சவுதியில் பெண்கள் முதல்முதலாக வாக்களிக்கவும் போட்டிபோடவும் செய்யும் தேர்தல் ஒன்று நடந்துள்ளது.

இந்த தேர்தல் நிச்சயமாக ஒரு சின்ன விவகாரம்தான் என்றாலும் குறியீட்டளவில் இது மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டது. இதற்கு முன்னால் சவுதியில் பெண்கள் தேர்தலில் வாக்களித்ததோ, போட்டியிட்டதோ கிடையாது.
பெண்களின் வாழ்வைச் சுற்றி பலவிதமான தடைகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்திருக்கும் பழமைவாத சவுதிஅரேபியாவில், இந்த தேர்தல் நடந்திருப்பது முன்னேற்றத்தின் சின்னம் என்று தாராளவாதிகள் கருதுகின்றனர்.
ஜெத்தா வர்த்தக சபை நிர்வாக வாரியத்திலுள்ள 12 இடங்களுக்கு மொத்தம் 71 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 17 பேர் பெண்கள். கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பெண்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இன்று திங்களன்றும் நாளை செவ்வாயன்றும் ஆண்கள் வாக்களிக்கிறனர். சனியும் ஞாயிறும் வாக்களிப்பு விகிதம் குறைவாக இருந்திருந்தாலும் பெண் ஆர்வலர்கள் தைரியம் இழந்துவிடாதவர்களாய் தோன்றுகின்றனர். ஆண் வாக்காளர்களிடம் இருந்து ஓரளவுக்காவது தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
சவுதிஅரேபியாவின் அளவுகோல்களைக் கொண்டு பார்க்கையில் வர்த்தக சபைகள் என்பவை நவீனமான, தாராளமயமான அமைப்புகள்தான். கடுமையான போட்டி நிலவும் உள்ளமைப்புத் தேர்தலை நடத்தும் இயக்கங்கள் என்று அவை நீண்ட நாட்களாக பெருமையும் திருப்தியும் கொண்டுள்ளன. ஆனால் பொதுவாகப் பார்த்தால், சவுதிஅரேபிய ராஜாங்கத்தில் வாக்களிப்பது என்பது ஒரு புதிய விஷயம்தான். மேலும் சீர்திருத்தத்தை விரும்பும் சவுதி மக்கள் பலருக்கு முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில்தான் வருகிறது என்ற வருத்தம்.
சவுதியில் எட்டு மாதங்களுக்கு முன் நகரசபை மன்றங்களுக்கு தேர்தல் நடந்திருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை எதுவும் இதுவரை கூடியிருக்கவில்லை என்பதுதான் சவுதியின் யதார்த்த நிலை. இந்த நகரசபை தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவோ போட்டிபோடவோ இடம் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
quelle - BBC 28 நவம்பர், 2005