Wednesday, September 06, 2006
கவிதைகள்
கவிதைகள் எந்த வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன என்று எனக்குப் புரியவில்லை. எதுகை, மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்கள் கவிதைகளை அழகு படுத்தினாலும், எனக்கு அதெல்லாமுமாய் எழுதவும் தெரியவில்லை. யாராவது அதையெல்லாம் சேர்த்து எழுதினால், என்னால் அவைகளை நன்கு ரசிக்க முடிகிறது. எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூடச் சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.
இவை எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத, எந்த வரைவிலக்கணங்களுக்குள்ளும் உட்படாத எனது உணர்வுகளின் வடிகால்கள்.
Saturday, September 02, 2006
பாடல்களிலிருந்து சில வரிகள் - 3
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்
மண்வெட்டி கையில் எடுப்பார்
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
பாடல்களிலிருந்து சில வரிகள் - 1
Friday, September 01, 2006
பாடல்களிலிருந்து சில வரிகள் - 2
மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்.
பாடல்களிலிருந்து சில வரிகள் - 1
சில பாடல்களின் சில வரிகள் மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்றன
அப்படியான வரிகளில் ஒன்று.
கடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்
ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
Thursday, August 31, 2006
என்னைப் பாதித்த மரணங்களில் ஒன்று
மீள்பதிவு
மன்னர் குலக் கன்னியரும் கண் கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கே வாய்த்த விதி இதுதானோ
Prinzessin Diana 1.7.1961-31.8.1997
என்னைப் பாதித்த மரணங்களில் இளவரசி டயானாவினது மரணமும் ஒன்று. 1969 இல் என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் இறந்த போது நான் மிகவும் கவலையுற்றேன். வானொலியே தஞ்சமென அதனருகிலேயே நின்று அவரது இறுதி ஊர்வல விவரணத்தைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். "புற்றுநோய் ஏன் வருகிறது?" என்று மனதுக்குள் மிகவும் ஆதங்கப் பட்டேன். "அவர் மீண்டும் உயிர் பெற வாய்ப்பில்லையா?" என அம்மாவிடம் பலமுறை கேட்டேன்.இப்போது, `எனக்கு உருத்து உறவில்லாத ஒருவரின் அந்த இறப்பு என்னை ஏன் அத்தனை தூரம் பாதித்தது´ என சிந்தித்துப் பார்க்கிறேன். எனது அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டிலே கதைப்பதுவும், அவரது நல்ல செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள் கதைகள்.. போன்றவற்றை எமது காது பட அம்மா வாசித்துக் காட்டுவதும் அவர் மீது ஒரு வித மரியாதையையும் பிரியத்தையும் எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த அவர் மீதான மரியாதையும் பிரியமும்தான் அந்த இறப்பு என்னைப் பாதிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருந்திருக்க வேண்டும்.
இதே போலத்தான் அல்லது இதைவிட அதிகமாக இளவரசி டயானாவின் மரணமும் என்னைப் பாதித்தது. இளவரசி டயானா பற்றிய கட்டுரைகள், டயானாவின் செயற்பாடுகள் என்று நான் இளவரசி டயானா வாழ்ந்த காலத்திலேயே ஒன்று விடாது வாசித்து வந்தேன். இளவரசி டயானா இளவரசர் சார்ள்ஸை மணந்து கொண்ட போது அந்தக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது இளவரசி டயானாவை ஒரு அழகு தேவதை என்றே நினைத்துக் கொண்டேன்.
ஆனால் அந்த அழகு தேவதையை விட்டு சார்ள்ஸ் கமிலாவுடன் உறவு கொள்வதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தேன். அரச குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலனங்களும், சச்சரவுகளும் `ஏன் இளவரசி டயானாவை இப்படிக் கஸ்டப் படுத்துகிறார்கள்´ என என்னை ஆத்திரப் பட வைத்தன.
வெளியூர் சென்று வரும் இளவரசி டயானா தனது குழந்தைகளை மீண்டும் சந்திக்கும் போது, ஓடிச் சென்று தழுவுவதையும், மற்றவர்களுக்குச் செய்யும் உதவிகளையும் பார்க்கும் போது, அவரது மனதில் அன்பையே கண்டேன்.
தொடர்ந்த காலங்களில் டயானா சார்ள்ஸ்ஸின் விவாகரத்து, டயானா டோடியின் உறவு... என்று கடந்து இற்றைக்கு 9 வருடங்களின் முன் அது மரணத்தில் வந்து முடிந்த போது உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றதை மறுப்பதற்கில்லை. எத்தனையோ வீடுகளில் அன்று சமையலே நடக்கவில்லையாம். என் வீட்டில் எல்லாமே வழமை போல் அன்று நடந்திருந்தாலும் அந்த மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது என்பது உண்மை.
Goodbye England's rose
may you ever grow in our hearts
You were the grace that placed itself
where lives were torn apart
You called out to our country,
and you whispered to those in pain.
Now you belong to heaven
and the stars spell out your name.
And it seems to me you lived your life
like a candle in the wind:
never fading with the sunset
when the rain set in.
And your footsteps will always fall here,
along England's greenest hills;
your candle's burned out long before
your legend ever will.
Loveliness we've lost;
these empty days without your smile.
This torch we'll always carry
for our nation's golden child.
And even though we try
the truth brings us to tears;
all our words cannot express
the joy you brought us through the years.
Goodbye England's rose,
from a country lost without your soul,
who'll miss the wings of your compassion
more than you will
ever know.
Bernie Taupin and Elton John
Friday, August 25, 2006
பிற்சா (Pizza)
எனக்கும் மூன்று பிள்ளைகளுக்குமாக ஒரு கட்டில் தரப்பட்டு அரைமணியில் சாப்பாடு வந்தது. சாப்பாடு எதுவும் எனக்கோ பிள்ளைகளுக்கோ பிடிக்கவில்லை. ஆளுக்கொரு அப்பிளை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு விட்டு இருந்தோம்.
அடுத்தநாள் விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ள அகதிகள் முகாமொன்றில் கொண்டு போய் விட்டார்கள். அங்கும் பிடித்தமான சாப்பாடெதுவும் கிடைக்கவில்லை. தஞ்சம் கோரி வந்த எங்களுக்கு மீண்டும் ஒற்றை அப்பிள்தான் தஞ்சம். ஊரில் சுண்டக் காய்ச்சிய பாலையே குடிக்கப் பஞ்சிப்படும் என் பிள்ளைகள் அவர்கள் தந்த பச்சைப் பாலைத் தொடக் கூட மறுத்து விட்டார்கள்.
இதற்கிடையில் நான் தொலைபேசியில் என் கணவருக்கு நாம் வந்து சேர்ந்து விட்டதைத் தெரிவிக்க, அவர் ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து களவாக இரண்டாம் நாள் இரவு எம்மிடம் வந்து சேர்ந்தார்.
ஸ்வெபிஸ்ஹால் நகரிலிருந்து அவர் வேறெங்கும் செல்ல அனுமதியில்லை. பிடிபட்டால், உடனடியாகப் புகைவண்டியில் ஏற்றி ஸ்வெபிஸ்ஹால் நகருக்கே திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுமட்டுமல்ல தண்டனையாக 400DM கட்டவும் சொல்வார்கள். 350 DM சமூகநல உதவிப் பணத்துடன் வாழும் எனது கணவரின் அப்போதைய நிலை அது.
அடுத்தநாள் காலை, - மூன்றாம் நாள் - எங்களுக்கு அகதி அந்தஸ்து கோரியுள்ளார் என்பதற்கான தற்காலிக அகதி அடையாள அட்டை தந்து, இன்னொரு அகதி முகாமுக்கு அனுப்புவதற்காக பஸ்சில் ஏற்றினார்கள். கூடவே இன்னும் சில தமிழ்ப்பெண்கள். எனது கணவரும் அவரைப் போலவே களவாக வந்த இன்னொரு கணவரும் செய்வதறியாது நிற்க, எங்களை ஸ்வல்பாஹ்(Schwalbach) அகதி முகாமுக்கு அனுப்பி விட்டார்கள். பஸ்சில் சில மணி நேரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
அந்த முகாமில் ஓரளவு தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போல மூன்று பிள்ளைகளுடன் வந்தவர்கள் யாரும் அங்கில்லை. களைத்துப் போன எனதும், பிள்ளைகளதும் முகங்கள் அவர்களுக்கு எங்கள் மீது இரக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கிட்ட வந்து அன்பாகவும் உதவும் நோக்குடனும் கதைத்தார்கள். எம்மைச் சாப்பிட வரும் படி அழைத்துச் சென்று ஒரு பெரிய ஹோலில் விட்டார்கள். அது கன்ரீனுடன் சேர்ந்த ஹோல். ஹோல் நிறைய பலவித மொழி பேசும் பல விதமான மக்கள் கசா முசா என்று கதைத்தபடி இருந்தார்கள்.
நானும் பிள்ளைகளும் இன்றைக்காவது சாப்பிடுவோம் என்ற நம்பிக்கையோடு இருக்க, அந்தத் தமிழர்களே எமக்கான சாப்பாட்டை எடுத்து வந்து தந்து விட்டுப் போனார்கள். ஆவலுடன் சாப்பாட்டுக்காகக் காத்திருந்த எனது மூத்தவனின் முகம் சாப்பாட்டைக் கண்டதும் ஏமாற்றத்தில் துவண்டு போனது. வந்த சாப்பாடு நாம் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்திக்கும் பிற்சா(Pizza). சிப்பி சோகியெல்லாம் அதன் மேல் போட்டிருந்தார்கள்.
"இதையெப்பிடிச் சாப்பிடுறது..? " கோபம், ஏமாற்றம், அழுகை எல்லாம் கலந்த கேள்வி அது.
ஏற்கெனவே, எனது கணவர் எப்படி இங்கே வந்து சேரப் போகின்றார்? என்ற யோசனையும், கவலையும் எனக்குள். அதை மிஞ்சிய வயிற்றுப் புகைச்சல். என் மகனும் இப்படிக் கேட்க எனக்கு உடனேயே எங்கள் மேல் தாங்க முடியாத பச்சாத்தாபம் ஏற்பட்டது. `திரும்பிப் போய் விடுவோம்´ என்ற அங்கலாய்ப்பு வந்தது. போய் `அம்மாவின் கையால் அம்மாவின் சமையலைச் சாப்பிடோணும்´ என்ற அவா வந்தது. எல்லாமாய் அழுகையே வந்தது. `மூன்று நாள் யேர்மனிய வாழ்க்கை போதும்´ என நினைத்துக் கொண்டேன்.
அந்த நேரம் எனது மகன் என்ன செய்தான் தெரியுமா..? அவர்கள் மெனக்கெட்டு பக்குவமாக தயாரித்த பிற்சாவின் மேலே இருந்த எல்லாவற்றையும் ஒரேயடியாகக் கோப்பைக்குள் வழித்துக் கொட்டி விட்டு கீழேயுள்ள ரொட்டித்துண்டைச் சாப்பிடத் தொடங்கினான்.
`அட இவனுக்கு எப்படி இப்படியொரு மூளை வந்தது!´ வியந்தேன். மற்றைய மூன்று பிற்சாக்களிலும் இருந்த எல்லாவற்றையும் என் கண்ணீரோடு சேர்த்து வழித்துக் கொட்டி விட்டு ஒன்றுமில்லாத வெறும் ரொட்டியை மற்றப் பிள்ளைகளுக்கும் கொடுத்து சாப்பிடத் தொடங்கினேன்.
இப்போதும் நானும் பிள்ளைகளும் சேர்ந்து சாப்பிடுகையில் இந்த சம்பவத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வோம்.
சந்திரவதனா
யேர்மனி
Thursday, August 24, 2006
தாயகம் நோக்கி - 6
கவனம் மிதிவெடிகள் - உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு
ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்.
காகங்களின் கரையல்களும், வானொலிகளின் இரைச்சல்களும்.... விடியலின் வரவைச் சொல்ல மரக்கட்டிலிலிருந்து எழுந்து கொண்டேன். ஊருக்குப் போகும் நினைவுகள் ஒரு புறம் பதட்டத்தையும் மறு புறம் உற்சாகத்தையும் தந்து கொண்டிருந்தன.
நேற்று ஐனனியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த துணிவுடன் யாழ் செல்வதற்கான அனுமதியைப் பெற நிச்சுதனுடன் நந்தவனம் பயணமானேன்.
"நிச்சுதன் மெதுவாய்..."
"பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்."
ஏ-ஒன்பது பாதையின் குழிகளில் மோட்டார் சைக்கிளை இறக்கி விடாமல் அவன் லாவகமாக ஓட்டிச் சென்ற போதும், இடையிடையே மோட்டார் சைக்கிள் துள்ளத்தான் செய்தது. `பறந்து போய் விழுந்து விடுவேன்´ போன்றதொரு உணர்வு எனக்கு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் வேகத்தில் கிராவல் மண் புகை போல எழுந்து என் மேல் அப்பியது. இடையிடையே எதிர் வரும் வாகனத்துடன் மோதி விடாதிருக்க திருத்தப் படாத பாதையின் கரையில் ஒதுங்குகையில் மோட்டார் சைக்கிள் கவிண்டு விடுமோ என்ற பயம் கூட வந்தது.
நிச்சுதனோ "பயப்படாதைங்கோ அன்ரி..! நான் விழுத்த மாட்டன்." என்று சொல்லிக் கொண்டு பயணித்து, என்னை நந்தவனத்தில் கொண்டு சேர்த்தான்.
நந்தவனத்தின் முன்றலில் மாங்காய்களும் பலாப்பழங்களும் மரங்களில் தொங்கின. விலாட் மாங்காயை எட்டிப் பிடுங்கலாம் போலிருந்தது. அங்கு நின்ற இருவரில் ஒருவர் என்னை வரவேற்க, உள்ளே நின்றவர் எனது யேர்மனியப் பாஸ்போர்ட்டை வாங்கி நம்பர் பதிந்து விட்டு, பெயரெழுதும் போது எனது பெயரை.. சந்திரவதனா... என்று இழுத்தவர் கணவரின் பெயரையும் வாசித்து விட்டு "நீங்கள்தானே அக்கா மொறிஸின்ரை அந்த ஆர்ட்டிக்கலை எழுதினனிங்கள்..? நல்லாயிருந்தது." என்றார்.
"எது..?" ஆச்சரியத்துடன் கேட்டேன்.
"ஈழமுரசிலை வந்தது." என்றார்.
"ஈழமுரசு இங்கை வருமோ..? " மீண்டும் ஆச்சரியமாகக் கேட்டேன்.
"ஓம் கஸ்ரோ அண்ணையிட்டை வாறது" என்றார்.
ஐரோப்பியாவில் பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழமுரசை வன்னியில் உள்ளவர்கள் வாசித்தது மட்டுமல்லாமல், முன் பின் தெரியாத ஒருவர், என் பெயரைப் பார்த்ததும் அதை நினைவில் கொண்டு வந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியத்தையும், சந்தோசத்தையும் தந்தது.
"நீங்கள்..?" அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.
"இளங்கோ" என்றார்.
மற்றவர் "அறிவு" என்றார்
எல்லாம் நிரப்பி என்னிடம் கையெழுத்தை வாங்கிய பின் "சரி அக்கா நீங்கள் வீட்டை போங்கோ. நான் சைன் வேண்டிக் கொண்டு வந்து தாறன்." என்றார்.
நான் செய்ய வேண்டிய வேலையை என்னை அலைக்கழிய விடாமல், இளங்கோ தானே செய்ய முன்வந்த போது மனசு நன்றி சொல்லியது.
" நான் வெண்புறாவில்தான் நிற்கிறன்." என்றேன்.
"அப்ப நல்லதாப் போச்சு. அரைமணித்தியாலத்துக்கை அங்கையே கொணர்ந்து தாறன் அக்கா." என்றார்.
சந்தோசமான உணர்வுகள் என்னை நிறைத்திருக்க இளங்கோவிடமும், அறிவிடமும் இருந்து விடைபெற்றேன்.
வெளியில் காத்திருந்த நிச்சுதனுடன் மீண்டும் வெண்புறா சென்ற அரைமணிக்குள் இளங்கோ பாஸைக் கொண்டு வந்து தந்து விட்டுச் சென்றார்.
வெண்புறா உறவுகள் எல்லோரும் வாசலில் வந்து என்னை வழியனுப்பி வைக்க மதிய வெயில் உச்சியில் சுடும்போது ஊர்க் கனவுகளைச் சுமந்தபடி வெண்புறாவிலிருந்து முகமாலை நோக்கி நிச்சுதனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன். "அன்ரி...! திங்கட்கிழமை வற்றாப்பளைப் பொங்கலுக்குப் போறது ஞாபகந்தானே. அதுக்குள்ளை வந்துடுங்கோ" என்ற சுந்தரத்தின் குரல் பின்னால் ஒலித்தது. நீங்கள் வராட்டில் நாங்களும் போகமாட்டம் இன்னொரு குரல் தொடர்ந்தது.
கரடிப்போக்குச் சந்தி, வெள்ளவாய்க்கால் மதவில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது நான் வீழ்கிறேன் என்றுதான் நினைத்தேன். எப்படி முகமாலை வரை போய்ச் சேரப் போகிறேன் என்ற பயத்தில், "எவ்வளவு நேரம் பிடிக்கும்.. நிச்சுதன்..?" என்று கேட்டேன்.
"பயப்படுறிங்கள் போலை இருக்கு அன்ரி. நான் ஓடுற வேகத்தைப் பொறுத்து ஒண்டு ஒண்டரை மணித்தியாலத்துக்கை போயிடலாம். நான் இருபதிலை இருந்து முப்பதுக்குள்ளைதான் ஓடுறன். பயப்படாதைங்கோ"என்றான்.
வீதியோரங்களில் ஆங்காங்கு ஓரிரு கடைகள் திறக்கப் பட்டு வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தாலும் மீதி இடங்கள் வீடுகளோ, வாசல்களோ இன்றி பெரு வெளிகளாக வெறிச்சுப் போயிருந்தன.
"இதுதான் அன்ரி நாங்கள் பிடிச்ச இராணுவத்தின்ரை வாகனம்"
"இதிலைதான் அன்ரி பெரிய கிபீர் விழுந்தது"
"இது இராணுவம் ஷோ காட்டுறதுக்காண்டி எங்கடை வாகனத்தைக் கொண்டு வந்து முன்னுக்கு விட்டிருக்கிறாங்கள்."
என்று நிச்சுதன் ஆனையிறவுச் சண்டையை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான்.
மோட்டார் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்ததால் காற்றின் எதிர் மோதலில் ஆரம்பத்தில் வெயிலின் அகோரம் அவ்வளவாகத் தெரியவில்லை. போகப் போக பாதைகளின் இருமருங்கிலும் இருந்த காட்டு மரங்களும் செடிகளும் எரிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் பயணம் மிகவும் அகோரமாக அனல் கக்கியது.
பரந்தன் பளை பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது தூரத்தில் வரும் சைக்கிளைப் பார்த்ததும் "அன்ரி, அதிலை வாறது எனக்குத் தெரிஞ்ச பெடியன் போலை இருக்கு. யாழ்பாணத்திலை இருந்து வாறான். கனகாலத்துக்குப் பிறகு வாறான். இறங்கிக் கதைச்சிட்டுப் போவம்." என்ற படி மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.
நல்லது. என்னை சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு இறங்கினேன். இறங்கிய உடனே என் முன்னே நாட்டப் பட்டிருந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் மனம் திக்கென்றது.
கவனம் மிதிவெடிகள்என்ற வாசகங்களில் கால் கூசியது. இறங்கிய வேகத்தில் பாய்ந்து, விழுந்து ஓடி ரோட்டில் நின்றேன்.
உங்களின் தற்பாதுகாப்பு உங்களுக்கு ஏற்படக் கூடிய அங்கவீனத்தையோ அல்லது மரணத்தையோ தடுக்கும்...
நிச்சுதனின் உரையாடலில் சில நிமிடங்கள் கரைந்தன. மீண்டும் மோட்டார் சைக்களில் ஏறிய பின் என் நினைவுகள் என் வீட்டுப் பிச்சிப்பூ மரத்தையும், வேப்பம்மரத்தையும் எதிர்கொள்ளப் போகும் உறவுகளையும் சுற்றத் தொடங்கி விட்டது.
"என்ன அன்ரி. வெய்யில்லை களைச்சிட்டிங்களோ..? பேசாமல் வாறிங்கள்..?"
"இல்லை நிச்சுதன். ஊர் எப்பிடி இருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தன்.
அதுசரி நீங்கள் உங்கடை ஊருக்குப் போனனிங்களோ? "
"இன்னும் இல்லை அன்ரி. நான் முகமாலை தாண்டேலாது."
மீண்டும் நான் நினைவுகளுக்குள் மூழ்கிய போது, "அன்ரி, நான் இப்ப எழுபதிலை ஓடுறன் தெரியுமோ.? நீங்கள் என்ரை ஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுககத் தொடங்கீட்டிங்கள். அதாலைதான் இவ்வளவு கெதியா வந்து சேர்ந்தனாங்கள்."
"கிட்ட வந்திட்டமோ..?"
ஓமன்ரி. இன்னும் இரண்டு நிமிசந்தான்.
ஒருவாறு தமிழீழச் சோதனைச் சாவடியை வந்தடைந்த போது நா வரண்டிருந்தது. எங்காவது இளநீர் வாங்க முடியுமோ என்று பார்த்தேன். மருந்துக்குக் கூட அங்கே இளநீர் தெரியவில்லை.
கிடுகுகளால் வேயப் பட்ட சோதனைச் சாவடிக்குள் நுழைந்து பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டேன். நிச்சுதன் எனது சூட்கேசைத் தூக்கியபடி ஆண்களுக்கான பக்கத்தால் என்னோடு கதைத்த படி வந்து கொண்டிருந்தான்.
அமர்ந்திருந்த தமிழ்ப் பெண்ணிடம் பாஸ் காட்டும் போது அவள் நிச்சுதனை அடையாளம் கண்டு கொண்டவளாய் மெல்லிய சிரிப்புடன் என்னைப் போக அனுமதித்தாள்.
"அன்ரி இனி நீங்கள் தனியத்தான் போகோணும். அங்காலை நான் வரேலாது. அதிலை பஸ் எடுத்திங்களெண்டால் முகமாலை வரை கொண்டு போய் விடுவாங்கள்." சொல்லிக் கொண்டே அந்தக் கொட்டில் வரை வந்து என்னை விட்டிட்டுப் போனான்.
இரண்டு தட்டிவான்கள் பட்டிகளில் மாடுகளை அடைப்பது போல மனிதரை ஏற்றிச் சென்றதைப் பார்த்துப் பயந்து எப்படி எனது உடைமைகளுடன் போய்ச் சேருவது என்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். அதில் ஏறும் துணிவு எனக்கு வரவில்லை. சில நிமிடங்களில் நிச்சுதன் மீண்டும் வந்தான்.
"என்ன நிச்சுதன்..?"
"அன்ரி நான் அனுமதி எடுத்திட்டன். உங்களை அங்கை மட்டும் கொண்டு வந்து விட்டிட்டுப் போறன்."
மனசு நன்றி சொன்னது. மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த இராணுவச் சோதனைச் சாவடியை அடைய சில நிமிடங்கள்தான் தேவைப் பட்டன.
அவன் என்னை இறக்கிய போது எம்முன்னே இரண்டு மூன்று இராணுவத்தினர் வந்து விட்டனர். தடுப்படியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சில அடிகள் என்னுடன் நடந்தவன்
"நான் போறன் அன்ரி..." என்றான்.
இப்போ எனக்கு அழுகை வந்து விடும் போலிருந்தது. எங்கும் இராணுவம். நான் தனியாக என் சூட்கேசை இழுத்துக் கொண்டு...
அவர்களின் பார்வைகளிலும், சிரிப்பிலும் ஏளனமா..? நட்பா..? குரோதமா..? எல்லாம் கலந்தா..? புரியவில்லை. எனக்கு மிக அருகில் நின்றார்கள். பயமாகப் பதட்டமாக இருந்தது.
நிச்சுதனின் மோட்டார் சைக்கிள் திறப்பு நிலத்தில் வீழ்ந்து மண்ணுள் புதைந்து விட்டது. சாடையாகத் தேடி விட்டு நிற்க விருப்பம் இல்லாததால் "பரவாயில்லை, மற்றத் திறப்பைப் பாவிக்கிறன்" என்று சொல்லி விட்டுப் வேகமாக மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.
"நன்றி நிச்சுதன்..!"
திரும்பிப் பார்த்து, சிரித்துக் கொண்டு விரைந்தான்.
பெண்களுக்கான சோதனை இடத்தைக் காட்டி என்னை அங்கே போகும் படி சொன்னார்கள். அங்கு தூரத்தில் வரிசையில் நின்ற சில பெண்கள் என் கண்களுக்குள் பட்ட போது பயம் கொஞ்சம் குறைந்தது. ஒரு சூட்கேசை இழுத்துக் கொண்டும், மற்றையதைத் தோளில் கொழுவிக் கொண்டும் அந்த இடத்தைச் சென்றடைந்த போது, முதலில் மறைவான பகுதியில் உடைகளுக்குள் உடம்போடு ஏதாவது வைத்திருக்கிறேனா எனச் சோதித்து வெளியில் அனுப்பினார்கள்.
வெளியில் ஐந்தாறு சிங்களப் பெண்கள் வரிசையில் இருந்து அடையாள அட்டை சூட்கேஸ் போன்றவற்றைச் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். என் முறை வந்ததும் "அக்கா சூட்கேசைத் திறங்க." தமிழில் கதைத்தார்கள்.
எனது சூட்கேசில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆர்வமாக ஆராய்ந்தார்கள். ஆளுக்காள் மாற்றி மாற்றி விடுப்புப் பார்த்தார்கள். வெளிநாட்டுச் சாமான் என்பதில் ஆசைப் பட்டார்கள். ஒரு சிறிய கீரெக்கை தரமனமின்றி வைத்திருந்தாள் ஒருத்தி. "வேணுமெண்டால் வைச்சிருங்கோ" என்றேன். "வேண்டாம்" என்று தந்து விட்டாள். கமராவைப் பிரட்டி உருட்டிக் கொண்டிருந்தாள் இன்னொருத்தி. "என்ன போட்டோ எடுத்திருக்கிறன்" என்று கேட்டாள்.
ஒருமாதிரி அடையாள அட்டையையும் காட்டி வெளியில் போன போது நிறைய பேரூந்துகள் நின்றன. பருத்தித்துறைக்கான பேரூந்தைத் தேடி ஏறப் போன போது வெளியில் நின்ற கொண்டெக்கடர் என்னிடம் கட்டணமாக 15 ரூபாவைக் கேட்டு வாங்கினார்.
எதிரே தண்ணீர் விற்பது தெரிந்தது. அதனோடு சேர்ந்திருந்த கடையில் பின்னுக்குப் போத்தல்கள் அடுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இது வரை அடக்கி வைத்த தாகத்தை இப்போது என்னால் அடக்க முடியவில்லை. எப்படியும் அங்கே `பிளெயின் சோடா´ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பேரூந்திலிருந்து இறங்கிப் போனேன்.
சிங்களச் சிப்பாய் மிகவும் நட்பாகச் சிரித்த படி என்னை வரவேற்றான்.
"சோடா இல்லை" என்றான். வன்னி தாண்டி விட்டேன்தானே. இது யாழ்ப்பாணத் தண்ணீர்தானே குடிப்போம் என நினைத்து தண்ணீராவது தரும்படி கேட்டேன்.
"தண்ணி இல்லை. நெல்லிக்கிரஸ்தான் இருக்கு." தமிழும் சிங்களுமும் கலந்து சொன்னான். தண்ணி வேணுமெண்டால் பைப்பில் குடிக்கச் சொன்னான்.
வேறு வழி தெரியாததால் சரியென்று பத்துரூபாய் கொடுக்க றம்மிலிருந்து தண்ணீரை ஒரு ரம்ளரில் எடுத்து, நெல்லிரசத்தைக் கலந்து தந்தான். அருந்தினேன். றம் தண்ணீர் ஊத்தையாக இருந்திருக்குமோ என்ற நினைப்பில் எனக்கு நெல்லிரசம் இனிக்கவில்லை.
பஸ்ஸில் ஏறிய பின் வெளியில் கண்களைச் சுழல விட்ட போது இராணுவம், மனிதர் என்று முகமாலை சோதனைச் சாவடி சனமாய்த் தெரிந்தது. நெல்லிரசம் தந்த சிப்பாய், சிரித்த படி என்னைப் பார்த்துக் கை காட்டிக் கொண்டிருந்தான். பேரூந்து ஊரத் தொடங்கியது. என் கிராமத்தை நோக்கி...
சந்திரவதனா
யேர்மனி
2002
தொடரும்
தாயகம் நோக்கி - 1
தாயகம் நோக்கி - 2
தாயகம் நோக்கி - 3
தாயகம் நோக்கி - 4
தாயகம் நோக்கி - 5
Tuesday, August 22, 2006
நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்
நாள் : 27.08.2006 ஞாயிறுநேரம் : 14.00 – 20.00
இடம் : VOLKSHAUS
Stauffacherstrasse 60
8004 Zurich
கவிதை நூல்கள்
நங்கூரம்,
உயிர்த்தீ
நளாயினியின் நங்கூரம் கவிதைத் தொகுப்பு பற்றி சுவிசிலிருந்து ரவி
தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள்
தாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டுக்கள் இணைக்கப் பட்டுள்ளன.
1) புலிகளின் புரச்சி இசை விழா
2) மண்ணைத் தேடும் இராகங்கள்
விரைவில் இணைக்கப்பட உள்ளமை
வெல்லும் வரை செல்வோம்,
வரலாறு வந்த வல்லமை,
அன்னைத் தமிழ்
Monday, August 21, 2006
வாழ்வும் வரும் சாவும் வரும்...
வாழ்வும் வரும் சாவும் வரும்ஏதோ ஒரு நாள் விடிவும் வரும்
கொஞ்சம் வரும் ஓய்ந்தே இரு
நாளைய நாளில் வரமாய் வரும்
வீதியிலை நடக்கிறேன்
விதியை நினைக்கிறேன்
தமிழனாய் பிறந்து நான்
தினமும் தவிக்கிறேன்... - தொடர்ச்சி
பாடலை ஒலி வடிவில் கேட்க
viduthalai.mp3
பாடல் - விடுதலை
பாடல் வரிகள் - சுஜீத்.ஜீ
இசை - சந்தோஷ்
பாடல் காட்சியில் - சுஜீத்.ஜீ + சந்தோஷ்
புலம்பெயர்ந்த எமது இளைஞர்கள் இன்று பல்துறைகளிலும் கால் பதித்துக் கொண்டு வருவதை நாம் அறிகிறோம். மொழி, காலநிலை, கலாச்சாரம், புலப்பெயர்வு... என்ற பல்வேறு முரண்களின் நடுவே நின்று வாழ வேண்டிய இளைய சமூகத்தினர் தமது திறமைகளை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்களையும் எதிர் நோக்குகிறார்கள். "இது இதுதான் எமக்கு" என்று முத்திரை குத்தி வைக்கப் பட்ட விடயங்களைத் தாண்டி இன்னொரு விடயத்தைத் தொடும் எந்த ஒரு புதிய செயற்பாடும் முதலில் யாராலும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது கட்டுடைத்தல் போன்றதானதொரு பிரமையையே எமது பெரியோரிடம் ஏற்படுத்துகின்றது. இந்தப் பிரமையினால் இளையோருக்குக் கொடுக்கப் படும் அழுத்தங்கள் மிகமிக அதிகமே. அந்த அழுத்தங்களினால் பல இளைஞர்கள் தமக்கே உரிய, தமக்குப் பொருத்தமான துறைகளில் நிலைத்து நிற்க முடியாது மனம் ஒடிந்து தொடங்கியதைப் பாதியிலே நிறுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் மனஉறுதி படைத்தவர்கள்தான் எல்லா அழுத்தங்களையும் தாண்டி கொஞ்சமேனும் வெளியில் வந்திருக்கிறார்கள்.
அப்படி வந்தவர்களில் சுஜீத்ஜீ யும் ஒருவர். "எனக்கு சங்கீதம் தெரியாது" என்று சொல்லும் சுஜீத்ஜீ எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் கொண்டவர்.
"ஏன் ராப் இசையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று கேட்டால் "புலம்பெயர் ஈழத்தமிழருக்கென்று தனித் துறையாக இறங்க வேண்டும் என்றால் பழக்கம் குறைவான ஏதாவது ஒரு இசையினை தெரிவு செய்தால் வித்தியாசப் படலாம் என்ற எண்ணம்" என்றும் "சில உணர்வுகளினை சங்கீதத்தால் சொல்லி விடமுடியாது" (உதாரணம் : விடுதலை பாடல்) என்றும் சொல்கிறார்.
இவரது விடுதலை என்ற பாடல் ரீரீஎன் நடாத்தும் ஒளிக்கீற்று நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. உணர்வு பூர்வமான அந்தப் பாடல் வரிகளை எழுதியவர் சுஜீத்ஜீ யேதான். அழகிய முறையிலான இசையும் ராப் இசைக்கே உரிய முறையில் பாடப்பட்ட விதமும் மிகவும் நன்றாக அமைந்துள்ளன. இசையை அமைத்த சந்தோசும், சுஜீத்தும் இணைந்தே பாடல் காட்சியில் வருகிறார்கள். பலரையும் கவர்ந்து விட்ட பாடல். ராப் இசையை ரசிக்கும் எவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய பாடல். ராப் இசையை ரசிக்காதவர்கள் கூட பாடல் வரிகளில் ஈர்க்கப் படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
(நிகழ்ச்சியில் இடம் பெற்ற மற்றைய பாடல்கள் கூட தரமான பாடல்களாகவே அமைந்திருந்தன. சில பாடல்களுக்கான காட்சிகளிலும், கமராவிலும் இன்னும் திருத்தங்களும் கவனங்களும் தேவையென்பது குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாயினும், ஒவ்வொரு பாடல்களுக்குமான இசையமைப்புகள் எமது கலைஞர்களின் வளர்ச்சியைப் பறை சாற்றுவதாகவே அமைந்திருந்தன. )
ஈழத்தமிழர்கள் இப்பொழுது பல துறைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வகையில் இசைத்துறையில் அதுவும் மேற்கத்திய இசையில் தனக்கிருந்த திறமையினை சிங்கிள்ஸ் என்ற இசைத்தட்டை வெளியிட்டதன் மூலமாக உணர்த்தியிருக்கிறார் சுஜீத்.ஜி.
சுஜீத்.ஜி யுடனான ஒரு நேர்காணல்
எப்படி இந்த இசையில் நாட்டம் வந்தது?
எனக்கு எல்லாவிதமான இசைகளிலும் நாட்டம் உண்டு. இருப்பினும் எல்லோரும் செய்கிற ஒரு விடயத்தினை நானும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தபோது ஏதாவது வித்தியாசமாக செய்வோமே என்று எண்ணினேன்.
ஏன் இவ் இசையினைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
இன்று மேற்குலகைப் பொறுத்தவரையில் இரண்டுவகையான இசை அதிகமாக இளைஞர்களை ஆக்கிரமிக்கிறது. ஒன்று றிதம் அண்ட் புழூஸ் இசை மற்றையது கிப்பொப் இசை. நான் லண்டனில் இருக்கிற காரணத்தினால் இவை என்னையும் ஆக்கிரமித்து விட்டது.
இதற்கான இசைப் பயிற்சியினை எங்கே பெற்றீர்கள்?
இசைப்பயிற்சியினை எங்கும் பெறவில்லை. கேள்விஞானம் என்று சொல்லலாம். பிரபல்யம் அடைகிற ஆங்கிலப் பாடல்கள் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். அவைகளை கேட்கும் வழக்கம் உண்டு அவ்வளவுதான். மற்றப்படி சிங்கள்ஸ்க்கு இசையமைத்த சந்தோஷ் மூலமாகவும் பல விடயங்களை அறிந்து கொண்டேன்.
ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் பாடல்களினைக் கேட்டுத் தமிழில் பாடல்களை எழுத கேள்வி ஞானம் உதவியது என்கிறீர்களா?
அப்படியல்ல. நான் ஏற்கனவே சில பாடல்களை எழுதிய அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு எப்படியான இசைக்கும் பாடல்களை எழுத முடியும் என்ற நம்பிக்கையினைத் தந்தது.
இந்த இசை அனைவரையும் கவரும் என்கிறீர்களா?
உலகில் எதுவுமே எல்லோரையும் கவர்ந்து விடுவதில்லை. அதற்கு என்னுடைய படைப்பும் விதிவிலக்கல்ல. நான் இலக்கு வைத்த இளைஞர்களை அதாவது மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை நிச்சயமாகக் கவரும், கவர்கிறது.
அதென்ன மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்திருக்கிறீர்கள்?
எந்த ஒரு பொருளுக்கும் அதற்கான நுகர்வோர் வட்டம் இருக்கும். அதுபோல என்னுடைய இலக்கு மேற்குலகில் வாழும் தமிழ் இளைஞர்கள். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல மேற்குலக இசையின் ஆக்கிரமிப்பு அவர்கள் மேலும் இருக்கிறது. எங்களை ஆக்கிரமிக்கும் அந்த இசைக்குள் தமிழினை செலுத்தியிருக்கிறேன்.
இதனைத் தமிழ் ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஏற்கனவே இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. நான் தவறான பாதையில் செல்வதாகச் சொன்னார்கள். ஏன் என்று விளக்கம் தர அவர்களால் முடியவில்லை. இந்தியாவின் கர்நாடக மானிலத்து இசைக்குள் தமிழ் தவழும்போது மகிழ்ச்சி அடைபவர்கள் ஏன் மேற்கத்தேய இசைக்குள் தமிழ் துள்ளத் துன்பப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் எல்லாத் தமிழ் ஆர்வலர்களும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று நினைக்கிறேன். கர்நாடக இசையினால் சொல்லமுடியாத சிலவற்றை கிப்பொப் இசை சொல்லும்.
- சங்கீதா
சுஜீத்.ஜி பற்றி
SujeethG, as a child, he had no such ambitions of becoming a musical artist. When in London, he realised he had a knack for finding flaws in Tamil songs and would talk about how he could have composed it better, and had his own ideas on how to do things differently. So one day he decided to put pen to paper.
He has always felt if his work is good in his eye, that's enough for him. He wasn't expecting recognition or praise from anyone. SujeethG wasn't just musically artistic, he writes stories, poems and has even made one or two short films.
His friends who asked him to write them songs appreciated his talents. Unfortunately none of the songs were recorded. But plenty of praise came his way. After waiting in hope of his work would getting produced into records, he decided to showcase his talents by making his own album.
(His debute album SINGLES was released in 2005, next one CEYLON hope to be released in January 2007)
I want to show people that an Eelam Tamil also can do something in music. He wanted to project a positive message to society, to make people realise that Eelam Tamils are artistic in this field and can get far in the industry. Although he admires a lot of artists for their various talents, he isn't interested in following current eastern musical trends; he's following his own personal taste.
"I want to provide the second generation of Tamils living in the western world something they can relate to. Even though putting Tamil lyrics to this kind of music would be difficult, I knew I could achieve it."
He certainly has the know how to manipulate the Tamil language to suit any musical structure. This is what makes him different. He has no professional training in the music field and has no musical background. His knack is natural and is helped by observing people in the industry.
He aims to show that ordinary hard working people can achieve their goals.
Followers
Blog Archive
-
►
2024
(
11
)
- ► March 2024 ( 1 )
- ► January 2024 ( 1 )
-
►
2017
(
21
)
- ► August 2017 ( 1 )
-
►
2016
(
23
)
- ► November 2016 ( 5 )
-
►
2015
(
28
)
- ► March 2015 ( 6 )
-
►
2013
(
10
)
- ► December 2013 ( 1 )
- ► October 2013 ( 1 )
- ► September 2013 ( 1 )
-
►
2012
(
7
)
- ► November 2012 ( 1 )
- ► August 2012 ( 1 )
-
►
2011
(
7
)
- ► December 2011 ( 1 )
- ► November 2011 ( 1 )
- ► August 2011 ( 1 )
- ► April 2011 ( 1 )
- ► March 2011 ( 1 )
-
►
2010
(
10
)
- ► November 2010 ( 1 )
- ► March 2010 ( 1 )
-
►
2009
(
27
)
- ► October 2009 ( 1 )
- ► September 2009 ( 5 )
-
►
2008
(
38
)
- ► January 2008 ( 1 )
-
►
2007
(
46
)
- ► December 2007 ( 1 )
- ► September 2007 ( 8 )
- ► August 2007 ( 1 )
-
►
2006
(
137
)
- ► October 2006 ( 15 )
- ► September 2006 ( 25 )
- ► August 2006 ( 21 )
- ► April 2006 ( 12 )
- ► March 2006 ( 9 )
- ► February 2006 ( 7 )
-
►
2005
(
172
)
- ► December 2005 ( 12 )
- ► November 2005 ( 25 )
- ► September 2005 ( 9 )
- ► August 2005 ( 7 )
- ► April 2005 ( 13 )
- ► March 2005 ( 15 )
- ► February 2005 ( 37 )
-
►
2004
(
172
)
- ► December 2004 ( 7 )
- ► November 2004 ( 10 )
- ► October 2004 ( 11 )
- ► September 2004 ( 13 )
- ► August 2004 ( 24 )
- ► April 2004 ( 23 )
- ► March 2004 ( 11 )
- ► February 2004 ( 7 )
-
►
2003
(
36
)
- ► November 2003 ( 11 )
- ► October 2003 ( 7 )
- ► September 2003 ( 8 )
- ► August 2003 ( 6 )
