அந்த இளம் ஜோடிகளை இப்போது சில நாட்களாக அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தேன். வழமையில் மாலையிலோ அன்றி விடுமுறை நாட்களிலோதான் அவர்களை ஒன்றாகக் காண முடியும். அதுவும் அவசரமாக எங்காவது ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது சுப்பர்மார்க்கெட்டிலோ, அல்டியிலோ வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டிருப்பார்கள். படிப்பு, வேலை இவைகளின் மத்தியில் அனேகமானவர்கள் போல் அவர்களாலும் அப்படித்தான் வாழ முடிந்திருக்கிறது.
இந்தச் சில நாட்கள் மட்டும் இருவரும் மிகவும் சந்தோசமாகவும், ஆறுதலாகவும் ஐஸ்கிரீம் பாரிலும், கோப்பிக் கடைகளிலும், பார்க்குகளிலும்.. என்று அடிக்கடி என் கண்களில் தென்பட்டுக் கொண்டே இருந்தார்கள். ´ஒருவேளை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களோ!` என்ற எண்ணம் எனக்குள். ஒன்றாக, ஒரு வீட்டிலே சில வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கிறேன். இரவில் பகுதி நேர வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று வேலைக்குப் போகும் போது நான் வேலை பார்க்கும் வங்கியோடு சேர்ந்த நீண்ட படிக்கட்டுகளில் இருவருமாக ஒருவரையொருவர் அணைத்தபடி, உதடு பதித்து முத்தமிட்டுக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தார்கள். என்னைக் கண்டதும் சிரித்துக் கொண்டு நலம் விசாரித்தார்கள்.
நன்றி கூறி நானும் நலம் விசாரித்து விட்டு “என்ன விடுமுறையா, இருவரும் இத்தனை றிலாக்சாக இருக்கிறீர்கள்..?“ கேட்டேன்.
“ம்.. ம்.. நாங்களாக விடுமுறை எடுத்திருக்கிறோம்“ என்றார்கள் அர்த்தமுள்ள முறுவலாடு!
என்ன திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா?
“இல்லை, இல்லை. எமக்குள் சரிவரவில்லை. பிரிந்து விடப் போகிறோம்“ என்றார்கள் கோரசாக.
என் கண்கள் ஆச்சரியத்தில் விரிய “அதுதான் நாங்கள் ஒன்றாக இருக்கப் போகும் இந்த இறுதி வாரத்தை சந்தோகமாகவே கழிக்கிறோம்“ என்றார்கள்.
சந்திரவதனா
15.10.2010
6 comments :
:-) hmm oruvithathil sariyaagavey padugirathu! nanbargalaavey virotham illaamal irunthukolalaam.
yen romba naala blog update panalai...enaku unga posts pidikum..sorry for the font..tamil font ilai.
நன்றி சந்தனமுல்லை.
நேரம் கிடைப்பதில்லை என்பதுதான் பெரும் சாட்டு.
இதைவிடக் குறைந்த நேரங்களே கிடைத்த பொழுதுகளில் மிக அதிகமாக எழுதியிருக்கிறேன்.
எழுதுவதற்கு நேரத்தை விட மனம்தான் முக்கியம் என்று நினைக்கிறேன்.
எழுத நிறைய இருக்கிறது. நினைப்பதையெல்லாம் எப்போது எழுதி முடிப்பேன் என்பது எனக்கே தெரியாத விடயம்.
ஒரு வாரத்தினை மிக மகிழ்ச்சியாக கடந்து செல்லும் வகையினில் மனதினை தயார்படுத்திக்கொண்ட அந்த இரு ஜீவன்களுக்கு, ஏன் தம் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையவில்லை என்ற சிந்தனை வந்தமர்ந்துகொண்டதோ? :(
முடிவினில் மாறுதல் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையோடு..!
__________
மிக நீண்ட காலத்திற்கு பிறகு மன ஓசை - தொடர்ந்து ஒலிக்கட்டும் அக்கா !:)
நன்றி ஆயில்யன்.
முடிவினில் மாறுதல் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையோடு..!
நானும் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
பொருந்தாத சில குணங்களால் தமது பிற்கால வாழ்க்கை பாதிக்கப் படும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கும்.
100வீதமும் பொருந்தக் கூடியதாய் சோடிகள் சேர்வதில்லை. வாழும் காலத்தில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒருவருக்காய் ஒருவர் தம்மை மாற்றி.. என்றுதான் வாழ்க்கை ஓடுகிறது. இந்த சூட்சுமத்தை அவர்கள் விளங்கிக் கொள்வார்களா?
அல்லது வாழும் போது பொருந்தாத குணங்களால் சண்டை பிடித்துக் கொண்டே வாழ்வதை விட இப்போதே நண்பர்களாய் பிரிந்து விடுவது மேல் என்ற அவர்கள் கொள்கை சரியா?
உங்கள் தாயகபயணம் " வாசலில் பெரிய மாங்காய் பூட்டு தொங்கியதுடன்" நிற்கிறது.தாயகமனத்தைச் சுமந்து வந்த பயணம் தொடரவில்லையே. மீண்டும் தொடருமா?
எனக்கென்னவோ அவர்களின் முடிவில் தப்பில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் விட்டுக்கொடுப்பின் பின் வரும் புரிதலை அவர்களின் அவசரம் அவர்களிடத்தில் வர விடுவதில்லை என்பது கருத்து.
நீங்கள் சொன்னது போல ”வாழும் போது பொருந்தாத குணங்களால் சண்டை பிடித்துக் கொண்டே வாழ்வதை விட இப்போதே நண்பர்களாய் பிரிந்து விடுவது மேல்” என்னும் கருத்தை நான் வரவேற்கிறேன்.
இப்படியான நிலைகள் இன்னும் சில வருடங்களுக்குள் எமது சமூகத்தினுள்ளும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நன்றி
Post a Comment