Thursday, July 13, 2006

வாசிப்பதை வைத்து எடை போடலாமா?


ஒருவன் எதை வாசிக்கிறான் என்பதை வைத்து அவனை எடை போடலாமா?
கவிதாவின் பதிவு என்னைச் சிந்திக்கத் தூண்டியது.

வாசிப்பதை வைத்து ஒருவரின் தரத்தை உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ அன்றி நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ முத்திரை குத்தி விட முடியாது. ஆனால் வாசிப்பதை வைத்து ஒருவரின் குண இயல்புகளை, ஆர்வங்களை, தொழில்ரீதியான நாட்டங்களை, தொழிலை... என்று ஓரளவுக்கேனும் கணித்துக் கொள்ளலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

உதாரணமாக எனது வீட்டுப் பிரஜைகளையே எடுத்துக் கொண்டால், எனது வீட்டில் எனது கணவர், குழந்தைகள், நான் ஐவருமே வாசிப்புப் பிரியர்கள். ஆனால் எல்லோருமே குறிப்பிட்ட ஒரே விடயங்களை மட்டுந்தான் வாசிக்கின்றோம் என்றில்லை. தமிழ், ஆங்கிலம், ஜேர்மன்.. என்று மும்மொழிகளிலும் தினமலர், வாரமலர், மாதமலர், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள்... என்று பல விதமானவை எமது வீட்டில் குவிந்து இருந்தாலும் எல்லோரும் எல்லாவற்றையும் வாசித்து விடுவதில்லை. எல்லோராலும் எல்லாத் துறைகளையும் வாசித்து விடவும் முடியாது.

அரசியல் சம்பந்தமான விடயங்களுக்கு முதலிடம் கொடுத்து வாசிக்கும் எனது கணவர் அம்புலிமாமாக் கதைகளையும் வாசிப்பார். சின்னவயதிலேயே வெறும் கற்பனைக் கதைகள் என்ற ரீதியில் எனது ரசனைக்குள் அவ்வளவாக இடம் பிடிக்காத அம்புலிமாமாக் கதைகளை, எனது கணவர் வாசிக்கும் பொழுதுகளில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. சிரிப்பாகக் கூட இருந்தது. ஒரு காலத்தில் "இது என்ன சின்னப் பிள்ளைகள் போல..." என நினைத்துக் கொண்டதுமுண்டு. ஆனால் இன்று அப்படி நினைக்கத் தோன்றவில்லை. கற்பனைக் கதைகளையும் ரசிக்க முடிந்த அவரால் ஒரு ஓவியனாக, ஒரு கார்ட்டுனிஸ்ராகப் பரிணமிக்க முடிகிறது. அரசியலோ அன்றிக் குடும்பமோ எதுவாயினும் ஒரு பிரச்சனையை அதன் போக்கில் சிந்தித்து, அதை ஓவியமாக்கும் இந்தக் கற்பனை எனது சிந்தனைக்குள் எட்டாத ஒன்று. சமூகப் பிரச்சனைகளை நாடகமாக்கும் போது எழுத்திற்குள் இயல்பாகவே நகைச்சுவையைக் கலந்து விடுவதும் எனக்குக் கடினமானதே.

அதனால்தான் நினைக்கிறேன், அரசியலிலும், விவரணப்படங்களிலும், ஆவணப்படங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும், அம்புலிமாமாக் கதைகளையும், தொலைக்காட்சியில் பூனைக்கு டிமிக்கி விடும் மிக்கி மவுசையும் ரசிக்கும் ஒருவரின் சிந்தனைகளும், கற்பனைகளும் வேறு விதமானவை என்று.

இந்தளவு ரசனை உள்ள இவருக்கு தற்போதைய கவிதைப் புத்தகங்களைத் திறந்து பார்க்கவே பிடிப்பதில்லை. "இன்றைய கவிதைகளை ரசிக்க முடியவில்லை" என்பார். காசி ஆனந்தனின் கவிதைகள் போலவோ அன்றி வாலியின் கவிதைகள் போலவோ எழுதுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்று சலிக்கும் தன்மை அவரிடம்.

அடுத்து எனது பிள்ளைகளைப் பார்த்தால் வீட்டில் இத்தனை புத்தகங்கள் இருக்கும் போதும், தினமும், வாரமும்.. என்று புதிது புதிதாகப் பத்திரிகைகள் எம்மை வந்தடையும் போதும் Focus, Spigel, PC / Internet, Wirtschaft & Politik... என்று தேடி வாங்கி வாசிக்கும் எனது மூத்தவனின் ஆர்வத்தில் அரசியலும், உலகளாவிய சரித்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.. சினிமாச் செய்திகளையும் விரும்பி வாசிக்கும் அவனுக்கு சிறுகதைகளை வாசிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அதை விட அவனது வேலை சம்பந்தமான பொருளாதாரம், ஒரு வங்கியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிதலினாலான ஆர்வத்தினூடான கவனங்கள், கணினி பற்றிய நுட்பங்கள்.. என்ற தேடலில், அப்படியான தகவல்கள் தாங்கிய புத்தகங்களை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம். இத்தனைக்கும் மத்தியில் குழந்தையை வளர்ப்பது எப்படி? என்ற புத்தகத்தையும் அவன் கையில் கண்டிருக்கிறேன்.

எனது மகளை எடுத்துக் கொண்டால் அவளிடம் அரசியல் ஆர்வம் குறைவு. அவளது புத்தக அலுமாரியில் அவளது வேலை தொடர்பான பிஸ்னஸ் சம்பந்தமான புத்தகங்கள் இருந்தாலும், பெண்கள் சம்பந்தமான, குழந்தை வளர்ப்புப் பற்றிய புத்தகங்களும் ஆங்காங்கு இடம் பிடித்திருக்கின்றன. "என்னதான் உலகம் வளர்ந்து விட்டாலும், பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று சொன்னாலும் பெண்ணானவளுக்கு பிரச்சனை என்ற ஒன்று வரும் போது, அது ஒரு ஆணின் பிரச்சனை போல அல்லாது வேறு கோணத்தில் இருந்துதான் பார்க்கப் படுகிறது" என்று சொல்லும் அவளது வாசிப்பில் ஹரிபோர்ட்டரும், Gone with the wind டும்.. என்று இடம் பிடித்திருக்கின்றன. இவற்றிடையே மீண்டும் "மீண்டுமாய் என்னை வெட்டி வெட்டித் தைத்தார்கள்" என்று சொன்ன Waris Dirie யின் Desert Flower ம் இருக்கின்றன.

எனது சின்னவனைப் பார்த்தால் அவன் என்னைப் போல அனேகமான எல்லாவற்றையும் வாசிக்கும் ஒருவன். வழியிலோ, தெருவிலோ ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டாலும் வாசித்து விடும் இயல்பு. எத்தனைதான் களைத்து விழுந்து வீடு வந்து சேர்ந்தாலும் அது எத்தனை மணியாயினும் அவனுக்கு வாசிப்பதற்கு ஒரு புத்தகம் வேண்டும். அது கதையோ, அரசியலோ, விவரணமோ எதுவாயினும் பரவாயில்லை. ஆனாலும் அவன் ஒரு பத்திரிகையாளனாக இருப்பதால் அந்தத் துறையில் தன்னை இன்னும் இன்னும் முன்னேற்ற வேண்டும் என்று ஆர்வம் அவனுள் இருப்பதால் அவனோடும் Focus, Spigel, PC/Internet, Wirtschaft & Politik, Chip... என்பவற்றுடன் ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு செய்தி மற்றவர்களைக் கவர எப்படி எழுத வேண்டும்? ஒரு பத்திரிகையின் எந்தப் பகுதி ஒரு வாசகனை முதலில் ஈர்க்கிறது? எந்தளவில் ஒரு கட்டுரை இருந்தால் அது வாசகனை வாசிக்கத் தூண்டும்.. என்பதான விடயங்களைத் தாங்கிய புத்தகங்களும் இடம் பிடிக்கின்றன.

இத்தனையையும் வைத்து இவர்களில் யார் உயர்ந்தவர் என்றோ யார் தாழ்ந்தவர் என்றோ தரம் பிரிக்க முடியாது. நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கவும் முடியாது. ஆனால் இவர்களின் தொழில்களை, ஆர்வங்களை.. ஓரளவுக்கேனும் எடை போட முடிகிறது.

ஒருவர் வாசிப்பதை வைத்து அவரது ஆர்வங்களை, ரசனைகளை, தொழில் ரீதியான தேவைகளை எடை போடலாம் என்றே எனக்குச் சொல்லத் தோன்றகிறது. இது எனது எண்ணம் மட்டுமே.

13.7.2006

5 comments :

மலைநாடான் said...

/எனது வீட்டில் எனது கணவர், குழந்தைகள், நான் ஐவருமே வாசிப்புப் பிரியர்கள்/

இது ஒரு விரும்பத்தக்க , ரசிக்கத்தக்க ஒற்றுமையல்லவா?

டிபிஆர்.ஜோசப் said...

ஒங்க கருத்துதாங்க சரி.

என்னுடைய உயர் அதிகாரிகள் சிலர் இப்போதும் பயணம் செய்யும்போது கார்ட்டூன் கதைகளை படிப்பதை பார்த்திருக்கிறேன்..

கேட்டால் just to relax.. ஆஃபீஸ்லதான் டென்ஷன்லருக்கோம்.. இப்பவுமா என்பார்கள்..

Chandravathanaa said...

மலைநாடான், ஜோசப்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

சின்னக்குட்டி said...

இதை சொல்கிறீர்கள்.....தமிழ் இலக்கிய உலகின் பிதாமகரில் ஒருவரான சிவத்தம்பியரே அம்புலிமாமா சந்திரமாமா கதைகளை விரும்பி வாசிப்பாராம்...யாரோ சொல்ல கேள்வி

Chandravathanaa said...

தகவலுக்கு நன்றி சின்னக்குட்டி

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite