Tuesday, August 02, 2005

அத்திக்காயும் சித்தப்பாவும்

அன்று 1976 ம் ஆண்டு ஜனவரி 12ந் திகதி.
நான் A/L (கபொத உயர்தரம்) படித்துக் கொண்டிருந்த காலம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்கிகளை வானொலியில் ஒலிக்கவிட்டு அந்த இசை பின்னணியில் ஒலிக்க நான் படித்துக் கொண்டிருந்தேன்.

பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அதை ரசித்தவாறே படிப்பது அதாவது Pure Maths, Applied Maths செய்வதில் எனக்கு அலாதி பிரியம். நேரம் போவதே தெரியாமல் செய்து கொண்டே இருப்பேன்.

அப்படியொரு இதமான மாலை நேரத்தில்தான் அன்று சித்தப்பா வந்தார்.
சித்தப்பா, அப்பாவின் ஒன்று விட்ட தம்பி என்பதால் நாங்கள் அவரை சித்தப்பா என்று கூப்பிட்டாலும் அவர் எங்களுக்கு ஒரு அண்ணன் போலத்தான். அம்மாவுக்கோ அவர் ஒரு பிள்ளை போல.

எங்கள் வீட்டில் எல்லா வேலைகளிலும் அவர் கை பட்டிருக்கும். எங்களுடன் சேர்ந்து எங்கள் புத்தகங்கள் கொப்பிகளுக்கு கவர் போடுவதிலிருந்து, பூமரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது வரை வீட்டிலுள்ள அத்தனை வேலைகளிலும் அவரது வாசமும் வீசும்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சித்தப்பாவின் சினேகமான உறவையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் பார்த்துக் கொண்டே, உணர்ந்து கொண்டே நான் வளர்ந்தேன். அவரது வேலையின் நேர்த்தி என்னை அதிசயிக்க வைக்கும். செய்வன திருந்தச் செய் என்பதை அவர் செய்தே காட்டினார்.

அம்மாமேல் அவர் வைத்திருக்கும் பாசத்தில் அப்பாச்சி பொறாமைப் படுவா. எனது மாமிமார் சொல்லுவார்கள் "சின்னண்ணாவுக்கு அண்ணிதான் அம்மா" என்று.

அந்த நேசமான சித்தப்பா வந்ததும் நான் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவருடன் கதையளக்க எழும்பி விட்டேன். அவருடன் கதையளந்த படியே எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தையில் உள்ள கதிரைகள் வரை சென்று நான் அமர, அவர் இன்னொரு கதிரையில் அமர எங்களுடன் எனது தம்பிமார், தங்கைமாரும் சேர்ந்து கொள்ள மிகவும் சுவையாகக் கதை போய்க் கொண்டிருந்தது.

அம்மா மட்டும் குசினிக்குள் அடுத்த நாளுக்கு அடுத்தநாள் வரப்போகும்
தைப்பொங்கலுக்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தா. இடையிலே நாங்கள் கொறிப்பதற்கு பொரிவிளங்காய், வடை, முறுக்கு... என்று பலகாரங்களும் கொண்டு வந்து தந்து விட்டுப் போனா.

நாங்கள் அவைகளைச் சுவைத்த படியே யார் யாருக்கு என்னென்ன பாடல்கள் பிடிக்கும் என்பதையும், அவை பிடித்ததற்கான காரணங்கள் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்தோம்.

தங்கை "எனக்கு, சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்றல் காற்று... என்ற பாட்டுப் பிடிக்கும். அதிலை காற்று இல்லை காத்து எண்டு வருதே அது நல்லாயிருக்கு" என்றாள்.

தம்பி "எனக்கு ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக்கிளியே அழகிய ராதா... என்ற பாட்டுப் பிடிக்கும்." என்றான்.

எனக்குத் தெரியும், அவனுக்கு ஏன் அந்தப் பாட்டுப் பிடிக்கும் என்று. அவனுக்கு அவனோடு படிக்கும் ராஜகுமாரியில் ஒரு விருப்பம் அதுதான்.
நான் அவனை அர்த்தத்தோடு பார்த்துச் சிரித்துக் கொண்டேன்.

இப்படியே வயதின் படி ஒவ்வொருவரும் பாடல்களையும் விளக்கங்களையும் சொல்லிப் பாடியும் காட்டினோம். இறுதியாக எங்களுக்குள் வயது கூடிய சித்தப்பாவின் முறை வந்தது.

அவர் "எனக்கு, அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே... அந்தப் பாடல் பிடிக்கும்" என்றார். பாடலில் உள்ள மடக்குஅணியின் அழகு பற்றி அழகாக விளக்கினார். விளக்கிய பின் மிக அழகாகப் பாடியும் காட்டினார்.

அன்றுதான் எனக்கு அந்தப் பாடலின் அருமையே தெரிந்தது. சித்தப்பா பாடியதில் எங்களுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது. "சித்தப்பா இன்னொருக்கால் பாடுங்கோ" கோரசாய் கேட்டோம். எங்கள் வேண்டுதலுக்காய் அவர் இன்னொருதரம் பாடினார்.

அதன் பின் அம்மா தந்த தேநீரைக் குடித்து விட்டு, "பொழுது பட்டிட்டுது. நான் போகோணும். இண்டைக்கு நைற்டியூட்டி." என்று சொல்லியபடி எழும்பியவர் அம்மாவிடம் எட்டி "அண்ணி மில்லிலை திரிக்க வேண்டிய பயறு, உழுந்து, மிளகாய் எல்லாத்தையும் ரெடியாக எடுத்து வையுங்கோ. நான் நாளைக்கு 11 மணிக்கு வாறன்." என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.

அத்திக்காய் பாடலின் அழகும் இனிமையும் இன்னும் நெஞ்சுக்குள் தித்தித்திருக்க அவர் போய்விட்டார். அடுத்த நாள் 13ந் திகதி. 10 மணிக்கே அம்மா, வறுத்த பயறு, உழுந்து, மிளகாய்.... எல்லாவற்றையும் பைகளில் (Bags) போட்டு ஆயத்தமாக வைத்துவிட்டு சித்தப்பாவின் வரவுக்காய் காத்திருந்தா.

11 மணிக்குச் சித்தப்பா வரவில்லை. சொன்ன நேரம் தப்பாதவர் சித்தப்பா. இன்று 11.10 க்கும் வரவில்லை.

நாங்கள் எங்களெங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் எங்கள் மனசுகள் மட்டும் சித்தப்பாவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தன.

வழமை போல அம்மா, அப்பாவின் மற்றைய சகோதரர்களுக்காக எடுத்து வைத்த தைப்பொங்கல் உடுப்புகளுடன் சித்தப்பாவின் உடுப்பும் அவருக்காகக் காத்திருந்தது.

பொங்கலுக்காக லீவெடுத்துக் கொண்டு வந்திருந்த அப்பா தம்பிக்கு பட்டம் கட்டிக் கொண்டிருந்தார்.

11.15 ஆகியது. யாரோ கேற் திறக்கும் சத்தம் கேட்டது. சித்தப்பாதான் என்று என் மனது சொல்லியது.

ஆனால் வந்ததோ வேறொருவர்.

எதிர் பார்த்த எம்மனதுக்கு விருந்தாக எதுவும் கொண்டு வராமல், இடி விழுத்த வந்தது போல, கரண்ட் அடித்து சித்தப்பா கருகி விட்ட செய்தியைத்தான் அவர் காவி வந்திருந்தார்.

அன்றிலிருந்து சித்தப்பாவும் இப்பாடலும் என்னுடன் பின்னிப்பிணைந்து என் நினைவுக்குள் அமர்ந்து விட்டன.

இப்பாடலைக் கேட்கும் போது எல்லோரும் பாடலின் அழகிலும் சிலேடையிலும் மயங்கிப் பாடலை ரசிப்பார்கள். நானோ சித்தப்பாவின் நினைவுகளில் மூழ்கி விடுவேன்.

சந்திரவதனா
யேர்மனி
2001

4 comments :

தருமி said...

இதுவரை எப்படியோ, இனி இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அந்த முகம் தெரியாத சித்தப்பாவின் முகமே எங்களுக்கும் தெரியும்.

Chandravathanaa said...

தருமி
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

Sud Gopal said...

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும்...
ஹூம்ம்ம்ம்...

Chandravathanaa said...

உண்மைதான் சுதர்சன். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கும்...

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite