உடைகள் வாங்க என்று கடை கடையாய் ஏறி இறங்குவது எனக்குப் பிடிக்காத
விடயங்களில் ஒன்று.
இம்முறை கோடை விடுமுறை தொடங்கிய உடனேயே பேத்தி சிந்து, தங்கை
நிலாவுடனும், அம்மாவுடனும் அதாவது எனது மகளுடனும் எம்மிடம் வந்திருந்தாள். அவள்தான்
எமது முதல் பேத்தி. பிறந்த போது ஒரு தேவதை போல இருந்தாள். அவளின் வருகைகளுக்காக நான்
ஒவ்வொரு முறையும் காத்திருந்தேன். அவளது அருகாமையும், கொஞ்சும் சிரிப்பும், சிணுங்கலும்,
அழுகையும், ஸ்பரிசமும் வாழ்க்கையின் அதிஇன்பமான பொழுதுகளில் ஒன்றாக என்னை மகிழ்வித்தன.
இம்முறை வரும் போது அவளுக்குப் பதின்மூன்று வயது.
வந்த அன்றே அவளை சுப்பர்மார்க்கெட்டுக்குக் கூட்டிக் கொண்டு
போனேன். உள்ளே போனதும் தேவையானவைகளை எடுக்கும் படி சொன்னேன். „Are
you sure?“ என்று கேட்டு நான் சொன்னதை உறுதிப் படுத்திக்
கொண்டு, கொஞ்சநேரம் கடைக்குள் காணாமல் போனாள். மீண்டும் வரும் போது கைகள் நிறைய விதம்விதமான
நிறங்களில் 7-8 நகச்சாயங்கள் (Nail Polish) நிறைந்திருந்தன. வண்டிலுக்குள் போட்டு விட்டு
மீண்டும் மீண்டுமாய் ஓடி அலங்காரப் பொருட்கள், ஓவியம், கைவேலைகளுக்கான பொருட்கள் என்று
வண்டிலை நிறைத்தாள்.
எல்லாம் முடிந்து அவள் என்னருகில் வந்த போது „சொக்கிளேற்ஸ்
எடுக்கவில்லையா?“ என்றேன். சட்டென தலையைச் சரித்து
தனது இல்லாத இடுப்பைக் கிள்ளிப் பார்த்து விட்டு, „No
அம்மம்மா. No Sweets“ என்றாள்.
மாலைகளில் ஐஸ்கிறீம் சாப்பிட்டது வேறுகதை.
அன்றிரவு படுக்கைக்குப் போக சற்றுமுன்னர் என்னிடம் வந்து
"நாளைக்கு என்னென்ன பிளான் எல்லாம் போட்டிருக்கிறாய்?" என்று கேட்டாள்.
"ஏன்? என்ன விசயம்?" என்று கேட்ட போது தனக்கு ஒரு நீச்சலுடை வாங்க வேண்டுமென்றாள்.
சரி. காலையில் வேளைக்கே புறப்பட்டோம். Schwäbisch Hall இன் அனேகமான எல்லா உடுப்புக் கடைகளிலும் ஏறி இறங்கிய பிறகே அவளுக்குப் பிடித்தமான நீச்சலுடை கிடைத்தது. ஒவ்வொரு கடையிலும் அவள் ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்து, என்னைக் கூப்பிட்டுக் காட்டி... இரண்டு நீச்சலுடைகள் வாங்கியிருந்தாள். 4 மணித்தியாலங்களுக்கு மேல் கரைந்திருந்தன. எனக்குப் போதும் போதும் என்றாகியிருந்தது.
கடைக்கு வெளியில் வந்ததும் „Thank
you அம்மம்மா. எனக்காக இவ்வளவு நேரத்தைச் செலவு செய்ததற்கு Thank you“ கட்டிப்பிடித்து
வார்த்தைகளால் கொஞ்சினாள். எல்லா அலுப்பும் அதோடு போய் விட்டது. கடும் வெயிலிலும் நான்
குளிர்ந்து போனேன்.
இப்படியே ஒவ்வொரு இரவும் அவள் ஒவ்வொரு விண்ணப்பம் வைப்பாள். ஒரு காற்சட்டை வேண்ட வேண்டும். ஒரு மேற்சட்டை வேண்ட வேண்டும்... என்று அடுத்த காலையில் நான் அவளோடு Schwäbisch Hall இன் கடைகளெல்லாம் ஏறி இறங்குவேன்.
எஞ்சிய பொழுதுகளில் தங்கை நிலாவுடன் ஓவியம் வரைவாள். கைவேலைகள்
செய்வாள். இடையிடையே காணாமல் போகும் பொழுதுகளில் கண்ணாடியின் முன் நின்று தன்னை அலங்கரிப்பாள்.
என்னையும் கூப்பிட்டு எனது நகத்துக்கும் சாயம் பூசி விடுவாள். அடிக்கடி எனது அறைக்குள்
போய் தனது வெயிற்றைப் (Weight) பார்ப்பாள். தனது எடை எவ்வளவு என்பதை மட்டும் எங்கள்
யாரையும் பார்க்க விட மாட்டாள். தினமும் எனது X-Bike இல் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம்
என்று உழக்குவாள். தனது இடுப்பை அவ்வப்போது கிள்ளிப் பார்ப்பாள்.
நிலாவின் மீது கோபம் வரும் போதெல்லாம் அவளை 'வைரஸ்' என்பாள்.
போகும் போது "Thank you அம்மம்மா. எனக்காக நேரங்களைச்
செலவழித்து எனது விடுமுறையை இனிமையாக்கியதற்கு Thank you" என்று வார்த்தைகளால்
கொஞ்சி விட்டுப் போனாள். மூன்று கிழமைகள் பறந்து விட்டன. அவள் நினைவுகள் என்னுள்ளே
வலம் வந்து கொண்டே இருக்கின்றன.
அவள் இன்னும் எனக்குத் தேவதைதான்.
சந்திரவதனா
29.08.2016
No comments :
Post a Comment