Friday, July 28, 2006

தாயகம் நோக்கி - 1

12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான தயாகம் நோக்கிய பயண அனுபவங்கள்

மெல்லிய பய உணர்வுகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க நான் இன்னும் கொழும்பு வீதிகளில்தான் திரிந்தேன்.

வன்னி நோக்கிய பயணத்தைப் பற்றித்தான் எனக்குப் பயம். வழியில் யாரும் வெடி வைப்பார்களா..?! நான் மாவீரர்களின் சகோதரி என்பதை இராணுவம் கண்டு பிடிக்குமா..?! என்பதை எல்லாம் விட, எம்முடன் நாம் கொண்டு வந்த ஃபைபர்கிளாஸ் (Fiber Glass) இல் கால் செய்வதற்கான உபகரணங்களும், மருந்துப் பொருட்களும்தான் இராணுவத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம்.

ஆனாலும் கொழும்பு வீதிகளில் திரிகிறேன். எம்மோடு நாம் கூட்டி வந்த செயற்கைக் கால் செய்வதற்கான யேர்மனியத் தொழில் நுட்பவியலாளரான திரு.ஹொல்ஹெர்.தாம் (Holger Thamm) க்கு வன்னிக்குச் செல்வதற்கான அனுமதியான எம்.ஓ.டீ (MOD) எடுப்பதில் தாமதம். அதுதான் அவரோடு என் கணவரும் ஓடிக் கொண்டு திரிகிறார். வழமைபோல் நான் தனியேதான். யேர்மனியப் பதினாறு வருட வாழ்க்கையில் தனிமை எனக்குப் புதிதில்லை. தனிமை என்னை ஒரு போதும் கொன்றதுமில்லை.

ஆனாலும் நாள் முழுவதும் ராஜசிங்க வீதியில் எமக்காக ஒதுக்கப் பட்ட வீட்டில் தனியே குந்திக் கொண்டிருப்பதை விட கொழும்பு வீதிகளில் திரிவது பரவாயில்லாமல் இருந்தது. வெயில்தான் கொளுத்தி எறிந்தது.

வீதி ஒழுங்குகள் வாகனங்களின் வேகங்களில் கரைய அங்கு பாதை கடப்பதே சாதனை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாதை கடப்பதில் சாதனை புரிந்தேன். இன்டர்நெட் கடை தேடி யேர்மனியில் விட்டு வந்த எனது பிள்ளைகளுக்கு மின்னஞ்சல் செய்தேன். இளநீர்க் கடைகளைக் கடக்கும் போதெல்லாம் ஒன்றுக்கு மூன்றாய் இளநீர் வெட்டுவித்துக் குடித்தேன்.

மதியமானதும் வீட்டுக்குச் சென்று உடை மாற்றி அதே ராஜசிங்கவீதியில் இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டுக்கு மதிய உணவுக்காகச் சென்றேன். அது எனது மைத்துனரின் (கணவரின் சகோதரனின்) வாசஸ்தலம். 1983 க் கலவரத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் அந்த வாசஸ்தலத்தில் எப்போதும் சாப்பாட்டில் குளியல்தான். கணவரின் அண்ணி உபசரிப்பதில் விண்ணி. இரண்டு மூன்று நாட்களில் உடல் உப்பி உடைகளெல்லாம் இறுக்கி....

ஹொல்கெருக்கும் உடைகள் வெடிப்பதற்குத் தயாராக இருந்தன. உறைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு... என்று வியந்து வியந்து, குழந்தை போல விரல்களால் அளாவி, அள்ளி எடுத்து வாயில் திணித்து, ரசித்து, சுவைத்து, வியர்வை நெற்றியில் துளிர்த்து... பின் ஆறாய் ஓட "ஊ... ஆ.." என்று அவர் சாப்பிட்ட போது சிரிப்பாய் இருந்தது.

எம்.ஓ.டீ (MOD) க்கான காத்திருப்புக்கள் எரிச்சலைத் தந்தன. நானும் எனது கணவரும் 1981 இல் வழங்கப்பட்ட சிறீலங்கா அடையாள அட்டையை வைத்திருந்ததால் அதனுடன் வன்னி செல்லத் தீர்மானித்து இருந்தோம். ஆனால் ஹொல்ஹெருக்கு எம்.ஓ.டீ (MOD) கட்டாயம் என்பதால் 500 ரூபா லஞ்சம் கொடுத்து விட்டுக் காத்திருந்தோம்.

ஐந்தாம் நாள் 17.5.2002 அன்று எம்.ஓ.டீ (MOD) கிடைத்து விட்டதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து வருவதற்காகக் கணவரும் ஹொல்ஹெரும் சென்று விட மீண்டும் கொழும்பு வீதிகளில் திரிந்தேன். வெள்ளவத்தைத் தமிழருக்கு வணக்கம் என்பதன் அர்த்தம் தெரியுமோ? நுனி நாக்கு ஆங்கிலம்.... வீட்டுக்கு இரு வேலைக்காரர்கள்... நாட்டு நடப்புகள் பற்றி இவர்கள் அறிவார்களோ...? மனசுக்குள் ஏனோ எரிச்சலான கேள்வி எழுந்தது.

இரவு வன்னிக்குப் பறப்படுவதாகத் தீர்மானிக்கப் பட்டது. கொழும்பில் புதிதாகத் திறக்கப் பட்டிருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகத்தினர் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் தனியார் வாகனம் ஒன்றை ஒழுங்கு படுத்தித் தந்தார்கள். முற்பணம் கொடுத்தால்தான் தொடரும் என்று தொலைபேசி அழைப்பு வர பயணத்துக்கு 4 மணி நேரம் முன்பு மீண்டும் எனது கணவர் ஓடிச் சென்று 10,000ரூபா கொடுத்து வந்தார்.

இரவு 9மணிக்கு நாம் ஐந்து நாட்கள் தங்கியதற்கான வாடகையாக 15000ரூபாவை, வீட்டு உரிமையாளரிடம் கொடுத்து விட்டு ராஜசிங்க வீதியில் இருந்து புறப்பட்டோம். புறப்படும் போதுதான் அன்று எமது 26வது திருமணநாள் என்பதை வழியனுப்பியவர்களுக்குச் சொல்லி வாழ்த்தைப் பெற்றுக் கொண்டோம்.

வாகனத்தில் ஏறிய பின்தான் சாரதி சிங்களவன் என்பது தெரிந்தது. பயம் இரட்டிப்பானது. நாம் கதைப்பது அவனுக்கு விளங்குவது போலிருந்தது. அவன் சிங்களத்தில் மட்டுமே கதைத்தான்.

கொழும்பு தாண்டிய பின் வன்னியை நோக்கிய அந்த இரவுப் பயணம் எனக்குள் மிகுந்த திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இயற்கை அழகின் மேல் போர்த்தியிருந்த இரவின் அமைதி அசாதாரணமாகவே தோன்றி என்னை அச்சப் படுத்தியது. போதாததற்கு சிங்கள சாரதி. மனசு அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்பட்டு விடக் கூடாது எனப் பிரார்த்தித்தது.

எம்மோடு தொற்றிக் கொண்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் கொழும்பு அலுவலக அன்பர்களில் ஒருவரான சிவா மாஸ்டர், சிங்களவனை சாரதியாக நியமித்ததற்காக எனது கணவரது கண்டனதுக்கு ஆளானார். அவருக்கும் சிங்களவன் சாரதியாக வரப் போவது தெரியாது இருந்திருக்கிறது. தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் வாகனம் ஒழுங்கு படுத்தப் பட்டுள்ளது. சாரதியாக சிங்களவனும் கடமையாற்றுகிறான். எப்படியோ அந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. நல்லதுக்கா, கெட்டதுக்கா என்று தெரியாத குழப்பம் எம்மைப் பற்றிக் கொண்டது. பயணம் சிங்களப் பாடல்களுடன் தொடர்ந்தது.

சிங்கள சாரதிக்கு இது வன்னியை நோக்கிய முதற் பயணமாம். தேங்காய்ப் பூரானை நினைவு படுத்தும் குருநாகலில் திடீரென சாரதி இறங்கி ஒரு தேநீர்க் கடைக்குள் நுழைந்து கொண்டான். அது அர்த்த ஜாமம். அவன் ஏன் போகிறான்? கடைக்குள் என்ன கேட்கிறான்? என்பது தெரியாததால் பயம் என்னைச் சித்திரவதை செய்தது.

"வாகனத்துக்குள் தமிழர். வெட்டுங்கள்" என்பானா?! திகில் நினைவுகள் எனக்குள் தோன்றிய அடுத்த கணமே, சிறியவர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றிய ஆண்கள் கும்பல் ஒன்று வாகனத்தைச் சூழ்ந்து கொண்டது. பார்த்தால் காடையர்கள் போலத் தெரிந்தார்கள். வாகனத்துக்குள் தலையை நுழைத்து ஏதோ சிங்களத்தில் கேட்டார்கள். தமிழ், வன்னி என்ற வார்த்தைகள் அவர்கள் கதைகளுக்குள் அடிக்கடி வந்தன. நான் பயத்தில் உறைந்து போனேன்.

சிவா மாஸ்டரும் கணவரும் சிங்களத்தில் பதில் சொன்னார்கள்.சாரதி வாகனத்துள் ஏறிய பின்னும் இழுத்துப் பிடித்து ஒருவன் சிங்களத்தில் கத்திக் கத்திக் கதைத்தான். அவன் உருவம் கூடப் பயத்தையே தந்தது. ஒருவாறு வாகனம் புறப்பட்ட பின்தான் எனக்கு சீரான மூச்சு வரத் தொடங்கியது. "என்ன பிரச்சனை..?" என்று கேட்ட போது "ஒன்றுமில்லை. அவர்கள் சும்மாதான் கதைத்தார்கள்" என சிவா மாஸ்டரும், எனது கணவரும் சொன்னார்கள். ஏனோ அவர்கள் சொல்வதில் முழுமையான நம்பிக்கை எனக்கு வரவில்லை. சாரதி பாதை கேட்கத்தான் கடைக்குள் போனானாம்.

ஒரு காலத்தில் அப்பா கடமையாற்றிய நாகொல்லகம, களனியா போன்ற இடங்களைத் தாண்டுகையில் பயங்களுக்கு நடுவிலும் குழந்தைப் பருவத்தில் அம்மா, அப்பாவுடன் அங்கு கழிந்த பொழுதுகளும் இளமைக்கால இனிய நினைவுகளும் மனசுக்குள் வந்து இனிய ராகமிசைத்தன. நாகொல்லகம ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் இருக்கும் ரெயில்வே குவார்ட்டர்ஸ் இல் நின்ற குண்டுமணிச் செடியும் புலம்பெயர்ந்த பின் ஐரோப்பிய ஈழமுரசில் பிரசுரமான என் குண்டுமணி மாலை சிறுகதையும் நினைவில் வந்து போயின.

அநுராதபுரத்தைத் தாண்டுகையில் நான் மட்டுமல்ல, தடைமுகாம்களின் தடங்களோடு இருந்த அதன் அமைதியில் சாரதி கூட அச்சப்பட்டான் போலத் தெரிந்தது. பாதை பிரிகையில் எந்தப் பக்கம் போவதென்று தடுமாறினான். தாண்டிய பின் சாரதிக்கு நித்திரை தூங்கியதால் வெள்ளை அப்பங்கள் நூற்றுக் கணக்கில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு தேநீர்க்கடையின் முன் மீண்டும் வாகனத்தை நிறுத்தினான். நாங்களும் இறங்கிக் கடைக்குள் புகுந்து கொண்டோம். எல்லோரும் எங்களை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சந்தோசமாக வரவேற்றார்கள். அவர்கள் சிங்களவர்களா தமிழர்களா என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. பாஷைகள் அதிகம் தேவைப்படவில்லை. ஆனால் பேசினோம் பார்வைகளால்.

சாரதி தேநீர் குடிக்க நாங்கள் சோடா குடித்தோம். (அதிகமான இனிப்பில் தாகம் அதிகரித்தது.) அப்போதுதான் சாரதியை நேராகப் பார்த்தேன். அவன் கண்களில் நட்புத்தான் தெரிந்தது. எந்த வித இனக்குரோதமும் தெரியவில்லை. சிநேகமாகச் சிரித்தான்.

தொடர்ந்த வவுனியா நோக்கிய பயணத்தில் சிக்கல் எதுவும் மட்டுமல்ல, எனக்குள் பயம் கூட இருக்கவில்லை. அவனோடு தேவைக்குத் தமிழில் பேசினேன். அவன் சிங்களத்தில் பதில் தந்தான். மதவாச்சி தாண்டியதும் தமிழ்ப் பாடல்கள் போட்டான்.

அதன் பின் தடைமுகாம்களின் அடையாளங்கள் வழி வழியே இருந்தாலும் அநாவசியப் பயங்கள் ஒளிந்து, மனசு எதையோ எதிர்பார்த்து இன்பராகம் இசைக்கத் தொடங்கியது. உணர்வுகள் கனவும் கற்பனையுமாய் இறகு கட்டிப் பறக்கத் தொடங்கியது. "விரை விரை, தமிழீழம் எமக்காகத் காத்திருக்கிறது." என்று எதுவோ என்னை அவசரப் படுத்தியது.

மனசு கேட்ட படி விரையாவிட்டாலும் வாகனம் தனக்கே உரிய விரைவோடு வவுனியாவுக்குள் புகுந்த போது வவுனியா தூங்கிக் கொண்டிருந்தது. வன்னி லொட்ஜில் தங்கி சற்று ஆறி, பயணத்தைத் தொடரலாம் என எண்ணியதில் வவுனியாவில் இருக்கும் வன்னி லொட்ஜினுள் புகுந்து கொண்டோம்.

சந்திரவதனா
யேர்மனி
2002

- தொடரும் -

8 comments :

வெற்றி said...

நல்ல பதிவு. துவக்கமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.அடுத்த பதிவைப் படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். நானும் கடந்த வருடம் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவி[தொண்டர் சேவை] செய்யச் சென்றிருந்தேன். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. நேரம் கிடைக்கும் போது என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

Chandravathanaa said...

வெற்றி
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

உங்கள் அனுபவங்களையும் கண்டிப்பாக எழுதுங்கள்:

Sivabalan said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. தொடரட்டும்..

முடிந்தால் புகைப்படங்கள் இனைக்கவும்...

நன்றி.

கானா பிரபா said...

மிகவும் நல்ல பதிவு அக்கா, தொடர்ந்தும் பதிவுகளுக்குக் காத்திருக்கின்றேன்

Chandravathanaa said...

சிவபாலன், கானாபிரபா
கருத்துக்களுக்கு நன்றி.
தொடர்பவைகளில் படங்களையும் இணைக்க முயல்கிறேன்.

priya said...

Very well written. I cant type here in tamil, so please excuse me. Your feelings and emotions are written well.

Chandravathanaa said...

நன்றி இனியன்

Jay said...

//ராஜசிங்க வீதியில் எமக்காக ஒதுக்கப் பட்ட வீட்டில் தனியே குந்திக் கொண்டிருப்பதை விட கொழும்பு வீதிகளில் திரிவது பரவாயில்லாமல் இருந்தது. //
உண்மை அக்கா! எனக்கு கொழும்பில் அதிகம் திரியப்பிடிச்ச இடம் வெள்ளவத்தைதான். யாழ்ப்பாணத் தமிழ் எங்கும் மணக்காவிட்டாலும் அங்கங்கே மணக்கும். வேட்டியுடனும் குங்குமப் பொட்டுடனும் நம்மூர் காரர்களைப் பார்க்கும் போது சந்தோஷம் இரட்டிப்பாகும்.

//வீதி ஒழுங்குகள் வாகனங்களின் வேகங்களில் கரைய அங்கு பாதை கடப்பதே சாதனை. //

கொழும்பு வந்து முதல் மாதம் எனக்கு வீதியைக் கடப்பது என்றால் பெரும் பிரைச்சனை. இப்போது பழகிவிட்டது. சும்மா வாகனம் அங்க வரேக்கயே இங்க குறஸ் பண்ணுவன்.

//வெள்ளவத்தைத் தமிழருக்கு வணக்கம் என்பதன் அர்த்தம் தெரியுமோ? நுனி நாக்கு ஆங்கிலம்.... வீட்டுக்கு இரு வேலைக்காரர்கள்... நாட்டு நடப்புகள் பற்றி இவர்கள் அறிவார்களோ...? மனசுக்குள் ஏனோ எரிச்சலான கேள்வி எழுந்தது.//

நியாயமான கேள்வி. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் தண்டமாக இருப்பவர்கள்தான் வெள்ளவத்தைத் தமிழர்கள் என்றொரு குற்றச் சாட்டு உண்டு. இவர்களைப் பற்றிப் பேசிப்பயனில்லை.

//நாகொல்லகம, களனியா போன்ற இடங்களைத் தாண்டுகையில் //
நான் இப்ப படிப்பது களனிக் கம்பஸ்சில் தான். தினமும் போய் வருகின்றேன். அப்படிப் பயம் இல்லை....

//அவன் கண்களில் நட்புத்தான் தெரிந்தது.//
பொதுவாக என்னுடைய அனுபவத்தின் படி சிங்களவர்கள் நல்லவர்கள். செய்நன்றி மறக்காதவர்கள். ஆயினும் வீம்பு மற்றும் பிடிவாதக்காரர்கள். முட்டாள் தனமாகச் சிந்திப்பவர்கள். எனக்கு சிங்கள நண்பர்கள் செய்த உதவிகளை மறக்கவோ மறுக்கவோ முடியாது. அரசியல் வாதிகளின் சுயநலப்போக்கே அனைத்திற்கும் காரணம். அரசியல் வாதிகளின் புண்ணியத்தில்தான் இவர்கள் ஆதிக்க குணம் கொண்டவர்களாக மாறியுள்ளனர்.

மொத்தத்தில முதற்பாகம் மிகச்சிறப்பாக இருந்தது. நன்றி. எனக்கு நான் யாழ் சென்ன நினைவுகளும் வருகின்றன. நான் திருமலையிலிருந்தே பல தடவை சென்றிருக்கின்றேன். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் அடுத்த பாகத்தை எதிர்பாத்திருக்கும் அன்புத் தம்பி மயூரேசன்.

மிகுதியையும் வாசித்துப் பின்னூட்டம் இடுகின்றேன்....

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite