Thursday, August 24, 2006

தாயகம் நோக்கி - 6


கவனம் மிதிவெடிகள் - உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு
ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்.



காகங்களின் கரையல்களும், வானொலிகளின் இரைச்சல்களும்.... விடியலின் வரவைச் சொல்ல மரக்கட்டிலிலிருந்து எழுந்து கொண்டேன். ஊருக்குப் போகும் நினைவுகள் ஒரு புறம் பதட்டத்தையும் மறு புறம் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன.

நேற்று ஐனனியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த துணிவுடன் யாழ் செல்வதற்கான அனுமதியைப் பெற நிச்சுதனுடன் நந்தவனம் பயணமானேன்.

"நிச்சுதன் மெதுவாய்..."

"பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்."

ஏ-ஒன்பது பாதையின் குழிகளில் மோட்டார் சைக்கிளை இறக்கி விடாமல் அவன் லாவகமாக ஓட்டிச் சென்ற போதும், இடையிடையே மோட்டார் சைக்கிள் துள்ளத்தான் செய்தது. `பறந்து போய் விழுந்து விடுவேன்´ போன்றதொரு உணர்வு எனக்கு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்தில் கிராவல் மண் புகை போல எழுந்து என் மேல் அப்பியது. இடையிடையே எதிர் வரும் வாகனத்துடன் மோதி விடாதிருக்க திருத்தப் படாத பாதையின் கரையில் ஒதுங்குகையில் மோட்டார் சைக்கிள் கவிண்டு விடுமோ என்ற பயம் கூட வந்தது.

நிச்சுதனோ "பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்." என்று சொல்லிக் கொண்டு பயணித்து, என்னை நந்தவனத்தில் கொண்டு சேர்த்தான்.

நந்தவனத்தின் முன்றலில் மாங்காய்களும் பலாப்பழங்களும் மரங்களில் தொங்கின. விலாட் மாங்காயை எட்டிப் பிடுங்கலாம் போலிருந்தது. அங்கு நின்ற இருவரில் ஒருவர் என்னை வரவேற்க, உள்ளே நின்றவர் எனது யேர்மனியப் பாஸ்போர்ட்டை வாங்கி நம்பர் பதிந்து விட்டு, பெயரெழுதும் போது எனது பெயரை.. சந்திரவதனா... என்று இழுத்தவர் கணவரின் பெயரையும் வாசித்து விட்டு "நீங்கள்தானே அக்கா மொறிஸின்ரை அந்த ஆர்ட்டிக்கலை எழுதினனிங்கள்..? நல்லாயிருந்தது." என்றார்.

"எது..?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"ஈழமுரசிலை வந்தது." என்றார்.

"ஈழமுரசு இங்கை வருமோ..? " மீண்டும் ஆச்சரியமாகக் கேட்டேன்.

"ஓம் கஸ்ரோ அண்ணையிட்டை வாறது" என்றார்.

ஐரோப்பியாவில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழமுரசை வன்னியில் உள்ளவர்கள் வாசித்தது மட்டுமல்லாமல், முன் பின் தெரியாத ஒருவர், என் பெயரைப் பார்த்ததும் அதை நினைவில் கொண்டு வந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் தந்தது.

"நீங்கள்..?" அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.

"இளங்கோ" என்றார்.

மற்றவர் "அறிவு" என்றார்

எல்லாம் நிரப்பி என்னிடம் கையெழுத்தை வாங்கிய பின் "சரி அக்கா நீங்கள் வீட்டை போங்கோ. நான் சைன் வேண்டிக் கொண்டு வந்து தாறன்." என்றார்.

நான் செய்ய வேண்டிய வேலையை என்னை அலைக்கழிய விடாமல், இளங்கோ தானே செய்ய முன்வந்த போது மனசு நன்றி சொல்லியது.

" நான் வெண்புறாவில்தான் நிற்கிறன்." என்றேன்.

"அப்ப நல்லதாப் போச்சு. அரைமணித்தியாலத்துக்கை அங்கையே கொணர்ந்து தாறன் அக்கா." என்றார்.

சந்தோசமான உணர்வுகள் என்னை நிறைத்திருக்க இளங்கோவிடமும், அறிவிடமும் இருந்து விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த நிச்சுதனுடன் மீண்டும் வெண்புறா சென்ற அரைமணிக்குள் இளங்கோ பாஸைக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்றார்.

வெண்புறா உறவுகள் எல்லோரும் வாசலில் வந்து என்னை வழியனுப்பி வைக்க மதிய வெயில் உச்சியில் சுடும்போது ஊர்க் கனவுகளைச் சுமந்தபடி வெண்புறாவிலிருந்து முகமாலை நோக்கி நிச்சுதனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். "அன்ரி...! திங்கட்கிழமை வற்றாப்பளைப் பொங்கலுக்குப் போறது ஞாபகந்தானே. அதுக்குள்ளை வந்துடுங்கோ" என்ற சுந்தரத்தின் குரல் பின்னால் ஒலித்தது. நீங்கள் வராட்டில் நாங்களும் போகமாட்டம் இன்னொரு குரல் தொடர்ந்தது.

கரடிப்போக்குச் சந்தி, வெள்ளவாய்க்கால் மதவில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது நான் வீழ்கிறேன் என்றுதான் நினைத்தேன். எப்படி முகமாலை வரை போய்ச் சேரப் போகிறேன் என்ற பயத்தில், "எவ்வளவு நேரம் பிடிக்கும்.. நிச்சுதன்..?" என்று கேட்டேன்.

"பயப்படுறிங்கள் போலை இருக்கு அன்ரி. நான் ஓடுற வேகத்தைப் பொறுத்து ஒண்டு ஒண்டரை மணித்தியாலத்துக்கை போயிடலாம். நான் இருபதிலை இருந்து முப்பதுக்குள்ளைதான் ஓடுறன். பயப்படாதைங்கோ"என்றான்.

வீதியோரங்களில் ஆங்காங்கு ஓரிரு கடைகள் திறக்கப் பட்டு வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் மீதி இடங்கள் வீடுகளோ, வாசல்களோ இன்றி பெரு வெளிகளாக வெறிச்சுப் போயிருந்தன.



"இதுதான் அன்ரி நாங்கள் பிடிச்ச இராணுவத்தின்ரை வாகனம்"

"இதிலைதான் அன்ரி பெரிய கிபீர் விழுந்தது"

"இது இராணுவம் ஷோ காட்டுறதுக்காண்டி எங்கடை வாகனத்தைக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டிருக்கிறாங்கள்."



என்று நிச்சுதன் ஆனையிறவுச் சண்டையை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

மோட்டார் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்ததால் காற்றின் எதிர் மோதலில் ஆரம்பத்தில் வெயிலின் அகோரம் அவ்வளவாகத் தெரியவில்லை. போகப் போக பாதைகளின் இருமருங்கிலும் இருந்த காட்டு மரங்களும் செடிகளும் எரிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் பயணம் மிகவும் அகோரமாக அனல் கக்கியது.

பரந்தன் பளை பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது தூரத்தில் வரும் சைக்கிளைப் பார்த்ததும் "அன்ரி, அதிலை வாறது எனக்குத் தெரிஞ்ச பெடியன் போலை இருக்கு. யாழ்பாணத்திலை இருந்து வாறான். கனகாலத்துக்குப் பிறகு வாறான். இறங்கிக் கதைச்சிட்டுப் போவம்." என்ற படி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.

நல்லது. என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு இறங்கினேன். இறங்கிய உடனே என் முன்னே நாட்டப் பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் மனம் திக்கென்றது.


கவனம் மிதிவெடிகள்
உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்...
என்ற வாசகங்களில் கால் கூசியது. இறங்கிய வேகத்தில் பாய்ந்து, விழுந்து ஓடி ரோட்டில் நின்றேன்.

நிச்சுதனின் உரையாடலில் சில நிமிடங்கள் கரைந்தன. மீண்டும் மோட்டார் சைக்களில் ஏறிய பின் என் நினைவுகள் என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தையும், வேப்பம்மரத்தையும் எதிர்கொள்ளப் போகும் உறவுகளையும் சுற்றத் தொடங்கி விட்டது.

"என்ன அன்ரி. வெய்யில்லை களைச்சிட்டிங்களோ..? பேசாமல் வாறிங்கள்..?"

"இல்லை நிச்சுதன். ஊர் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தன்.
அதுசரி நீங்கள் உங்கடை ஊருக்குப் போனனிங்களோ? "

"இன்னும் இல்லை அன்ரி. நான் முகமாலை தாண்டேலாது."

மீண்டும் நான் நினைவுகளுக்குள் மூழ்கிய போது, "அன்ரி, நான் இப்ப எழுபதிலை ஓடுறன் தெரியுமோ.? நீங்கள் என்ரை ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுககத் தொடங்கீட்டிங்கள். அதாலைதான் இவ்வளவு கெதியா வந்து சேர்ந்தனாங்கள்."

"கிட்ட வந்திட்டமோ..?"

ஓமன்ரி. இன்னும் இரண்டு நிமிசந்தான்.

ஒருவாறு தமிழீழச் சோதனைச் சாவடியை வந்தடைந்த போது நா வரண்டிருந்தது. எங்காவது இளநீர் வாங்க முடியுமோ என்று பார்த்தேன். மருந்துக்குக் கூட அங்கே இளநீர் தெரியவில்லை.

கிடுகுகளால் வேயப் பட்ட சோதனைச் சாவடிக்குள் நுழைந்து பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டேன். நிச்சுதன் எனது சூட்கேசைத் தூக்கியபடி ஆண்களுக்கான பக்கத்தால் என்னோடு கதைத்த படி வந்து கொண்டிருந்தான்.

அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்ணிடம் பாஸ் காட்டும் போது அவள் நிச்சுதனை அடையாளம் கண்டு கொண்டவளாய் மெல்லிய சிரிப்புடன் என்னைப் போக அனுமதித்தாள்.

"அன்ரி இனி நீங்கள் தனியத்தான் போகோணும். அங்காலை நான் வரேலாது. அதிலை பஸ் எடுத்திங்களெண்டால் முகமாலை வரை கொண்டு போய் விடுவாங்கள்." சொல்லிக் கொண்டே அந்தக் கொட்டில் வரை வந்து என்னை விட்டிட்டுப் போனான்.

இரண்டு தட்டிவான்கள் பட்டிகளில் மாடுகளை அடைப்பது போல மனிதரை ஏற்றிச் சென்றதைப் பார்த்துப் பயந்து எப்படி எனது உடைமைகளுடன் போய்ச் சேருவது என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதில் ஏறும் துணிவு எனக்கு வரவில்லை. சில நிமிடங்களில் நிச்சுதன் மீண்டும் வந்தான்.

"என்ன நிச்சுதன்..?"

"அன்ரி நான் அனுமதி எடுத்திட்டன். உங்களை அங்கை மட்டும் கொண்டு வந்து விட்டிட்டுப் போறன்."

மனசு நன்றி சொன்னது. மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியை அடைய சில நிமிடங்கள்தான் தேவைப் பட்டன.

அவன் என்னை இறக்கிய போது எம்முன்னே இரண்டு மூன்று இராணுவத்தினர் வந்து விட்டனர். தடுப்படியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சில அடிகள் என்னுடன் நடந்தவன்

"நான் போறன் அன்ரி..." என்றான்.

இப்போ எனக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. எங்கும் இராணுவம். நான் தனியாக என் சூட்கேசை இழுத்துக் கொண்டு...

அவர்களின் பார்வைகளிலும், சிரிப்பிலும் ஏளனமா..? நட்பா..? குரோதமா..? எல்லாம் கலந்தா..? புரியவில்லை. எனக்கு மிக அருகில் நின்றார்கள். பயமாகப் பதட்டமாக இருந்தது.

நிச்சுதனின் மோட்டார் சைக்கிள் திறப்பு நிலத்தில் வீழ்ந்து மண்ணுள் புதைந்து விட்டது. சாடையாகத் தேடி விட்டு நிற்க விருப்பம் இல்லாததால் "பரவாயில்லை, மற்றத் திறப்பைப் பாவிக்கிறன்" என்று சொல்லி விட்டுப் வேகமாக மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

"நன்றி நிச்சுதன்..!"

திரும்பிப் பார்த்து, சிரித்துக் கொண்டு விரைந்தான்.

பெண்களுக்கான சோதனை இடத்தைக் காட்டி என்னை அங்கே போகும் படி சொன்னார்கள். அங்கு தூரத்தில் வரிசையில் நின்ற சில பெண்கள் என் கண்களுக்குள் பட்ட போது பயம் கொஞ்சம் குறைந்தது. ஒரு சூட்கேசை இழுத்துக் கொண்டும், மற்றையதைத் தோளில் கொழுவிக் கொண்டும் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, முதலில் மறைவான பகுதியில் உடைகளுக்குள் உடம்போடு ஏதாவது வைத்திருக்கிறேனா எனச் சோதித்து வெளியில் அனுப்பினார்கள்.

வெளியில் ஐந்தாறு சிங்களப் பெண்கள் வரிசையில் இருந்து அடையாள அட்டை சூட்கேஸ் போன்றவற்றைச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் "அக்கா சூட்கேசைத் திறங்க." தமிழில் கதைத்தார்கள்.

எனது சூட்கேசில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆர்வமாக ஆராய்ந்தார்கள். ஆளுக்காள் மாற்றி மாற்றி விடுப்புப் பார்த்தார்கள். வெளிநாட்டுச் சாமான் என்பதில் ஆசைப் பட்டார்கள். ஒரு சிறிய கீரெக்கை தரமனமின்றி வைத்திருந்தாள் ஒருத்தி. "வேணுமெண்டால் வைச்சிருங்கோ" என்றேன். "வேண்டாம்" என்று தந்து விட்டாள். கமராவைப் பிரட்டி உருட்டிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. "என்ன போட்டோ எடுத்திருக்கிறன்" என்று கேட்டாள்.

ஒருமாதிரி அடையாள அட்டையையும் காட்டி வெளியில் போன போது நிறைய பேரூந்துகள் நின்றன. பருத்தித்துறைக்கான பேரூந்தைத் தேடி ஏறப் போன போது வெளியில் நின்ற கொண்டெக்கடர் என்னிடம் கட்டணமாக 15 ரூபாவைக் கேட்டு வாங்கினார்.

எதிரே தண்ணீர் விற்பது தெரிந்தது. அதனோடு சேர்ந்திருந்த கடையில் பின்னுக்குப் போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இது வரை அடக்கி வைத்த தாகத்தை இப்போது என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் அங்கே `பிளெயின் சோடா´ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பேரூந்திலிருந்து இறங்கிப் போனேன்.

சிங்களச் சிப்பாய் மிகவும் நட்பாகச் சிரித்த படி என்னை வரவேற்றான்.
"சோடா இல்லை" என்றான். வன்னி தாண்டி விட்டேன்தானே. இது யாழ்ப்பாணத் தண்ணீர்தானே குடிப்போம் என நினைத்து தண்ணீராவது தரும்படி கேட்டேன்.

"தண்ணி இல்லை. நெல்லிக்கிரஸ்தான் இருக்கு." தமிழும் சிங்களுமும் கலந்து சொன்னான். தண்ணி வேணுமெண்டால் பைப்பில் குடிக்கச் சொன்னான்.
வேறு வழி தெரியாததால் சரியென்று பத்துரூபாய் கொடுக்க றம்மிலிருந்து தண்ணீரை ஒரு ரம்ளரில் எடுத்து, நெல்லிரசத்தைக் கலந்து தந்தான். அருந்தினேன். றம் தண்ணீர் ஊத்தையாக இருந்திருக்குமோ என்ற நினைப்பில் எனக்கு நெல்லிரசம் இனிக்கவில்லை.

பஸ்ஸில் ஏறிய பின் வெளியில் கண்களைச் சுழல விட்ட போது இராணுவம், மனிதர் என்று முகமாலை சோதனைச் சாவடி சனமாய்த் தெரிந்தது. நெல்லிரசம் தந்த சிப்பாய், சிரித்த படி என்னைப் பார்த்துக் கை காட்டிக் கொண்டிருந்தான். பேரூந்து ஊரத் தொடங்கியது. என் கிராமத்தை நோக்கி...

சந்திரவதனா
யேர்மனி
2002

தொடரும்

தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5

1 comment :

Chandravathanaa said...

நன்றி இராஜன்.
போடுகிறென்.

Followers

Blog Archive

Valaipookkal

  • ஆச்சிமகன் - Kattalin Inimai

  • ஆதித்தன் - காலப்பெருங்களம்

  • அருண் -ஹொங்கொங்ஈழவன்

  • இந்துமகேஷ்

  • இராம.கி - வளவு

  • ஈழநாதன் - Eelanatham

  • உடுவைத்தில்லை - நிர்வாணம்

  • கரன் - தமிழில் செய்திகள்

  • கலை - என்னை பாதித்தவை

  • காரூரன் - அறி(வு)முகம்

  • கானா பிரபா - Madaththuvasal

  • கானா பிரபா - Radio

  • குப்புசாமி - Kosapeettai

  • கோகுலன் - எண்ணப்பகிர்வுகள்

  • சஞ்யே - மலரும் நினைவுகள்

  • சத்யராஜ்குமார் - Thugalkal

  • வி. ஜெ. சந்திரன்

  • சந்திரா ரவீந்திரன் - ஆகாயி

  • சயந்தன் - சாரல்

  • சிறீதரன்(Kanags) - Srinoolagam

  • சின்னக்குட்டி - ஊர் உளவாரம்

  • சின்னப்பையன் - Naan katta sila

  • சினேகிதி

  • தமிழ் இ புத்தங்கள்

  • டிசே தமிழன் -D.J.Tamilan

  • தமிழன் -என்னுடைய உலகம்

  • திலீபன் - இரண்டாயிரத்திமூன்று

  • தூயா - நினைவலைகளில்

  • நிர்வியா - Nirviyam

  • நிர்ஷன் - புதிய மலையகம்

  • நிலாமுற்றம் - Thivakaran

  • பாலா - Entrentrum anpudan

  • பாலா சுப்ரா - Tamil Scribblings

  • பாவை - SKETCH

  • பூவையர் - POOVAIYAR

  • பெண் பதிவர்கள்

  • மகளிர்சக்தி - Female Power

  • மதி கந்தசாமி

  • மதுரா - தமிழச்சிகள்

  • மயூரன் - M..M

  • மலைநாடான் -Kurinchimalar

  • முத்து - Muthu Valaippoo

  • டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

  • மூனா - Thukiligai

  • ராகினி - கவியும் கானமும்

  • லீனாவின் உலகம்

  • வசந்தன் - vasanthanpakkam

  • வந்தியத்தேவன்

  • வலைச்சரம்

  • வெற்றியின் பக்கம்

  • றஞ்சி - ஊடறு

  • ஜெஸிலா - Kirukkalkal
  • http://ta.wikipedia.org
    Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

    WEBCounter by GOWEB

    AdBrite