அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது?
வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?சாமத்தியச் சடங்கு செய்வதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாம். இம்மாத ஒரு பேப்பரில் சுந்தரி எழுதியுள்ளார்.
அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா? இந்த இயந்திர உலகில் அவனை மட்டும் வேலை மினக்கெட்டு ஒரு குடும்பப் படமா எடுத்து...?
55வது ஒரு பேப்பரில் சாமத்தியச் சடங்கு அவசியமா என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி இது தேவையா என்ற தலைப்பில் பிரசுரமாகி இருந்தது.
அதற்கு எதிர்வினை கூறுவது போல சாமத்தியச் சடங்கு தேவைதான் என 56வது ஒரு பேப்பரில் சுந்தரி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அவரிடம் நான் கேட்பது, "அப்படியானால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகன் எப்படி இருப்பான் என்று எப்படித்தான் நடைமுறையில் தெரிந்து கொள்வது? அவனுக்கும் சாமத்திய வீடு செய்ய வேண்டுமா?
56வது ஒர பேப்ரில் வந்த சுந்தரியின் கட்டுரை
சாமத்தியச் சடங்கு தேவைதான்
கடந்த வார பெண்கள் பக்கத்தில், இது தேவையா? என்ற தலைப்பின் கீழ், பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் சாமத்தியசடங்கும் ஒன்று எனவும், அனாவசியமான எந்தவிதமான தர்க்கரீதியான காரணங்களும் அற்ற இந்தச்சடங்கைக் களைவதற்கு முன்வருவோமா? என்ற கேள்வியுடன் சந்திரவதனா தனது வாதத்தை முன் வைத்திருந்தா.
இந்த விஞ்ஞானயுகத்தில் வித்தியாசமான கலாச்சாரச் சூழலில் இந்த சாமத்திய சடங்கு இன்னும் அவசியமாகுகிறது. பெண்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இந்த நேரத்தில் அவளைத் தனித்து விடாது. அது பற்றிய பயத்தை போக்கி, வயதில் அனுபவம் உள்ள உறவுப்பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் கேட்டு கதைத்து அப்பெண்ணிற்கு தன்னப்பிக்கை ஊட்டி, இனிச் சிறுமி அல்ல இளம் பெண்ணென புடவை கட்டி, பெருமை கூட்டி அவளை ஒரு பெண்ணாக்குகிறார்கள்.
எமது கலாச்சாரத்தின் பெருமையை பலர் புரிந்து கொள்வதில்லை. எம் மத்தியில் செத்த வீடு நடத்தால் கூட நாம் Counselling போகாமல் இருப்பதற்கு எங்கள் சமூக சடங்குகள் (கட்டி பிடித்து, வாய்விட்டளுது, ஒப்பாரி வைத்து, சாப்பாடு சமைத்து கொடுத்து, அத்திரட்டி, ஆட்டதிவசம், திவசம் என) பாதிக்ப்பட்டவரை தனித்திருக்க விடாது சடங்குகள் சமூகத்தின் நிழலில் துயர் ஆற வைக்கின்றன.
இவள் இனி உங்கள் பிள்ளை நீங்கள் தான் அவளைக்காக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் பிள்ளையை ஒப்படைப்பது என ஒரு பெரியவர் விளக்கம் சொன்னது நகைப்புக்கு இடமாக கலாச்சாரத்தை அவமான படுதுவதாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தா... இதில் நகைப்பதற்கு ஒன்றுமே இல்லை. சாமத்திய சடங்கின் மூலம் இன்னாருக்கு இத்தனை பிள்ளைகள், அதில் இந்த பிள்ளை வயதிற்கு வந்த பிள்ளை என அவளை வாழ்த்தும்போது அவள் உருவமும் மனதில் படிகிறது. ஊர் மக்கள் அவளை நமது ஊரின் பெண்ணாக வரித்தெடுத்து ஏதும் சிக்கலில் அப்பெண் மாட்டு படப்போகிறாள் என்று தெரியும் இடத்து அதை குடும்பத்திற்கு தெரியப்படுத்தியோ அல்லது அவளைக்கு புத்தி சொல்லியோ அவளைப் பேரிளம்பெண் பருவத்திற்கு வழி நடத்துகிறார்கள்.
இங்கு வெளிநாட்டில் நாம் இன்னும் ஆளை ஆள் சொந்த பந்தங்களைத் தெரிந்து கொள்வதே இப்படியான சடங்குகளின் மூலம்தான். முன்பு பிள்ளை பிறந்தல், 11ம்நாள் , 31ம் நாள் தொட்டிலில் இடுதல், காது குத்துதல், பெயர் சூட்டுதல், ஏடு தொடக்குதல், சாமத்தியம், கொழுக்கட்டை கொடுத்தல் (நிச்சயதார்த்தம்), கல்யாணம், செத்தவீடு, என பலப் சடங்குகள் எம்மத்தியில் இருந்தன. இப்போ அவை எல்லாம் எதற்கும் பெண்ணியம் பேசி தாங்களும் குழம்பி எங்களையும் குழப்பும் மேதாவித் தனத்தாலோ, நேரம் இன்மையாலோ சுருங்கி ஏதோ ஓன்று இரண்டு மட்டும் நடைமுறையில் உள்ளன.
அத்தோடு வெளிநாட்டு முறையிலான (கேக் வெட்டி சம்பெயின் உடைத்து) பேத்டே பார்ட்டிகள், முதலாவது, 18வது, 21வது, அதைவிட முப்பது, நாற்பது என எண்பது, தொண்ணூறு வரையும், அத்தோடு கல்யாண நாளுகளும் அதுவிட பாபக்கியூ பார்ட்டி, கிறிஸ்மஸ் பார்ட்டி வெடிங் ரிசப்சன் என எல்லா புலம் பெயர் மக்களும் வயது, பால், சாதி, மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு கொண்டாடுவது பற்றி சந்திரவதனா ஒன்றுமே சொல்லாது. சாமத்திய சடங்கை மட்டும் பொய்யான திணிப்புகளின் போலிக்கலாச்சாரத்தில் பொசுங்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறா.
சாமத்திய வீடு ஏன் செய்கிறார்கள் என சந்திரவதனா சொன்ன அதே காரணத்தையே நானும் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்கிறேன். வீடியோ, கமரா என்பவற்றில் பதிவு செய்வதற்காக கட்டாயம் இது வேணும்! இல்லாவிட்டால் அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் மச்சாளின் மகள் எப்படி இருப்பாள் என்று, எப்படி நடைமுறையில் தெரிந்து கொள்வது? இந்த இயந்திர உலகில் நீங்கள் சாதாரணமாக ஒரு குடும்பப்படத்தை எடுத்து, வேலை மினக்கெட்டு எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டு இருப்பீர்களா?
ஒரு சபையில் அந்த பெரிய குடும்பத்தின் முழு வாரிசுகளையுமே காணவும், வேறு வேறு நாடுகளில் வசிப்பவர்கள் கூட இச்சந்தர்பத்தில் ஒன்று கூடவும் வாய்பாகிறது. சடங்குகளின் வீடியோ பார்த்து இரண்டு மூன்று கல்யாணங்கள் கூட சரிவந்திருக்கிறது என்றால் பாருங்களேன். எனது அனுபவத்தில் நடைபெற்ற எல்லாச் சாமத்தியங்களிலும் அப்பெணும் விரும்பி பங்கு பற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.
என் வீட்டுச் சாமத்திய வீடு மற்றையவர் வீட்டைவிடப் பெரிதாக நடந்ததெனக் காட்டுவதற்காக?
இது சாமத்திய வீட்டிற்கு மட்டும்தான் பொருந்துமா? மனித இயல்பே மற்றவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உயர்த்திவைக்க முயல்வதுதான்.
சாமத்திய சடங்கு நான் முதலே கூறியது போல, உளவியல் காரணங்களோடு, குடும்பத்தின் ஒற்றுமையை அதிகரிக்கவும் சமூக நெருக்கத்தை கூட்டவும் வழிமுறை யாகுகின்றது. ஆனால் அதில் உள்ள சில இடையிட்டு நுழைந்தவைகள் தவிர்க்கப்பட வேண்டியவையே.
உதாரணமாக சாமத்தியத்தில் முதலில் தமிழ் முறைப்படி புடவை அணிந்து விட்டு பிறகு வடஇந்திய முறைப்படி முன்னால் தொங்கலை விட்டு இன்னுமொரு புடவை அணிவது. (இரண்டாவது புடவையை வடஇந்திய முறைப்படி கட்டுவது இப்போ எழுதாத சட்டமாகி விட்டது.
சாமத்திய சடங்கில் கேக் வெட்டுவது, ஆள் உயரத்தில் ஆண்டாள் மாலை போடுவது ( வீடியோகாரரும் கமராகாரரும் மேக்கப் லேடியும் சேர்ந்து சடங்கை சில இடங்களில் சடம்பமாக்கி விடுகிறார்கள்.)
இதை விட இதை ஆங்கில அகராதிக்குள் புகுந்து அப்பிடியே மொழி பெயர்க்க தேவையில்லை. Puberty ceremony என்பதை Age attainment ceremony என்றோ அல்லது Saree ceremony என்றோ அழைக்கலாம். (இடியப்பத்தை வெள்ளைக்காரன் தற்செயலாக அவித்தாலும் என்று String hopper என்று அழைப்பவர்கள் அல்லவா நாம்!)
விரலுக்கு தகுந்த வீக்கம் இருப்பது எல்லாச் சடங்குக்குமே நல்லது. வீட்டை மீள் அடகு வைத்தோ, தகுதிக்கு மீறி கடன் எடுத்தோ, கடினப்பட்டு உழைத்த சேமிப்பு எல்லாவற்றையும் செலவழித்து ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து கொள்வது எல்லாச் சடங்குக்குமே நல்லது. உண்மையான சடங்கை மாற்றாது, திரிக்காது சிக்கனமாகவும் சிறப்பாகவும் குடும்ப சமூக ஒற்றுமை பேணும் வகையில் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
- சுந்தரி
No comments :
Post a Comment