Wednesday, August 31, 2016

பத்மனாப ஐயர் (பவளவிழா)




தனிப்பட்ட பத்மனாபஐயரை எனக்குத் தெரியாது. இலண்டனுக்குப் பல தடவைகள் சென்றிருந்தும் அவரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை.

"வந்தனிங்கள் சந்திச்சிருக்கலாமே, போன் பண்ணியிருக்கலாமே!" என ஓரிரு தடவைகள் வருந்தியிருக்கிறார்.

தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லாத நகரில் நான் இருக்கிறேன், எனத் தெரிந்த பின் எந்த வித பிரதிபலனையும் எதிர்பாராது அஞ்சல் மூலமாகவும், தங்கை மூலமாகவும், மகள் மூலமாகவும் எமக்கு (எனக்கும்/கணவருக்கும்) கணிசமான புத்தகங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அவரோடு பல தடவைகள் நூல்கள் சம்பந்தமாகவும், நூலகம் சம்பந்தமாகவும்,  இன்னும் அது சார்ந்த விடயங்கள் சம்பந்தமாகவும் தொலைபேசியிருக்கிறேன். மிகவும் சுவையாகப் பேசக் கூடியவர். அதாவது நகைச்சுவையாகப் பேசக் கூடியவர். அவரது ஒவ்வொரு பதிலிலும் நகைச்சுவை கலந்திருக்கும். சிரிக்க வைத்துக் கொண்டே கதைப்பார். தொலைபேசியை வைத்த பின்னும் அவரது பகிடிகளை அசைபோட்டுச் சிரித்துக் கொண்டிருப்பேன்.

எனது மனஓசை நூலைக் கூட அவர் மூலமாகத்தான் வெளியிடுவதாக இருந்தேன். பதிப்புரை கூட எழுதித் தரச் சம்மதித்திருந்தார். அந்த நூல் சம்பந்தமான கதைகளின் போதுதான் குறிப்பிட்ட சிலரது பெயர்களைச் சொல்லி அவர்களும் நூலை வாசித்துப் பார்த்து, சிலதைத் தணிக்கை செய்வார்கள் என்றார்.

பத்மனாபஐயரின் கதையில் அவர்கள் அதை வாசித்து, தணிக்கை செய்து... நூல் வெளி வர 2-3 வருடங்களோ இன்னும் கூடவோ தேவைப்படலாம் என்று தெரிந்தது. அத்தோடு எனது படைப்புகளைத் தணிக்கையின் பெயரில் வெட்டிக் கொத்த அவர்களையோ அன்றி வேறுயாரையுமோ அநுமதிக்கும் மனநிலையும் எனக்கு இருக்கவில்லை.

எனக்குத் தெரிய பலரது புத்தகங்கள் பத்மனாபஐயர் குறிப்பிட்ட அந்த நபர்களின் மெய்ப்புப் பார்த்தல்களால் வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருந்தன. ஓரிரு தொகுப்புகளில் எனக்குத் தெரிந்த ஓரிரு அருமையான சிறுகதைகள் வெட்டிக் கொத்தி சிதைக்கப் பட்டு பிரசுரமாகியுமிருந்தன. ஓரிரு மாதங்கள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் கதைக்கும் போது என்ரை புத்தகத்தை வேறையேதாவது வழியிலை வெளியிடுறன். நீங்கள் தனியாள் இல்லை. உங்களுக்கு கனக்கச் ´சிண்`ணுகள் இருக்கினம். அவையள் எல்லாரும் வாசிச்சு, ஓம் பட்டு, வெட்டிக் கொத்தி... அப்பிடி வேண்டாம். நானே செய்யிறன் என்றேன்.

அப்பிடிச் சொல்லுறிங்களோ..? என்று விட்டுப் பலமாகச் சிரித்தார்.

எனது மனஓசை நூல் வெளிவந்த பின் என்னிடம் தந்திருந்தால் நான் இதை இன்னும் வடிவாச் செய்து வெளியிட்டிருப்பன் என்று சொல்லி வருந்தினார். சில தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.

எனக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. பத்மனாபஐயரின் பதிப்புரையுடன், தமிழியல் வெளியீடாக அது வந்திருந்தால் நூலுக்கு ஒரு தனிமதிப்பு இருந்திருக்கும். மகிழ்வாகவும் இருந்திருக்கும்.

அதே நேரம் நூல் வெளிவராமலேயும் இருந்திருக்கலாம்.

தொடர்ந்த காலங்களில் எனது அண்ணனின் தீட்சண்யம் நூலாவதற்கும், தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள் கொடி நூலாவதற்கும் சுவடி பதிப்பகத்துடன் தொடர்பு கொண்டு தன்னாலான உதவிகளைச் செய்திருந்தார்.

இப்படி அவர் எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு உதவியுள்ளார். எத்தனையோ பேரது புத்தகங்களை வெளிக் கொணர்ந்திருக்கிறார். அவரது, அவர் பற்றிய புத்தகம் வெளிவரும் போது இப்படியொரு பிரச்சனையைக் கொடுத்தது மட்டுமல்லாது, அவரது 75வது பிறந்தநாளை ஒட்டிய பவளவிழாவை மனச் சந்தோசத்தோடு கொண்டாட விடாது அவரோடு ஒட்டியிருந்த அவரது நட்புகளே அவரைச் சங்கடப் படுத்தியிருக்கிறார்கள் என்னும் போது உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

சந்திரவதனா
31.08.2016

Tuesday, August 30, 2016

மந்தாரை




எனது வேலைத்தளத்தில் ஒரு நடைமுறை இருக்கிறது. 50 வது பிறந்தநாளுக்கு சிற்றுண்டிகளுடன் ஒரு தேநீர் விருந்து வைத்து ஒரு பூங்கொத்தும், இரண்டு செக்ற் போத்தல்களும் பரிசாகத் தருவார்கள்.

நான் 50க்கு வரும் போது எனக்கு ஏதாவது தரும் எண்ணம் இருந்தால் பூங்கொத்துக்குப் பதிலாக ஒரு பூஞ்செடி தந்து விடுங்கள் என்றொரு அறிவித்தல் கொடுத்தேன்.

2001 இல் அவர்கள் எனது பத்தாவது வருட சேவையைக் கௌரவித்து நட்சத்திர உணவகத்துக்கு அழைத்து விருந்தோடு, ஒரு அழகான பூங்கொத்தும், இரு செக்ற் போத்தல்களும், ஒரு பவுண் காசும் தந்திருந்தார்கள். அந்தப் பூங்கொத்து ஒரு கிழமை அழகாக எனது வரவேற்பறையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. இரண்டாவது கிழமை குப்பைவாளிக்குள் முடங்கிக் கொண்டது. அதனால்தான் அப்படியொரு அறிவித்தல் கொடுத்தேன்.

எனது விருப்பத்தை சந்தோசமாக ஏற்றுக் கொண்டு எனது 50வது பிறந்த நாளுக்கு மந்தாரைமலர்(Orchideen) செடிகளைப் பரிசாகத் தந்தார்கள். எனது வீட்டுக்குள் ஊதா, மஞ்சள், வெள்ளை என்று மூன்று வர்ணங்களில் மூன்று மந்தாரைச் செடிகள் வந்து சேர்ந்தன. மூன்றும் இந்த ஏழு வருடங்களாக காலையில் எழுந்ததும் என்னை மகிழ்விப்பவைகளில் ஒன்றாக மாறி மாறிப் பூத்துக் கொண்டே இருக்கின்றன. (இதற்கு மந்தாரை என்ற பெயர் சரிதானா என்பது தெரியவில்லை)

தற்சமயம் எனது வேலைத்தளத்தில் முற்கூட்டியே குறிப்பிட்டவர்களுக்கு மின்னஞ்சல் எழுதி பூங்கொத்தை விரும்புகிறீர்களா அல்லது பூஞ்செடியை விரும்புகிறீர்களா? எனக் கேட்டு விடுகிறார்கள்.

நேற்றைய ஒரு தேடலின் போது கண்களில் தட்டுப்பட்டது
Orchideen க்கான வாழ்வு காலம் 10வருடங்கள் மட்டுமே

சந்திரவதனா
30.08.2016
 

Monday, August 29, 2016

தேவதைகள்




உடைகள் வாங்க என்று கடை கடையாய் ஏறி இறங்குவது எனக்குப் பிடிக்காத விடயங்களில் ஒன்று.

இம்முறை கோடை விடுமுறை தொடங்கிய உடனேயே பேத்தி சிந்து, தங்கை நிலாவுடனும், அம்மாவுடனும் அதாவது எனது மகளுடனும் எம்மிடம் வந்திருந்தாள். அவள்தான் எமது முதல் பேத்தி. பிறந்த போது ஒரு தேவதை போல இருந்தாள். அவளின் வருகைகளுக்காக நான் ஒவ்வொரு முறையும் காத்திருந்தேன். அவளது அருகாமையும், கொஞ்சும் சிரிப்பும், சிணுங்கலும், அழுகையும், ஸ்பரிசமும் வாழ்க்கையின் அதிஇன்பமான பொழுதுகளில் ஒன்றாக என்னை மகிழ்வித்தன.

இம்முறை வரும் போது அவளுக்குப் பதின்மூன்று வயது.

வந்த அன்றே அவளை சுப்பர்மார்க்கெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போனேன். உள்ளே போனதும் தேவையானவைகளை எடுக்கும் படி சொன்னேன். Are you sure? என்று கேட்டு நான் சொன்னதை உறுதிப் படுத்திக் கொண்டு, கொஞ்சநேரம் கடைக்குள் காணாமல் போனாள். மீண்டும் வரும் போது கைகள் நிறைய விதம்விதமான நிறங்களில் 7-8 நகச்சாயங்கள் (Nail Polish) நிறைந்திருந்தன. வண்டிலுக்குள் போட்டு விட்டு மீண்டும் மீண்டுமாய் ஓடி அலங்காரப் பொருட்கள், ஓவியம், கைவேலைகளுக்கான பொருட்கள் என்று வண்டிலை நிறைத்தாள்.

எல்லாம் முடிந்து அவள் என்னருகில் வந்த போது சொக்கிளேற்ஸ் எடுக்கவில்லையா? என்றேன். சட்டென தலையைச் சரித்து தனது இல்லாத இடுப்பைக் கிள்ளிப் பார்த்து விட்டு, No அம்மம்மா. No Sweetsஎன்றாள்.

மாலைகளில் ஐஸ்கிறீம் சாப்பிட்டது வேறுகதை.

அன்றிரவு படுக்கைக்குப் போக சற்றுமுன்னர் என்னிடம் வந்து "நாளைக்கு என்னென்ன பிளான் எல்லாம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்டாள். "ஏன்? என்ன விசயம்?" என்று கேட்ட போது தனக்கு ஒரு நீச்சலுடை வாங்க வேண்டுமென்றாள்.

சரி. காலையில் வேளைக்கே புறப்பட்டோம். Schwäbisch Hall இன் அனேகமான எல்லா உடுப்புக் கடைகளிலும் ஏறி இறங்கிய பிறகே அவளுக்குப் பிடித்தமான நீச்சலுடை கிடைத்தது. ஒவ்வொரு கடையிலும் அவள் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து, என்னைக் கூப்பிட்டுக் காட்டி... இரண்டு நீச்சலுடைகள் வாங்கியிருந்தாள். 4 மணித்தியாலங்களுக்கு மேல் கரைந்திருந்தன. எனக்குப் போதும் போதும் என்றாகியிருந்தது.

கடைக்கு வெளியில் வந்ததும் Thank you அம்மம்மா. எனக்காக இவ்வளவு நேரத்தைச் செலவு செய்ததற்கு Thank you கட்டிப்பிடித்து வார்த்தைகளால் கொஞ்சினாள். எல்லா அலுப்பும் அதோடு போய் விட்டது. கடும் வெயிலிலும் நான் குளிர்ந்து போனேன்.

இப்படியே ஒவ்வொரு இரவும் அவள் ஒவ்வொரு விண்ணப்பம் வைப்பாள். ஒரு காற்சட்டை வேண்ட வேண்டும். ஒரு மேற்சட்டை வேண்ட வேண்டும்... என்று அடுத்த காலையில் நான் அவளோடு Schwäbisch Hall இன் கடைகளெல்லாம் ஏறி இறங்குவேன்.

எஞ்சிய பொழுதுகளில் தங்கை நிலாவுடன் ஓவியம் வரைவாள். கைவேலைகள் செய்வாள். இடையிடையே காணாமல் போகும் பொழுதுகளில் கண்ணாடியின் முன் நின்று தன்னை அலங்கரிப்பாள். என்னையும் கூப்பிட்டு எனது நகத்துக்கும் சாயம் பூசி விடுவாள். அடிக்கடி எனது அறைக்குள் போய் தனது வெயிற்றைப் (Weight) பார்ப்பாள். தனது எடை எவ்வளவு என்பதை மட்டும் எங்கள் யாரையும் பார்க்க விட மாட்டாள். தினமும் எனது X-Bike இல் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் என்று உழக்குவாள். தனது இடுப்பை அவ்வப்போது கிள்ளிப் பார்ப்பாள்.

நிலாவின் மீது கோபம் வரும் போதெல்லாம் அவளை 'வைரஸ்' என்பாள்.

போகும் போது "Thank you அம்மம்மா. எனக்காக நேரங்களைச் செலவழித்து எனது விடுமுறையை இனிமையாக்கியதற்கு Thank you" என்று வார்த்தைகளால் கொஞ்சி விட்டுப் போனாள். மூன்று கிழமைகள் பறந்து விட்டன. அவள் நினைவுகள் என்னுள்ளே வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

அவள் இன்னும் எனக்குத் தேவதைதான்.

சந்திரவதனா
29.08.2016

Tuesday, August 23, 2016

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

பழம் நழுவிப் பாலில் விழலாம்.
அலைபேசி நழுவி நிலத்தில் விழலாமா?

அதனால்தான் அலைபேசி விழும் வேகத்தையும் விட அதிவேகமாய்
விழுந்து அலைபேசியைப் பிடித்துக் கொண்டேன்.
அப்பாடா என்று எழுந்த போது ஒரு அழைப்புச் சத்தம்.

யாராவது என்னை அழைக்கிறார்களா அல்லது நான் யாரையாவது அழைக்கிறேனா என முதலில் புரியவில்லை. பார்க்கவும் ஒன்றும் தெரியவில்லை. சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. எதுவாயினும் பரவாயில்லை என்று முதலில் அலைபேசியை முழுவதுமாக நிறுத்தினேன்.

சில விநாடிகள் கழித்து கடவுச்சொல்லைக் கொடுத்து அலைபேசியைத் திறந்து பார்த்தேன்.

இப்படியும் நடக்க வேண்டுமா? மிகுந்த சங்கடமாகி விட்டது.

Facebook Messenger இனூடு அந்த அழைப்பு கனடாவுக்குப் போயிருக்கிறது.
அப்போது கனடாவில் நேரம் அதிகாலை 3,50.

எத்துணை அசௌகரியப் பட்டாரோ?

துயில் கலைந்தாரோ? தொடர்ந்து துயின்றாரோ? துயிலமுடியாது அவதிப்பட்டாரோ?

இன்னும் என்னால் மனச்சங்கடத்திலிருந்து விடுபட முடியவில்லை.

தவறுகள் இப்படியும் நடக்க வேண்டுமா?

சந்திரவதனா
23.08.2016 

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite