
நேற்று அண்ணன் பிரபாகரன் அவர்களிடம் போனபோது யேர்மனிய செயற்கை உறுப்புத் தயாரிக்கும் தொழில்நுட்பவியலாளர் ஹொல்கர் தாமும் எம்முடன் வந்திருந்தார்.
அண்ணையுடன் கதைக்கும் போது தகரமல்லாத Fiberglass இல் செயற்கைக் கால்களைச் செய்வதிலுள்ள நன்மைகளையும், செயற்பாடுகளையும் பற்றி விளக்கினேன்.
அப்போதுதான் 1990 இல் பலாலித் தாக்குதலின் போது இரு கைகளையும் இழந்து விட்ட செல்வாவின் கதை வந்தது. BBCயின் விவரணம் ஒன்றின் போது உறுதியோடு பேசிய செல்வாவை சந்திக்க வேண்டுமென்றதொரு ஆர்வம் என்னுள் இருப்பதை அண்ணனுக்குத் தெரியப் படுத்தினேன். நவம் அறிவுக்கூடம் போயும் அவளைச் சந்திக்க முடியாது போனது பற்றி ஆதங்கப் பட்டேன்.
"அவ நவம் அறிவுக் கூடத்திலை இல்லை. இங்கை கிட்டத்தான் இருக்கிறா" என்று அண்ணை சொன்னார். அவவின் அந்த நிலை பற்றிப் பேசும் போது அவவுக்கு கை போட்டால் என்ன..? அது முடியுமா..? என்ற கேள்விகள் எம்முள் எழ அது பற்றி ஹொல்கரிடம் கேட்டோம்.
கையில்லாத போதும் மனவலிமையோடு வாயாலும், காலாலும் எலக்ரோனிக் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் செல்வா சில பொழுதுகளின் பின் அழைத்து வரப் பட்டாள். என் விருப்பத்துக்கு அமைய வாயால் ஒரு கவிதை எழுதித் தந்தாள். வியப்பாய் இருந்தது.
அவளை பரிசோதித்த ஹொல்கர் "இயலாது கஷ்டம் நிறைய செலவாகும்" என்று சொல்லி விட்டார். அண்ணை "செலவைப் பற்றிப் பிரச்சனையில்லை. அதை நான் தருகிறேன்" என்றார். அதன் விளைவாகத்தான் அவள் இன்று வருகிறாள்.
இன்று அளவெடுத்து அதைப் Plaster of Paris இல் செய்து யேர்மன் கொண்டு சென்று அவளுக்கு அளவான கை செய்வதாகத் திட்டம். இரு கைகளும் அடியோடு இல்லாத நிலையில் கையைப் பொருத்துவதற்கு பிடிமானமாக ஒன்றுமில்லாத நிலையில் கையைச் செய்து முடிப்பதென்பது எவ்வளவு கடினமானது என்று அடிக்கடி ஹொல்கர் சொன்னார்.
ஆனாலும் ஒரு துணிந்த முயற்சி. அண்ணன் கேட்டு விட்டார் என்பதற்காக மட்டுமல்லாமல் 13 வருடங்களாக கை இல்லாமல் இருக்கும் ஒரு 25 வயதுப் பெண்ணுக்கு கை கொடுத்து உதவ வேண்டுமென்ற ஆர்வமும் எமக்குள்.
அதற்காக சனிக்கிழமை வன்னியிலிருந்து புறப்படுவதை திங்கள் வரைக்கும் தள்ளிப் போட்டோம்.
பத்து மணிக்குச் சற்று முன்னரே (1.6.2002) அவள் வந்தாள். போராளி இன்சுடர் துணைக்கு வந்தாள். அவர்களை ஏற்றி வந்தது ரேகாதான்.
இந்த அமளிக்குள்தான் எனக்கு டுபாய் புட்டவித்துக் காட்ட அண்ணன் புகழோவியனையும் நிமலனையும் அனுப்பியிருப்பது தெரிய வந்தது. பிட்டை இரவு அவிப்பதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.
அன்றைய பகற் பொழுது எனக்கு செல்வாவுடனே கழிந்தது. மாலை 4 மணியளவில் அரசியல் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான குசினிக்கு சாருவுடன் சென்றேன். செல்வாவும், இன்சுடரும் கூட வந்தார்கள்.
அங்கே நிமலனும் புகழோவியனும் எனக்காக எல்லாவற்றையும் வெட்டி வைத்து விட்டுக் காத்திருந்தார்கள். அடுப்பு கதகத வென்று எரிந்து கொண்டிருந்தது.
புகழோவியன் அடுப்போடு நின்றார். நிமலன் எனக்கு விளக்கத் தொடங்கினார்.
No comments :
Post a Comment