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.

"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே..! எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. "

"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. "

"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்?"

"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..? "

"குத்திக் காட்டிறாயாக்கும்."

"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்."

"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். "

"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்."

Sunday, November 07, 2004

எப்படி..? எல்லாமே ரொஜான் வைரஸ்கள்.

இரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி..? எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள். ஒருவாறு அழித்து விட்டேன் என்ற திருப்தியோடு நிமிரும் போது விண்டோஸ் செயலிழந்து விட்டது என்ற எச்சரிக்கை. எழுதிக் கொண்டிருக்கும் போது கணனியின் ஸ்தம்பிதம் எழுதியதையே தொலைக்கும் படி ஆக்கி விட்டது. இப்படியே நேற்றைய பொழுது எந்தவிதப் பயனுமின்றிக் கரைந்து போய் விட்டது. 5ந்திகதிக்குள் எழுதித் தருகிறேன் என்ற என் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. பல மின்னஞ்சல்களுக்கான பதில்கள் எழுதிக் கொண்டிருக்கும் போதே இடை நடுவில் நிறுத்தப் பட்டு விட்டன.

இந்த நிலையிலும் தமிழ்மணத்துக்கு வந்த போது என்றென்றும் அன்புடன் பாலாவின் பல்லவியும் சரணமும் என்னைத் தன்பால் ஈர்த்தன. அதற்குப் பதில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டென்பதால், இடை நடுவே நிறுத்த நிறுத்த மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்தேன். ஒருவாறு ஓரளவுக்காவது பதில்களை எழுதி அனுப்பிய போது அங்கு எந்தப் பதிலையுமே பார்க்க முடியவில்லை. 5comments இருப்பதாகக் காட்டுகிறதே தவிர அவைகளைப் பார்க்க முடியவில்லை.

Wednesday, November 03, 2004

தீயணைப்புப் பயிற்சி

ஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.
நான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.

இங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.
பிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது
மிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.

அதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வெளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.

கடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.

கடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.

இப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.
சட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.

Thursday, October 28, 2004

நலந்தானா...? நலந்தானா...? உடலும் உள்ளமும் நலந்தானா...?


இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.

என்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.

வந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.

அந்த வகையில் தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.

இப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.

பத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.
எப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா...?
என்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன்
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...

என்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.

மொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.

சந்திரவதனா
யேர்மனி

Thursday, October 21, 2004

குற்றம் பிடிப்பதற்கென்றே சிலர்

எமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.

இலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.

இலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து "எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.

என்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.
அந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்க...?

உண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ? இதற்கென்றே சிலரோ..?

சந்திரவதனா
யேர்மனி
21.10.2004

Wednesday, October 20, 2004

விருந்தாளிகள்

புலம்(பல்)

தொலைபேசி கிணுகிணுக்கிறது.

´ஆரது இந்த நேரம்? ஞாயிறும் அதுவுமா? நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.´
முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.

"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"

இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"

"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."

"எந்த லாகரிலை...?"

"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"

´ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?´

"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "

"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."

"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."

"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "

"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"

"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."

´என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.´

" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."

"அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!"
செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.

"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."

"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"

´விடமாட்டான் போலையிருக்கு.´

"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"

"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."

´அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?´

"சரியப்ப வாங்கோவன்"

"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"

´தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.´

"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."

செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க.."ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனியோ..?" எண்டு ஒரு தரம் சினந்து.."ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.

செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புக்களை விரிச்சுப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள்ளை உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரிச்சுக் கொண்டு"வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.

"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"

"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ."

செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து.. கிளாசுகளையும் கொண்டு வந்து விட..
"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.

இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புழுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடின.

"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.

"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "

"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "

"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "

"ஒரு surprise ஆ இருக்கட்டுமெண்டுதான்..."

´ம்... ம்... Surprise இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.´

றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, அடுக்கி, துடைச்சு குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.

´இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே!´ செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.

சந்திரவதனா
யேர்மனி
10.9.2004

Monday, October 18, 2004

பெண்ணே...!


பழைய கவிதைகளில் இன்னுமொன்று

உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.
கலாச்சாரம் பண்பாடு என்ற
கட்டுத்தளைகளிடம்
நீயே உன் மனசை அடகு வைத்து
இல்லையில்லை
உனது அம்மா
அம்மம்மா
ஆச்சி......
அவர்களைப் போலவே
நீயும்..
விட்டு விலகவோ
தப்பி ஓடவோ
வழி தெரியாது
உன்னை அண்டியுள்ள எல்லோராலும்
இறுகப் பிணைக்கப் பட்டு
மனசு நெரிக்கப் பட்டு...
இறுகப் பற்றியிருக்கும்
சமூகச் சங்கிலியை
உடைத்தெறியத் தெரியாமல்
மனசில்
வலியும் உளைவுமாய்..
பெண்ணே...!
உனக்கு விடுதலை வேண்டும்
முதலில் உனக்கு உன்னிடமிருந்து
விடுதலை வேண்டும்.

-6.9.2002-

இலவு காத்த கிளியாக....!


(பழைய கவிதையொன்று)

பனியது பெய்யும்
அழகினைக் கண்டு
மனமது துள்ளும்

வெளியினில் சென்றால்
பனியது பெய்யும்
குளிரது அறைய
உடலது நடுங்கும்
உதிரமும் உறையும்

பனியது பெய்யும்
குளிரது அறைய
பனியது பூவாய்
மரங்களில் தெரியும்

அழகினை ரசிக்க
அவகாசமின்றி
பணமது தேடி
வேலைக்காய் கால்கள்
பனியினில் விரையும்

"குளிரிலும் பனியிலும்
பணமது தேடி..........!
இது என்ன வாழ்க்கை"
மனம் தினம் அலுக்கும்

மடியினில் சுமந்த
மகவுடன் குலாவ
மணியின்றி
மனமது துவழும்

வெயிலதன் வரவில்
பனியது ஓடும்
மரமது துளிர்க்க
மனமது மலரும்
மலர்களும் சிரிக்கும்

மாறும் மாறும் ......!
எல்லாம் மாறும்!
பணமது தேடும்
நிலையது மாறும்!
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
ஒன்றாய் சேர்ந்து
உண்ண முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடி
களிக்க முடியும் ...!

முடியும் ...! முடியும்...!
பட்டியல் நீளும்!
...முடியும் ...! முடியும்..!
எல்லாம் முடியும்...!

இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்.

சந்திரவதனா
யேர்மனி
1999

Thursday, October 14, 2004

என்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்


அம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் கூடாது." இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.

ஓய்வு ஒழிச்சலின்றி எங்கள் வீட்டு வானொலி எட்டு வீடு எடுபடக் கத்திக் கொண்டே இருந்தாலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு நாங்கள் வானொலியின் அருகிலேயே அமர்ந்து விடுவோம். அவைகளில் திரு.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்து வழங்கும் பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிடம், ஆம் இல்லை, தேனிசை மழை, ஏழு கேள்விகள்.. போன்ற நிகழ்ச்சிகளும் இவைகளோடு இசைக்கோலம் மீனவநண்பன்........... போன்ற தொடர்களும் முக்கிய இடத்தை வகித்தன.

அப்போதெல்லாம் பெரும்பாலான சனி ஞாயிறுகளில் நாங்கள் வானொலியை விட்டு அகலுவதேயில்லை. வானொலிக்குள் புகுந்து விடாத குறை மட்டுந்தான். மற்றும் படி வானொலியே தவம் என்று கிடப்போம். அம்மாவுக்கு நாங்கள் சொல்லும், கொஞ்ச நேரத்துக்கான அர்த்தமே அன்று வேறாக இருக்கும்.
அப்துல் ஹமீத் அவர்களின் நிகழ்ச்சிகளுடன்தான் நாங்கள் ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்கும் தெரியுமென்பதால் அம்மாவும் நிகழ்ச்சிகள் முடியும் வரை எங்களைக் குழப்புவதில்லை.

சில அறிவிப்பாளர்களிடம் நேயர்களைக் கவரும் பிரத்தியேகத் தன்மை உண்டு. அந்த வரிசையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா அவர்களும், அப்துல் ஹமீத் அவர்களும் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்கள்.
நாங்கள் காலம் நேரம் பாராது இவர்களின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடாது கேட்போம். அதனாலோ என்னவோ அந்தக் காலத்தில் இன்னும் முன்னோங்கி நின்ற அப்துல்ஹமீத் அவர்களும், அவரது குரலும் எம்மோடு மிகவும் ஐக்கியமாகி விட்டிருந்தன.

1981 இல் நான் கொழும்புக்குப் போயிருந்த சமயம் அப்துல்ஹமீத் அவர்களின் பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியொன்று சரஸ்வதி மண்டபத்தில் நடப்பதறிந்து அதை நேரே பார்க்கும் ஆவலில் சரஸ்வதி மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் லாவகமாக அப்துல் ஹமீத் அவர்கள் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.

நூற்றுக்கணக்கான அவரது அபிமான ரசிகர்களின் மத்தியில் அமர்ந்திருந்த என்னை அவர் அறிந்திருக்க மாட்டார். ஆனால் நான் அவரது லாவகமான, அழகிய அறிவிப்பில் லயித்திருந்தேன்.

நிகழ்ச்சி முடியும் தறுவாயில்தான் எதிர் பாராத ஒரு விடயத்தை அறிவித்தார்கள்.
அது ரம்ளான் நேரம். அப்துல் ஹமீத் அவர்கள் அன்று நோன்பில் இருந்தார்.

கேட்டதுமே மனதுக்கு மிகவும் கஸ்டமாகப் போய் விட்டது. நோன்பின் போது எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது என்பது இஸ்லாம் விதிமுறை. அப்படியிருக்க நிகழ்ச்சி நன்றாக நடைபெற வேண்டுமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன் கஸ்டத்தையும் பொருட்படுத்தாது, பார்வையாளருக்கும் தன் களைப்பையோ, இயலாமையையோ தெரிய விடாது அத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார். அவரது அந்த - எடுத்துக் கொண்ட விடயத்தைத் தன்னதாக நினைத்து செவ்வனே நடாத்தி முடிக்கும் - தன்மை நிறைந்த, கலையோடு கூடிய கடமையுணர்வு என்னை வியக்க வைத்தது. அதன் பின் அப்துல் ஹமீத் அவர்கள் எனக்குள்ளே இன்னும் சற்று உயர்ந்திருந்தார்.

புலம் பெயர்ந்த பின் நீண்ட காலங்களாக அவரின் குரலைக் கேட்கவோ அவரது அழகிய லாவகமான அறிவிப்பில் லயிக்கவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் 26.9.1999 அன்று அவர் ஐபிசிக்கு வருகை தந்து சுமதி சுரேசனும், கணேஸ் தேவராஜாவும் இணைந்து தயாரித்து வழங்கிய காபை;பரிதி நிகழ்ச்சியினூடு குரல் தரிசனம் தந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதை விட ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஈழத்துப் பாடல்களில் இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் - இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்... என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.

பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.

இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போது இப்படியொரு திறமையும் அவரிடம் உண்டா என நினைந்து உண்மையிலேயே நான் வியந்து போனேன்.

சந்திரவதனா
யேர்மனி
22.7.2004

பிரசுரம் - கலையமுதம் (31.7.2004)
(அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா மலர்)

Wednesday, October 13, 2004

ஒரு பேப்பர் - ஒரு பார்வை


ஒரு பேப்பரின் எட்டாவது வெளியீடு என் கரம் கிட்டியது. என்னதான் இணையத்தளம் வழியே கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள்.., என்று எழுத்துக்கள் குவிந்திருந்தாலும், ஒரு பேப்பரையோ, ஒரு சஞ்சிகையையோ அல்லது ஒரு புத்தகத்தையோ கையில் எடுத்துக் கொண்டு போய் பிடித்தமான ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதில் உள்ள சந்தோசமே தனிதான்.

வழமையாக குழுந்தைகளின் பார்வையோடும், சிரிப்போடும் செல்லம் கொஞ்சும் பேப்பரின் முன் பக்கம் இம்முறை புளியங்குளம் பேரூந்தோடு வந்தது. மழலைகளைப் பார்க்க யாருக்கோ கசக்குதாம். கடிதம் போட்டிருக்கிறார்கள். ஆசிரியரின் குசும்பு எனக்கு முதலில் விளங்கவில்லை. பேப்பரைப் பார்த்ததும் ஊருக்குப் போற ஆசையில் ஏறி இருந்திட்டன். அதுவும் ஓசியாம்.

ஓசிதானே என்று ஏனோதானோவாக இல்லாமல் பல்சுவை அம்சங்களோடு உள்ளே அமர்க்களமாகத்தான் இருக்கிறது.

"அடியேய் விட்டன்ரா ஒரு அறை" என்றதும்தான் கொஞ்சம் பயந்திட்டன். ஏன்..? இந்த ஆம்பிளையளுக்கு அறையிறதை விட்டால் வேறையொன்றும் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நல்ல விடயத்தைத்தான் போட்டிருக்கு. வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தம்மைக் காத்துக் கொள்ள, நாட வேண்டிய இடம் வலம் பற்றி விரிவாக சுந்தரி எழுதியுள்ளார்.

அத்தோடு நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலகநடப்பு.. என்று பல விடயங்கள் ஆங்கிலத்திலும்;, தமிழிலும் என்று.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. என்றாலும் எல்லாளன் தனது மூக்கை கூடுதலாக நீட்டுகிறார் போல் இருக்கிறது. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா? எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இப்போதைய இளசுகளுடன் மல்லுக் கட்ட வேண்டுமா..?

இந்த ரெலிபோன் கார்ட் விடயத்தை நானும் பலபேருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் அவர்கள் அதை வாங்கி விட்டு "நேற்றுக் கதைச்சுப் போட்டு வைக்கக்கை 200 நிமிசம் இருந்தது. இண்டைக்கு 120 எண்டு சொல்லுது." என்று முணுமுணுப்பார்களே தவிர கார்ட்டை வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு வேளை ஓரு பேப்பரை வாசித்தாலாவது கார்ட்டுக்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்பு கிடைக்குமா அன்பு? சிறுகதை கணினியின் நிலாச்சாரலில் இருந்ததுதான். வாசிக்க வேண்டும் என்று பலதடவைகள் நினைத்தேன். ஆனாலும் கணினிக்கு முன் இருக்கும் நேரங்களில் அதை வாசிக்க நேரம் போதாது போய் விட்டது. அதை கணினியின் முன் இருக்கும் போதான கதிர்வீச்சுக்களின் தொல்லைகள் எதுவும் இல்லாது, வசதியான ஒரு இடத்தில் ஒய்யாரமாக இருந்து வாசிக்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது. கதையை வாசித்த பின் இப்படியான குழுந்தைகளை எடுத்து எங்கள் அன்பைக் கொடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையும் எழுந்தது.

இன்னும் சினிமா.. அறுவை.. என்று நிறைய விடயங்கள். இருந்தாலும் 32 பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.

"இதேன் முன் பக்கத்திலை விளம்பரம்?" என்று எனது மகன் குறை பிடித்தான்.
"அது ஓசியடா. விளம்பரம் இல்லையெண்டால் பேப்பரும் இல்லை." என்றேன்.

"அதுக்காண்டி முன் பக்கத்திலையோ..? போதாததுக்கு ஒரு பேப்பர் என்ற தலையங்கத்துக்குப் பக்கத்திலை பேப்பர் எறியிற வாளியையும் வைக்கோணுமே..? எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே!" என்றான்.

இப்படித்தான் நாங்கள். தானமாகக் கிடைக்கிற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிற பழக்கம் எங்களை விட்டுப் போறது பெரிய கஷ்டமான விடயந்தான்.
ஓசி என்ற பெயரில் சமூகத்தைக் கெடுக்கும் விடயங்கள் ஏதாவது பரப்புரை செய்யப் படும் பட்சத்தில் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டியது அவசியந்தான். ஒரு பேப்பர் அப்படியல்ல. சுவையோடு சுவாரஸ்யமும் கலந்து நல்ல பேப்பராகத்தான் வருகிறது. பாராட்டத்தான் வேண்டும்.

பேரூந்தில் ஏறிய எங்களை ஏமாற்றாமல் கிளிநொச்சி மழலைகள் பூங்காவரை ஒரு பேப்பர் எங்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

சந்திரவதனா
யேர்மனி
13.10.2004

Saturday, October 09, 2004

கலைஞர் அஜீவன் வீட்டில் தீ

திரைப்படத்துறையில் ஆர்வமுள்ளவரும், சுவிசை வாழ்விடமாகக் கொண்டவருமான நண்பர் அஜீவனின் வீட்டில் நேற்றுத் தீ தனது நாக்குகளை நீட்டியிருக்கிறது. அவர் உயிராபத்து ஏற்படாமல் தப்பியது மட்டுமல்லாது, தான் வாழ்ந்த வீட்டில் இருந்த மற்றைய உயிர்களையும் காப்பாற்றுவதில் அந்த நிலையிலும் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.

இழப்புகள் எமக்குப் புதிதல்ல. இருந்தாலும் ஒரு கலைஞனின் வீட்டுக்குள் சாம்பலாகிப் போனவை விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இழப்புக்களை யாராலும் நிவர்த்தி செய்யவும் முடியாது. ஆனாலும் அஜீவன் என்ற கலைஞன் எம்மோடு தொடர்ந்தும் வருவார் என்ற செய்தி மிகுந்த நிம்மதியைத் தருகிறது.

அஜீவன் தீ விபத்திலிருந்து தப்பிய பின் எழுதியவைகளை யாழ்கருத்துக்களத்தில் வாசித்த போது என் கண்களிலிருந்து வழிந்தது அவர் உயிர் தப்பியதினாலான நெகிழ்ச்சியினாலான கண்ணீரா..? அல்லது அவருக்கு உதவிய அந்த நட்பு உள்ளங்கள் ஏற்படுத்திய நெகிழ்ச்சியினாலான கண்ணீரா..? என்பது எனக்குத் தெரியவில்லை.

எதுவாயினும் இந்த அதிர்ச்சியிலிருந்து அஜீவன் மீண்டு வரவேண்டும். அவரது படைப்புக்கள் தொடர வேண்டும். என மனதார விரும்புகிறேன்.

அஜீவன் எழுதியது

நான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.

அதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.

நான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.

முன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.

உடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.

என் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.

போலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.

இன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.
இவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.

நன்றிகள்
அஜீவன்

2

எனது வீட்டில் நடந்த தீ விபத்தில் நான் இரவு படுக்கைக் போகும் போது உடுத்திருந்த உடைகளான டீசேட்டும் உள்ளாடை மற்றும் பிசாமா தவிர தீயணைப்பு படையை தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்டு யன்னலால் பாய்ந்த hand phone தவிர எனக்கு வேறு எதையும் எடுக்க முடியவில்லை.

வெளியே பாய்ந்ததும் தீயணைப்புப் படையினருக்கு தெரிவித்தேன்.

மேல் மாடியில் இருந்தவர்களுக்கு அழைப்பு மணி மணியை அடித்து எழுப்பி வீடுகளை விட்டு வெளியேறுங்கள் என்று கத்தினேன்.

விழித்து கொண்டவர்கள் உதவி உதவி என்று கத்தத் தொடங்கினார்கள்.

பாதையில் வந்து கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் நின்றன.

வாகனத்தை விட்ட இறங்கியவர்கள் தீயணைப்பு படைக்கும் போலீசுக்கும் போண் பண்ணி உடன் வாருங்கள் என்று கத்துவதிலும் மேலேயுள்ளவர்களை மறு புறமாக வெளியேறுங்கள் கதவை மூடுங்கள் என்று ஒலியெழுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

என் வீட்டிலிருந்து தீ அடுத்த வீட்டுக்கு பரவியது.

தொடர்பு கொண்டு 10 நிமிடங்களில் முதலாவது தீயணைப்பு சிறிய முதல் வாகனம் வந்து பாதையில் நின்ற வாகனங்களை அப்புறப் படுத்தி கதுவுகளை மூடுங்கள் படி வழிகளால் இறங்குங்கள் என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.

ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குத்தார். குதித்தவர் எழுந்த போது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்தது.
நான் ஓடிப் போய் தூக்கிய போது என் காதலியை காப்பாற்று என்று கத்தினான் .

காரில் வந்த ஒருவர் தற்காலிக தீயணைப்பு கருவிகளான சிலின்டர்களை எடுத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுகளை உடைத்து உள்ளே நுமையும் போது தீயணைப்பு படையும் போலீசும் அம்புலன்சுகளும் பாதையில் நிறைந்து விட்டன.

இரு பக்கமுமிருந்து வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

அனைவரும் தனது பணிகளில் உக்கிரமானார்கள்.

போலீசாரும் தீயணைப்பு படையின் ஒரு பிரிவும் வீட்டுக் கதவுகளை தட்டி திறக்காத கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளிட்டார்கள்.

வெளியேற முடியாதவர்களை தூக்கிக் கொண்டு இறங்கினார்கள்.

இது ஒருபுறம் இருக்க
மறுபுறம்
தீயணைப்பு படையினர் எனது வீட்டின் முன் புறமும் பின்புறமுமாக தீயை அணைப்பதில் மும்முரமானார்கள்.

உள்ளே இருந்து வந்தவர்களை
வந்திருந்த 5 அம்புலன்சுகளும் முதலுதவிகளை செய்ய முற்பட்டது.

அதற்குள் தற்காலிக முதலுதவிக் கூடாரமொன்று அடிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.

சுவாசிக்க முடியாதவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு சில அம்புலன்சுகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் இம் முயற்சிகளுக்கு உதவுவதிலும்
எவரது உயிருக்கும் ஆபத்து வரக் கூடாது என்பதையுமே கருத்தில் கொண்டு போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும்
உதவிக் கொண்டிருந்தேன்.

எவருக்கும் ஆபத்தில்லை என்ற நிலை வந்த பிறகே என்னால் கீழே இருக்க முடிந்தது.

அதுவரை என்னை நான் உணராமல் இருந்திருக்கிறேன்.

என் காலில்
ஒரு செருப்புக் கூட இல்லாத நிலையை
நான் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.

சுமுகமான ஒரு நிலை உருவாகும் போது என் வீடு சாம்பலாகியது கூட எனக்குத் தெரியாது.

அனைத்துமே சாம்பலாகி விட்டது.

குளிரில் நடுங்கி உறைந்து போன எனக்கு
சுவிசைச் சேர்ந்த ஒருவர் தன் செருப்பை தந்ததும் ஒரு இளம் பெண் எனக்கு தனது யக்கட்டை போர்த்தி விட்டதும் கனவு போல் இருக்கிறது.

அவர்களை நான் பார்த்தது கூட இல்லை.
நான் அவர்கள் பொருட்களை கொடுக்க தேடுகிறேன்.
இறைவன் வந்து உதவுவது இப்படியான வடிவங்களிலா?

ஒரு சிலர் குடிப்பதற்கு தண்ணீரும் தேனீரும்
கொண்டு வந்து தந்தார்கள்.
என்னால் தண்ணியை மட்டுமே குடிக்க முடிந்தது.


ஊடகங்கள் நிறைந்து செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.

எமது வீட்டு பரிபாலன பெண்
எனது வீடுதான் தீயில் எரியத் தொடங்கியது என்று என்னை போலீசாருக்கு அறிமுகம் செய்தாள். அதுவரை
யாருடைய வீடு என்பது கூட அவர்களுக்கு தெரியாது.

உன்னிடம் பேசலாமா என போலீசாருக்கு பொறுப்பாக நின்ற நாடியா என்ற பெண் என்னிடம் கேட்ட போது நான் அவரோடு போலீசார் நின்ற இடத்தை நோக்கி நடந்தேன்.

ஒளிப்பதிவாளர்களும் , புகைப்படப்பிடிப்பாளர்களும் எம்மை சுற்றிக் கொண்ட போது என்னை தனது அங்கியால் அணைத்துக் கொண்டு அவர்களை
படம் பிடிக்காதவாறு தடுத்தாள்.

ஒரு ஒளிப்பதிவாளர் அவன் என் நண்பன் என்ற போது
இருக்கலாம் அவன் நிலையில் இது வேண்டாம். அவனை சுமுக நிலைக்குத் திரும்பும் வரை இருக்க விடுவதுதான் உங்கள் நட்புக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்றாள்.

அவர்கள் முன்னேறாமல் நின்றார்கள்.

என்ன நடந்தது என்ற விபரத்தைக் கேட்டாள்.

விபரத்தை சொன்னேன்.

ஒருமுறை வைத்தியசாலைக்கு போய் உன் சுவாசத்தை பரிசோதித்து வரலாம் என்றாள்.

இல்லை எனக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றேன்.

அது உனது மனநிலை.

என்னுடன் வா என்று அம்புலன்சுக்குள் அழைத்துச் சென்று ஆக்சிசனை கொடுக்க வைத்து விட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விட்டாள்.

முக்கிய வைத்திசாலைகளின் அவசரப்பிரிவு நிறைந்து விட்டதால் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு நானும் இன்னும் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்.

எமக்காகக் காத்திருந்த குழு எம்மை பரிசோதிக்கத் தொடங்கியது.

மற்ற இருவரது நிலையில் பாதிப்பு தெரிந்தது.

எனக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று சொன்ன வைத்தியர்
உங்கள் செயலால் எவருக்கும் உயிராபத்தில்லை என்றார்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உனது பொருட்களை விட வீடுகளிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறாய் என்று அங்குள்ளவர்கள் போலீசாருக்கு சொல்லியிருக்கிறார்கள் என்று என் கைகளைப் பற்றிய போது என் கண்கள் குளமாயின.

உனக்கு ஒன்றுமில்லை சில மாத்திரைகளைத் தருகிறேன்.
இதை எடுங்கள் என்று தந்தார்.

உங்களை அழைத்துப் போக நண்பர்கள் வெளியில் நிற்கிறார்கள் வரச் சொல்லுகிறேன் என்றார்.

சுவிசில் உள்ள கறுப்பினத்து நண்பனொருவனும் வெள்ளைகார பெண்ணும் நுழைந்தார்கள்.

கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்.

நான் நன்றி சொல்லிவிட்டு அவர்களோடு நடக்கும் போது உங்களுக்கு சிரம் இல்லையா என்றேன்.

இது கடமை என்றார்கள் புன் முகத்துடன்.

வீட்டுப் பகுதிக்கு வந்த போது போலீசாரும் தீயணைப்பு படையினரும் என்னை நோக்கி வந்தார்கள்.

வீட்டைப் பார்க்கலாம் வாங்கள் என்று அழைத்துச் சென்றனர்.

எல்லாம் சாம்பலாகியிருந்தது.
நான் வாயே திறக்கவில்லை.
போலீசின் தலைமை அதிகாரியான நாடியா என்னை அணைத்துக் கொண்டு சொன்னாள்
நீ உயிரோடு இருக்கிறாய்.
உன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நீ எப்படிப் பட்டவன் என்று தெரிகிறது.
உனக்கு உதவ எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாள்.

வெளியே வந்தேன்.

ஒரு விடுதியில் தற்காலிகமாக தங்கலாம் என்றாள்.

பக்கத்தில் இருந்த அயலவர்கள் தேவையில்லை.
அஜீவன் , எங்கள் வீட்டில் இருக்கட்டும் என்றார்கள்.

நாடியா என் முகத்தைப் பார்த்தாள்.

நீ தனியாக விடுதியில் இருப்பது நல்லதாக எனக்குப்படவில்லை.
இவர்களில் யாரோடாவது இரு.
நானும் வந்து பார்க்கிறேன் என்றாள்.

நான் அமைதியானேன்.

ஒரு குடும்பம் எனக்கு மிக நெருக்கமானவர்கள்.
அவர்களோடு நிற்கிறேன் என்றேன்.

அடுத்தவர்கள் எனக்கு
வேறு உதவிகளைச் செய்வதாக சொன்னார்கள்:

இரவு நோயெல் உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி வந்து தந்து விட்டுப் போனான்.

இன்று (8.10.04)காலை காப்புறுதி நிறுவனமும் போலீசாரும் , தொலைக்காட்சி பகுதியினரும் வந்திருந்தார்கள்.

தீ டெக்னிக்கல் டிபெக்டால் ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.

அத்தோடு எல்லாவற்றையும் தேடி விடலாம்
உன் படைப்புகளை எத்தனை கோடி கொடுத்தாலும் பெற முடியாது என்றார்கள்.

நாடியா (Police),
ஒரு நிறுவன உரிமையாளர் உன்னை இன்று மாலை சந்திப்பார். அவருக்கு உன் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்றார்.

மாலை என்னை சந்திக்க வந்த அந்த சுவிசின் நிறுவன உரிமையாளர்,
குடும்பத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள்.

என்னை அழைத்துச்
சென்று எனக்கு அளவான உடைகள் வாங்கித் தந்தார்கள்.

பின்னர் சாப்பிட ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்ற போது
என்னிடம் இன்று பெறப்பட்ட இன்டர்வியு தொலைக் காட்சியில்
அவர்களிடமிருந்த எனது குறும்படக் கிளிப்புகளுடன் போய்க் கொண்டிருந்தது.

என்னை அழைத்துச் சென்றவர்கள் உணவக உரிமையாளருக்கு என்னைப் பற்றிச் சொன்னார்கள்

ஒரு மாதம் சாப்பிட தான் ஒழுங்கு செய்வதாக உறுதிளித்தார்.

என்னை அழைத்துச் சென்ற பெரியவர் சொன்னார்.

நீ மறுபிறவி எடுத்திருக்கிறார்ய்.

உன்னைப் பற்றி நேற்றுத்தான் கேள்விப்பட்டேன்.

எவன் என்பதல்ல முக்கியம் .
எப்படிப் பட்டவன் என்பதே முக்கியம்.

உன்னைப் பற்றி சொல்பவர்கள் மூலம்
உன் நாட்டவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.

நான் தற்போது இருக்கும் வீட்டுக்கு வரும் போது எனக்கு ஒரு புது வீடு தற்காலிகமாக கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வந்தது.

சிலர் பணமும்
சில பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

காப்புறுதி கிடைக்கும் வரையும் செலவுக்கு பணம் பெற போலீசார் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து கொஞ்சம் பணம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளதாக சொன்னார்கள்.

மனம் தளராமல் இருக்க இறைவனும் நண்பர்களும் இருக்கிறார்கள் .........

எனவே இன்னும் நிற்க முடிகிறது.

வேறு இடத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் எழுத்து தவறுகள் ஏற்படலாம்.

புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன்.

உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் வாழ்கிறேன்.

என்னோடு தொடர் கொள்ள ஒரே ஒரு இலக்கம்:-

0041792091249

நன்றி -
யாழ் கருத்துக்களம்.

Friday, October 08, 2004

ரீ - றீ பற்றி (Tea, TV, .............)


நான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது.
தயவுசெய்து எப்படி/ஏன் டி/டீ >>> றி/றீ ஆனது என்று எழுதுங்களேன். மின்னஞ்சலனுப்பி கேட்கலாமென நினைத்தேன். பொதுவில் கேட்டால், என்னைப்போல வேறு யாருக்காவது இந்த சந்தேகமிருந்தால் பயன்படும் அல்லது வேறுயாராவதவது சொல்வார்கள் என்றுதான் இங்கேயிட்டேன்.Posted by அன்பு at September 22, 2004 09:02 AM

அதுபற்றித்தான் ஈயண்ணா முன்னரே விளக்கமளித்தாரே அன்பு. இதுபோலக் கேட்டதால் நீங்களும் தீண்டத்தகாதவர்கள் ஆகிவிடுவீர்கள் அவர்களுக்கு! t=ரி..அப்புறம் cricket ல் வரும் t=ற். அது ஆங்கிலமாம்...அது அப்படித்தான்!!! தோழிகூட டீ கடையை ரீகடை என்றே விளித்திருக்கிறார்.
Posted by Moorthi at September 22, 2004 08:11 PM

அன்பு ஆங்கில உச்சரிப்பு தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வேறுபடும்.மலேசியாவியிலும் சிங்கப்பூரிலும் அப்படித்தானே சொல்கிறார்கள் என்று சொன்னால் அது மலேசிய/சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ்நாட்டு வழிவந்தவர்கள் என்பதன் வெளிப்பாடு.அதையே ஐரோப்பாவிலோ கனடாவிலோ பார்த்தீர்களானால் அவர்களது உச்சரிப்பு ஈழத்தமிழர்களுடையதன் தொடர்ச்சியாக இருக்கும்
இது இன்று நேற்று நீங்களும் நானும் ஆரம்பித்த பிரச்சனை அல்ல மன்ற மையத்திலும் மடலாடற் குழுக்களிலிலும் பல்லாண்டுகாலமாக விவாதிக்கப்படுவது அதற்கு முன்னால் தமிழக ஈழ எழுத்தாளர்களும் நண்பர்களும் சந்தித்தபோது முட்டி மோதிக்கொண்ட விடயம்.
Hospital ஐ கொஸ்பிற்றல் என்றுதான் ஆங்கிலேயரும் சொல்வார்கள் சீனரும் சொல்வார்கள் பிரஞ்சுக்காரரும் சொல்வார்கள் ஈழத்தவரும் சொல்கிறார்கள் ஆனால் இந்தியர்கள் மட்டும்தான் ஹாஸ்பிடல் என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் அதற்குத் தீண்டாமைப் பட்டம்

ஆங்கிலத்துக்கு இதுதான் சரியான தமிழ் உச்சரிப்பு என்று நானோ நீங்களோ பட்டிமன்றம் நடத்தமுடியாது.ஏனெனில் இருவரும் ஆங்கிலத்தை தமிழில் எழுதி தமிழைக் கொலைசெய்து கொண்டிருக்கிறோம்.ஆங்கிலத்தை தமிழில் உச்சரிக்காமல் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை தெரிந்து பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.
உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.
Posted by Eelanathan at September 23, 2004 01:54 AM

Hospital என்பதனை ஆங்கிலேயரும் சீனர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஹொஸ்பிடல் என்றுதான் சொல்வார்கள். கொஸ்பிற்றல் என்று அல்ல!!!
Posted by Moorthi at September 23, 2004 02:23 AM

ரீ - றீ பற்றி முடிந்தால் என் பதிவில் எழுதுகிறேன்.
Posted by chandravathanaa at September 28, 2004 03:39 AM
###########################
இவை அங்கு தரப்பட்ட பின்னூட்டங்கள்.

இது பற்றிய எனது கருத்து
நான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது. இதில் நான் சொல்வதுதான் சரியென்றோ அன்றி நீங்கள் நினைப்பதுதான் சரியென்றோ எந்த வாதமும் நாம் செய்து விட முடியாது.
ஏனெனில் ஆங்கிலத்தை நாம் தமிழில் எழுதி ஆங்கிலத்தைக் கொலை பண்ணுகிறோம்.

என்னதான் நாம் முயற்சி பண்ணி, எப்படித்தான் நாம் உச்சரித்தாலும் ஒரு யேர்மனியர் போல யேர்மன் மொழியையோ, அல்லது ஆங்கிலேயர் போல ஆங்கில மொழியையோ எம்மால் உச்சரிக்க முடியாது. ஒரு வேளை எங்கள் குழந்தைகள் அந்தந்த நாடுகளில் பிறந்த வளர்ந்து, அவர்களோடு கூடி வாழ்ந்து கொண்டு, அவர்கள் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தந்த நாட்டு உச்சரிப்புகள் ஓரளவுக்குச் சரி வரலாம். அது கூட நாங்கள் வீட்டில் தமிழில் கதைக்கும் பட்சத்தில் சற்று வேறுபடும்.

இப்படியிருக்க நாம் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதி உச்சரிப்பது என்பதும், அதில் சரி பிழை தேடுவதும் சற்று நகைப்புக்குரிய விடயந்தான்.

ஆனாலும் நான் எப்படி ஆங்கிலத்தை உச்சரிக்கிறேனோ, அதற்கு மிகக் கிட்டிய உச்சரிப்பை ஒட்டிய தமிழையே இது போன்ற சமயங்களில் நான் பயன் படுத்துகிறேன்.

உதாரணமாக Tea என்பதற்கான உச்சரிப்பை ரீ என்கிறேன்.
அதன் ஆங்கில எழுத்து Dea என்று இருக்கும் பட்சத்தில் நானும் டீ என்பேன்.

ஏனெனில் T இற்கான உச்சரிப்பு ரீ
D இற்கான உச்சரிப்பு டீ

இதே போலத்தான்
TV - ரீவீ
நீங்கள் குறிப்பிடுவது போல டீவீ எனச் சொல்ல வேண்டுமானால்
அதற்கான ஆங்கில எழுத்து என்னைப் பொறுத்த வரையில் DV என இருக்க வேண்டும்.


Thursday, October 07, 2004

குட்டி திரைப்படம் எனது பார்வையில்


குட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியாமலே இருந்தது.

நீட்டி முழக்காமல் சொல்ல வந்தததை ஒரு குறும்படம் போல இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்ட அருமையான படம். சாதாரணமாகவே சிவசங்கரியின் கதைகள் சமூகப் பிரக்ஞை நிறைந்தனவாகவும், வாசித்து முடிந்ததும் மறந்து போய் விட முடியாத படி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். இந்தக் கதையும் சோடை போகவில்லை. படத்தைப் பார்த்த பின் மனசு கனத்தது.

குட்டி படம் வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தையான கண்ணம்மா, சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் சிக்கிப் போவதை மிகவும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது. வழமையான படங்கள் போல ஆபாசமோ, அளவுக்கதிகமான அடி தடிகளோ இல்லாமல் படத்தைத் தந்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.
வறுமையின் நிமித்தமோ, அன்றி வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகளை வேறு யாரிடமாவது அனுப்பிப் படிக்க வைக்கும், அல்லது வேலை பார்க்க வைக்கும் செயல் எத்துணை கொடுமையானது என்பதை படம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. சின்னக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே ஒரு கொடுமையான செயல் என்றால் அந்தப் பிள்ளைகளை வேலைக்காக இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது இன்னும் எத்துணை கொடியது..?

பெற்றோரின் கண் முன்னே அவர்களது அன்பிலும் அணைப்பிலும் வளர வேண்டிய குழந்தைகள், வெளியில் அனுப்பப் படும் போது, எந்தளவுக்கு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வதை படுகிறார்கள் என்பதை மனதைப் பிசைய வைக்கும் விதமாகக் காட்டுகிறது படம்.

கண்ணம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த செல்லப்பெண். சட்டி பானைகள் செய்து பிழைக்கும் குயவர் குடும்பம். தந்தை நாசருக்கு அவள் மேல் கொள்ளை பாசம். தொலை தூரத்தில் இருக்கும் பாடசாலைக்கு அவளை சைக்கிளில் அழைத்துச் சென்று நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய மனுசியாக்க வேண்டுமென்பது அவரது கனவு. சைக்கிள் வேண்டவே பணமில்லாத நிலையில் அவள் படிக்காமலே வளர்கிறாள். தந்தையின் பாசத்தில் குலத்தொழிலைக் கூடப் பழகாமல், எந்தக் கஸ்டங்களையும் உணராமல் சிட்டுக்குருவி போல அந்தச் சிறிய கிரமாத்தில் சுற்றித் திரிகிறாள்.

திடீரென ஒரு நாள் - சட்டி பானைகளை விற்று வர என்று சந்தைக்குப் போன நாசர், லொறி ஒன்று மோதி இறந்து விடுகிறார். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொள்கிறது. தந்தையின் அன்பை மட்டுமல்லாது, சோற்றைக் கூட இழந்து விடுகிறாள் கண்ணம்மா. வேலை வெட்டியின்றித் திரிந்தவள் தாயுடன் வேலை செய்யத் தொடங்குகிறாள். ஆனாலும் வறுமையின் கொடுமை பற்றி அறியாது வளர்ந்தவள்தானே. சோற்றுக்குக் கூட தாயிடம் சண்டை போடுகிறாள். கூழ் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.

என்ன செய்வதென்று தெரியாது தாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தான் வேலை பார்க்கும் அலுவலகத்து முதலாளி வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று சொல்லி இவளைக் கேட்கிறாள். தாய் தயங்கித் தடுமாறிய போது அது வசதியான குடும்பம் நல்ல உணவும், உடையும் கிடைக்குமென்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறாள்.

கண்ணம்மா வீட்டு வேலை செய்ய என்று பட்டணத்துக்குச் செல்கிறாள். இவளை வீட்டு வேலைக்கு எடுத்தவர்களான ரமேஷ் அரவிந்தும், கௌசல்யாவும் நல்லவர்கள். ரமேஸ் அரவிந் ஒரு முதலாளி. மனைவி கௌசல்யா ஒரு ஆசிரியர். இவளைச் சொந்தப் பிள்ளை போலவே அன்போடு பார்க்கிறார்கள்.

ஆனால் ரமேஸ் அரவிந்தின் தாய் எம்.என்.ராஜம். பொல்லாதவர். படத்தில் வில்லி அவர்தான். அவரும் இவர்களின் மூத்த மகனும் இவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்துகிறார்கள். பழைய சோற்றைக் கொடுப்பதுவும், அதைச் செய் இதைச் செய் என்று பாடாய்ப் படுத்துவதும் மனித நேயத்துக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள். சொன்னது போல இல்லாமல் பிள்ளையைப் பராமரிக்கும் வேலைக்கு மேலால் இன்னும் பல வேலைகளைக் கொடுக்கிறார்கள்.உணர்வுகளை மிதிக்கிறார்கள். கண்ணம்மாவைக் குட்டி ஆக்கியதே எம்.என்.ராஜம்தான்.

எம்.என்.ராஜத்தின் கொடுமைக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா அங்கு பட்டணத்தில் இன்னும் சில வீட்டு வேலை செய்யும் பெண்களைச் சந்திக்கிறாள். அவளது எதிர் வீட்டு வேலைக்காரப் பெண் இவள் போலக் குழந்தையல்ல. பருவப் பெண். அவள் அந்த வீட்டு ஆணால் பலாத்காரப் படுத்தப் படுவதைக் காணும் போதும், அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டாள் என்பதை அறியும் போதும், இவளிடம் தெரியும் மிரட்சி, முகபாவங்கள் ஒவ்வொன்றுமே மிக இயல்பு.

இந்த இடத்தில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் குழந்தைகளின் வாழ்வு மட்டுமல்ல பெண்களின் வாழ்வின் அவலமும் வெளிச்சத்துக்கு வருகிறது.

பெற்றோர்களின் கண்களில் இருந்தும், கவனத்தில் இருந்தும் தள்ளிப் போகும் சிறுமிகளின் வாழ்வு எந்தளவுக்குச் சீரழிந்து போகும் என்பதை நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்லி விட்ட நல்ல படம்.

கண்ணம்மாவின் தாயாக வந்தவர் ஈஸ்வரி ராவ். நாசரும், ஈஸ்வரிராவும் கிராமத்துக்கேயுரிய இயல்பான பண்பட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இலவசமாகவும் உயிரோட்டத்தோடும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் விவேக்குக்கு வழமைக்கு மாறாக சற்றுச் சீரியஸான பாத்திரம்.சீரியசோடு சேர்ந்த நகைச்சுவைகள் அவ்வப்போது வந்து விழுந்தாலும் கண்ணம்மா உதவி என்று கேட்குமளவுக்கு நல்லவனான பாத்திரம். விவேக்கினது உதவியுடன்தான் கண்ணம்மா தப்பியோட முனைகிறாள்.

அவள் புகையிரதத்தில் ஏறியதும் தப்பி விட்டாள் என்று மனசு அவளோடு சேர்ந்து குதாகலிக்கும் போதுதான் அவள் இன்னுமொரு சமூகச் சீரழிவாளனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குகாக விற்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுவது புரிகிறது. எதுவுமே புரியாது அம்மாவைக் கட்டியணைக்கும் கனவுகளோடு தனது கிராமத்தை நோக்கிய நினைவுகளோடு கண்ணம்மா புகையிரதத்தினுள் பயணிக்கிறாள். அத்தோடு படம் முடிகிறது. மனசு கனக்கிறது.

சந்திரவதனா
யேர்மனி
7.10.2004

Sunday, October 03, 2004

பொறுமையைச் சோதிக்கும் சில பொழுதுகள்


சில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் விதமாக ஏதும் நடந்து விடும்.கடந்த திங்களன்று வீதியில் நடக்கும் போது சாதாரணமாகக் கால் தடுக்கியது. நல்ல வேளை விழவில்லை என்று நினைத்துக் கொண்டே நடந்தாலும் மெலிதான ஒரு நோ நெருடிக் கொண்டே இருந்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போவதிலிருந்து சகல வேலைகளையும் வழமை போலவே செய்து முடித்தேன். இரவு படுக்கும் போதுதான் மீண்டும் அந்த நோ மூளையை உறுத்த நோவுக்கான களிம்பு ஒன்றை எடுத்துப் பூசி.. கட்டிலில் களிம்பு பிரண்டு விடாமல் இருக்க, ஒரு காலுறையையும் போட்டுக் கொண்டு படுத்தேன்.

இப்படியே நோ பற்றி நினைவு வரும் வேளைகளில் நான் வீட்டில் நின்றால் களிம்பு பூசுவது வியாழன் வரை தொடர்ந்தது. வியாழன் வேலைக்குப் போகும் போது நோ சற்று அதிகமாகி விட்டது. கால் பாதத்தில் மொழியோடு சேர்ந்த இடத்தில் மெதுவாக வீக்கத் தொடங்கி இருந்தது. இப்போதுதான் மருத்துவரைப் பற்றிய நினைவு வர Orthopedyயிடம் விரைந்தேன்.

ம்.. இந்த வியாழக்கிழமை புரட்டாதி மாதத்தின் இறுதிநாள். அதாவது இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டின் இறுதிநாள். அதனால் எனது குடும்ப வைத்தியரின் பத்திரம் இல்லாமல் என்னைப் பார்க்க மாட்டார்களாம். அப்படிப் பார்ப்பதானால் உடனேயே நான் இவ்வாண்டு ஆரம்பத்தில் யேர்மனியில் நடைமுறைப் படுத்தப் பட்ட ஒவ்வொரு காலாண்டுக்குமான 10யூரோக்களை இன்னொரு முறை இங்கும் கொடுக்க வேண்டுமாம். (ஏற்கெனவே எனது குடும்ப வைத்தியரிடம் கொடுத்து விட்டேன். பற்றுச்சீட்டும் கைவசம் இருந்தது.) ஆனால் காலாண்டு இறுதி நாள் என்பதால் அவர்கள் அந்தக் கணக்கை முடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம்.

சும்மா தெண்டமாகப் 10யூரோவைக் கொடுக்க எனக்கு இஸ்டமில்லை. "நான் போய் எனது மருத்துவரிடம் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லி வெளியில் வந்தேன். ஆனால் கால் நோவை விட இப்போது மனதுக்குள் எரிச்சல் புகுந்து கொண்டது. நோவுடன் வருகிறேன். நொண்டி நொண்டி நடக்கிறேன். மருத்துவத்துக்கேயுரிய பண்போடு பார்த்து விட்டு, பின்னர் நான் அந்தத் பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் சம்மதித்திருக்கலாம்தானே. ம்.. மருத்துவர் சில வேளை சம்மதித்திருப்பார். முன்னுக்கு றிசப்சனில் நந்தி மாதிரி இருந்த பெண்தான் சட்டத்தையும், நடைமுறையையும் மிகவும் மதிப்பவளாய் என்னை மருத்துவரிடம் அனுப்ப மறுத்து விட்டாள். என் மனதில் எழுந்த எரிச்சல் இன்னும் அதிகமாக டொக்டரும் மண்ணாங்கட்டியும் என நினைத்துக் கொண்டு வேலைக்குப் போய் விட்டேன்.

வேலையில் என் சகதோழியருக்கு, என் மனதின் அழகு முகத்தில் தெரிய.. விடயத்தைக் கேட்டு காலைப் பார்த்து விட்டு உடனே "மருத்துவரிடம் போ" என அனுப்பி விட்டார்கள். சரி.. எனது குடும்ப வைத்தியரிடம் மீண்டும் நொண்டினேன்.

குடும்ப வைத்தியர் - அவர் எனக்கு கிட்டத்தட்ட 18 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். ஏறக்குறைய ஒரு குடும்ப நண்பன் போல. அவர் கூட Orthopedy நடந்து கொண்ட விதத்தில் கோபம் கொண்டு அங்கு தொலைபேசினார். அவர்கள் இன்று தாம் வேறு வேலை செய்ய இருப்பதால் இதற்கு மேல் யாரையும் பார்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு Orthopedyயாக அழைத்துப் பார்த்த போதும் ஒருவரும் சரிவரவில்லை. எல்லோரும் விடுமுறை. கணக்கு முடிப்பு.. என்று இழுத்தார்கள். ஒரே வழி அரச மருத்துவமனைதான். நான் அங்கு அலைய விரும்பவில்லை.

சரியென எனது குடும்ப வைத்தியர் தானே பார்த்து Bandage போட்டு விட்டார். "கணுக்கால் சவ்வு ஈய்ந்திருக்கலாம். அல்லது எலும்பொன்று வெடித்திருக்கலாம். கண்டிப்பாக Orthopedyயிடம் போக வேண்டும்." என்றார்.

"சும்மா மெதுவாகத்தானே தடுக்கினேன். எப்படி இப்படியானது..? "
சந்தேகத்தைக் கேட்டே விட்டேன். "சில சமயங்களில் இதை விடக் கடுமையாகக் கூட நடக்கலாம்." என்றார்.

இனி என்ன செய்வது..!
"இன்று வேலைக்குப் போக வேண்டாம். நாளை Orthopedyயிடம் போ." என்றார். ஆனால் இன்று அவர் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தாலும் அது நாளை செல்லுபடியாகாது. நாளை இறுதிக் காலாண்டின் முதல்நாள். நாளை மீண்டும் குடும்ப வைத்தியரிடம் சென்று அந்தத் பத்திரத்தை வாங்கிக் கொண்டு Orthopedyயிடம் போகவேண்டும். மீண்டும் வேலையிடம் வரை நொண்டி.. மெடிக்கல் பத்திரத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். இரவு படுக்கையில் காலை அசைக்க முடியாதிருந்த போது 10யூரோவைக் கொடுத்துக் காட்டியிருக்கலாமோ என்றிருந்தது.

அடுத்தநாள் அதிகாலையே எனது குடும்ப வைத்தியரிடம் சென்றேன். 10யூரோவையும் வைத்துக் கொண்டு காத்து நின்றேன். அதிசயமாக ஒரு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. றிசப்சனில் என்ன செய்கிறார்கள் என்று கோபமாய் வந்தது. எப்படியோ ஒன்றரை மணித்தியாலங்கள் கழிய எனது முறை வந்தது. எனது மருத்துவக் காப்புறுதி கார்ட்டை கணினிக்குக் கொடுத்து என்னை அவர்கள் கணினியில் பதிந்து முடியவே அதீதமான நேரங்கள் சென்றன. எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. இரு பெண்களாக கணினியோடும் எனது தரவுகளோடும் முட்டி மோதி ஒருவாறு பதிந்து முடித்து மருத்துவரின் கையெழுத்துடன் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தார்கள்.

சரி, மீண்டும் Orthopedyயிடம் நொண்டல். அங்கும் நீண்ட வரிசை. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நின்றேன். எனது முறை வந்தது. அதே பினைவு. எனது தரவுகளைக் கணினிக்குள் கொடுக்க றிசப்சனில் இருந்த இரு பெண்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.

எனது பொறுமை ஒரு எல்லைக்கே வந்து விட்டது. "இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படிக் கணினியுடன் விளையாடப் போகிறீர்கள்?" என்று கேட்க வாயெடுத்தேன். அந்த நேரம் பார்த்து Orthopedy வெளியில் வந்தார். அவர் ஒரு நொடிப் பொழுதில் என் உணர்வுக் கொந்தளிப்பை அளந்தெடுத்து விட்டார். என்னைப் ஒரு புன்முறவலுடன் நோக்கி.. கண்களாலேயே ஒருவித மன்னிப்புக் கேட்கும் பாவனையுடன் சைகை காட்டினார். அவர் காட்டிய பக்கம் திரும்பி மேசையைப் பார்த்தேன்.

மேசையில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது

இன்று எமது கணினிக்குப் புதிய புரோக்கிராம் கொடுத்துள்ளோம். அதனால் உங்களை நாங்கள் பதிந்து முடிக்க அதீத நேரம் எடுக்கலாம். அது உங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்ப்பது போன்றதொரு பிரமையை உங்களுக்குக் கண்டிப்பாக ஏற்படுத்தும். கொதித்து விடாதீர்கள். பொறுமை காருங்கள். இது இன்று உங்களை முதல் தரமாகப் பதியும் போது மட்டுந்தான். நாங்கள் இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போது எனது கோபம் சட்டென்று தணிந்து விட்டது. இதற்காகவா இவ்வளவு போராடுகிறார்கள் என்று அந்தப் பெண்கள் மீது சிறிய பரிதாபமும் ஏற்பட்டது.

ஆனாலும் நேற்று என்னைத் திருப்பி அனுப்பிய எரிச்சல் மனதுள் இருந்ததால் என்னைப் பரிசோதிக்கும் போது மருத்துவரிடம் "நீங்கள் நடந்து கொண்டது சரியா..?" எனக் கேட்டேன். "சில வேளைகளில் சில விடயங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நேற்று என்னிடம் வேலை பார்க்கும் பெண்கள் உன்னை விட வலியில் இருந்தார்கள். அவர்கள் மூளையை இந்தக் கணினி கசக்கி விட்டது." என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்த படி "மூன்று கிழமைக்குக் காலை அசைக்காதே." என்றார். ஒரு மருத்துவத்தாதி வந்து பத்துப் போடத் தொடங்கினாள்.

Wednesday, September 29, 2004

இன்றைய எனது நிலை


வீட்டிலே நாளாந்தம் செய்யும் கூட்டல், கழுவல், துடைத்தல், அடுக்கல்... இவைகளோடு வெளி வேலைகளுக்கான ஒட்டம்.. இத்தனையும் மாற்றமின்றி ஓர் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கும் போது, மேலதிகமாக ஓரிரு வேலைகள் சேர்ந்து விட்டாலோ, அன்றி முக்கியமான விருந்தினர் யாராவது வீட்டுக்கு வரப் போகிறார்கள் என்றாலோ, மனதில் ஒருவித பதட்டம் ஏற்படும். வேலைகள் குவிந்து கிடந்தாலும் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாத அந்தரத்தில் ஒரு வேலையுமே நடவாது இருக்கும்.

இது போலத்தான் - சிந்தனைகள் ஒரு சீரில் சென்று கொண்டிருக்கும் போது நிறைய எழுதுபவர்கள் கூட, சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் சிதறும் போது திண்டாடிப் போகிறார்கள். இந்த சமயங்களில் நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். சிந்தனை ஓட்டத்தில் ஓராயிரம் சம்பவங்களும், அதனோடு சேர்ந்த கற்பனைகளும், அதையொட்டிய புனைவுகளும்... என்று பிரவாகித்து எழும். ஆனாலும் அவைகளை எழுத்தாக்க எண்ணும் போதுதான் அவைகள் எதுவுமே தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத பிரவாகங்கள் என்பது புரியும்.

சில சமயங்களில் ஏதேதோ கற்பனைகள் ஓடும். போயிருந்து எழுதுவதற்கான உந்துதல் மட்டும் சற்றேனும் இல்லாது மனம் சோம்பேறியாய் கற்பனைக்குள் மட்டும் குந்தியிருக்கும்.

அதனால், என்னை நினைந்து வந்தவர்களுக்காக...
ஒரு இனிய பாடலுக்கான சுட்டி.

Wednesday, September 22, 2004

இந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை

September 22, 2004


சிலந்தியின் ஆசை


ரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார்.

இவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார். இவரது ஆசை முற்றுமுழுதாக நிறைவேறியதோ இல்லையோ இந்த ஒரு வருடத்துக்குள் தமிழ் வலையுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

வெறுமனே வார மாத சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்தவர்களும், உள்ளக் கிடக்கைகளை நாளேட்டில் எழுதி வைத்தவர்களும்.. என்று கணிசமான தொகையினர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்து விட்டார்கள். எத்தனையோ இலைமறைகாயாக இருந்த எழுத்தார்வலர்கள், வெளியுலகத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தமது திறமை தமக்கே தெரியாமல் இருந்த பலர் தம்மாலும் முடியும் என்ற தைரியத்தோடு எழுதத் தொடங்கி விட்டார்கள். தமிழை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழோடு ஐக்கியமாகி விட்டார்கள். பாவனையிலிருந்து விலகியிருந்த எத்தனையோ தமிழ்ச்சொற்கள் மீண்டும் பாவனைக்குள்ளாகத் தொடங்கி விட்டன.

பல் வேறு தரத்தினரும், பல் வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் வலைப்பதியத் தொடங்கியதில் வலைப்பூக்களைத் தரிசிக்கும் ஒவ்வொருவருமே தத்தமது ஆர்வத்துக்கு ஏற்புடையதான விடயங்களைத் தேடி எடுத்து வாசித்து, ஏதோ ஒரு வகையில் பயனாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் காசியின் முயற்சியில் உருவான தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம், வலையுலகுக்கும் வலைப்பூ ஆர்வலர்களுக்கும் கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதம்.

இந்தளவு வளர்ந்த வலைப்பதிவுகளை இன்னும் வளர்க்கவும், பிரபல்யப் படுத்தி இன்னும் பலர் வலைப்பதிவுகளோடு இணைந்து கொள்ளவும் இது பற்றியதான கட்டுரைகளை எழுத வேண்டுமென காசிக்கு ஒரு கடிதம் வரைந்துள்ளார் ரமணி. வாசித்துப் பாருங்கள். காசி மட்டுமென்றில்லாமல் மற்றவர்களும் உங்கள் உங்கள் இடங்களில் உள்ள நல்ல பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம்.

சந்திரவதனா

September 21, 2004


புதியவர்



எதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய் இணையம் இருக்கும் தறுவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையான ஒன்றுதான்! என்கிறார் புதியவர் யூனா

chandravathanaa

ஆரம்பகால வலைப்பதிவாளர்கள்



ஆரம்பகால வலைப்பதிவாளர்கள் பலர் காணாமற் போய் விட்டார்கள். ஆனாலும் எளிதில் அவர்களை மறந்து விட முடியாது. வலைப்பதிவுகளின் மேல் இன்றைய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் வலைப்பதிவு செய்து வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.

ஆரம்ப கால வலைப்பதிவாளர்களில் சுபாவின் பதிவுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆரம்பகாலம் போல அடிக்கடி பதியாவிட்டாலும் இப்போதும் இடையிடையே வந்து ஏதாவது எழுதிக் கொண்டுதானிருக்கிறார். இவர் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் யேர்மனி பற்றிய விடயங்களை Germany in Focus என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார். இவர் இன்னும் பல வலைப்பதிவுகளை வைத்திருந்தாலும் இது பலரைக் கவர்ந்த பதிவுகளில் ஒன்று. மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் Malaysia in Focus என்ற தலைப்பில் சுபா இல்லம் ஒன்றை அமைத்து மலேசியா பற்றிய பல விடயங்களையும் எழுதத் தொடங்கினார். ஆனாலும் முந்தைய வேகம் ஏனோ இப்போது இல்லை. இவரது மலேசியா சம்பந்தமான இறுதிப் பதிவில் தாயின் மரணம் குறித்து வருந்தியுள்ளார். தாயில்லாத தாய்நாட்டுக்குப் போகும் போதான அவர் மனதின் ஆதங்கம் புரிகிறது. மனதின் சோகம்தான் எழுத்தை முடக்கியதோ என்பதுதான் தெரியவில்லை.

இவர் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வலைப்பூ ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஹரன் பிரசன்னா இவரும் ஆரம்பகால வலைப்பதிவாளர்களில் ஒருவர். நிழல்கள் என்ற பதிவில் நினைவுகளை உணர்வுகளோடு கலந்து கதையாய், கவிதையாய்... என்று பதிந்துள்ளார்.

தற்போது கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம்.. என்று மரபிலக்கியங்களையும் பதியத் தொடங்கியுள்ளார்.

இங்கு தவறாக எழுதி விட்டேன்.
மரபிலக்கியத்தை எழுதுபவர் Hari Krishnan

நா.கண்ணன் இவரும் ஆரம்பகாலப்பதிவாளர்களில் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளார். கவிதை, கட்டுரை, கொரியக் கட்டுரைகள் என்று பல தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டு வந்தாலும், 44அங்கங்களைத் தாண்டி விட்ட இவரது வைகைக்கரைக்காற்றே பலரைக் கவர்ந்த தொடர்களில் ஒன்று.

நவநீத கிருஷ்ணன் இவரது முதற்பதிவு 2002 இல் பதியப் பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் சளைக்காமல் இன்னும் பல் தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டிருக்கிறார். இவரது இறுதிப்பதிவு ப்புரோக்கிராமர்கள் பற்றியது.

செல்வராஜ் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார். இப்போது இவர் பதிவில் எதையும் வாசிக்க முடியவில்லை.

ஆரம்பகாலப் பதிவாளர்களில்
காலோரம் அலை புரண்டு கெஞ்சும்
எனினும்
வானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்

என்ற மாலனும் ஒருவர். திசைகளோடு திசை மாறி மாறி விட்டார்.

சந்திரவதனா

சாப்பாடே போச்சு



கணவன் : எப்பிடி ஒரு செல்லப்பிள்ளை போல இருந்தனான் நான்.

உன்னைக் கட்டி என்ரை வாழ்க்கை இப்பிடியாப் போச்சு....

மனைவி : ம்...

என்ரை வாழ்க்கையும் அப்பிடித்தான்.

கணவன் : என்னப்பா கண்டடிறியாத சமையல் சமைச்சு வைச்சிருக்கிறாய்?

தாயோடு சுவை போச்சு எண்டு இதுக்குத்தான் சொல்லுறது.



மனைவி : உங்களுக்காவது நான் சமைச்சு வைச்சிருக்கிறன்.

எனக்கு....!

சந்திரவதனா

வலைவலம் - 21.9.2004



அறிவியல் என்பது எந்தளவு தூரத்துக்கு வாழ்வோடு அவசியப் பட்டது என்றாலும், அதைத் தேவை கருதியே வாசிக்கிறோம். மற்றும் படி இந்த மனசு தேடுவதென்னவோ சுவையும், சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்த விடயங்களையே! இருந்தாலும் சில சமயங்களில் அறிவியலில் கூட சுவையான தகவல்கள் கிடைக்கின்றன.

முதுமையைத் தள்ளிப் போட்டு விட்டு வாழ்நாளை நீடிக்கலாம் என்றால் யார்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் விடுவார்கள். தற்கொலையின் வீதம் எந்தளவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனதும் அதி உச்சப் பயம் மரணத்தை ஒட்டியதுதானே. அந்த மரணத்தையே தள்ளிப் போடவும் மருந்து கண்டு பிடித்திருக்கிறார்களாம். யாருக்குத்தான் அதை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போகும்.

சிவப்பு வைனிலும், திராட்சைப்பழங்களிலும் காணப்படும் resveratrol என்ற வேதிப்பொருள்தான் இந்த முதுமையை விரட்டும் பதார்த்தம் என Brown, Harvard, Connecticut மூவருமாகச் சேர்ந்து பரிசோதனை செய்து கண்டு பிடித்துள்ளார்கள். முதுமையை விரட்ட நாம் கடைப் பிடிக்க வேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. சுந்தரவடிவேலுவின் அறிவியல் பகுதியில் வாசித்துப் பாருங்கள்.

விரலில் வலியேற்படும் விதமாக நறுக்கென்று குத்தி, குருதியை எடுத்துப் பரிசோதனை செய்து, சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறையை விடுத்து, ஒரு தகட்டின் மூலம் வலியே இல்லாமல் சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறை வரப் போகிறதாம். அதையும் சுந்தரவடிவேலுவின் அறிவியல்தான் கூறுகிறது.

மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு மதுரபாரதியினது. தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேசும் இவரது பதிவில் எமது முன்னோர்களோடு சம்பந்தமான எமக்குத் தெரியாத, நாம் அறியாத பல விடயங்கள் உள்ளன. அன்றைய பாடல்களையும் அதனுள் வரும் பொருட்களையும் சுட்டி சங்ககாலத்துக்கே எம்மை அழைத்துச் செல்கிறார்.

இவரது கடைசிப் பதிவு உங்களையும் ஈர்க்கலாம். சவரம் செய்து முகங்கழுவி அல்லது குளித்துத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு ஆணுக்கு அதிக நேரம் தேவையாக இருந்த போதும், அலங்காரம் என்பது என்னவோ பெண்களுக்குத்தான் சொந்தமானது என்பதாகத்தான் எல்லோருமே பேசிக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான ஆணழகனின் அலங்காரம் பற்றிய அழகிய பதிவு இது.

இவரது இந்தப் பதிவில் இன்னொரு விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நீண்ட கூந்தல்தான். அவர்களும் தலையில் பூச்சூடியுள்ளார்கள். மலர் மாலைகளை அணிந்துள்ளார்கள்.

எனக்குத் தெரிந்த வரையில் தலைக்குப் பூ வைப்பதற்கான முக்கிய காரணம் - பூக்களுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தலைநீராடிய பின் அதாவது முழுகிய பின் தலைமயிரைக் காய வைப்பதற்கான மின்சார உபகரணம் அப்போது இருக்கவில்லை. அதனால் பூக்களைத் தலையில் வைத்தே தலையைக் காய வைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எப்படியோ ஆண்களின் நீண்ட கூந்தல் குறுகி விட்டது. அதனால் அவர்களுக்கு பெரியளவாக பூக்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் பூக்களென்னவோ பெண்களுக்கே சொந்தமானது என்பது போல ஆகி விட்டது. இவரது இந்தப் பதிவே மலர் என்பது மகளிருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதற்குச் சான்றாகிறது.

அடுத்து சத்யராஜ்குமாரின் துகள்கள் சுவாரஸ்யமான பதிவுகளில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பதற்கமைய அளவாகத்தான் இவர் எழுதுவார். ஆனால் எழுதியவைகள் எல்லாமே வாசித்தோம், மறந்தோம் என்றில்லாமல் வாசித்தோம் என்று என்றைக்குமே ஞாபகம் வைத்திருக்கக் கூடிய மனதை ஏதாவதொரு வகையில் நெருடக் கூடிய பதிவுகள். அவர் எடுத்துக் கொள்ளும் கருக்களும், அதைக் கதையாகப் புனையும் தன்மையும், கதையைக் நகர்த்தும் விதமும் மிகவும் அருமை.

சந்திரவதனா

21.9.2004



September 20, 2004



ஒரு பெக் அடிச்சால்....



கணவன்: இஞ்சரப்பா எனக்குச் சரியாக் குளிருது. ஒரு பெக் அடிச்சால் நல்லா இருக்கும் போலை இருக்கு.

மனைவி: ஓமப்பா. எனக்கும் சரியாக் குளிருது.

கணவன்: என்ன...!!!!!

மனைவி: எனக்கும் குளிருது. நானும் ஒரு பெக் அடிக்கட்டே?

கணவன்: ஏய்...! பொம்பிளையள் இதுகள் குடிக்கிறேல்லை.

மனைவி: ஏன் பொம்பிளையளுக்குக் குளிராதோ...?

கணவன்: ...! ....! ...!

சந்திரவதனா

20 ஆம் நூற்றாண்டின் தமிழக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கு முயற்சி



20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தரமான ஈழத்துக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் பூ.ஸ்ரீதரசிங் மேற்கொண்டுள்ளார்.

தமிழ்க் கவிதை வரலாற்றில் ஈழத்துக் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கவனிப்புக்குரியனவாகும், முக்கியத்துவமுடையனவாகவும் அமைகின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துக்கவிதைகளை ஒரே பார்வை யில் நோக்கக்கூடியதான தொகுப்பு முயற்சியொன்று மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே, ஆ.சதாசிவம் அவர்கள் சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஈழத்துக் கவிதைகளை 'ஈழத்துத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். அத்தொகுப்பிற்குப் பின்பும் 'மரணத்துள் வாழ்வோம்', 'வேற்றாகி நின்றவெளி', 'ஈழத்துக் கவிதைக்கனிகள்' முதலிய தொகுப்பு நூல்கள் சில வெளிவந்துள்ளன.

எனினும், இத்தொகுப்புநூல்களிலும் அடக்கப்படாத தரமான கவிதைகள் பல காணப் படுகின்றன என்பது இன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கட்சி, குழு பேதமின்றி நடுவுநிலையோடு தரமான ஈழத்துக் கவிதைகளைத் தொகுக்கவிருப்பதாகவும் அத்தொகுதிக்கு பயன்செய்யத்தக்க தமது நூல்களை யும் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் போட்டோப் பிரதிகளையும் கவிஞர்கள் அனுப்பி உதவவேண்மென்றும் பூ. ஸ்ரீதரசிங் தெரிவித் துள்ளார்.

தமது கவிதை நூல்களில் மேலதிகப் பிரதிகள் இல்லாதோர், அவற்றுள் வெளி வந்த மிகத் தரமான சில படைப்புகளைப் போட்டோப் பிரதியெடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவலாம். அமரர்களாகிவிட்ட கவிஞர்களுடைய படைப்புகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, நண்பர்களோ அனுப்பி உதவும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கவிதைகளை அனுப்புவோர் கூடவே கவிதை வெளிவந்த நூலின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர் விவரம், கவிதை வெளி வந்துள்ள பக்கவிவரம் போன்றவற்றை நிச்சயமாக இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். புனைபெயர்களில் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவோர், தமது சொந்தப் பெயர், விவரத்தையும் இணைத்து அனுப்பவும். சகல கவிஞர்களும் தங்களது சுருக்கமான சுய விவரக்கோவைகளை இணைத்து அனுப்பவும்.

கவிதைகள் யாவும் தரமான நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். ஈழத்துக் கவிதைகள் பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிறநாடுகளில் போதிய அறிமுகம் இன்னும் ஏற்படாமையால் வெளியிடப்படவுள்ள தொகுப்பை தமிழ்நாட்டில் பிரசுரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி தொகுப்பு செட்டியார் தெருவில் மிகவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் புதிய காட்சியறையினது திறப்புவிழாவின்போது வெளியிடப் படவுள்ளது.

Nantri - Uthayan

இந்த அறிவித்தலை கவிஞர்கள் அறிந்து கொள்வதற்காக இங்கு பதிந்துள்ளேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை. விரைவில் அறிந்து எழுதுகிறேன்.

நட்புடன்சந்திரவதனா

அட ஒரு வருசம் ஓடி விட்டதா?



இந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்!

முதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.

மாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.

சும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.

இந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.

அந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

அன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.

அந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.

இந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா



நன்றி



ஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தீர்கள்.
இன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க என்னை மீண்டும் அழைப்பீர்கள் என நான் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள் என்ற போது, பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.

இருந்தாலும் என்னையும் ஒருவராக மதித்து நிறைந்த ஆலாபனைகளோடு வரவேற்ற மதிக்கும், என்னை வரவழைக்க வக்காலத்து வாங்கிய காசிக்கும், நான் வருமுன்னரே நிறைகுடம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு காத்து நின்று பன்னீர் தெளித்த ஜெயந்தி, ஈழநாதனுக்கும் கூட வந்து சேர்ந்து நின்று வாழ்த்திய மூர்த்தி, சாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நட்புடன்

சந்திரவதனா


September 19, 2004


ஞாயிற்றுக் கிழமை



"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்."

"ஆரப்பா உனக்குச் சொன்னது? பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே?"

"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது! புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை!!!"

"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும்."

"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்கள."

"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே?"

"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே! Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ? நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வேறை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும். நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்."

"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்."

"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............"

"இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்."

"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்?"

"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை."

"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு?"

"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.?"

"பின்னை என்ன? நீங்கள் இருந்து TV(தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ?

"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்."

"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ?"

"நான் ஆம்பிளையடி!"

"ஆம்பிளையெண்டால்...............!"

சந்திரவதனா

இனிய வணக்கம்



இனிய வணக்கம்

ஆர்வமுடன் என்னை வரவேற்ற நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.

இன்று கணினியைப் போட்டதும்தான் தெரிந்தது நான்தான் இவ்வார வலைப்பூ ஆசிரியரென்பது. அதிர்ச்சிதான்.

ஈழநாதனை முந்திக் கொண்ட ஜெயந்தியும், ஓடி வந்தும் வரிசையில் முதல் இடம் கிடைக்காது வருந்திய ஈழநாதனும் என்னை வரவேற்றும் இருந்தார்கள்.

என்னடா இது? ஒரு வார்த்தை பேசாமல் நான்தான் இவ்வார ஆசிரியை என்று மதி தீர்மானித்து விட்டாவோ! என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ! என்று எனக்குள்ளே யோசனை! பின்னர்தான் தெரிந்தது மதி ஏற்கெனவே அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தவறிவிட்டது என்பது. பரவாயில்லை.

முடிந்தவரைக்கும் எதையாவது எழுதுகிறேன். எந்த வித ஆயத்தமும் இல்லாமல் வந்து நான் தரப்போவதை இந்த ஒரு வாரமும் நீங்கள் வாசிக்க வேண்டுமென்ற நியதி போலும்.

முடிந்தால் வாசியுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

'வலைப்பூ'வின் முதலாம் ஆசிரியர்: வலைப்பூவின் அம்மம்மா



இவ்வாரம் வலைப்பூவின் சிறப்பாசிரியராக வருபவர் சந்திரவதனா. தமிழ் வலைப்பதிவாளர்களில் எண்ணிக்கையில் அதிக வலைப்பதிவு வைத்திருக்கும் சந்திரவதனா, ஊக்குவிக்கும் நற்பண்பு நிறைந்தவர். நான் அழைத்த மாத்திரத்தில் உற்சாகத்தோடு வலைப்பூவின் முதலாவது ஆசிரியராக வந்தபடியால் நான் இதைச் சொல்லவில்லை. இங்கே இருக்கும் பலரது வலைப்பதிவுகளில் இவரது கருத்துகளும் ஊக்குவிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவரது வலைப்பதிவைப் பார்த்து, 'நாமும் தொடங்கினாலென்ன?' என்றபடி தொடங்கிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.

மொத்தம் பதினாறு வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் சந்திரவதனா 'தோழியர்' வலைப்பதிவிலும் பங்குபெறுகிறார். அவருடைய பதினாறு வலைப்பதிவுகளில் இரண்டு அவருடைய மகன்களுடையது - துமிலன், திலீபன். ஒன்று அவருடைய அண்ணா - மறைந்த கவிஞர் தீட்சண்யனுடையது. மனவோசை, குழந்தைகள், மகளிர், மருத்துவம், பாடல்கள், படித்தவை, பெண்கள், Sammlung, செய்திகள், வி.ஐ.பி பெண்கள் ஆகிய பன்முகப் பதிவுகளோடு சிறுகதைகள் என்ற வலைப்பதிவில் தம் சிறுகதைகள் சிலவற்றையும் தன்னைக் கவர்ந்த பிறரின் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார். தன் கூடப்பிறந்த சகோதரர்கள் மூவரை நாட்டுக்கு அர்ப்பணித்த இவர், நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்காக ஒரு வலைப்பதிவும், புனர்வாழ்வுக்கென இன்னொரு வலைப்பதிவும் வைத்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

மேலே சொன்ன பதினாறு வலைப்பதிவுகள் தவிர, மனவோசை என்று ஒரு இணையத்தளமும் வைத்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம் என்று மிளிரும் அந்த இணையத்தளத்தில் சந்திரவதனாவின் கட்டுரைகள் பகுதிதான் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுகள் பகுதியில் இந்தக் கட்டுரைதான், உங்கள் தளத்தில் பலரும் வாசிக்கும் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன் சந்திரவதனா.(சரிதானே?) (அந்த டுபாய்புட்டெண்டா என்னெண்டும் சொல்லிப்போடுங்கோ சந்திரவதனா... ;)

வாங்கோ அம்மம்மா! இந்த ஒரு வருசத்தில என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கு. என்னமாதிரியெல்லாம் வலைப்பதிவு இலகுவாயிருக்கு. இன்னும் என்னெல்லாம் செய்யலாம் எண்டு நீங்க நினைக்கிறது. இளைய தலைமுறையை வலைப்பதிவுக்குக் கூட்டியண்டு வாறது(முதல் ஆக்கள் - தீபா, திலீபன், துமி. சரியே?) எண்டெல்லாம் சொல்லுங்க.

-மதி கந்தசாமி



ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது!



இந்த வாரம் கொஞ்சம் விசேடமான வாரம். கடந்த வருடம் ஜூலை மாதம் 'வலைப்பூ' என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருந்தாலும், அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே. அப்போதிருந்த வலைப்பதிவர்களில் தொடர்ந்து வலைபதிந்துகொண்டிருந்த மூவரிடம் 'வலைப்பூ'வை அறிமுகப்படுத்தி என்னுடைய யோசனையைச் சொன்னேன். உடனேயே ஒப்புக் கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்த அந்த மும்மூர்த்திகளை, வலைப்பூ சீராக இயங்கத் தொடங்கி ஒரு வருடம் நிறையும் இத்தருணத்தில் வாரமொருவராக அழைக்க இருக்கிறேன்.

அவர்களுக்கும், சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பையேற்று இங்கே எழுதிய 49 ஆசிரியர்களுக்கும், எல்லாரையும் விட முக்கியமாக இங்கே எழுதும் பதிவுகளைப் படித்த, படித்து கருத்துகள் எழுதிய உங்களனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

-மதி கந்தசாமி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite